இலங்கைப் பொருளாதாரம் மேலும் 7.8% வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 7.8% சுருங்கியுள்ளது என்று சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 12.4% சுருங்கியுள்ளதாக குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உற்பத்திக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த பெப்ரவரியில் 42.3 சுட்டெண் மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 3 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்வுகூறியுள்ள மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, 2024 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாகம் என்பன கடந்த ஆண்டு தொடக்கத்தில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பு திட்டத்திற்கு எதிர்வரும் 20 அன்று இறுதி செய்யப்படும் என இலங்கை காத்திருக்கிறது.

இந்த ஆண்டு முழுவதும், எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளுடன், மத்திய வங்கி நாணயத்தை வலுப்படுத்தவும், இறுதியில் வட்டி வீதங்களைக் குறைக்கவும், பணவீக்கத்தை தொடர்ந்து குறைக்கவும் முடியுமென ஆசிய செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வுபிரிவு சிரேஷ்ட உப தலைவர் சஞ்சீவ பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது – அநுர

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறியதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை இன்று முதல் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு வழங்காவிட்டால், அந்தந்த அரசியல் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்யவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

தமிழர் தலைநகர வரலாற்றுத் தொன்மைகள் மாகாண அதிகாரத்தில் இருந்து சிங்கள மயமாகிறது : சபா.குகதாஸ் கவலை

ஈழத் தமிழரின் வரலாற்று பூர்வீக வாழ்விடமான கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திகாமடுள்ள என பெயர் மாறி பறிபோன பின்னர் திருகோணமலை கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்களால் பெரு நிலப்பரப்புக்கள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொன்மைகளைக் கொண்ட  ஆதாரங்களை சிங்கள மயப்படுத்தும் வேலைத் திட்டத்தை தொல்லியல் திணைக்களம் மூலமாக மத்திய அரசின் ஆளுகைக்குள் உட்புகுத்தி பௌத்த சிங்கள சின்னங்களை புதிதாக அமைத்து வரலாற்றை மாற்றி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகளுக்கு அருகாமையில் புராதன பிள்ளையார் ஆலயம் இருந்தது அதனை ஆலய நிர்வாகம் முற்றாக இடித்து புதிதாக எடுத்த முடிவை தமக்கு சாதகமாக பயன்படுத்திய அரிசிமலைப் பிக்கு தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்பின் உச்சம் இன்று கன்னியா வெந்நீர் உற்றுப் பகுதிகள் யாவும் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பில் வந்துள்ளது அத்துடன் பார்வையாளர்கள் செல்வதற்கான அனுமதி சிட்டை வருமானம் மத்திய அரசாங்கம் வசமாகி விட்டது. மொத்தத்தில் மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த தீர்மானம்

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை லண்டனில் சந்தித்து பேசிய போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மற்றும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இச்சந்திப்பின் போது இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

22வது கொமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அலி சப்ரி லண்டன் சென்றுள்ளார்.

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​தினசரி 40 அமெரிக்க டொலர்களில் இருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்படும் சாதாரண கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவோ அல்லது வெளிநாட்டு விவகாரங்களுக்காகவோ வெளிநாடு செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைத்து 10 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா வெந்நீர் ஊற்று பெளத்த இடிபாடுகளைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்போது, பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் அறிவிப்பு
இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.

வெந்நீர் ஊற்றின் வருமானம் அரசாங்கத்திற்கு
இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கை : இயல்பு நிலை பாதிப்பு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (15.03.2023) நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாகஅனைத்து மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

மலையகம்

தூரப் பகுதிகள், பிரதேசங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்படப் பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவருவதுடன், மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், உள்ளிட்டோர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் பாடசாலை சென்ற மாணவர்கள் வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள். மேலும், மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் இன்று மாவட்ட மருத்துவமனையில் கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்கள்.

வவுனியா

வவுனியாவில் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘மக்களைப் பொருளாதார சுமையிலிருந்து காப்பாற்று, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்து, அடிப்படை சட்டங்களைச் சீரழிக்காதே, முதலாளிகளுக்கு வரிச் சலுகை உத்தியோகஸ்தர்களுக்கு வரி அறவீடு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பத்தைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர் சேவா சங்கம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

திருகோணமலை
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை திருவண்ணாமலை பிரதேச பொறியாளர் காரியாலயத்திற்கு முன்னால் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மீதமுள்ள சம்பளப்படிகள், மருத்துவ விடுப்பு படிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுமுறைக்கான கொடுப்பனவை தடுக்காதே அநியாயமாக அறவிடப்படும் விடுதி வாடகைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.