ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் பொருளாதார நெருக்கடியால் ரயர்கள், வாகன உதிரிப்பாகங்கள் இன்றி பாதிப்பு

மாலியில் நிலைகொண்டு ஐ.நா அமைதிப்படையில் கடைமையாற்றும் இலங்கை இராணுவத்தினர் கவச வாகனங்கள், இராணுவ வாகனங்களுக்கான ரயர்கள் மற்றும் விமானங்கள், உலங்குவானூர்தி , ஏனைய வாகனங்களுக்கான உதிர்ப்பாகங்கள் இன்றி தமது கடைமைகளை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 240 இலங்கை இராணுவத்தினர் மாலியில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிகளை கொண்டு செல்லும் வாகன தொடரணிகளுக்கு 1200 km வரையான தூரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரஷ்ய மற்றும் சீனதயாரிப்பு கவச வாகனங்களை பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன உதிரிப்பாகங்கள், ரயர்கள் இன்றி இக் கவச வாகங்களில் பல சேவையிலீடுபடுத்தப்படாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளன. மோசமான காலநிலை மற்றும் வீதிகள் காரணமாக விமானப்படையினரின் விமானங்கள், ஆயுத தளபாடங்களும் பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளன.

இதுவரையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பல்வேறு குழுக்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், வெளிநாடுகளில் அமைதி காக்கும் படையினருக்கு சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் சீனாவில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் அருண ரணசிங்க, மேற்படி ஹெலிகாப்டர்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்கான நிதி 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றமிழைத்தோரை தண்டிக்காத ஆணைக்குழுவை அமைக்கத் திட்டம்

குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது என்று கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான அந்தப் பத்திரி கையில், “2023 வரவு – செலவு திட்டத் தின் மீதான இறுதி வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளார்

முதலாவது நல்லிணக்கத்துக்கான யோசனைகளை உருவாக்குவது, இரண்டாவது அமைச்சரவையை விஸ்தரிப்பது. இந்த நடவடிக்கைகள் வரவு – செலவு திட்ட விவாதம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடும் என்றாலும் அதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் தெளிவாகவில்லை. எனினும், திங்கட்கிழமை வாராந்தர அமைச்சரவை கூட்டம் நீடிக்கப்படவுள்ளதுடன் இந்த செயல் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.

குழுவொன்று இது தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் என கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2018 இல் ரணில்விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்ததில் பிரதமராக பதவி வகித்த வேளை இந்த யோசனை முன்வைக்கபட்டிருந்தது. இதேவேளை, கருத்துத் தெரிவித்திருந்த ரணில் விக்கிரமசிங்க மூன்று தசாப்த கால மோதலும் ஏனைய விடயங்களும் இலங்கை பொருளாதாரத்தின்மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்திருந்தார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றியதாக காணப்படும். எனினும், இலங்கையில் அதனை எவ்வாறானதாக உருவாக்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சில தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கைகளால் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அவ்வாறான ஏற்பாடு இல்லாத ஆணைக்குழுவை அமைப்பது குறித்தே அரசாங்கம்ஆர்வம் காட்டுகின்றது. தற்போது பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்பதால் விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத ஆணைக் குழுவை அரசாங்கம் விரும்புகின்றது. இதன் காரணமாக சுதந்திர தினத் துக்கு முன்னர் இந்த விடயங்களை நிறைவேற்றுவது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.

கொள்ளையர்கள் அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் -சஜித்

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் சிறப்பாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

44 இலட்சம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக எமது ஆட்சியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை எமது அரசாங்கத்தில் பொறுப்பேற்கவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கூடிய சிறந்த நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

சர்வ பொருளாதார முறைமையொன்றை ஐக்கிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தும். ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

இன முரண்பாடுகளுக்கு தீர்வு காண சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியை கோரிய ரணில்

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின் போதாவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் சனிக்கிழமை (டிச. 03) ஷங்கிரிலா ஹோட்டலிலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியும். இது எளிதான விடயம் அல்லாத போதும் சாதிக்க முடியாத விடயம் என்பதற்கில்லை.

அரசியல்வாதிகளால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. இதற்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது.

கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியும்.

இது தத்தமது கருத்துக்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கும் அதேவேளை அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றார்.

அரச காணிகளை முகாமைத்துவம் செய்ய புதிய சட்டமும், திணைக்களமும் உருவாக்கப்படும் – ஜனாதிபதி

நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது எமக்கு தெரியாது. ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனை நிறுத்தி புதிய சட்ட மூலமொன்றை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக உருவாக்கப்படும் திணைக்களத்தின் ஊடாக காணி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘2048 இளைஞர் குழு’ என்ற குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023 வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் இதனை விட சிறந்ததும், பலம்மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதையே நான் எதிர்பார்க்கின்றேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2023 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென உருவான ஒன்றல்ல. கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே இவ்வாறானதொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பது தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு காரணியாகும்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பில் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற போதிலும், பொருளாதாரம் இவ்வாறு முழுமையாக வீழ்ச்சியடையும் என்று எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மத்திய வங்கியினால் கூட இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கவில்லை.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாருக்கு காணிகள் வழங்கப்படுகின்றன என்பது எமக்கு தெரியாது. இதனால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்களை முதலில் தடுக்க வேண்டும்.

