புலிகள் எங்களிடம் சரணடையவில்லை – இலங்கை இராணுவம்

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழ் அச்சுப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு சற்றுமுன்னர் (03) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது.

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றனர்

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்த நிலைமைகளில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னரும்கூட சுய அரசியல் இலாப நோக்கிலான கபடத்தனமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவேற்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் போக்கில் இருந்து பேரின அரசியல்வாதிகள் தடம் மாறுவதாகவும் தெரியவில்லை.

அரசியல் இலாபத்திற்கும் அதிகாரப் பேராசைக்கும் இனவாத வெறியூட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றி, அதில் அரசியல் குளிர்காய்ந்த ஆட்சியாளர்களுக்கு அரகலய – போராட்டக்காரர்கள் சரியான பாடம் புகட்டினர். பொருளதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் உயிர்ப்பு பெற்ற சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏமாற்றத்தின் விளைவாக தன்னெழுச்சி பெற்று கொதித்தெழுந்த மக்கள் பேரலைக்கு முகம் கொடுக்க முடியாத ஜனாதிபதியும் பிரதமருமாகிய ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளைத் துறந்தார்கள். கோத்ட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டே ஓடித்தப்பினார்.

இந்த மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பிரசார அரசியல் போக்கிலேயே சென்று கொண்டிரக்கின்றது. கடன் தொல்லையில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அகலக் கால்வைத்து முனைப்பாகச் செயற்பட முற்பட்டிருக்கின்றார். அவருடைய அரசியல் அகலக்கால் வெளிப்படுத்துவதைப் போன்று பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று கூறுவதற்கில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்த அதே அரசியல்வாதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட்டப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பின்னர் மீண்டும் அவற்றைக் கூட்டுவதற்கும் வாக்களித்திருந்தார்கள். அதே அரசியல்வாதிகளே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்.

இது, நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான சுய அரசியல் இலாப நோக்கத்தையும் அதிகாரப் பேராசையையும் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றது. மக்களின் நலன்களை மேம்படுத்தவும் நாட்டை முன்னோக்கி முன்னேற்றிச் செல்வதற்குரிய செயற்பாடாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சூட்டோடு சூடாக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருந்த தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அதிகாரப் பிடிகொண்டு அடக்கினார். அவரது நீண்டகால ஜனாதிபதி பதவி ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு கோட்டாபய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருந்த போராட்டமே உந்து சக்தியாக அமைந்திருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை அதிகார பலம் கொண்டு அவர் அடக்கினார். அதன் மூலம் மக்கள் அனைவரும் தனது பிடியின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்ற அதிகார மேலாண்மையை அவர் புலப்படுத்தி இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த எரிபொருள் பற்றாக்குறை உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றவற்றில் அவர் சிறு தளர்வை ஏற்படுத்தி உள்ளார். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றம், அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமைகள், கட்டுப்பாடின்றி வீங்கிச் செல்கின்ற பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் இன்னும் வெற்றி காணவில்லை. சிறிய அளவில்கூட முன்னேற்றம் காணவில்லை.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற பாரிய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதாகக் காட்டியிருக்கின்றார். அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படுகின்ற – 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீரமானங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிட்டியுள்ள போதிலும், நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

கடன் சுமைகளும், கட்டுப்படுத்த முடியாமல் எகிறிச் செல்கின்ற பண வீக்கமும் நாட்டின் பொருளதார உறுதிப்பாட்டைக் குலைத்திருக்கின்றன. பொருளாதார நிலைமையை உறுதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள போதிலும், அந்த நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அரசு நிலைதடுமாறி நிற்கின்றது.

அதேவேளை, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும், ஜனநாயத்தை முறையாகப் பேணுவதிலும் அரசாங்கம் இன்னும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களினதும் இலங்கைக்கான உதவிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி அகலக்கால் வைத்து பல்வேறு விடயங்களில் நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி), இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அந்த முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இதனால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களே எதிர்வினையாக கிளர்ந்திருக்கின்றன.

காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்திருக்கின்றது. ஆனால் அந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகைளயும் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அத்துடன் இழப்பீடாக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள். தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதங்களை வவுனியவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் எரியூட்டியிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியாகிய டொக் ஸொனெக்கிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வடக்கு கிழக்குப் பிரதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படுகின்றது என சர்வதேசத்துக்குக் காண்பிக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றது. ஆனால் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக அதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு அரசு ஊக்கமளித்திருக்கின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல பாதிக்கப்பட்டவர்களை சீற்றமடையச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், (இராணுவத்திடம்) சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்களை எல்ரீரீயினரே கடத்திச் சென்றனர் என்றும் ஏனைய குழுக்களும் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இராணுவத்திடம் விடுதலைப்புலி உறுப்பினர்களே சரணடைந்தனர். அதுவும் யுத்த முடிவில் பாதுகாப்பளிக்கப்படும். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு அளித்த உத்தரவாதத்துக்கமைவாகவே அவர்கள் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் இரகசியமாக நடைபெறவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அவர்களின் கண்முன்னால்தான் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். இதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கின்றன.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில் இது தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் போதிய அளவில் சாட்சியமளித்திருக்கின்றனர். இத்தகைய ஒரு நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல சரணடைந்தவர்கள் காணாமல் போனதற்கான சாட்சிகள் இல்லையென கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற நடவடிக்கையாகும்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ள நிலையில் அவர் வெளியட்டுள்ள கருத்துக்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற நிலைமையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

