உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுதி

உள்ளூராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் உறுதியளித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுதந்தர தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பிரியந்த ஜயவர்தன, எஸ்.துறைராஜா மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பெப்ரவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக  இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்டோ அதிகாரத்துடன் அதிகளவு பங்குகளை கொண்டுள்ளது யார்? 2020 இல் 3 டிரிலியன் டொலர்களிற்கு மேல் டொலர்களை அச்சடித்தது யார்? இலங்கை வங்குரோத்து நிலையை அடைத்ததும் உடனடியாக தனது நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தது யார் என்பதே இந்த கேள்விகள்

சீனாவிடமிருந்து அரிசி டீசல் மருந்து பாடசாலை சீருடைகளிற்கான துணி போன்றவற்றை இலங்கை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் இலங்கை மக்களிற்கு உதவுவது என்ற வாக்குறுதியிலிருந்து அமெரிக்கா எவ்வாறு பின்வாங்கியுள்ளது என்பது குறித்து பொதுமக்கள் அறிய விரும்புவார்கள்.

சீனா எந்த நிபந்தனையும் அற்ற அர்ப்பணிப்பு செயற்பாடுகளை பின்பற்றும் அதேவேளை அமெரிக்க உதவிக்கு ஏன் முன்நிபந்தனைகள் என கேள்வி கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள்.

சுயபரிசோதனையை மேற்கொள்வதற்கு பதில் பாழாக்கிய குற்றச்சாட்டுகளை எங்கள் அமெரிக்க சகா முன்வைப்பது கபடநாடகம் அல்லவா?

இலங்கை ஒரு நல்ல சூழ்நிலையில் இருப்பதற்கு அவசியமான தீர்க்ககரமான தீர்மானங்களை ஏன் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் எடுக்கவில்லை.

அல்லது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கசப்பை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள் அச்சிடும் மிகப்பெருமளவு டொலரிலிருந்து ஏன் அவர்கள் இலங்கைக்கு நிதியை வழங்கவில்லை.

வெளிநாட்டு விரிவுரையின்றி  எங்களை பாழ்படுத்துபவர்கள் யார் என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய புத்திசாலிகள் இலங்கை சீன மக்கள் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வளித்தல் செயலணி ஒன்றை ஸ்தாபிக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இந்த சட்டமூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டதே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் அரசியலமைப்பு 21 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருமாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  விரைவாக இயற்றப்பட்டதல்ல  முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியின் வழிகாட்டலுக்கு அமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமித்த குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டமூலத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விடுதலைபுலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல் பணிகள் சட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தவறான ஆலோசனைக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு அக்காலக்கட்டத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டது,இந்த நடவடிக்கையை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த வருடம் போராட்டம் தோற்றம் பெற்றது. போராட்டத்தில்  ஈடுப்பட்டவர்களை அடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  உருவாக்கப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் முன்னெடுத்த தவறான பிரசாரத்தினால் ஒரு தரப்பினர் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் காரியாலம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தனியார் புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் ஊடான புனர்வாழ்வளிக்கப்படுகிறது.

கந்தகாடு, சேனபுர மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் 493 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெறுகிறார்கள். சிறைச்சாலை திணைக்கத்தின் ஊடாக 10 புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் புனர்வாழ்வளித்தல் சிக்கல் சிறைந்ததாக உள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு சடுதியாக அடிமையாகியுள்ளார்கள். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தமது பிள்ளை புனர்வாழ்வு சிகிச்சைக்கு உள்வாங்கப்படுவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை – பிரிட்டன் பிரதிநிதிகள் பேச்சு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னேற்றகரமான நகர்வு என்பன குறித்து இலங்கை மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர வெளியுறவுச் செயலாளர் பிலிப் பார்றனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட பூர்த்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் 2023இல் சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீட்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்பன குறித்து வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பிலிப் பார்றனுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்த பார்றன், இவ்விடயத்தில் இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தற்போது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரிட்டனுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ்தாபித்த அருணி விஜேவர்தன, அதன் மூலம் பிரிட்டன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர் குடிப்பெயர்வு ஆகியவற்றில் பிரிட்டனின் ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காலநிலை மாற்ற சவால்களுக்கான துலங்கல்கள், 2030ஆம் ஆண்டில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியை அடைதல் என்ற இலங்கையில் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்க வெளியீட்டை பெறல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இவ்வருடத்தின் முதற்காலாண்டில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.

வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இந்நிலையில், வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.

அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப். வழங்கும் வழங்கும் கடனுதவி இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது – அலி சப்றி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம்.

எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.

ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி.

மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் – காணி அதிகாரங்களினால் நாடு துண்டாடப்படும் – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள்.

இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை.

அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும்.

அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது.

அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல.

மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம்.

ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான  நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே தங்கள் மீது  இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அப்படியானால் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக இந்தியா ஐ.எம்.எப் இற்கு தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது.

இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ரெலோ உட்பட ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.