இம்முறை பல்கலைக்கழகங்களிற்கு 44,000 மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்புக்கள் தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

மேலும் இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தளா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருhளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியில் பீடமும் , வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கனணி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தற்போதைய நிலை தொடரின் வட கிழக்கு மக்கள் அடையாளத்தை இழக்க வேண்டி ஏற்படும் – சம்பந்தன்

வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்

புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அரசியல்தீர்வு தொடர்பில் இலங்கை அரசாஙகம் தீர்வுகளை முன்வைக்கவில்லை,ஒரு பக்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும்மீள்குடியேற்றம் காரணமாக சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது அதேவேளை வன்முறைகள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் நாட்டிலிருந்து தப்பி வெளியேறுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும்.

சர்வதேச சமூகம் இந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது. உலகிற்கு இது பிழையான முன்னுதாரணமாக மாறும்.

பிராந்தியத்திலும் நாட்டிலும் சமாதானத்தை சர்வதேச சமூகம் விரும்பினால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்!

சமஷ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் ஈழத் தமிழர்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நல்லெண்ண ஆரம்பமாக நாம் வரவேற்கின்றோம்

பாரத தேசத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டை வரவேற்பதுடன் தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட நீண்ட கால அபிலாசையான சமஸ்டி அரசியல் தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்து இந்திய மத்திய அரசு பங்களிக்க வேண்டும் இதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு அத்துடன் இந்தியாவின் மத்தியஸ்த்துடன் கொண்டு வரப்படும் சமஸ்டித் தீர்வே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக தாயக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கோரி வருகின்றனர் அத்துடன் 1949 இல் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் ஐனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணை சமஸ்டிக் கோரிக்கையாகவே இருக்கின்றது ஆகவே தமிழர்களின் ஐனநாயக அபிலாசையை பெற்றுக் கொடுக்க பாரத தேசம் பற்றுதியுடன் பணியற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் மேலும் தெரிவித்த அவர், ”சிலர் எழுந்து நின்று பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. அணியை நிர்வகிப்பது எனது பொறுப்பு அல்ல, அது உங்களுடையது” என தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 648,148 டொலர்கள் ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (டிச 1) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், Fairmed நிறுவன உத்தியோகத்தர், மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரப்படுத்தலில் மீண்டும் கீழிறங்கிய இலங்கை

ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ‘CCC இலிருந்து CC ஆக இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.

அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, நேற்று இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அரசியல் கட்சிகளிடையே அதிகாரத்திற்கான தாகம் அதிகம் – விக்டர் ஐவன்

இலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதில் தற்போதைய நெருக்கடியை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சீர்திருத்தங்களிற்கான இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழல் மிகுந்த பொல்லாத அமைப்பு முறையை ஆழமான மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு தேர்தல்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை என ராவயவின் ஸ்தாபக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கான நேரம் என ஒன்று உள்ளது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நெருக்கடி உள்ளது அதிகாரத்திற்கான தாகம் அதிகமாக உள்ளது எனவும் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு முயல்வதற்கு பதில் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து அதிக கரிசனையை இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துகின்றன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

அமைப்பு முறை மாற்றத்திற்கான தற்போதைய வேண்டுகோள் அரசமைப்பிற்குள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.