வடக்கு ஆளுநர் – இந்திய துணைத்தூதுவர் இடையே சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநருக்கு இந்திய துணைத் தூதர் இந்திய நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பு செய்தார்.

மன்னார் ரெலோ தலைமையகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் இன்று திங்கட்கிழமை(5) மதியம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் அனுட்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் 05/06/2023 மாலை 4 மணிக்கு ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது பின்னர் ஏனைய உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செய்தனர் தியாகி சிவகுமாரனின் நினைவு தொடர்பாக சபா குகதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது – பொன் சிவகுமாரன் நினைவேந்தலில் நிரோஷ்

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராயில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் முன்னர் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் அஞ்சலி செலுத்திய பின் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவகுமாரன் அவர்களது தியாகம் எமது விடுதலைப்போராட்டப் பாதையில் முக்கியமானது. தமிழ் மாணவர்களுக்கு அரசினால் இழைக்கப்பட்ட தரப்படுத்தல் அநீதி மற்றும் ஏயை ஒடுக்குமுறைகள் மற்றும் தேசத்துரோகங்களுக்கு எதிராக மாணவர் சக்தியாக துணிந்து போராடியவர்.

பொன் சிவகுமாரனின் தியாகம் என்பது தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதியுடனான போராட்டமாகும். அவருக்கான அஞ்சலி என்பது உறுதியான தமிழ்த் தேசிய பயணப்பாதையுடனேயே அமைய வேண்டும். சிவகுமாரனின் விடுதலைப் பயணத்தில் அவர் காட்டிக்கொடுப்புக்களுக்கும் தேசத்துரோகங்களுக்கும் எதிராகப் போராடியுள்ளார். மேலும் காலத்திற்குக் காலம் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்பது எமது போராட்டத்தில் திடகாத்திரமான பங்களிப்பினை நல்கியுள்ளது.

சிவகுமாரன் அவர்கள் என்ன என்ன இலட்சியத்தினை கொண்டு தன் இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அவரது இலட்சியத்திற்காகவும் அபிலாசைகளுக்காகவும் நாம் திடமாகப் பயணிக்கவேண்டியவர்களாகவுள்ளோம். எம் போன்றோருக்கு அவரது தியாகமும் இலட்சியமும் எப்போதும் சுவடாக அமைகின்றது.

தடைகள் இருந்த சமயத்திலும் பல்வேறு இடர்பாடுகளைத் தாண்டியும் நாம் இங்கே அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். அண்ணன் சிவகுமாரன் அவர்களுடைய சிலைகள் கூட பல்வேறு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட உடைக்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட சிலை மண்ணுக்குள் புதையுண்டு காணப்பட்ட நிலையில் அதனை நான் தவிசாளராக பெறுப்பேற்ற உடன் மீள குறித்த வளாகத்திற்குள் பிரதிஸ்டை செய்திருந்தேன்.

அவ்வாறு பிரதிஸ்டை செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது அஞ்சலி செய்துள்ளேன். வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது- செல்வம் எம் பி காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் செயற்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னேடுக்கும் போது புலனாய்வாளர்களின் இடையூறுகள்  தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இவற்றை பொருட்படுத்தாது  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் காவலர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் புலனாய்வாளர்களை வைத்து செயற்படுத்த முனைவதானது தமிழ் மக்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் – CPA வலியுறுத்தல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இடம்பெற்ற நடாஷா எதிரிசூரியவின் கைது தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் அண்மைக்காலங்களில் இடம்பெறும் கைதுகள் மற்றும் அதன்விளைவாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் நகைச்சுவைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். மத ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான புதியதொரு உத்தியே இதுவாகும்.

அண்மையகாலங்களில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இந்தக் கைது மாத்திரம் இடம்பெறவில்லை என்பதையும் மத மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறி மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதுமாத்திரமன்றி நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதையும் அதன்மீதான மிகமோசமான தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றது.

மேலும் மத ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் அத்தகைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் மத ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அரச கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் எவருக்கும் 50% வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்தின் 7 நாட்களும் விமான சேவைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

தையிட்டி சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.