இந்திய றோ அமைப்பின் தலைவர் ரணில் இடையே சந்திப்பு!

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்தார்.

அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாதவறாக இருக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 மாதங்களில் ஆயிரத்து 703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்றைய தினம் (நவ 23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர சபையின் தலைவர் என்.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 6 கட்சிகளை உள்ளடக்கிய 16 உறுப்பினர்கள் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதர வை ஏகமனதாக முன் மொழிந்து நிறைவேற்றினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆகிய கட்சிகளை சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமர்வுக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்தனர்.

எதிர்வரும் ஆண்டிற்கான 223 மில்லியன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 890 ரூபா மன்னார் நகர சபையின் வருடாந்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு நகர சபைக்கு உட்பட்ட வட்டார ரீதியாகவும் வட்டார உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு வட்டார சங்கங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான அமைப்புக்களுடன் கலந்து ஆலோசனையின் பேரில் குறித்த வரவு செலவு திட்டம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் இன்று(23) காலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

உலக உணவுத்திட்டத்தின் சகோதர நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) சுகாதாரம் மற்றும் நலன் பேணல் சேவைகளுக்கான மேலதிக பண உதவியாக ஐயாயிரம் ரூபாவினை வழங்கும் திட்டத்தினை முல்லைத்தீவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சுகாதார வைத்திய சேவைகள் அதற்கான போக்குவரத்து மற்றும் போசாக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும்.

இதேவேளை உலக உணவுத் திட்டம்(WFP) உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வருகிறது.

தாய்வழி சுகாதாரம் மற்றும் விரிவான பாலியல் கல்வி மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நிலைமையின் விளைவாகWFP, UNFPA உடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு உதவுவதுடன், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய தேவைகளை பண மானியம் மூலம் பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு சமீபத்திய ஆய்வுகளின்படி, பொருளாதார நெருக்கடியால் பெண்கள் விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படைப் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்துள்ளதால், WFP மற்றும் UNFPA பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகளான நிசாடி மற்றும் சிகார் ஆகியோருடன் உலக உணவுத் திட்டத்தின் மாவ‌ட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி, மாவட்ட உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அனைவரும் அணிதிரண்டு இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தீர்வுப்பொது ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவரின் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

அந்த தீர்வுப்பில் பிராந்தியங்களின் ஒன்றிணைப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தற்போது வேறுமாதிரி குறிப்பிடப்படுகின்றது. அது பிரச்சினை அல்ல. ஆனால் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதுதான் முக்கியமானது. அதனால் ஜனாதிபதி அதிகார பரவலாக்கம் தொடர்பாக சபையில் கருத்துக்களை கேட்டார். அதற்கு இணக்கமா என கேட்டார். ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதனால் இந்த விடயத்தில் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் அதிகார பரவலாக்கல்தான் இங்கே முக்கிய விடயமாக அமையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலுமொரு ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைக்க இருப்பதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் தாக்குதல் காலப்பகுதியில் உதிர்த்த நாமல் குமார போன்ற இளைஞர்கள் தற்போது எங்கே என தெரியாது. அதேபோன்று திகன ககலவரத்துக்கு காரணமாக இருந்த அமித் வீரசிங்க, இவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

எனவே ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவில் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதிகாரப் பகிர்வு வழங்க எதிர்க்கட்சியினரின் சம்மதம் கேட்ட ரணில்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் வைத்து பெற்றுக்கொண்டார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பார்களா என சபையில் வைத்து கட்சிகளிடம் நேரடியாக  கேட்ட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இது தொடர்பில்  டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை நடத்தவும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்,  பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குறித்து  புதன்கிழமை (23) இடம்பெற்ற  குழு நிலை விவாதத்தில்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில் தனக்கு முதலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழைப்பு தொடர்பில் அதில் காணப்பட வேண்டிய  தீர்வு தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கினார்.

இதன்போது அவர் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவைப் பார்த்தது  நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பீர்களா என வினவினார்.

இதற்கு  பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல ,உங்கள் பாட்டனாரும் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தியவர். நானும் எப்போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவன். நாம் எப்போதும் அதற்கு தடையாக இருந்ததில்லை. சில கட்சிகள் தான் அதற்கு தடை செயற்பட்டன,தற்போதும் செயற்படுகின்றன.

இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். அவர் 13 பிளஸ் தீர்வு  என்றார். இந்த அதிகாரப்பகிர்வுக்கு அவர் சம்மதமா என அவரிடமே கேட்போம் எனக்கூறிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பார்த்து ”அதிகாரப்பகிர்வு வழங்க நீங்கள் சம்மதமா?”எனக்கேட்டார்.

