பொதுச்சுகாதார பாதுகாப்பு: ஜனாதிபதி விடுத்த விஷேட உத்தரவு

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம்

வடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை (09) காலை கொழும்பிலுள்ள துறைமுக நகரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு, மாலை கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த விஜயத்தில் யாழ் மாநகர சபை, வலி தென்மேற்கு பிரதேச சபை, வலி தெற்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீனா துரிதப்படுத்தவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீன துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜி20 பொதுகட்டமைப்பு தொடர்பிலும் விசேடமான சில நிலைமைகள் தொடர்பிலும் நாங்கள் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்பியா இலங்கை தொடர்பான கடன் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் சர்வதேச நாணயநிதியமும் ஏனைய சர்வதேச கடன் நிதியமைப்புகளும் நிதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்  இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

உல்லாசப் பயணம், வணிகம், மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டாஸ் புயல் தாக்கம் வட, கிழக்குக்கு பாதிப்பு

ஒருவர் உயிரிழப்பு-  2,143 பேர் பாதிப்பு – 275 மாடுகள் பலி – 510 வீடுகள் சேதம்

மண்டாஸ் புயல் நேரடியாக தாக்காத போதிலும் தொடர்ச்சியான மழை, கடும் குளிர், வேகமான காற்றால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேரும், 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேருமாக 729 குடும்பங்களை சேர்ந்த 2143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வடக்கு கிழக்கில் 275இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. வங்கக்கடலில் மையம் கொண்ட தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாற்றம் கொண்டது.

இது வடக்கு – வடமேற்காக நகர்ந்தது. தமிழகக் கரையை புயலாக இது நள்ளிரவை தாண்டி கடந்தது. இந்த புயலின் நகர்வின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வடக்கு – கிழக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவானது. அத்துடன், மிகக் குளிரான காலநிலையும் நீடிக்கிறது. மேலும், வேகமான காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல மரங்கள் வீடுகளின்மீது வீழ்ந்ததில் அவை சேதமடைந்தன.

வடக்கில் 1,659 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் 112 குடும்பங்களை சேர்ந்த 407 பேரும் முல்லைத்தீவில் 141 குடும்பங்களை சேர்ந்த 454 பேரும், வவுனியாவில் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும், கிளிநொச்சியில் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், மன்னாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 184 பேருமாக 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேசமயம், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு முழுமையாகவும் – 76 வீடுகளும், முல்லைத்தீவில் 141 வீடுகளும், வவுனியாவில் 7 வீடுகளும், கிளிநொச்சியில் 34 வீடுகளும், மன்னாரில் முழுமையாக ஒரு வீடும் பகுதியளவில் 11 வீடுகளுமாக வடக்கு மாகாணத்தில் 2 வீடுகள் முமுமையாகவும் 269 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் ஒருவர் பலி!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை மற்றும் கடும் குளிரான காலநிலையால் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த 173 பேரும், திருகோணமலையில் 71 குடும்பங்களை சேர்ந்த 251 பேரும், அம்பாறையில் 130 குடும்பங்களை சேர்ந்த 459 பேருமாக கிழக்கு மாகா ணத்தில் 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 44 வீடுகளும், திருகோணமலையில் 68 வீடுகளும், அம்பாறையில் 129 வீடுகளுமாக கிழக்கு மாகாணத்தில் 241 வீடுகள் சேதமடைந்துள்ளன.

275 மாடுகள் பலி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரு கோணமலை மாவட்டங்களில் 275இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 165 மாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 மாடுகளும், திருகோணமலையில் 50 மாடுகளும் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் இம்மாத இறுதியில் பேச்சு

இந்தியாவுடனான நிறுத்தப்பட்ட ‘எட்கா’ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை இந்த மாத இறுதியில் இலங்கை ஆரம்பிக்கவுள்ளது என்று சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரதான பேச்சாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக உடன் படிக்கைகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமான – எட்காவை செயல்படுத்த இலங்கை விரும்புகிறது. இது தொடர்பான பேச்சை இந்த மாத இறுதியில் தொடங்குவோம். இந்தியா – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து நடைமுறையிலுள்ள (ஐ. எஸ். எவ். ரி. ஏ.) உடன்படிக்கை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த 2016 – 2019 காலப்பகுதியில் நாம் 11 சுற்று பேச்சுகளை முடித்துள்ளோம்”, என்றும் அவர் கூறினார்.

“இறக்குமதியை பொறுத்தவரை இலங்கை சீனா, இந்தியாவை நம்பியுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்தியாவிடமிருந்து 474 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், 98 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதில் காணப்படும் சமச்சீரற்ற தன்மை தொடர்பில் எட்கா உடன்படிக்கை தொடர்பாக இலங்கை பேச விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை தளர்த்த பேச்சு நடத்த இலங்கை விரும்புகிறது – என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரெலோவின் பொறிமுறை யோசனைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். சாதகமான சமிக்ஞை

அரசாங்கத்துடன் ஆரம்பிக்க உள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் சில பொறி முறைகள் குறித்து ஊடகத்திற்குக் தெரிவித்திருந்தார். அதில் ஏனைய கட்சிகளும் தமது ஆலோசனைகளை முன்வைக்குமாறும் கோரியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கருத்துகளை முன்வைத்துள்ளது.

தமது கட்சியின் கருத்துகளை முன் வைத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

ரெலோ அமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான பொறிமுறை ஒன்றை 09. 12.2022 அன்று பொதுவெளியில் வெளியிட்டிருப்பதுடன் அவை தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ளோரிடமிருந்து கோரியிருக்கின்றது. இந்தக் கோரிக்கை பொதுவெளியில் இருப்பதன் காரணமாக, அதற்கான எமது கருத்துக ளையும் ஆலோசனைகளையும் பொது வெளியில் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

முதலாவதாக, அரசாங்கம் குறிப்பிட் டுள்ள தமிழர் தரப்பினருடனான பேச்சு வார்த்தையானது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா? அல்லது புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பானதா? அல்லது வடக்கு – கிழக்கு மக்களின் அன்றாட பிரச் சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா? என்பதை முதலில் அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழர் தரப்பும் தாம் எது தொடர்பில் பேசப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில்தான் பேச்சுவார்த்தைகளுக்கான ஒருபொறிமுறையை வகுக்க முடியும். ரெலோ அமைப்பு வெளியிட்டுள்ள பொறிமுறையைப் பார்க்கின்றபொழுது, அது தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான பொறிமுறையாகவே தோன்றுகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு வரையறுக்கப்பட்டாலே அந்தத் தீர்வை உள்ளடக்கியதான அரசியல் யாப்பை உருவாக்க முடியும். ஆகவே அந்த வகையில் அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்பது முதன்மையானது. ஏற்கனவே அரசாங்கம் நியமித்த பல ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளைத் தயார் செய்தும் சகல அரசாங்கங்களாலும் அவை குப்பைத் தொட்டியில் வீசியெறியப் பட்டனவேயொழிய அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் என்பது வரவேற்கப்படக்கூடிய ஒரு விடயமே. ஆனால் அரசாங்கம் உள்நாட்டிலேயே எமது பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகக் கூறுகின்றது. அதே சமயம் அவர் கள் இதைத் தீர்க்கமாட்டார்கள் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

எனவே, உண்மையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால், அது மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த பேச்சுவார்த் தைகளுக்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் போன்ற கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அந்த வகையில், காணிகள் தொடர்ந்து பறிமுதல் செய்வதை நிறுத்துவதுடன், யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே கையளிப்பதற்கான காலவரையறை ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கால எல்லை மிகக்குறுகிய காலஎல்லையாக இருத்தலும் வேண்டும்.

இரண்டாவதாக, 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து இயற் றப்பட்ட அதிகாரப்பகிர்விற்கான சட்டங்க ளும் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும். ஏற்கனவே இவை சட்டங்களாக இருப்பதன் காரணத்தினால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கால தாமதமின்றி இவற்றை நிறைவேற்று வதற்கான வழிவகைகளையும் செய்ய முடியும்.

மூன்றாவதாக, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான ஒருகுழு வினை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் இணைந்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறான தேசிய இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆலோசனைகளையும் ஆக்கபூர்வமான கருத்து களையும் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்தத்துறையில் பரிச்சயம் பெற்ற, நிபு ணத்துவம் பெற்றவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களையும், புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கியும் ஓர் ஆலோசனைக்குழுவும் அமைக்கப்படல் வேண்டும். இவை தவிர, இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பிரதிநிதிகள், அமெரிக்க, ஐரோப்பிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவானது மத்தியஸ்தம் வகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலாம். இவை தொடர்பாக இந்தியா, ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகளுடன் பேசி அத்தகையதொரு நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிக்க வேண்டும். இவை பேச்சுவார்த்தை தொடர்பான சில அடிப்படையான அம்சங்கள் என்பதை முன் வைக்க விரும்புகின்றோம். – என்றுள்ளது.

