ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் – ஹர்ஷ

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.

மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.

அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.

மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை – பிரேமலால் ஜயசேகர

பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார் கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக உள்ளது என தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால்  காங்கேசன் துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்

தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினைமேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்

அதேபோல் பலாலி சர் வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம்  பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார் ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

தவறை ஏற்றுக்கொண்டாலேயே மன்னிக்க முடியும் – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் தங்களின் பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும் என்றும் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள் அதனை நாம் மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை குறித்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பேராயர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வந்த மறுநாளே அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து அவற்றையெல்லாம் எவ்வாறு வெளிப்படையாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்கைகளை சிபாரிசு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை இதனை பொலிஸாரிடம், நீதிமன்றத்திடம் ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அவருடைய பொறுப்புகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். அதன் பின்னணியில் அரசியல் சதி ஒன்று இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல தெளிவற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கு எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டா அதிபர் திணைக்களத்திற்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லை,அதனால் ஒன்றையும் செய்வதற்கு முடியாது உள்ளது.

தற்போது நாட்டில் செவிடான யானைகள் மற்றும் ஒரு பெரிய யானையும் அதன் கூட்டத்துடன் வந்துவிட்டது. அவர்களிடம் வீணை வாசிப்பது பயணற்றது.

சட்டத்தை நினைத்தப்படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு நினைத்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தோன்றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்கட்டும். வேதத்தில் உள்ளது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களை பின் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்

பாதீட்டால் நடுத்தர மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் – சம்பிக்க

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

வரி அதிகரிப்பை மாத்திரம் இலக்காக கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் ரூபாவாக காணப்படும் நிலையில் அரச செலவினம் 8000 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்திற்கும்,செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் யோசனைகள் வரவு உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

கடந்த 08 மாத காலத்தில் அரசாங்கம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முறையான திட்டங்களை வகுக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அக்கறை கொள்ளவில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடை ஏற்க முடியாது – ஹக்கீம்

மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.

ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம்

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,

இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும்.

அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்களாகும்

தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும்.

மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தென்னிலங்கைக்கு மாற்றம்

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் தமது பகுதிக்கே பெற்றுத் தருமாறு கோரி 07 பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உலக வங்கியின் உதவியின் கீழ் கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி தென்பகுதிக்கு மாற்றப்பட்டமை எமது பிரதேச மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு ஜனவரி மாதம் பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை தேடிய போது குறித்த ஆயிரம் மில்லியன் ரூபா நிதியானது தென்னிலங்கை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரியவந்தது.

இது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் குடிப்பதற்கு பொருத்தமற்ற நிலத்தடி நீரை கொண்டுள்ள எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களில் அதிகளவானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தன் உள்ளிட்ட தோல்வியடைந்த தமிழ் தேசிய தலைவர்கள் பதவிவிலக வேண்டும் – ரெலோ வினோ எம்.பி

இரா.சம்மந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்களே. அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (13) இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேங்கள் இருந்தது. காலையில் எழுந்தவுடன் இரண்டு மூன்று பத்திரிகைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்று, இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதையும் பார்த்தேன். எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப் போகிறதா? இதில் உள்ள சாதக பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டு தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

ஒரு நேரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்மந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, அப்பொழுது யாழ் ஊடகவியலாளர் முன்னாள் சிரேஸ்ட போராளிகளை அழைத்து வந்து இந்த தேர்தலில் எங்களையும் இணைத்து போட்டியிட வேண்டும். போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எகன்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை. போராளிகளை இப்போது இணைக்க முடியாது என சம்மந்தன் ஐயா சொல்லிவிட்டார். பிறகு அதே ஊடகம் அல்லது அதே ஊடகவியலாளர் எழுத்துக்களெல்லாம் இந்த போராளிகளை யாரோ தவறாக வழிநடத்துகிறார்களாம். அன்று தான் செய்கின்ற போது சரியாக பட்டது. இன்று பிழையாகப்படுகிறது. அந்த ஊடகவியலாளரை யரோ பிழையாக வழிநடத்துகிறார்களா?. போராளிகள் மத்தியில் ஏன் நலன்பேணும் விடயத்தில் திடீர் அக்கறை என போராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அந்த பத்தி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிற நிலமையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது. உங்களையும் பாதித்து செல்வதால் இந்த விடயத்தை சொல்கின்றேன். விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியய்படுகின்ற ஒரு நிகழ்சித் திட்டமோ எல்லோரையும் பாதிக்கும். எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக் கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உஙகள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை தடுக்க அல்லது எதிர்த்து குரல் கொடுக்க கூடிய தகமை உங்களுக்கும் இருக்கிறது.

