மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி லெப்டினன் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ நேற்று வியாழக்கிழமை (08) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த இராணுவ பிரதானி இராணுவ தலைமையக நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே சந்திப்பின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி இலங்கை இராணுவம் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை ஆகிய இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை – சஜித் பிரேமதாச

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே,இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி,

தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது.

மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி – கிரியெல்ல

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஆற்றிய சிம்மாசன பிரசங்கத்தை செவிமெடுத்து, வாத பிரதிவாதங்களை முன்வைத்தோம்.ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கை பிரகடனத்தை நாங்கள் புறக்கணித்தோம்.ஜனநாயகத்துக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த போராட்டத்தின் மீது அரசாங்கம் வன்மையான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.வரலாற்றில் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை.

ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு,பாராளுமன்றத்துக்குள் வந்து ‘எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் ‘ என ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு வெட்கமில்லையா ?

நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் 40 இற்கும் அதிகமான வரிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியின் போது அமுல்படுத்தப்பட்ட சரீர வரிகள் ஊடாக எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படலாம்.தொழில் இல்லாத இளைஞர்கள் கூட வருமான வரி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.அரசியலமைப்புக்கு அமைய இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சமடைந்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிச்சயம் தோற்கடிப்போம்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி கோருகிறார். இவர்களுக்கு ஆதரவு வழங்கினால் எமக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்காது. ஆகவே அட்டை பூச்சிப் போல் ஒட்டிக் கொண்டு இருக்காமல் தேர்தலை நடத்துங்கள்.தமக்கான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துக் கொள்வார்கள் என்றார்.

சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 200 மில்லியன் டொலர் கையிருப்பினை பேணும் நிலையை எட்டியுள்ளது – டீ.வி.சானக

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல தசாப்தங்களின் பின்னர் 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினைப் பேணும் நிலைமையை அடைந்துள்ளது. அத்தோடு டீசல், பெற்றோல் உட்பட சகல எரிபொருட்களிலும் பல ஆயிரம் மெட்ரிக் தொன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டு எரிபொருள் இன்றி வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களின் பலனாக தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வலுசக்தி பாதுகாப்பிற்காக 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினை பேணக் கூடியதாகவுள்ளது.

அது மாத்திரமின்றி 130 ,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 83 ,275 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல், 8,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 11, 000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோல், 17, 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் மற்றும் 75, 000 மெட்ரிக் தொன் மின்சக்திக்கான எரிபொருள் என்பனவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டு, நீண்ட கால ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

டிசம்பர் – மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலநிலை என்பதால் எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளது.

இதனால் எரிபொருட்களின் விலை உலக சந்தையில் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. எனினும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் பின்னர் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் விலைகளில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படும்.

15 ஆண்டுகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் ஒரு சதம் கூட கட்டப்படாத ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

2022க்கு முன்னரான 15 ஆண்டுகளில் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் ட்டணமாக சுமார் 13 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால் 2023இல் எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் கப்பலுக்கு தாமதக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.

அதே போன்று முற்பதிவு செய்யப்பட்ட தினத்தில் எரிபொருட்களை தரையிறக்காமைக்காக கப்பல் நிறுவனங்களிடமிருந்து எமக்கு 16 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மேலும் தற்போது மீண்டும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதமொன்றுக்கு 3 மில்லியன் டொலர் வருமானம் ஈட்ட முடியும்.

எனவே இனிவரும் ஒவ்வொரு மாதங்களிலும் கப்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக கட்டாயமாக 10, 000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நேரடி டொலர் வருமானம் கிடைக்கும் என்றார்.

நாட்டை வங்குரோத்தாக்கியோரிடமிருந்து மக்களுக்கு நஷ்டஈடு பெற்று கொடுக்க நடவடிக்கை – சஜித் பிரேமதாஸ

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நிகழ்நிலை காப்புச்சட்டத்தையும் மறுசீரமைப்பு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பிரதான கருவி தனியார் துறையாகும். அதனால் இதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்தியை நாங்கள் எதிர்பாக்கிறோம்.

அதேபோன்று எமது அரசாங்கத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் கலந்துரையாடல் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் நாணய நிதியத்தை புரக்கணித்து செயற்படுவதென யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. நாணய நிதியத்துடன் இணைந்துகொண்டே இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது பொருளாதார கொள்கையின் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்துவோம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன் அந்த சட்டத்தை அரசியலமைப்பில் ஓர் பிரிவாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாட்டின் ஏற்றுமதி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் என்ஜினாக இருப்பது சிறிய, நடுத்தர, நுண் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 50வீத பங்களிப்பை வழங்கி வருகின்றன.

ஆனால் பராடே சட்டத்தின் மூலம் இந்த பிரிவினர் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

அதனால் எமது அரசாங்கத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். மாறாக அஸ்வெசும போன்ற தேர்தலை இலக்குவைத்து ஏழை மக்களுக்கு சிறியதொரு தொகையை கையளிப்பது போன்று அல்ல.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எமது திட்டத்தில் நாடு இழந்த வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் செயற்படுவோம்.

அதேபோன்று நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தின் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் சமர்த்திருக்கும் திட்டங்களில் கல்வி துறையில் மாற்றம், தகவல் தொழிநுட்ப துறையை விரிவுபடுத்தல், விவசாயம், கடற்றொழில் துறையை விருத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுதந்திர ஊடகத்தை பாதுகாத்து தற்போதுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி முறையான சட்டத்தை கொண்டுவருவோம் என்றார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யின் தாயார் அமரர் செபமாலை (பாக்கியம்) அவர்களின் இறுதி நல்லடக்க விபரம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அன்புத் தாயார் செபமாலை ( பாக்கியம் ) அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ( பாக்கியம் )அவர்கள் இன்றைய தினம் 5/2/2024 திங்கட்கிழமை ஜோசப்வாஸ் நகரில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற அமிர்தநாதன் (ஆயுள் வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பற்றிக் மற்றும் டெமோன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

அன்னார் ராசம், சலோமை, லிகோனி, சின்னத்தம்பி மற்றும் காலம்சென்றவர்களான அன்னமேரி, செலஸ்ரின், கபிரியேல் ,மற்றும் சாமிநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரது இறுதி நல்லடக்கமானது எதிர்வரும் புதன் கிழமை (7/2/20240) அன்று காலை 10 மணியளவில் தோட்டவெளி கிராமத்தில் உள்ள நற்கருணைநாதர் ஆலயத்தில் இரங்கல் பூஜைகள் நடைபெற்று பின்னர் விடத்தல்தீவு அடைக்கலமாதா ஆலயத்தில் வழிபாட்டுடன் விடத்தல்தீவு சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்

தாயை இழந்து துயருறும் உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்ளுவதுடன் அன்னையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம்.

சாந்தன் இலங்கைக்கு வர ஜனாதிபதி சம்மதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக அனுரகுமார தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.