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது – ஹர்ஷ

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை விரிவுபடுத்த முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளில் இந்தளவிற்கு அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் கிடையாது. பொருளாதார சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  மொத்த தேசிய உற்பத்தியில் 2.43 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதம் மாத்திரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 30 இலட்சம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்.

ஆனால் அவர் பதவி விலகும் போது நாட்டின் ஏழ்மை நிலை 90 இலட்சமாக அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த சனத் தொகையில் 60.3 சதவீதமான குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை கோரியுள்ளார்கள்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக மற்றும் ஏழ்மை நிலை 2023 ஆம் ஆண்டு பன்மடங்காக அதிகரிக்க கூடும்.

சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.ஆகவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

சமுர்த்தி அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.சமுர்த்தி பயனாளர்களில் 50 சதவீதமானோர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு உண்மையான தகுதி உள்ள 50 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறுவதில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இந்நிலைமை முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.நலன்புரி திட்ட சபை ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வெளிப்படை தன்மையுடனான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சினை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் மாத்திரமல்ல,அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 38 இராஜாங்க அமைச்சர்களும்,20 அமைச்சரவை அமைச்சுக்கள் 20 உள்ள நிலையில் எந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடுகள்,வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாடுகளில் இந்தளவு பரந்துப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் கிடையாது.

பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்கள் மீது சுமத்தி அமைச்சரவை விரிவுப்படுத்துவதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது.

தனிநபர் வருமான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வருமான வரி விதித்தால் அவர்களால் எவ்வாறு வாழ முடியும்.

நாட்டில் இருந்து பெரும்பாலான மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.நாட்டை விட்டு வெளியேறுபவர்களை சட்டமியற்றி தடுக்க முடியாது.

தனிநபர் வருமான வரி அதிகரிப்பு ஊடாக 68 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.நாட்டில் 4 பிரதான நிலை கசினோ சூதாட்டங்கள் கடந்த 07 வருட காலமாக சுமார் 200 மில்லியன் ரூபா வரை வரி செலுத்தவில்லை.

இந்த வரிகளை முறையாக அறவிட்டால்,தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது,ஆகவே பொருளாதார பாதிப்பை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்த வேண்டாம் என்றார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 400 கிராம் பால்மா பொதியின் விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம்  தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு சட்ட மூலம் தயாரிக்கப்படும் – ரணில்

இந்து சமுத்திரத்தில் கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு திட்டத்திற்காக ஆசியாவில் முதலாவது சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மிடம் பாரிய கடற்படையும் , விமானப்படையும் இல்லாமலிருக்கலாம். எனினும் எம்மிடம் தற்போதும் சிறியளவிலான கடற்படை கப்பல்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சில நவீனமானவையாகும். இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் எமக்குள் பலம் உள்ளது என்பதைக் காண்பிப்பதற்கு இவை போதுமானவையாகும். இதனை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் எந்தவொரு தரப்பினரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக எவருடைய இராணுவ முன்னணிகளிலும் நாம் தொடர்புபட வேண்டிய அவசியமில்லை. எவ்வாறிருப்பினும் நாம் ஏனைய தரப்பினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் கடற்படை சுதந்திரத்திற்காக நாம் செயற்பட வேண்டும். இதன் போது ஏனைய நாடுகளை விட அதிகமான செயற்பாடுகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இலங்கை விசேடமான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.

ஆசியாவில் முதன் முறையாக கடலுக்கடியிலான இணைய கேபள் பாதுகாப்பு திட்டத்திற்காக சட்ட மூலமொன்றை தயாரிப்பதே அந்நடவடிக்கையாகும். 2022 ஆம் ஆண்டைப் பற்றி மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. 2050 ஆம் ஆண்டாகும் போது எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எனவே தற்போது நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை மீட்டுப்பார்க்க வேண்டும். நாம் பலவீனமான அரசாக முடியாது என்பதை இலங்கை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று பலவீனமான படைகளாகவும், பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் இருக்க முடியாது. அதன் காரணமாகவே 2050 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு தற்போது பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்மிடம் பொருளாதார பலம் இல்லாவிட்டால் , அரசியல் பலத்தைப் போன்றே பாதுகாப்பு படை பலத்தையும் ஸ்திரப்படுத்த முடியாது என்றார்.