சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 200 மில்லியன் டொலர் கையிருப்பினை பேணும் நிலையை எட்டியுள்ளது – டீ.வி.சானக

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல தசாப்தங்களின் பின்னர் 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினைப் பேணும் நிலைமையை அடைந்துள்ளது. அத்தோடு டீசல், பெற்றோல் உட்பட சகல எரிபொருட்களிலும் பல ஆயிரம் மெட்ரிக் தொன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டு எரிபொருள் இன்றி வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களின் பலனாக தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வலுசக்தி பாதுகாப்பிற்காக 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினை பேணக் கூடியதாகவுள்ளது.

அது மாத்திரமின்றி 130 ,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 83 ,275 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல், 8,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 11, 000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோல், 17, 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் மற்றும் 75, 000 மெட்ரிக் தொன் மின்சக்திக்கான எரிபொருள் என்பனவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டு, நீண்ட கால ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

டிசம்பர் – மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலநிலை என்பதால் எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளது.

இதனால் எரிபொருட்களின் விலை உலக சந்தையில் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. எனினும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் பின்னர் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் விலைகளில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படும்.

15 ஆண்டுகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் ஒரு சதம் கூட கட்டப்படாத ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

2022க்கு முன்னரான 15 ஆண்டுகளில் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் ட்டணமாக சுமார் 13 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால் 2023இல் எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் கப்பலுக்கு தாமதக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.

அதே போன்று முற்பதிவு செய்யப்பட்ட தினத்தில் எரிபொருட்களை தரையிறக்காமைக்காக கப்பல் நிறுவனங்களிடமிருந்து எமக்கு 16 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மேலும் தற்போது மீண்டும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதமொன்றுக்கு 3 மில்லியன் டொலர் வருமானம் ஈட்ட முடியும்.

எனவே இனிவரும் ஒவ்வொரு மாதங்களிலும் கப்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக கட்டாயமாக 10, 000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நேரடி டொலர் வருமானம் கிடைக்கும் என்றார்.

நாட்டை வங்குரோத்தாக்கியோரிடமிருந்து மக்களுக்கு நஷ்டஈடு பெற்று கொடுக்க நடவடிக்கை – சஜித் பிரேமதாஸ

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நிகழ்நிலை காப்புச்சட்டத்தையும் மறுசீரமைப்பு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பிரதான கருவி தனியார் துறையாகும். அதனால் இதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்தியை நாங்கள் எதிர்பாக்கிறோம்.

அதேபோன்று எமது அரசாங்கத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் கலந்துரையாடல் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் நாணய நிதியத்தை புரக்கணித்து செயற்படுவதென யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. நாணய நிதியத்துடன் இணைந்துகொண்டே இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது பொருளாதார கொள்கையின் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்துவோம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன் அந்த சட்டத்தை அரசியலமைப்பில் ஓர் பிரிவாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாட்டின் ஏற்றுமதி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் என்ஜினாக இருப்பது சிறிய, நடுத்தர, நுண் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 50வீத பங்களிப்பை வழங்கி வருகின்றன.

ஆனால் பராடே சட்டத்தின் மூலம் இந்த பிரிவினர் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

அதனால் எமது அரசாங்கத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். மாறாக அஸ்வெசும போன்ற தேர்தலை இலக்குவைத்து ஏழை மக்களுக்கு சிறியதொரு தொகையை கையளிப்பது போன்று அல்ல.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எமது திட்டத்தில் நாடு இழந்த வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் செயற்படுவோம்.

அதேபோன்று நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தின் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் சமர்த்திருக்கும் திட்டங்களில் கல்வி துறையில் மாற்றம், தகவல் தொழிநுட்ப துறையை விரிவுபடுத்தல், விவசாயம், கடற்றொழில் துறையை விருத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுதந்திர ஊடகத்தை பாதுகாத்து தற்போதுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி முறையான சட்டத்தை கொண்டுவருவோம் என்றார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யின் தாயார் அமரர் செபமாலை (பாக்கியம்) அவர்களின் இறுதி நல்லடக்க விபரம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அன்புத் தாயார் செபமாலை ( பாக்கியம் ) அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ( பாக்கியம் )அவர்கள் இன்றைய தினம் 5/2/2024 திங்கட்கிழமை ஜோசப்வாஸ் நகரில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற அமிர்தநாதன் (ஆயுள் வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பற்றிக் மற்றும் டெமோன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

அன்னார் ராசம், சலோமை, லிகோனி, சின்னத்தம்பி மற்றும் காலம்சென்றவர்களான அன்னமேரி, செலஸ்ரின், கபிரியேல் ,மற்றும் சாமிநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரது இறுதி நல்லடக்கமானது எதிர்வரும் புதன் கிழமை (7/2/20240) அன்று காலை 10 மணியளவில் தோட்டவெளி கிராமத்தில் உள்ள நற்கருணைநாதர் ஆலயத்தில் இரங்கல் பூஜைகள் நடைபெற்று பின்னர் விடத்தல்தீவு அடைக்கலமாதா ஆலயத்தில் வழிபாட்டுடன் விடத்தல்தீவு சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்

தாயை இழந்து துயருறும் உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்ளுவதுடன் அன்னையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம்.