– பி.மாணிக்கவாசகம்

பாராளுமன்றம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என ஜனாதிபதி சபாநாயகருக்குக் கடிதம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை  மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட  முன்மொழிவுகளை  அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  ஜனாதிபதி எழுத்து மூலம்  அறிவித்துள்ளார்.

இந்த  முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை  மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  இன்று  (03)    அனுப்பியுள்ள இந்த  எழுத்துமூல    அறிவிப்பில்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளில்  வங்கி விவகார  மற்றும் நிதிச் சேவைகள்  தொடர்பான குழு  (Committee on Banking and Financial Services), பொருளாதார ஸ்திரப்படுத்தல்  தொடர்பான குழு (Committee on Economic  Stabilization) மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான  குழு  (Committee on Ways and Means) ஆகியவற்றை வங்கி விவகாரங்கள் தொடர்பில் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அவை இதுவரை  முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி  சபாநாயகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கவும், பாராளுமன்ற  வரவுசெலவுத் திட்ட  அலுவலகத்தை நிறுவவும் முன்மொழியப்பட்ட போதும் அவையும் செயற்படுத்தப்படவில்லை.

இந்த  பரிந்துரைகளின்படி 17 பாராளுமன்ற துறைசார்  மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டியுள்ள  போதிலும் அவற்றுக்கான தலைவர்கள்  இது வரை நியமிக்கப்படவில்லை எனவும் அவற்றுக்கு நியமிக்கப்படும் இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்   தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும்  முறைமை  மாற்றம் (System Change)  மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்கான சட்டமூலத்துக்கும் அமைச்சரவை  அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சட்டமா அதிபரின்  அனுமதியைப் பெற்ற  பின்னர்  அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள  ஜனாதிபதி , இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். கடந்த வாரம், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது

இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் 6ஆவது கூட்டத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. எவ்வாறாயினும், அந்தச் சட்டத்தின் அண்மைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ந்தும் செயற்படுமாறு இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

200 ரூபாயினால் குறைக்கப்பட்ட நெத்தலியின் புதிய விலை 1300 ரூபாய்,

96 ரூபாயினால் குறைக்கப்பட்ட கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாய்,

22 ரூபாயினால் குறைக்கப்பட்ட வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாய்,

105 ரூபாயினால் குறைக்கப்பட்ட டின் மீனின் புதிய விலை 585 ரூபாய்,

17 ரூபாயினால் குறைக்கப்பட்ட சிவப்பு பருப்பின் புதிய விலை 398 ரூபாய்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவ ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தால் நிதி சேகரிப்பு

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்து சமுத்திரத்தின் முத்தாக அறியப்படும் இலங்கை இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கடந்த 1948 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய நெருக்கடி இதுவாகும்.

இதன்விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மொத்த சனத்தொகையில் சுமார் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி சுமார் 6.3 மில்லியன் மக்கள் அவர்களின் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்று தெரியாத நிலையில் உள்ளனர்.

எனவே இந்நிலைவரம் தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் பின்னணியில், நாம் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏனைய முயற்சிகளில் ஒன்றாக நிதி சேகரிப்பு பிரசாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இதனூடாக தற்போது இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் இப்பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இரு துறைகளாகக் காணப்படுகின்றன. நிரம்பல் சங்கிலி சீர்குலைந்திருப்பதுடன் குறிப்பிட்ட சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதன்விளைவாக நாடளாவிய ரீதியில் வழமையான சில சத்திரசிகிச்சைகளைத் தாமதப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவை மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகின்றன. அதன்படி இலங்கையர்களுக்கு உதவுவதற்கு எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது.

இலங்கையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் நீங்களும் பங்களிப்புச்செய்யமுடியும். அதன்படி ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி சேகரிப்புத் தளத்திற்கு உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம்.

வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உதவிகளை உலகின் பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்நிதி சேகரிப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனூடாகத் திரட்டப்படும் நிதியானது இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகளுக்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குடும்பங்களிடையே வீட்டுத்தோட்ட செயன்முறையை ஊக்குவிப்பதற்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கப்பல்கள் சீனாவின் போர்க்கப்பல்களிற்கு எரிபொருள் வழங்குகின்றன – இந்தியா அதிருப்தி

சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான வாங் யுவாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு இலங்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து இலங்கை தனது துறைமுகத்தில் போர் மூலோபாய கண்காணிப்பு கப்பல்களிற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக தெரிவித்துள்ளன.

சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் எரிபொருட் கப்பல்கள் சீனாhவின் போர்க்கப்பல்களிற்கு நடுக்கடலில் வைத்து மறைமுகமாக எரிபொருட்களை நிரப்புகின்றன என இ;ந்தியா தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இலங்கையிடம் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.

கப்பல்களை தனது துறைமுகத்திற்குள் அனுமதிப்பது மற்றும் அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விடயங்களில் வெளிப்படையான தராதர நடைமுறையை பின்பற்றவேண்டும் என இலங்கை இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தி;ல் மீள எரிபொருளை நிரப்புவதற்கும் அனுமதிக்கவேண்டாம் என இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையிலிருந்து எரிபொருளுடன் செல்லும் இலங்கை கப்பல்கள் இந்திய அமெரிக்க கரிசனைகளை புறக்கணித்து சீன போர்க்கப்பல்களிற்கு எரிபொருளை வழங்குகின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க கடலோர பகுதியில் கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்களை தவிர தற்போது இந்து சமுத்திரத்தில் எந்த சீன கப்பல்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சீன போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் கிழக்கு ஆபிரிக்க கடலோரம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன ஆனால் அந்த பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் எதுவுமில்லை. துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கை என சீனா சாக்குப்போக்கு சொல்கின்றது என சீனாவை அவதானிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் – பவ்ரல்

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதபோதும் புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டடி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்யுமாறு தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய, அதன் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்ட ஒரு வருடகாலம் 2023 மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்றது என்பது அறிந்த விடயம்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காரணம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு திருத்த யோசனைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவது இரகசியமான விடயமல்ல. அந்த யோசனைகளில் சில யோசனைகள் நியாயமானதாக இருந்தாலும் அதற்றை செயற்படுத்துவதற்கு எடுக்கப்படும் காலத்துக்கமைய மற்றும் இவ்வாறான திருத்தங்களால் கடந்த காலங்களின் அனுபவங்களைக்கொண்டு பார்க்கும்போது, இந்த நடவடிக்கையின் இறுதி பெறுபேறாக இருப்பது நாள் குறிப்பிடாமல் தேர்தல்லை ஒத்திவைப்பதாகவே அமைந்துள்ளது.

அதனால் இந்த நிலைமையை தவிப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போது அதிகாரம் இருக்கும் ஒரே நிறுவனமான உங்கள் ஆணைக்குழு, விரைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்தால் அதனை பிற்போடுவதற்கு எந்த நிறுவனத்துக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தடையாக இருந்த 2022 தேர்தல் வாக்காளர் இடாப்பு, 2022 ஒக்டோபர் 31ஆம் திகதியாகும் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.

அதனால் விரைவாக தேர்தலை அறிவிப்பு செய்து, மக்களின் வாக்குரிமையை பாதுகாத்துத் தருமாறு உங்களையும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால், ஏதோ ஒரு முறையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் நோக்கில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக, மீண்டும் தேர்தலை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு மீதும் குற்றம் சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

அத்துடன் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றபோதும் ஆணைக்குழுவுக்கு, புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, தங்களின் அடிப்படை கடமை மற்றும் சாதாரண செயற்பாடுகளின் ஒரு பகுதியான உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நம்புகின்றோம். அதனால் இது தொடர்பாக நீங்கள் விரைந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை – சர்வதேச மன்னிப்புச்சபை

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் உள்ளிட்ட தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையேயன்றி, அதுவோர் சலுகையல்ல. எனவே அந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டுமக்கள்மீது அரசாங்க்ததினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத்தடைச்சட்டத்தை முழுமையான இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதற்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், அதனைக் கண்டித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிவழங்க பொலிஸார் மறுத்துள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் போன்ற தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதற்கான காரணமாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ள விடயங்கள், அமைதிப்போராட்டங்கள்மீது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவசியமான சர்வதேச சட்ட நியமங்களைப் பூர்த்திசெய்யவில்லை. குறிப்பாக இப்போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஏனெனில் பெரும்பாலான கூட்டங்கள் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது ஏனையோரின் உரிமைகளிலோ குறித்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதே அதன் இயல்பாகும். அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையாகும்.

மாறாக அதுவோர் சலுகை அல்ல. எனவே இந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு என்று மன்னிப்புச்சபை அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பித்தக்கது.