விடுவிக்கப்பட்ட அரசியற் கைதிளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தல் – நிலாந்தன்.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15 ஆண்டுகளின் பின் குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார். ரகுபதி சர்மா இப்பொழுது இரத்மலானையில் உள்ள உள்ள இந்துமா மன்றத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து அவர் விடுதலையாகும் வரையிலும் அதற்கு பின்னரும் இந்து மாமன்றம் அவருக்கு பல விதங்களிலும் உதவி வருகிறது.

கைது செய்யப்படுகையில் அந்த ஐயரும் அவருடைய மனைவியும் இளம் தம்பதிகளாக இருந்தார்கள். அப்போதிருந்த அரசியல் சூழலில் அவர்களோடு சேர்ந்து தங்களை அடையாளப்படுத்த உறவினர்களும் விரும்பவில்லை. விடுவிக்கப்பட்ட வசந்தி சர்மா தனது பிள்ளைகளோடு வெளிநாட்டில் வசித்துவருகிறார். இப்பொழுதும் தனித்து விடப்பட்டிருக்கும் ஐயரை இந்து மாமன்றம் பராமரிக்கின்றது.

அவரைப் போல பல அரசியல் கைதிகள் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுடைய குடும்பங்கள் தனித்து விடப்பட்டன. உறவினர்களின் மனநலம் பாதிக்கப்பட்டது. குடும்பத்துக்குள் அமைதி குலைந்தது. சில குடும்பங்கள் பிரிந்தன. சில உறவினர்கள் மருந்தில் தங்கியிருக்கும் அளவுக்கு அவர்களுடைய மனநலம் கெட்டது. விடுவிக்கப்பட்ட எல்லா அரசியல் கைதிகளுக்கும் பொருத்தமான உதவிகள் பொருத்தமான நேரத்தில் கிடைத்தன என்று கூற முடியாது. இதுவிடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான கட்டமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

அண்மை ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் அதிக தொகை கைதிகளுக்கு (16) பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது கோட்டாபய ராஜபக்ஷதான் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண். மேலும் தம்மை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகா குமாரரரணதுங்கவும் கைதிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 33 கைதிகள் இப்பொழுதும் சிறையில் உள்ளார்கள். அவர்களில் இருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

அரசியல் கைதிகளுக்காக தொடக்கத்தில் இருந்தே போராடியது அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான அரசியல் கைதிகளுக்கான தேசிய அமைப்பாகும். அண்மை ஆண்டுகளாக மற்றொரு அமைப்பு “குரலற்றவர்களின் குரல்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட கோமகனின் தலைமையில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் ஒரு காலச் சூழலில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் அடுத்தகட்ட வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக் கொள்ளத்தக்க உதவிகள் அவர்களுக்கு தேவை.தமிழ்ச் சமூகம் இதுதொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பானது அண்மை காலங்களில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. கைதிகளை எதுவிதத்திலாவது விடுவிப்பதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். விடுவிக்கப்பட்ட கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கு அந்த அமைப்பிடமும் போதிய வளங்கள் இல்லை.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் தனி நபர்களும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக “தோழமைக் கரங்கள்” என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு கைதிகளுக்கு உதவி வருகிறது. அண்மையில் லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் பொது மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 25 லட்சம் ரூபாய்கள் வழங்கியிருந்தார். விடுவிக்கப்பட்ட கைதிகள் அல்லது புனர்வாழ்வின்பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்களுக்கு இதுவரை உலக நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை எல்லாவற்றிலும் இது மிகப் பெரியது.

இது ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம். புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இருக்கும் பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் தனி நபர்களும் இதுபோன்ற விடயங்களில் எவ்வாறு பொருத்தமான விதங்களில் உதவி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு எதையாவது செய்ய வேண்டும் என்ற தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தம்மிடம் உள்ள வளங்களை கொண்டு எப்படி ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்புவது அல்லது தேச நிர்மாணம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்தி நீடித்திருக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுதான்.இந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல் கைதிகள்,நில ஆக்கிரமிப்பு,காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி,முன்னாள் இயக்கத்தவர்களுக்கு வாழ்வாதாரம் போன்ற எல்லாவற்றிற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தாயகத்தில் தேவை உண்டு. புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் போதிய அளவு வளமும்,நிபுணத்துவ அறிவும்,உதவி செய்ய வேண்டும் என்ற தவிப்பும் உண்டு. இரண்டையும் இணைப்பது தேச நிர்மாணிகளின் வேலை.

தாயகத்தில் நடக்கும் அரசியல் செயற்பாடுகள் முதற்கொண்டு ஆன்மிகச் செயல்பாடுகள்வரை அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கை இருக்கிறது. இதற்கு ஆகப்பிந்திய சில உதாரணங்களை இங்கு காட்டலாம்.

யாழ்ப்பாணத்தில் விழிப்புலன் மற்றும் செவிப்புலனை இழந்தவர்களுக்கான ஒரு நிறுவனம் “கருவி” என்ற பெயரில் இயங்குகின்றது. யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தால் விரும்பி நுகரப்படும் “சைன்” என்று அழைக்கப்படுகின்ற திரவ சவர்க்காரத்தை அந்த நிறுவனமே தயாரிக்கின்றது.அந்த நிறுவனம் தனக்கென்று ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு நீர்வேலியில் ஒரு காணியை வாங்கியுள்ளது. அதற்குரிய நிதி உதவிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளே பெருமளவிற்கு வழங்கின.

அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மாற்றம் அறக்கட்டளை நிதியத்துக்கும் உதவிகள் கிடைக்கின்றன. போதைப் பொருள் பாவனையால் நோயாளிகளாக மாறியவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அந்நிலையம் கத்தோலிக்கத் திருச்சபையால் பராமரிக்கப்படுகிறது. அங்கே பொருத்தமான வளங்களோ ஆளனியோ கிடையாது. ஒரு மத குருவும் ஒரு துறைசார் உழவள ஆலோசகரும் அவர்களுக்கு சில உதவியாளர்களும் மட்டுமே உண்டு. அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு மருதங்கேணியில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்பு உதவியிருக்கிறது.

இவ்வாறு தாயகத்தில் தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ்து தரப்பு உதவமுடியும். அதை ஒரு கொடையாக அல்ல. தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகச் செய்ய வேண்டும். முதலீடு செய்வது அல்லது முதலீட்டை தேச நிர்மானத்தின் ஒரு பகுதியாகச் செய்வது. எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்க வேண்டும்.அரூபமாகக் கற்பனை செய்து கோஷங்களோடு வாழ முடியாது. யதார்த்தமான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றை பலப்படுத்தினால்தான் தூலமாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கலாம்.

எல்லா வெற்றி பெற்ற சமூகங்களிலும் பிரமிக்கத்தக்க நிறுவன உருவாக்கிகளைக் காணலாம்.லாப நோக்கமற்ற நிறுவன உருவாக்கிகளால் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழ்ச் சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் அவ்வாறு நிறுவன உருவாக்கிகள் தோன்றினார்கள். இந்து மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் உருவாக்கிய நிறுவனங்களின் விளைவாகத்தான் நவீன தமிழ்ச் சமூகம் உருத்திரண்டது. எனவே ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு காலகட்டத்தில் சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கும் தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் எப்படிப்பட்ட நிறுவனங்கள் கட்டமைப்புகள் தேவை என்று கண்டு அவற்றை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கான கட்டமைப்பு முதற்கொண்டு போதைப்பொருள் நோயாளிகளை பராமரிப்பதற்கான புனர்வாழ்வு அமைப்புகள்,தனித்து விடப்பட்ட முதியோரைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புக்கள் என்று எல்லாவற்றுக்கும் துறைசார் அறிவும் நவீன வளங்களும் தேவைப்படுகின்றன. அவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தாராளமாக உண்டு.எனவே தேவையையும் வளங்களையும் இணைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்.

– நிலாந்தன்

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்!

னாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்து ரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடற்றொழிலாளர் சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா கடற்றொழிலாளர் கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் மீது பயங்கரவாதச் சட்டம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

யங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றார்கள். அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்துவைப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய இருவரும் 90 நாட்களுக்கும் அதிகமான காலம் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை தொடர்ந்து தடுத்துவைக்குமாறு கடந்த வியாழக்கிழமை (நவ 17) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவ்விரு மாணவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு ஒரு தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது அப்போதிருந்து நபர்களை நீண்டகாலம் தன்னிச்சையாக  தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சட்டத்தின் பிரயோகத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தை  சேர்ந்தவர்களாகவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவோ இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தபோது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, இப்போது ஜனாதிபதி என்ற ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளை, அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம்- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தெற்கு அரசியலின் பலப் பரீட்சைக்காக உள்ளூராட்சி சபை தேர்தல் கோரப்படுகிறது. அதனை விடுத்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனப் பிரச்சினை தீர்வு

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறந்த சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள்.

அவ்வாறு செயல்பட்டால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க முடியும். தமிழர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப சிந்திப்பவர்கள் அல்ல. எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஷ்டி தொடர்பில் எண்ணத்தை வெளியிட முன்பே அது தொடர்பில் தெரிவித்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க. 13ஆவது அரசியல் திருத்தத்தை நாம் கோரவில்லை. எனினும், 13 ப்ளஸ் வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

சமூக பாதுகாப்பு என்பது என்ன?

இன்றும் கூட ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு என கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது 40 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தேவைதானா என்பதை உங்கள் சமூக பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் நான் கேட்க விரும்புகின்றேன். தேசிய பிரச்சினை தீர்வுக்காக எந்த அரசாவது முயற்சிகளை மேற்கொண்டால், உடனடியாக அப்போதுள்ள எதிர்க்கட்சி அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பும். இதுதான் வரலாறு. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்து, ஒரே நேர்கோட்டில் உள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், எமது அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டுக்கான சுபிட்சம் மிகுந்த வரவு செலவுத் திட்டமாக அமையும்.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம். ஆணிவேரை விடுத்து பக்கவேரில் செயல்பட முற்படாதீர்கள். எமது மக்கள் எத்தகைய தியாகங்களுக்கும் தயார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி ரீதியாக அன்றி சமமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவை எப்போதோ நடந்திருந்தால் எமது நாடு உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமாக திகழ்ந்திருக்கும். உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெறுவோமா – தோல்வியடைவோமா என்று சந்தேகம் கொள்பவர்களால் ஜனநாயகம் நசுக்கப்படக்கூடாது.

நாட்டில் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை.அது விடயத்தில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கான முதல் அடிப்படை புள்ளியாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை கணக்கில் எடுக்கப்படாமல், தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்ந்தும் ஒத்திப்போடப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கில் நடத்தப்படும் பலப் பரீட்சையாகவே அமையும். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலின் நிலையை கண்டுகொள்வதற்காகவே இப்போது உள்ளூராட்சி சபை தேர்தலை கோருகின்றனர். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு வருடமும், கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஐந்து வருடமும் கடந்துபோயுள்ளன. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். தற்போதைய எமது ஜனாதிபதி ஒரு ஜனநாயக கனவானாக இருந்தால், அவர் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்பே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ரணில்

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் கடும் முயற்சி – பீரிஸ்

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போதைய பிரதமர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது அந்த பதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக கூட்டமைப்பு மற்ற கட்சிகளை விவாதத்திற்கு அழைத்தமை வரவேற்கத்தக்கது- கஜேந்திரகுமார் –

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கை நிலைமை தொடர்பாக இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

அப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் பின்வருமாறு:

நவம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தமிழ்க் கட்சிகளை இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அழைத்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தீவு நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அவர்களின் (தமிழர்களின்) நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். எனினும் இந்தக் கூட்டத்திற்கான திகதியை இன்னும் பெறாத நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், இந்த உத்தேச சந்திப்புத் தொடர்பில் மிகவும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இலங்கைத் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தீவின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் அவை எவையும் நிறைவேற்றப்படாமல் தவறாமல் தோல்வியில் முடிந்தன.

மிக சமீபத்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம், புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சித்தது. ஆனால், பணியை முடிக்கவில்லை. இது அவர்களின் அரசை ஆதரித்த தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்துஇ நமது 75 ஆவது சுதந்திர தினத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முனைப்புடன் முயற்சிப்போம். நம் நாட்டின் விஷயங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்களுடைய பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது அழைப்பை வரவேற்றதுடன்இ முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் பல தசாப்தங்களாக பல்வேறு சிங்களத் தலைவர்களுடன் அரசமைப்புத் தீர்வொன்றை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் உறுதிமொழி இம்முறை உண்மையானதாக இருக்கும் என நம்புகிறார் எனத் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி அரசமைப்பை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கைத் தலைமை தயாராக வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு கூட்டாட்சி அமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கான நோக்கத்தை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வதால் இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அவர்களை (ஏனைய கட்சிகளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீவிரத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பும் அதேவேளையில் நாங்கள் அதை (தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தை) நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

நவம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்படி சந்திப்பு (தமிழ்க் கட்சிகளுடனான) சந்திப்புக் குறித்துத் தாம் நேரில் கேட்டார் என சுமந்திரன் கூறினார்.

ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். அவர் அறிவித்த இந்த வாரச் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது வேண்டுமானால் இந்த வாரம் சந்திக்கலாம் என்றார். இது அவரது பதில்கள் எதையும் தீவிரமாக செய்ய தீவிரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது என்றார் சுமந்திரன் எம்.பி.

அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வின் தேவை இலங்கையில் இந்திய ஈடுபாட்டின் மையமாகவும் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான தமது கடப்பாடுகள் குறித்து இலங்கையினால் அளக்கப்படக் கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து கவலையுடன் இந்திய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் அதன் போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினாலும், இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதேவேளையில்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்துக்கு அண்மையில் அழைத்தது வரவேற்கத்தக்கது என்றார்.

அவரது பார்வையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி சமஷ்டியை நிராகரித்தார் என்றார். அப்படியானால், நாம் அவருடன் என்ன பேசப் போகிறோம்? அவர் தனது அரசு சட்டபூர்வமானது நிலையானது. மேலும் அவர் அனைத்து நடிகர்களுடனும் பேசுகிறார் என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறார். நாங்கள் பேச்சு மேசையில் இருப்பது அவருக்குத் தேவை.

அவர் ஜனாதிபதி தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியில் நேர்மையாக இருந்தால் சமஷ்டி என்பது இந்தப் பேச்சுக்களுக்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும். சிங்கள மக்களிடம் பொய் சொல்லாமல் அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும் இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி இலங்கைக்கு ஆன்மாவைத் தேடுவதற்கான உண்மையான வாய்ப்பை வழங்கியுள்ளது என்கிறார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் கவலைகளைத் தீர்க்கமாக நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

தெற்கு மக்கள் ஏமாற்றமடைந்தனர் என உணர்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் தங்கள் பெயரில் போர் புரிந்ததையும் அவர்களின் பெயரில் இனவாதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். ஒரு நாடாக நாம் இப்போது ஒன்றாகச் செயற்பட முடிந்தால் நாம் நிச்சயமாக விடயங்களைச் சரிசெய்ய முடியும் என்று அவர் கூறினார்.