இதற்கு மஹிந்த ராஜபக்ச ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு சிரித்துக்கொண்டு சம்மதம் என்பதற்கு  அறிகுறியாக தலையை அசைத்தார். ஆனால்   விடாத லக்ஷ்மன் கிரியெல்ல  தலையசைத்தால்  மட்டும் போதாது.பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கூற வேண்டும் என்றார். இதனையடுத்து உடனடியாக எழுந்த   மஹிந்த ராஜபக்ச எனக்கு  சம்மதம் என்றார்.

உடனடியாக பிரதமர் தினேஷ் குணவர்த பக்கம் தனது கவனத்தை திருப்பிய லக்ஷ்மன்  கிரியெல்ல  பிரதமர் இதற்கு சம்மதிக்கின்றாரா எனக்கேட்டார். ஆனால் எந்தப்பதிலும் கூறாது பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறு அமர்ந்திருந்தார். பார்த்தீர்களா பிரதமர் எப்போதும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்.அவர் சம்மதிக்க மாட்டார் என்றார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசனை நோக்கிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ”என்ன மனோ அதிகாரப்பகிர்வுக்கு நீங்கள் சம்மதமா எனக்கேட்டார். ஆம் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம் என மனோகணேசன் பதிலளித்தார்.

அப்படியானால் சுமந்திரன் நீங்களும் சம்மதம் தானே என ஜனாதிபதி ரணில் கேட்டபோது, இது தொடர்பில் வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்த பின்னர் ஒரு திகதியை குறிப்பிட்டு கட்சித்தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினால் நல்லது என சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியினரைப்பார்த்தது அப்படியானால் நீங்கள் சம்மதம் தானே என மீண்டும் கேட்டபோது ஒரு உறுப்பினர். அதனை தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

சரி அப்படியானால் இன்று இந்த விவாதம் முடிவடைவதற்கு உங்கள் தலைவரின் முடிவை எனக்கு கேட்டு சொல்லுங்கள் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கூறியபோதுஇ எழுந்து கருத்துரைத்த  மனோகணேசன்  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் என்பதனால்தான் நாம் அதில் அங்கம் வகிக்கின்றோம் எனக்கூறினார்.

நல்லது  அப்படியானால் வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை  நடத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிட்டார்.

கொழும்பில் தமிழர்களை பதிவு செய்வதை உடன் நிறுத்த வேண்டும் – மனோ

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் தகவலை வேறு யாருக்கும் வழங்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுபோல, பொலிஸார் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை இல்லை. சுதந்திரமாக செயற்படும் இப்போது ஏன் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.  இதுதொடர்பாக ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க முடியாது.

இதுதொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரியை கேட்கும்போது, மேலிடத்து உத்தரவு என தெரிவிக்கிறார். அதனால் தயவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டாம். இதனை நிறுத்துங்கள். பொலிஸ் சட்டத்தை பயன்படுத்தி வீடுவீடாக செல்லவேண்டாம்.

ஏனெனில் பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் அங்கிருந்து கடத்தல்காரர்கள், திருடர்கள் கொள்ளையர்களுக்கு செல்கின்றன. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது பிரதேச மக்களின் தகவல்களை பொலிஸுக்கு வழங்க எனக்கு விருப்பம் இல்லை. தவறு செய்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது சபையில் இருந்த பொதுமகள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதற்கு பதிலளிக்கையில், கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன்.

வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே  மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என  அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றார்.

தொடர்ந்து மனோகணேசன் எம்.பி உரையாற்றுகையில், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்று இருக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த நடவடிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அத்துடன் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை 10நாட்களுக்கு வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்தில் இருந்து 4ஆயிரமாக குறைக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் நிலை இருக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது.

தொகுதி வாரி முறை தேர்தலை நாங்கள் கோரவில்லை. அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக இருந்தால் மீண்டும் பழைய முறையிலான விகிதாசார தேர்தல் முறைக்கே செல்வோம். அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

பாகிஸ்தான் தூதுவர் யாழ் நூலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்று புதன்கிழமை (நவ 23) யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டுள்ளார்.

 

அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை வரவேற்றதுடன், யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.

மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் இன்று (23) காலை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த  உதயசூரியன், அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள், வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மன்னார் மாவட்டம் கள்ளப்பட்டி பகுதியில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம்  பகுதியை இன்று காலை அடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல்  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது