இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வருகை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

மேலும் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிபர் ரணில் அமைச்சர்களான, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

OMP அலுவலக பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 150,000 தாண்டியது

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது.

கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுனர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் ஊடகங்களில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முன்னாள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவும் தற்போதைய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழர்களிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைத்துள்ளனர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்றும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல கடிதத்தை ஊடகங்களுக்கும் உரிய தரப்புக்களுக்கும் வழங்கியுள்ளனர் அதற்கான ஆரோக்கியமான பதிலை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநரின் கோரிக்கை வந்துள்ளது உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.

ஆளுநர் ஐனாதிபதியின் நேரடி முகவராக இருப்பதால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஐனாதிபதிக்கு முன் வைத்துள்ள கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடி நிறைவேற்ற தயாரா? அப்படி நிறைவேற்றிய பின்னர் இவ்வாறான கோரிக்கையை முன் வைத்தால் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென ‘எல்ல ஒடிஸி’ விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று, வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.

சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு, இன்று (06) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதுவர்களுக்குக் கிடைத்தது.

இந்த விசேட சுற்றுப் பயணத்துக்கு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் சர்வதேச விசாரணை – சரத் வீரசேகர எச்சரிக்கை

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம்.

ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம்.

எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை – உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த சில மாதங்களில் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்பட்ட சென்னை – யாழ்ப்பாண விமான சேவை, வரும் ஜூலை 16 முதல் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு என்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல் எல்லைகளைத் தாண்டிய பொதுவான பாரம்பரியத்தை உருவாக்கும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா திட்டம்

இலங்கையின் நிதிச் சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச் செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்ட மிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்தாரென இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை, அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு, 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி, 3 பில்லியன் டொலர்களை சீனாவுக்கும், 2.4 பில்லியன் டொலர்களை பரிஸ் கிளப்புக்கும், 1.6 பில்லியன் டொலர்களை இந்தியாவுக்கும் செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த மறுசீரமைப்பு நிதிவசதி கிடைக்கப்பெற்ற பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பாக 3 முதல் 4 ஆண்டுகளில், இலங்கையிடம் இருந்து பெறவேண்டிய கடனை, 10 முதல் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்துவிடக்கூடாது என அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இலங்கை சிங்கள பௌத்த நாடு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன. குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன. குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்தபோது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.

அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் குருந்தூர் மலையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிடும் அதிகாரமும் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஒருசில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்பதையும் உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குருந்தூர் மலையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாது காக்க சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணையவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்-என்றார்.

முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்க அரசு முயற்சி

முல்லைத்தீவில் அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரஞ்சினி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இன்றுடன் 2,390 ஆவது நாளாக பல இன்னல்களுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தெருவில் நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட காணாமல் போனோர் பணிமனை இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில் தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விவரங்களை பெற்று மக்களுக்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காகவும் தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளையதினம் (இன்று) கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில் ஓ. எம்.பி. பணிமனையை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயல்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம் ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவ தில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால் கூட அந்தப் பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்துக்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளைச் சரியாக செய்வதில்லை. தமது தேவைகளுக்காகச் செல்லும் மக்களை இருக்க வைத்துவிட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். ஆனால், ஓ.எம்.பி. அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் ஜூஸிற்கும், சிற்றுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டன? அதனை இல்லாது ஒழிப்பதற்காகத்தான் அகழ்வுப் பணிகளில் அரச படைகளும் இணைந் துள்ளன. அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும்-என்றார்.