இலங்கை மாணவர்களுக்கு சீனா அரிசி நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி பொதிகள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

மேலும் குறித்த அரிசி பொதிகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் அரிசி பொதிகள் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2023 ஆரம்பத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – ஜனாதிபதி

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2023 ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும். 2023 அல்லது 2024 இல் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சவால்களை மீறி வாய்ப்புகளை எட்டுதல்’ எனும் 2023 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கின்றது. அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது ? சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானிக்க வேண்டும். நடைமுறை சாத்தியமான பெறுபேறுகளை பாராமல் தவறான கொள்கைகளை பின்பற்றியமையே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணமாகும். நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதாயின் அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை வகிக்க வேண்டும்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் வழமையான வரவு செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது. அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.

துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்த தவறை செய்கின்றார்கள். நாம் தற்போது முன்னொருபோதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராத்தொரு நிலைமையாகும். தவறான கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவே எமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கொள்கைகள்’ எனும்போது அவை நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எனது முதலாவது இலக்காகும். இதனை கடந்த ஆகஸ்ட் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்தோம். இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம். இதற்கு மேலதிகமாக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். தற்போது பிரதான இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா என்பன பாரிஸ் கிளப்பில் இல்லை. அவற்றுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும் நாம் தனியார் கடன் வழங்குனர்களிடம் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதன் பின்னர் எமக்கு எமது பாதையில் பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நாம் பல வேலைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய வேண்டும். அதற்கான திட்டம், கட்டமைப்பு என்பன தொடர்பில் நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 2023 என்பது உறுதிப்பாட்டுக்கு மட்டுமன்றி மீட்சிக்குமானதொரு ஆண்டாகும். உறுதிப்பாட்டுச் செயன்முறைகள் 2026 வரை தொடரும். அப்போது எமது மொத்த தேசிய உற்பத்தி, 2019 ஆம் ஆண்டில் நாம் இருந்த நிலையை எட்டும் என நம்புகின்றேன். எனினும் என்ன நடக்கும் என்பது திட்டவட்டமாக தெரியாது.

எமது முதலாவது கொள்கை, ‘ஒன்றிணைந்த முதலீடு மற்றும் ஏற்றுமதி முகவர் அமைப்பு’ தொடர்பானது. இதற்காக சில சட்டங்களை அகற்றவும் பொருளாதாரத்தில் அடிப்படை மீள்கட்டமைப்பை முன்னெடுக்கவும் வேண்டும். இல்லையேல் அதுவும் இன்னுமொரு சொத்து விற்பனை முகவர் அமைப்பாகிவிடும். கொள்கைகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான கட்டமைப்பொன்று இருக்க வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தியில் மூலோபாய அமைவிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் எம்மிடம் மூன்று முக்கிய துறைமுகங்களும் சிறியதான காங்கேசந்துறை துறைமுகமும் உள்ளது. ஆனால் நாம் அவை பற்றி பேசுவதேயில்லை. சிந்திப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றோம்.

கடந்த முறை நான் பிரதமராக இருந்தபோது இது பற்றி தூரநோக்குடன் சிந்தித்ததுடன் கிழக்கு முனையம் தொடர்பில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்தோம். நீங்கள் அதை ரத்துச் செய்தீர்கள். இது இன்னும் அப்படியே உள்ளது. துறைமுகத்தால் செயற்பட முடியாதுள்ளது. எம்மிடமும் பணம் இருக்கவில்லை. எனவே நாம் கிழக்கு முனையம் தொடர்பான திட்டத்தை நிறைவு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன் அதனை ஒரு சிறந்த மையமாகவும் உருவாக்குவோம்.

எம்மிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. ‘பெல்ட் என்ட் ரோட்’ திட்டம் நிறைவடைந்ததும், சீன கம்பனிகள் ஆபிரிக்காவில் பல துறைமுகங்களை உருவாக்கியது போல அம்பாந்தோட்டையுடன் இணைந்ததாகவும் பல துறைமுகங்களை உருவாக்க முடியும். திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவுக்கான சேவையை வழங்கக்கூடியதாகவுள்ளது. எனவே எமக்குள்ள வாய்ப்புக்களை நாம் உணர வேண்டும். இந்த துறைமுகங்களே, எம்மிடமுள்ள மிகச் சிறந்த சொத்துக்கள். அதனை தவிர காலி , கொழும்பு துறைமுகங்களும் எம்மிடமுள்ளன. நாம் எம்மிடமுள்ள அனைத்து துறைமுகங்களையும் மறந்து விட்டோம்.

அடுத்ததாக எமது விவசாயத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டும். இதற்காக காணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மக்கள் வழங்கியுள்ள காணிகளுக்கு நாம் சட்டவாக்கத்தை உருவாக்குவோம். அரசாங்கத்தின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இலவசமான காணி வழங்கும் வேலைத்திட்டத்தையும் நாம் நடைமுறைப்படுத்துவோம்.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஆகக்கூடியது 02 மில்லியன் சுற்றாலாத்துறையினரை இலக்கு வைத்து புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். கொவிட் தொற்றுக்கு பின்னர் மீள்வதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு இதுவரையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும் , அதிக நிதி வழங்கப்பட்டாலும் கூட அவர்களால் அதனை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே திட்டமிட்டு அடுத்த வருடம் முதல் அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுகாதார சேவைகளுக்கான பிராந்திய மையம், துறைமுக நகரை கரையோர மையமாக அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

2023 தொடக்கத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அடுத்து, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும் . அடுத்த ஆண்டில் அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும்.

மக்களைப் பலப்படுத்துவதா? அல்லது மக்களின் பணத்தைக் கொண்டு காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் மற்றும் டெலிகொம் நிறுவனங்களை வலுப்படுத்துவதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கே தவிர இந்த நிறுவனங்களையும் கட்டடங்களையும் பாதுகாப்பது எனது முன்னுரிமையல்ல. இந்நிறுவனங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தை அந்நியச் செலாவணி கையிருப்பில் சேர்த்து, ரூபாயை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.

உள்ளுராட்சிக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுங்கள்– ஜனா பா.உ

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது.  எனவே நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை  உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோ.கருணாகரம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது இன்றைய தினம் சனிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நிதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அவையில்  வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதென்பது வினோதமானதொன்றல்ல. அது சம்பிரதாயபூர்வமான நிகழ்வே. இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் நாட்டின் புத்திஜீவிகளும் அவரவர் பார்வையில் இந்த வரவு செலவுத்திட்டத்தினை விமர்சித்தனர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் சார்ந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பார்வையிலும் எமது கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையிலும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை விமர்சிப்பது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
69லட்சம் வாக்குகளை அள்ளிக் கொண்ட ஜனாதிபதியும் 3ல் இரண்டு பெரும்பான்மை பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தம்மை ஆதரித்த மக்களால் அடித்துத் துரத்தும் அளவுக்கும் தமது பதவிகளைத் தாமே இராஜினாமா செய்யும் அளவுக்கும் நாட்டின் நிலைமை சென்றது ஏன். மேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லப்படும் இந்த நேரத்தில் இது குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என்று வினவியதுடன் நாம் தவறிய இடம் எது எனவும் இந்த சபையில் வினா எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியினையே நான் கேட்கின்றேன். எங்கே தவறு நடந்து என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா. எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நாம் தவறிய இடம் எது என்பதை இன்னம் நீங்கள் உணரவில்லையா? ஒரு காலத்தில் இலங்கை நாடு என்றால் உலகம் தலை நிமிர்ந்து நின்று பார்த்த நிலைமை மாறி, இன்று கடன் செலுத்த முடியாத ஒரு நாடு, தனது வங்குரோத்து நிலையை தானே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு என்ற நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருக்கின்றீர்களா?.
இந்த நாட்டின் பொருளாதார வளத்தை அபிவிருத்தி நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக கடந்த மூன்று தசாப்த்துக்கும் மேலாக யுத்தம் நோக்கித் தள்ளினீர்கள். இந்த யுத்தம் தந்த விளைவே இன்றைய பொருளாதாரப் பிரச்சினை. இனப்பிரச்சினையே முதற் காரணம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை பாதுகாப்புச் செலவீனம் விழுங்கிக் கொண்டது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற பிராந்திய வல்லரசுகளின் யுத்தப் பாதீட்டை விட எமது நாட்டின் யுத்தத்துக்கான பாதீடு வானளாவ உயர்ந்து நின்றது. யுத்த காலத்தில் தான் இந்த நிலை என்றால், யுத்தம் மௌனித்து 13 வருடங்களாகியும் யுத்தப் பாதீடு எமது நாட்டின் வருமானத்தின் பெருந்தொகையினை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக இன்னமும் இந்தளவு பெருந் தொகையினை ஒதுக்கித்தான் ஆகவேண்டுமா?
நமக்கு எந்த அயல் நாட்டினது அச்சுறுத்தலுள்ளது. எந்த அண்மைய நாடுகளின் அச்சுறுத்தலுள்ளது, உள்நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எங்கிருந்து வருகின்றது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கி யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கின்றீர்கள்.
பாதுகாப்புச் செலவீனத்துக்கு இவ்வளவு தொகை ஒதுக்கியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4000 ரூபா கொடுப்பனவை 2500ஆகக் குறைத்துள்ளீர்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகளான பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் எவ்விதமாற்றமுமில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மேதகு ஜனாதிபதியவர்கள் இலங்கையின் வரலாற்றைக் கற்;பதற்கு தனியான நிறுவனத்தைத் தாபிப்பது தொடர்பான முன்மொழிவொன்றினை செய்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பார்வையில் வரலாறு என்பது சிங்களும் பௌத்தமும்தான். வரலாற்று மூலாதாரம் என்பது மகாவம்சம் தான். இந்த மகா வம்சம் மகாநாம தேரரின் கற்பனை என்பதை நீங்கள் இன்னமும் புரியாதது ஏன். முதலில் புரிந்து கொள்ளுங்கள் பௌத்தம் மதம். சிங்களம் மொழி. பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் எந்த விதமான இணைப்பும் தொடர்பும் இல்லை.
பௌத்தம் இலங்கையில் மட்டுமல்ல. தென்னாசியா, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ள ஒரு மதம். அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழியில் அவர்களுக்கு ஏற்ற வகையில் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வழிபடும் மதம். இலங்கையில் கூட தமிழ் பௌத்தம் இருந்துள்ளது. தென்னிந்தியாவில் தமிழ் பௌத்தம் தமிழ்ப் பௌத்தப்பள்ளிகள் இருந்துள்ளன. இதன் விளைவாகவே சீத்தலைசாத்தனார் சீவக சிந்தமணி எனும் தமிழ்ப் பௌத்த காவியத்தைப் படைத்தார். இதே போலவே நாதகுத்தனார் குண்டலகேசி என்னும் பௌத்த தமிழ்க் காவியத்தைப் படைத்தார்.  அமுதசுரபி அட்சய பாத்திரம் தந்த பௌத்த துறவி மணிமேகலை சுத்தத் தமிழிச்சி. பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் தொடர்பு ஏற்பட முன்னர் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட தொடர்பும் பிணைப்பும் முந்தியது. பௌத்தம் சிங்களத்துக்குமான தொடர்பு பிந்தியது.
வரிக் கொள்கை தொடர்பான உங்களது உண்மையான நேர்மையான கொள்கை என்ன? நீங்கள் உங்கள் வரவு செலவுத்திட்டத்தில் எடுத்துரைத்தது போல நாட்டு நலனுக்கான வரிக் கொள்கையினை செயற்படுத்துவீர்களா? எமது நாட்டின் கடந்த கால வரிக் கொள்கையினை நோக்கும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கமிசன் கொடுப்பவர்களுக்குமான வரிக்கொள்கையே எமது நாட்டில் இருந்தது.
நாட்டின் வருமானத்தின் முக்கிய மூலாதாரம் வரி வருமானங்கள். நாட்டின் பொருளாதார நிலைமைக்கேற்ப நாட்டின் மக்கள் வாழ்நிலைக்கேற்ப நாட்டு மக்கள் மீது அதிகரித்த சுமையினை ஏற்படுத்தாது வருமானத்தை பெறுவதற்கேற்ப வரி வருமானங்களைப் பெறுவதே அரசாங்கத்தின் வரிக் கொள்கையாக இருக்க வேண்டும். இது நம் நாட்டில் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நடந்ததா? ஒரேயொரு உதாரணம் சீனி வரி. உங்கள் வரிக் கொள்கை தொடர்பாக சிந்தியுங்கள்
இலங்கை அரசியல் என்றால் அரசியல்வாதிகளென்றால் அதன் ஒருவரி வரைவிலக்கணம் ஊழல், கமிசன், இலஞ்சம் என்பதேயாகும். இது ஒருவரை மட்டுமல்ல ஒரு அரசாங்கத்தை மட்டும் சுட்டி விரல் நீட்ட அல்ல. மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளுக்கும் இது பொருந்தும். ஒரே உதாரணம் மத்திய வங்கி ஊழல், சீனிக் கமிசன். இதைவிட மேலும் விபரிக்கத் தேவையில்லை.
உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக கூறியுள்ளீர்கள். அரச சேவையின் சுதந்திரத்தை அரச உத்தியோகத்தர்களின் சுதந்திரத்தை அவர்களது ஆளுமையை முடங்கச் செய்தது யார்? வெள்ளைக்காரன் தந்த சோல்பரி அரசியல் யாப்பில் சுயாதீனமாக இயங்கிய பகிரங்க சேவை ஆணைக்குழு (Pரடிடiஉ ளுநசஎiஉந ஊழஅஅளைளழைn) நீதிச் சேவை ஆணைக்குழு (துரனiஉயைட ஊழஅஅளைளழைn) ஆகியவற்றின் சுதந்திரத்தை முடக்கியது யார். டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபடுகிறோம் என்று மார்தட்டி 1972ல் கொண்டு வந்த குடியரசு அரசியல் யாப்பு முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்தர்களின் சுதந்திரமும் கௌரவமும் ஆளுமையும் அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்துள்ளது.
இந்த நிலைமையை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மாற்றுமா? அது மாத்திரமல்ல அரச சேவையில் இன விகிதாசாரப் பதவிமுறை நிட்சயம் பேணப்பட வேண்டும். இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் எத்தனைபேர் தமிழர்கள். வெளிவிவகார சேவையில் எத்தனை பேர் தமிழர்கள். அகில இலங்கை சேவையில் உள்ள உயர் பதவிகளில் எத்தனை பேர் தமிழர்கள். நியதிச் சபைகளின் உயர் பதவிகளில் எத்தனைபேர் தமிழர்கள். கூட்டுத்தாபனங்களின் தலைவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்.
நான் இனவாதம் பேசவில்லை. மொழி வாதம் பேசவில்லை. நீங்கள் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக முன்மொழிவினைச் செய்துள்ளதனால் இதனைக் கூறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளேன். இதற்குக் காரணம் என்ன. எம் தமிழ் நிருவாக உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் கிடக்கத் தயாரில்லை. பதவியிலிருந்தாலும் அரசியல்வாதிகளின் உத்தரவுக்கும் அவர்களின் ஊழல்களுக்கும் ஏற்ப கடமைபுரியத் தயாரில்லை. இதனால் அரச சேவை தனிச்சிங்கள மயமாகியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு மேதகு ஜனாதிபதியவர்களே உங்களுக்குண்டு.
இதில் பரிகசிக்க வேண்டிய விடயம் மத்திய வங்கி ஆளுனராக நிவாட் கப்றாலை நியமிக்கும் போது ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துடைய மத்திய வங்கி ஆளுனராக நியமித்து அவரை நிதி அமைச்சர் கூட கட்டுப்படுத்த முடியாத தற்துணிவை வழங்கும் அளவுக்கு எமது அரச சேவை இருந்ததை நான் நினைவுறுத்த விருப்புகிறேன்.