அண்மையில் எங்களது கூட்டமைப்பினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினத்களுக்குள் பிளவு இல்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சுத்தப் பொய். பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருகின்றன. அண்மையில் எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்றவர் அண்ணன் தவராசா அவர்களே ஏற்றுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக் கொண்டார். அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்திருக்கிறார்கள். தவறுகள் நடக்கின்றது என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள். சம்மந்தன் ஐயா அதை மறைக்கப் பார்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காக செயற்பட முடியாது. இதனை பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருகின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலமை இக்ருகிறது. அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலமை இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்பட போகிறது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப் புலிகள், போராளிகள் அடங்காது எப்படி இருக்க முடியும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, நாங்கள் ஒன்றாக பேசிய போது, பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் கூறினார். செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவம். கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்த கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார். அதற்கு பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து பிரிநதிருந்த போராட்ட இயக்கங்கள், மிதிவாதக் கட்சிகள் இணைந்து இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது. முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளை ராஜனாமா செய்து விட்டு போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை. ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப் போன தலைவர்களாக தான் இருக்கிறார்கள். தந்தை செல்வா, ஜி.ஜிஜ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் இரா.சம்மந்தன் ஆகியோராக கூட இருக்கலாம். தோற்றுப்போன தலைவர்களாக இருக்கிறார்கள். ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்க கூடாது. வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டு போகலாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம். ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களின் உடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள் தான். மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாத தலைவர்களாக தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரி சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாக செயற்படவுள்ளீர்கள். அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப் போராடிய ஒரே குற்றத்திற்காக இந்த போராளிகள் வெறுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு போரளிகளும் மன ரீதியாக உடைந்து போய் இருகிறார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சிலருடைய நடவடிக்கைகளே இதற்கு காரணம். சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகிறது. சில இடங்களில் சாதாரண ஒரு பேராளியாக கூட மதிக்கப்படாத நிலமை இருந்து கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்திற்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கிறது. அதனை நாம் உணர்கின்றோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

தலைவர்கள் ஒரு போதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. எனது அனுபவத்தில் அரசியல் தீர்வுக்காய் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஏதோ அரசியல் நடந்து கொண்டு தான் இருக்குமே தவிர, உரிமைக்காக தமிழ தலைவர்கள் என தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் எந்த தலைவரும் உண்மையான அக்கறையாக செயற்படாது தான் உள்ளார்கள். பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களிள் உரிமைக்காக கடைசிவரை இணையப்போவதில்லை.

விக்கினேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் ஙாங்கள் உணர்ந்திருக்கின்றோம் எனக் கூறினார். முழுக்க முழுக்க அவர் தான் காரணம். அவர் உடைப்பதற்காக, சிதைப்பதற்காக, அவருடைய நிகழ்சி நிரலை கொண்டு சென்று விட்டு இன்று கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருப்பதை உணர்ந்திருக்கின்றேன் என்கிறார். தமிழ மக்களின் கூட்டுக்குள் அவர் மிகப்பெரிய ஒரு குற்றவாளி. அதேபோல் தான் ஏனையவர்களும். கூட்டமைப்பு என்பது பலமான ஒரு சக்தி. அதில் தவறுகள் இருகின்றன. அண்மையில் கூட்டமைப்பை பற்றி எனது முகநூலில் விமர்சனம் செய்தேன். கூட்டமைப்பு ஒரு விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறை கூறினேன்.

அங்கத்துவ கட்சி ஒன்றின் செயலாளர் என்னுடைய கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கம் கேட்டு கடித் அனுப்பியுள்ளார். முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கட்சியிக் சின்னத்தை விபச்சார வீடாக விமர்சிப்பதாக தெரிவித்து கடிதம் வந்தது. நான் விமர்சிப்பேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன். உள்ளுக்குள் இருந்தாலும், சரி வெளியில் இருந்தாலும் சரி தொடர்ந்தும் விமர்சிப்பேன். ஏனென்றால் இந்த கட்சியை போராளிகள், ஏனையவர்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு வளர்தெடுத்தடுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள் நாங்கள். இவர்கள் தங்களது சொந்தக் கட்சியை வளர்தால் கூட அது கூட்டமைப்பின் பிரச்சனை தான். தமிழரசுக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அதனை நாங்கள் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு விமர்சிப்போம். தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். ரொலோவுக்குள் பிளவு என்றாலும், புளொட்டுக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். அதனையே பொது வெளியில் கூறுகின்றோம்.

