13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – இலங்கை இடையே தரைவழித் தொடர்புகள் அவசியம் – மிலிந்த மொராகொட

தரைப்பாலங்கள் பாலங்கள் மின்விநியோக கட்டமைப்புகள் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை போன்றவற்றை ஏற்படுத்துவதிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து பயன்பெறும் பொருளாதாரவளர்ச்சியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கைகள் தங்கியுள்ளன என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

தரைப்பாலங்களை அமைப்பதன் மூலம் இருநாடுகளின் மத்தியிலான பயணங்களை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள்ளேயே காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் அதன் அயல்நாடான இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்துகள் அதிகமாவதற்கு தரைத்தொடர்புகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் சூழல் குறித்த கரிசனைகளிற்கு தீர்வு காணப்பட்டால் பிரிட்டனிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கால்வாய் போன்ற திட்டங்களை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் நெடுஞ்சாலைகள் பெருந்தெருக்கள் போன்றவற்றை அமைப்பாதற்கு சூழல்பாதிப்பு குறித்த மதிப்பீடுகளை பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் வளர்ச்சியிலிருந்து நன்மை பெறும் எண்ணம் இலங்கைக்கு காணப்பட்டால் அது நிலரீதியான இணைப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு குறித்து இந்திய பிரதமர் வெளியிட்ட கரிசனைகள் ஏன் இரு நாடுகளிற்கும் இடையிலான கூட்டறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது சமீபத்தைய யோசனைகளை பிரதமர் நரேந்திரமோடியுடன் விவாதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் தனது கருத்துக்களை வெளியிட்டார் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தினார் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ள மிலிந்தமொராகொட இறுதியில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள் காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு திருகோணமலை துறைமுகம் போன்றவற்றிற்கு செல்வதற்கும் இலங்கையிலும் இந்தியாவிலும் பொருளாதாரவளர்ச்சியை செழிப்பை ஊக்குவிப்பதற்கும். இருநாடுகளிற்கும் இடையிலான மில்லேனிய வருட உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலத்தொடர்பினை ஏற்படுத்த இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர் எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

எனினும் இதன் அர்த்தம் சேதுசமுத்திர திட்டமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கமறுத்துவிட்டார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியப்பிரதமர் கோரிக்கை

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இன்று நேரில் தெரிவித்தார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியத் தூதுவர் மேலும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், சி.சிறிதரன்,  சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.

இரண்டு கட்சிகளும் எப்படியான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என தூதர் கேட்டார்.

13வது திருத்தத்தை இறுதி இலக்காக கொள்ளவில்லையென்றும், சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தை தாம் அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்திய தூதர் குறிப்பிட்டார். துறைமுகம், சக்தி, முதலீட்டு வலயம் ஆகியவற்றில் இந்தியா பங்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்த அழுத்தங்களை வழங்குமாறு இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த விற்க முடியாத குப்பையாகி விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு நான் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால்கூட நாம் முகம் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.

மக்கள் இன்று போராட்டங்களில் ஈடுபடுவதில்லை தான். ஏனெனில், வீதிகளில் இறங்கி போராடுவதற்கு பதிலாக தங்களின் வருமானத்தை உயர்த்தும் வழிகளை பார்க்கலாம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், மக்களிடம் உள்ள கோபம் அப்படியே தான் உள்ளது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. தற்போது சிலர், ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்ததாக வரும் என்று கூறுகிறார்கள்.

கூறும் அவர்களுக்கே தெரியும், பொதுத் தேர்தல் ஒன்று தான் அடுத்து நடைபெறும் என்று. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார்.

இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஜனாதிபதியும் விரைவில் வீழ்ந்துவிடுவார். எனவே, தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள்.

ஏனெனில், இப்போது மக்கள் தொடர்பாக கவலைப்படும் ஆளும் தரப்பினர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின்போது அவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.

மக்களை பாதுகாக்க யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இறுதியில் தெரியவரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான சமஷ்டித்தீர்வை வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திருகோணமலை மக்ஹெய்சர் மைதானத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட 100 நாள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் நாளை முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் – சிவாஜிலிங்கம்

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கேற்க வேண்டுமெ ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களிடம் நாம் கூறவிரும்புவது என்ன வென்றால் எமது சுதந்திரத்துக்கான பொதுசனவாக்கெடுப்பை கோரும் செயற்பாடானது ஒரு சில கட்சிகள்  மாத்திரமே முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அனைவரும் இது குறித்து பேசுமிடத்து இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு ஒரு பொதுசனவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்கள் கேட்கும்  சுதந்திரத்தைப்   பெறமுடியும்.

13 ஆவது திருத்தத்தை சிங்கள இனவாதிகள் எரித்தார்கள். இதே போன்றதொரு நிலைமீண்டும் ஏற்பட்டால்  இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும் . ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்றால்  அதற்கு ஏமாறுபவர்களும்  பொறுப்பாளிகள் ஆகின்றனர்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.