கௌரவ நிதி அமைச்சர் வனப்பரம்பல் அதிகரிப்புப் பற்றிக் கூறியுள்ளார். பாராட்டுகிறேன். ஒரு நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு குறிப்பிட்ட விகிதாசார அளவு வனப்பரம்பல் தேவை. ஆனால் நடப்பது என்ன? இந்த நாட்டின் வனவளத்தை, இந்த நாட்டின் நீர் வளத்தை, இந்த நாட்டின் நில வளத்தை அழித்தது இந் நாட்டு மக்களல்ல. அந்தந்த காலத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதேச சபை உறுப்பினர்கள் இவற்றை அழித்தார்கள்.
வடகிழக்கின் நீர் வளமோ, நிலவளமோ, வன வளமோ இவர்களால்தான் அழிக்கப்படுகிறது. இதனை நாம் எத்தனை தடவை எடுத்துரைத்தோம். காது கொடுத்துக் கேட்டீர்களா. காலம் கடந்த ஞானம் இது. கனியுமோ எனக்குத் தெரியாது.
பாற்பண்ணை உற்பத்தி தொடர்பாகக் கூறினீர்கள் கிழக்கில் பாற் பண்iணாயளர்களின் பண்ணை வளர்ப்புப் பிரதேசங்களான மயிலத்தமடு, மாதவணை, கந்தர்மல்லிச்சேனை போன்ற பிரதேசத்தை கிழக்கின் ஆளுனர் சிங்களக் குடியேற்றமாக மாற்ற முயற்சித்தார். எங்கள் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. இப்படியெனில் எப்படி பாலுற்பத்தி அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியமானது அந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் என்பது மக்கள் ஆணை ஊடாகவேயாகும். இதற்காக மக்கள் தமது விருப்பத்தினை வழங்குவதற்காக உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். வெற்றி பெறுவோமோ தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் ஜனநாயகப் பண்பினை மிதித்து சீரழித்து விடக்கூடாது. எமது கௌரவ ஜனாதிபதியவர்களை நான்  ஒரு ஜனநாயக கனவானாகவே இன்றும் மதிக்கின்றேன். அவரது அரசாங்கம் தோல்வியடைந்த போது தனது உத்தியோக பூர்வ மாளிகையிலிருந்து அடுத்த நிமிடம் தனது கையில் தனது ப்பிரீவ் கேசை சுமந்தபடி வெளியேறிய காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், எமது நாட்டில் இதுவரை கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை.  எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கான முற்றான தீர்வல்லாவிடினும் முதற் புள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை ஜனநாயக அடிப்படையில் இயங்க முடியாது ஆளுக்காள் சட்டக்காரணங்களைக்கூறி அவர் மீது இவர் குறை சுமத்தி மாகாண சபைத் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. எமது ஜனாதிபதி உண்மையிலேயே ஒரு ஜனநாயகக் கனவானாக இருந்தால் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைவிட மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடத்தி மாகாண சபையினை மக்கள் நிர்வாகமாக மாற்றி அமைத்து ஆளுனரின் அதிமேலான அதிகாரத்திலிருந்து குறைந்தபட்சமேனும் விடுவிக்க வேண்டும்.
பழப்ப தோசமோ கூடிய கூட்ட தோசமோ எமது ஜனாதிபதியவர்கள் தனது ஜனநாயகக் கனவான் என்ற பெயரைக் காப்பாற்றுவாரா?
மேதகு ஜனாதிபதியவர்கள் தமது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை ஆரம்பிக்கும் போது தனது வரவு செலவுத்திட்டமானது சமூகப் பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறையான வரவு செலவுத்திட்டம் என எடுத்துரைத்தார். இதற்கு நீங்கள் அளித்த விளக்கம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கூறும் சமூகப் பாதுகாப்பு என்ன? இன்றும் கூட நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணாக பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு மாத்திரமெனக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 43 வருடங்களாகத் தொடர்கிறது. வட கிழக்கு தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அண்மையில் முஸ்லிம்களைத் தொட்டது. இன்று சிங்கள இளைஞர்களின் மீது பாய்கின்றது.  இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் தேவையா என்பதை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவான சமூகப் பாதுகாப்பு என்பதன் ஊடாக நான் கேட்கின்றேன்.
எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் தமிழர்கள் அல்ல. சந்தர்ப்பவாதிகளாகச் சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுக்க முன்னர் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுத்துரைத்தவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் கோரவில்லை.  13 பிளஸ் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் முன்னிலையில் எடுத்துரைத்தவர் மகிந்த ராஜபக்ச அவர்கள்.  இவர்தான் ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று தன் சிங்களத் தமிழில் எடுத்துரைத்தவர். ஆனால், இன்றுவரை எதுவுமே நடந்ததில்லை.