சாந்தன் இலங்கைக்கு வர ஜனாதிபதி சம்மதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக அனுரகுமார தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

சுதந்திரத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தின் வன்முறைக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று(04) கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான‌ போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக‌ மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளையும், உரிமை மீறல்களையும், வடக்குக் கிழக்கிலே இடம்பெறும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் கண்டிக்கும் வகையிலும், தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்னிறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், வடக்கினைச் சேர்ந்த பல‌ சமூக அமைப்புக்களும் சேர்ந்து நேற்று இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியிலே அமைதி வழிப் போராட்டம் ஒன்றிலே ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்திலே ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்களிலே நீர்த்தாரைகளும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை இழுத்தும், தள்ளியும், நிலத்தில் வீழ்த்தியும் பொலிஸார் மிகவும் மோசமான முறையிலே வன்முறையிலே ஈடுபட்டனர். போராட்டத்திலே பங்குபற்றிய மாணவர்களிலே சிலர் கைது செய்யப்பட்டனர்.

அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்று மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்று மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை இலங்கையில் சுதந்திர தினத்தன்று கூட அங்கு வாழும் தமிழ் மக்களுக்குச் சுதந்திரமாக ஒன்று கூடவும், தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடவும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டியது.

30 வருட ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவும், தம்மீது தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அமைதி வழியில் போராடி வருகின்றனர். காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கம், சிங்கள பௌத்த மயமாக்கல் என்பவற்றுக்கு எதிராகவும், அரசியற் கைதிகளின் விடுதலை, காணமால் ஆக்கப்பட்டோருக்கான நீதி போன்ற விடயங்களிற்காக தமிழ் மக்களின் போராட்டங்கள் வடக்குக் கிழக்கிலே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்ப்பதனைத் தவிர்த்து, தனது பெரும்பான்மைவாத வன்முறையினைத் தமிழ் மக்கள் மீது அரசு தொடர்ந்தும் ஏவி வருகிறது.

போராட்டங்களை நசுக்குவதன் மூலம் தன்னுடைய இருப்பினைத் தக்க வைக்க முடியும் என இந்த அரசாங்கம் கருதுகிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் என்பவற்றினைச் சட்டங்கள் மூலமும், கொடூர வன்முறை மூலமும் அரசு பறித்து வருகிறது. இந்தச் செயன்முறைகளினதும், சிங்கள பௌத்தப் பெரும்பான்மைவாதத்தினதும் ஒரு வடிவமே நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை ஆகும்.

சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தின் நேற்றைய வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது. இனப் பிரச்சினை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு நிலைத்திருக்கக் கூடிய, நீதியான‌ தீர்வுகளைக் காண்பதே அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும். அதனை விடுத்து வன்முறையினாலும், ஒடுக்கும் சட்டங்களினாலும் மக்களின் எதிர்ப்புக் குரலினை நசுக்கலாம் என்ற அரசின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. நெருக்கடி ஒன்றினை நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் ஒன்றுபட்டு எம்மத்தியில் இருக்கும் ஜனநாயக வெளிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த வெளிகளில் நாம் பொதுமக்களாகக் கூட்டுணர்வுடன் துணிச்சலுடன் இயங்குவதன் மூலம் மாத்திரமே, ஜனநாயகத்தினைப் பலப்படுத்தி, அரசின் அநீதி மிக்க நடவடிக்கைகளைத் தோற்கடிக்கலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நம்புகிறது – என்றுள்ளது.

இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 2,789 முநைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு சஜித் பிரேமதாஸ விளக்கமளிப்பு

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.

நியாயமற்ற முறையில் அரசாங்கம் விதித்த பெறுமதி சேர் வரியினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர் சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.

அவ்வாறே,தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து விடயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசாங்கம் “நிகழ்நிலை காப்பு” என்ற சட்டத்தை நிறைவேற்றி,மக்களின் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை,தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்,சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இச்சட்டத்தினால் முடியும்.

தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க,எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக தகுதியானவர் இல்லையெனில் ரணிலை ஆதரிப்போம் – பிரசன்ன ரணதுங்க

தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருந்தால் அவருக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் தகுதியானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய எதிர்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் கூறினார். அதற்கான அதிக தகுதிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கனேஹிமுல்ல பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று (4) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பற்றியோ அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் பேசமாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இப்படிப்பட்ட தற்பெருமைக்காரர்களிடம் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி பேசினார். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நாட்டுக்காக உழைக்கச் சொல்லி அரசியலைத் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்களில் நாட்டுக்கு நல்லது செய்வதே தவிர, மக்கள் கேட்பதை அல்ல என்றார்.

நாங்கள் எடுத்த முடிவுகள் மக்கள் முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது, நாட்டு மக்களுக்கு இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தியதுதான். விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறையவும் விலை சூத்திரம் வழங்கப்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.

அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கங்களில் இல்லாதது போன்று இன்று பேசுகின்றார். திருமதி சந்திரிகா குமாரதுங்க வந்தபோது விகாரமஹாதேவி என்று கூறி அழைத்து வந்தவர். அவரை வெற்றியடைய வைத்து நான்கு அமைச்சர் பதவிகளையும் பெற்றார். அந்தத் தேர்தலில் ரெஜி அவர்கள் தோல்வியடைந்தார். அவர்கள் அரசாங்கத்தின் அங்கம் ஆனார்கள்.

மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட போது தெற்கிலிருந்து துட்டுகெமுனுவாகவே அழைத்து வரப்பட்டார். மஹிந்த சிந்தனையே நாட்டுக்கு சிறந்தது என தமது தலைவர்கள் கூறுவதை பார்க்கின்றனர். எம்முடன் இணைந்த பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்தார். அங்கிருந்து ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சென்றார்.

அதன் பின்னர் அனுரகுமாரவின் செயலாளர் ஊழல் குழுவின் தலைவராக செயற்பட்டார். அனுரகுமார அவரை இயக்கினார். அவரும் அந்த அரசாங்கத்தில் இருந்தார். நாங்கள் 225 பேரும் இருக்கவில்லை, ஆட்சி செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியாது. இன்று ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 88/89 இல் என்ன நடந்தது என்று 2000க்குப் பின் வந்த தலைமுறைக்குத் தெரியாது.

அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை மதிக்கவில்லை என்றால், அல்லது துண்டுப் பிரசுரம் மூலமாக கடையை மூடவில்லை என்றால், அந்த மனிதனை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

இரவில் வீடுகளுக்குச் சென்று மக்களைக் கொன்றனர். எமது கட்சிகள் ஒருபோதும் அரச சொத்துக்களை கொன்று, எரித்து, அழித்ததில்லை.

அந்தக் குற்றங்களையெல்லாம் செய்த குழு ஜனதா விமுக்தி பெரமுன, இன்று அவர்களால் அந்தப் பாவத்திலிருந்து தப்ப முடியாது. அதனால்தான் அந்த வரலாறு தெரிந்தவர்கள் எப்போதும் ஜே.வி.பி.யை 3% என்று போடுகிறார்கள். நேற்று முன்தினம் மாபெரும் மகளிர் மாநாடு நடந்தது. சுமார் 300 பெண்கள் சைக்கிளில் சென்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் போய் அந்த கிராமத்தில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்று கேட்டேன். வாக்காளர் பட்டியலில் 170 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஊர் ஆண்களுக்கு இரண்டு இரண்டு மனைவிகளா என்று கேட்டேன்.

ராஜபக்சர்கள் திருடியதாக கூறும் ஜனதா விமுக்தி பெரமுன அவர்கள் செய்ததை மறந்து விட்டது. 88/89 இல் சொத்துக்களுக்கு தீ வைத்தனர். அதன் காரணமாக இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவும் காரணம். பொருளாதாரப் பிரச்சினை கோட்டாபயவின் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 30 வருட யுத்தம் நடந்தது. போர்தான் அதற்குச் சிறந்த வழி. 2005 இல் மஹிந்த வெற்றி பெற்று 2009 இல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அன்று சஜித் பிரேமதாசவின் தந்தை புலிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கினார்.

600க்கும் மேற்பட்ட நமது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களால் கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியொரு வரலாறு நமக்கு இருந்தது. உலக நாடுகள் எமக்கு ஆதரவளித்த போது, யுத்தம் செய்ய எம்மை ஆதரிக்கவில்லை. நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83 கறுப்பு ஜூலை போன்ற காரணங்களால் நமது பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.

88/89 இல் செய்ததை மே 9ம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன செய்தது. பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கம்பஹாவில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர்.

மினுவாங்கொடை தொகுதியில் 13 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எங்களை மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்காகவே அத்தனையும் செய்தார்கள். அடிபட்டு நாம் கூர்மைப்படுத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

தற்போது ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கிராம அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதையும் நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனதா விமுக்தி பெரமுன அவர்களை கிராமத்தில் எந்த வேலையும் செய்ய விடவில்லை. அவர்களும் செய்யவில்லை. சமூக விரோதிகளாக செயல்படுகிறார்கள். கேவலமான அரசியல் செய்யாதீர்கள். நாட்டைப் பற்றி சிந்தித்து வேலை செய்யுமாறு நான் அனுரகுமாரவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது அரசியல் கருத்துப்படி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்றவராக வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் அச்சமோ சந்தேகமோ இன்றி நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அன்று நாம் மஹிந்தவை வெற்றியடையச் செய்தோம்.

நாங்கள் தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த போது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் மஹிந்தவை தெரிவு செய்தனர். நாட்டை ஒரு முறைமைக்கு கொண்டு வர நல்லாட்சியை உருவாக்க மக்கள் மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தனர்.

அப்போது நான் அவருக்கு எதிராக இருந்தவன். அவர் பணியாற்றுகிறாரா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதலுடன், தேசிய பாதுகாப்பு வீழ்ந்த போது கோத்தபாய கொண்டுவரப்பட்டார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக இன்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற நபரும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து குண்டுகளை வைத்தனர். மூன்று மகன்களும் ஜே.வி.பி கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள். கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்கிறேன்.