அதற்கு பிறகு தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அந்தக் கட்சியை விமர்சிக்கிறார்கள். அதுவும் தவறு தானே. நாங்கள் விமர்சித்தால் பிழை. ஒரே கட்சிக்குள் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு இருகிறார்கள். அந்தச் செயலாளர் இப்ப பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். விளக்கம் கேட்டாரா? தவராசா தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா, சிறிதரன் தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா. அல்லது சுமந்திரன் தவறு விடுகின்றார் என விளக்கம் கேட்டாரா. தவறுகள் கடந்த காலங்களில் எல்லாம் நடந்தது தான். நாங்கள் இனியும் திருந்தவில்லை பலனில்லை. தமிழ் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி சொல்கிறார். இவர்கள் விழுந்தடிக்துக் கொண்டு பேசுவோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை.

ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் கொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள் எப்படி எப்படி உடையப் போகுதோ தெரியாது. ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனும், அப்படி, இப்படி என சொல்வார்கள். நாங்கள் ஒன்றுபட மாட்டோம் என அவர்களுக்கு தெரியும். அதனால் பிரச்சனைக்கு தீர்வு இல்லை.

முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவர்கள் வேறு காரணங்களை கூறி நிராகரித்து விட்டார்கள். போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது என சொல்வதற்கு இடம் கொடுக்க முடியாது. ஒற்றுமையாக செயற்படுங்கள். அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாக சொன்ன யாழ் ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதை குற்றம் சாட்டுகின்றார். அன்று அவர் உண்மையில் போராளுக்கு உதவி செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காக சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் எனத் தெரிவித்தார்.

2023 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிப்பு

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.

2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.

இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

  • 8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது.
  • சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையினூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
  • போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
  • புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.
  • 52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
  • பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.
  • இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
  • இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.
  • பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
  • 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செயற்ப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • பரிட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த வரவு – செலவுத்திட்டம் சம்பிரதாய வரவு – செலவுத்திட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.
  • வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயுள்ளமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.
  • சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
  • சர்வதேச மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்கவும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம்.
  • முதலீட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது அவசியமாகவுள்ளது. இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • விவசாயத்துறைக்கு தனியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்குள் தொழிற்சங்கங்கள், தனியார் உாிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
  • நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
  • எண்மாண தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
  • கறுவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • அரச மற்றும் தனியார் துறையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய தேசிய அபிவிருத்தி குழு நியமிக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு 130 மாகாண பாடசாலைகள் மற்றும் 20 தேசிய பாடசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வரிச்சலுகையின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றுப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்ப 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • புகைத்தல் பொருட்கள் சார் வரிவிதிப்பின் படி பீடிக்கு 2 வீத வாி அறவிடப்படும்.
  • விசா மற்றும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.
  • அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வருட இடைநடுவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதுடன் 2023 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
  • இரத்தினக்கல் விற்பனையை மேம்படுத்துவதற்காக புதிய வலயம் உருவாக்கப்படும். இதற்காக புதிய தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
  • சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் ஊடாக மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை 100%க்கு மேல் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
  • உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் எண்மாண பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்படும்.
  • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம் உருவாக்கப்படும்.
  • தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
  • வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படும்.
  • உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.
  • தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
  • 2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
  • அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
  • முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட நிவாரணம்.
  • சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மதுவரித் திணைக்களத்துக்கு பாிசோதனைகளுக்கென நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூாிய சக்தி கட்டமைப்புகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
  • பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக மாற்றப்படும்.
  • தொழிலாளர் சந்தைக்கான புதிய கொள்கைகள் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்படும்.
  • விவசாய ஏற்றுமதிக்கு காணி வழங்கப்படுவதுடன், குறைந்த பயன்பாடுள்ள பயிரிடப்படாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக தொழின்முனைவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேசிய அபிவிருத்திக்காக கனிம வளங்களை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எங்களிடம் மக்கள் சவால்களை முன்வைத்திருக்கிறார்கள். முகங்களை மாற்றும் அரசியலைத் தவிர்த்து முறைமையை மாற்றும் பொறிமுறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  • நாட்டை உயர்த்தும் புதிய முயற்சிக்கு செயல்வடிவிலான பங்களிப்பை வழங்குமாறு அனைவாிடமும் கோருகிறேன்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரை நிறைவுக்கு வந்தது.

கிழக்கு ஆளுநர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு இயன்றளவு வசதிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அதே ஹோட்டல் வளாகத்தில் ஆளுநருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளின் சுற்றுலா, பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் பலவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரி பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized