யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

வெடுக்குநாறி மலையில் மீண்டும் ஆதிசிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் – சபா குகதாஸ்

கச்சதீவில் புத்த விகாரை என்ற விடயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை தங்களது ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதற்கு கையில் எடுத்திருக்கின்ற புத்த பெருமானுடைய சிலையை வைத்துக்கொண்டு விகாரைகளை அமைத்து அதன் மூலமாக ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டத்தை நகர்த்திச் செல்கின்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இருந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கம் மத நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இப்படியான சட்டவிரோதமான விகாரைகளை அமைத்தல், புத்தர் சிலைகளை வைத்தல் என்பது உண்மையிலேயே இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற வகையில் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மத்திய மக்களின் கலாச்சாரங்கள் மதம் உள்ளிட்ட விடயங்களை மதிக்காது அவற்றினுடைய வரலாறுகளை மாற்றி அமைக்கின்ற வகையிலும் அவற்றினுடைய புனித தன்மைகளை செயல் இழக்க செய்வதாகத்தான் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கச்சதீவில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் புத்தக விகாரை என்பது உண்மையிலேயே ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால் ஏனைய இனங்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துகின்றனர்.

இதற்கான பூரண ஆதரவை இந்த அரசு இயந்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த அரசு இயந்திரம் என்பது நாட்டில் உள்ள அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு இயந்திரம் பெரும்பான்மை இனத்தின் நலன் சார்ந்து செயற்பாடுகிறது.

இது உண்மையிலேயே ஒரு மனித உரிமை மீறல், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல். இதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கச்சதீவு என்பது இந்திய பூகோள அரசியலில் ஒரு முக்கிய இடமாக விளங்குகின்றது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்ற விடயம் இலங்கைக்கு இந்தியாக்கும் இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கூடியதாகவும் அந்த நாடுகளின் உறவுகளை சீண்டுகின்ற விதமாகவும் அமைகிறது.

அடுத்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் தகர்த்தெறியப்பட்டு அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

இது சைவ மக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகும். யாரும் உள்ளே செல்ல முடியாது என்று நீதிமன்றம் தடையுத்தரவை போட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம் என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை பெளத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ் பல்கலையில் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

வட,கிழக்கு மாகாணங்களை பெளத்த மயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது

கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலனைகு எடுத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதன்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவற்றை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

வெடுக்குநாறி மலை ‘வடமனான பர்வத விகாரை என பெயர் மாற்றம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் 2018 ல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.

இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சகல தரப்பினரின் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே, சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தினம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நிதியின்மை காரணமாக திட்டமிட்டபடி, தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தேவைக்காகவே ஆணைக்குழு இவ்வாறு செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் ஆணைக்குழுவை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து வினவியபோதே ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஏனைய நிறுவனங்களும் அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தலுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும், திணைக்களங்களும் ஒத்துழைத்தாலன்றி தனித்து எம்மால் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான சிக்கல் நிதியின்மையாகும்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிதி அமைச்சினால் தேர்தலுக்கான நிதி விடுவிக்கப்படாமலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் தேர்தலை நடத்த முடியும்? அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்டால் வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்று தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை.

வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மூலமொன்றோ அல்லது அமைச்சரவை யோசனையொன்றோ முன்வைக்கப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால், நாட்டில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான நிதியையும் நிதி அமைச்சு அல்லது திறைசேரியிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனியார் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நிதி நெருக்கடி தாக்கம் செலுத்துகின்றது. இவை தொடர்பில் சிந்திக்காமல் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. உரிய காலத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு ஸ்திரமாகவுள்ளது என்றார்.

போர்க்குற்ற விவகாரம் – ஐ. நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழு கடும் அதிருப்தி

நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து தவிர கரிசைனை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் கடந்த 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இம்மீளாய்வின்போது இலங்கை தொடர்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வருங்காலங்களில் இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய 12 பக்க இறுதி அறிக்கை மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் வியாழக்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டம், 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டம், 2017 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச்சட்டம், 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம், 2022 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க காணி அபிவிருத்திச்சட்டம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் மற்றும் விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் ஆகியவற்றிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகக்கொடூரமானதும் மனிதத்தன்மையற்றதுமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்திலும் இலங்கை இணைந்துகொண்டமையை மனித உரிமைகள் மீளாய்வுக்குழு வரவேற்றுள்ளது.

அதேவேளை இலங்கையில் தொடர்பான மீளாய்வின்போது அடையாளங்காணப்பட்ட கரிசனைக்குரிய விடயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய பரிந்துரைகளின் சுருக்கம் வருமாறு:

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை என்பன கரிசனையைத் தோற்றுவித்துள்ளன.

எனவே அரசாங்கம் அதன் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வதுடன், அதனூடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் நிறைவேற்றதிகாரத்துக்கும் ஏனைய கண்காணிப்புக்கட்டமைப்புக்களுக்கும் இடையிலான நேர்த்தியான கடப்பாடு பேணப்படுவதும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் எதிர்காலத் திருத்தங்கள் ஊடாக இம்மறுசீரமைப்புக்கள் தன்னிச்சையான முறையில் நீக்கப்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ள போதிலும்கூட, உறுப்பினர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மையும், பல்வகைமையும் பேணப்படாமையைக் காரணமாகக்கூறி தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டணியினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘பி’ நிலைக்குத் தரமிறக்கப்பட்டமை குறித்துக் கவலையடைகின்றோம்.

ஆகவே மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான தேசிய கட்டமைப்புக்களுக்குரிய நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டு;ம்.

மேலும் நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்துத் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.

நாட்டின் உள்ளக சட்டங்கள் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களையும், இனப்படுகொலையையும் குற்றமாக வரையறுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.

போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ள போதிலும், கடந்த 2006 – 2009 ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமையும், வவுனியாவில் இயங்கிய ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன தொடர்பில் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையும் கரிசனைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன.

அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விசாரணை செயன்முறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், தலையீடுகள் குறித்து விசனமடைகின்றோம்.

அத்தோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் என்பன தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆயுதமோதலின்போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் பாலினத்தை அடிப்படையாகக்கொண்ட மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவரல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், மரணதண்டனையை இல்லாதொழித்தல், அவசரகாலநிலையை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாத்தல், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.