அன்று ஒரு அரசாங்கம் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சி அதனை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும். அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிராந்தியங்களின் கூட்டமைப்பு என்ற அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை இன்றைய ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தீக்கரையாக்கினார். ஆனால் இன்று காலம் கனிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அன்று இனவாதிகளாக பிரகாசித்த சிலர் தவிர அனைவரும் அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஒரு நேர்கோட்டில் வந்துள்ளனர். இது காலம் கடந்த ஞானமோ அவர்களின் மனச்சாட்சி உறுத்தலோ தெரியாது. இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் தவற விடாது நடந்து கொள்வோமானால் எமது அடுத்த வரவு செலவுத்திட்டம் இந்த நாட்டின் சுபீட்சத்தை நோக்கியதாக அமையக் கூடிய வகையில் அடுத்த நிதி அமைச்சர் இருப்பார் என்பதை இந்த உயரிய சபையில் எடுத்துரைக்கின்றேன்.
ஏனெனில் இன்றைய பொருளாதாரச் சீரழிவுக்கு இனப்பிரச்சினையே அடிப்படை. நீங்கள் ஆணிவேரை அழித்துவிட்டு பக்க வேரில் மரத்தினை வளர்ப்பதற்கு முயலாதீர்கள். முறையான அத்திவாரமின்றி முழுமையான கட்டடத்தை ஆக்க முயலாதீர்கள். இந்த வரவு செலவுத்திட்டத்தினை இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் மக்களுக்குச் சுமையேற்றித் தயாரித்ததற்குக் காரணம் இனப்பிரச்சினைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எமது நாடு தீர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் சொல்லத் தேவையில்லை. நாட்டு மக்கள் இதனை அறிவார்கள். அதனால் தான் ஜனநாயகத்துக்குப் புறம்பாக மக்கள் புரட்சி ஒன்று இலங்கை அரசியலில் நடந்துள்ளது. ஆனால்,  நடந்த மக்கள் புரட்சி மூலம் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மலர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்றால் விடை பூச்சியம். வீதியில் நின்றவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள். வீதியில் இறந்தவர்கள் வீட்டுக்குள் இறக்கின்றார்கள். இதை உங்கள் வெற்றி என்கின்றீர்களா?
எமது மக்கள் எமது நாட்டுக்காக எந்தவிதமான துயரங்களையும் எதிர் நோக்கத் தயார். ஆனால், பொருளாதாரத்தின் நன்மைகள். நாட்டின் வளப்பங்கீடுகள் அனைவருக்கும் சமமாக, நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி, பால் வேறுபாடின்றி சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும். இதனை நீங்கள் என்று செய்வீர்கள். இதனை நீங்கள் என்றோ செய்திருந்தால் இன்று எமது நாடு தென்னாசியாவில் மட்டுமல்ல. தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல. உண்மையிலேயே ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும். நீங்கள் நாடு என்று கருதுவது வடக்கை கிழக்கை அல்ல. இன்றும் கூட வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கே நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வடக்கு மட்டும் தமிழர்களின் தாயகப் பூமியல்ல. வடக்கு கிழக்கு மாகாணமே தமிழர்களின் தாயக பூமி. 1881ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை சற்றுக் கவனமாக நோக்குங்கள். வட கிழக்கு தமிழர் தாயகம் சுதந்திரத்தின் பின்னர் எவ்வாறு உங்கள் குடியேற்றங்களாலும் உங்கள் அபிவிருத்தித் திட்டங்களினாலும்  சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
எமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அது ~பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை’ யென்று. அது போல்தான் இந்த வரவு செலவுத்திட்டமும்.
இறுதியாக கடும் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி கொடுத்த சூழ்நிலையில் பிரதமராகி ஜனாதிபதியாகி நிதியiமைச்சராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு காலம் கொடுத்த அதிஸ்டம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை உங்கள் காலத்தில் தீர்க்கப்பட்டது என்ற வரலாறு, எமது நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் ஏழுதப்பட வேண்டுமா இல்லை நீங்களும் உங்கள் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை போன்றவர்தானென்று வரலாறு உங்களைத் தூற்றவேண்டுமா, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத் தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் இணைத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உங்கள் கையில் உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி இலங்கை வரலாற்றில் நீங்கள் வரலாற்று நாயகனாக உயர்வடைய வேண்டும். இதற்கு உங்களுக்கு அந்தத் தைரியமும் பலமும் கிடைக்க நாங்கள் எமது ஆதரவினை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இன்று எதிர்க்கட்சியினர் அனைத்துமே இணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஒன்றுகூடி பொது அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் தெற்குக்கும் மக்களிடையே தங்களுடைய பலத்தைப் பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே இருக்கும். அடுத்து பாராளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ வந்தால் தங்களுடைய பலத்தை நீரூபிப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றீர்கள். ஆனால், நாங்கள் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களோ நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு  ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்.