அரச காணி திணைக்களத்தின் ஊடாகவே 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணி வழங்கும் விவகாரங்கள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. அபிவிருத்திகளுக்காகவே காணிகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே மகாவலி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக காணி வழங்கப்பட்டது. எனினும் அன்று காணிகள் வழங்கப்பட்டதையப் போன்று இன்று வழங்கப்படுவதில்லை.

அரசாங்கத்திற்கு அதற்கு சொந்தமான காணியின் அளவினை துள்ளியமாகக் கூற முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. அதே போன்று அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. எந்தவொரு அரச அதிகாரிக்கும் இதனைக் கூற முடியாது. பிரதேச செயலகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்க முடியாது.

தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவின் ஆலோசனைக்கு அமையவே காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதுவும் தற்காலிக நடவடிக்கையே ஆகும். எனவே நாம் இது தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய சட்டத்தின் ஊடாக இதற்கான திணைக்களமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதால் உள்ளூர் வைத்திய சாலை முறைமை செயலிழக்கும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு முறையான சுற்றறிக்கைகள், திட்டமிடல், ஒழுங்குமுறை மற்றும் முறையான வழிமுறைகளின்படி பணியாற்ற வாய்ப்பு வழங்கினால், நாட்டில் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் எந்த தடையும் இருக்காது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூகக் காரணிகளால் இந்நாட்டு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

மேலும், நெருக்கடிகளுக்கு பதிலாக அரசாங்கம் தலையிட்டு சாதகமான தீர்வுகளை வழங்கினால், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

வைத்தியர்களுக்கான 5 வருட சேவை சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வழிகாட்ட வேண்டும்.

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஓய்வுபெறும் 60 வயதை பூர்த்தி செய்த சிரேஷ்ட வைத்தியர்களும் இளம் பயிலுநர் வைத்தியர்களும் தமது விருப்பத்துக்கேற்ப வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்வதால் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், உள்ளூர் வைத்தியசாலை முறைமையை செயலிழக்கச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு பிற்போடும் யோசனைய முன்வைத்துள்ளது பாரிஸ் கிளப்

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான் டைமஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகஇலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளதுடன் கடன் மறுசீரமைப்பிற்கு 15 வருட கால அவகாசத்தை வழங்கும் யோசனையையும் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான்டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குளோபல் சவுத் நாடுகள் என அழைக்கப்படுகின்ற ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் குளோபல் நோர்த் போன்று ஹெயர் கட்டில் ஈடுபடவேண்டும் என பாரிஸ்கிளப் வேண்டுகோள் விடுத்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இளைஞர்கள் மீது தாக்குதல் : ஒருவர் மருத்துவமனையில் : ஒருவர் கைது

மாங்குளம் துணுக்காய் வீதியில் நேற்று சனிக்கிழமை (டிச. 3) சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மேலும் இரு உத்தியோகத்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சமீப காலமாக பல்வேறு பிரதேசங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சி நடவடிக்கையாக நேற்று மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில், மாங்குளம் நகருக்கு அருகில் உள்ள வீதியினூடாக சென்ற இளைஞரை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இடைமறித்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்பட்டபோது “நீங்கள் யார்” என்று இளைஞர் கேட்டுள்ளார். அத்தோடு, அதிகாரிகளிடம் பணிக்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறும் கூறியுள்ளார். எனினும், அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் இளைஞரின் சகோதரரும் அவ்விடத்துக்கு வந்துள்ளார். அவரும் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்க, இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர்.

அதன்போது சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதன் பிறகும் “வீதியால் செல்பவர்களை சிவில் உடையில் இடைமறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என இளைஞர் கேள்வியெழுப்ப, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வேளை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மாங்குளம் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டபோது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரின் சகோதரர் தெரிவிக்க, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து, இளைஞரின் சகோதரரை கைதுசெய்துள்ளனர்.

அதனையடுத்து இரண்டு அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்குட்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீருடையின்றி சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால், அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பொறுப்பின்றி கடமையாற்றும் அதிகாரிகள் மீது உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாரி பகுதியில் திணைக்கள சீருடை அணியாத நிலையில், சிவில் உடையில், குறிப்பாக, ஒருவர் (ஜம்பர்) கட்டை காற்சட்டை அணிந்து, கணவர் வீட்டில் இல்லாதபோது மனைவி, பிள்ளைகள் மட்டுமே இருந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்து, சோதனையிட்டுச் சென்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பல இடங்களில் திருடர்களும் அதிகாரிகள் என பொய் கூறி வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவீரர் நாளும் மாற வேண்டிய உத்தியும்

“ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை”

“விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன”

கடந்த வாரம் இதே நாள் வடக்கு, கிழக்கு முழுவதும், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளால் நிரம்பியிருந்தது.

மாவீரர் துயிலும் இல்லங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்கள் என, தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 50இற்கும் அதிகமான இடங்களில், பெரியளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரர் நாளின் உச்சக்கட்ட நிகழ்வு, மாலை 6.05 மணி தொடக்கம், 6.07 மணி வரை இடம்பெறும் நிகழ்வு தான்.

ஒரு நிமிடம் மணியொலி, ஒரு நிமிட அகவணக்கம், அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் மற்றும் ஈகச்சுடர்கள் ஏற்றப்படுதல்.

இந்த நிகழ்வுக்காக தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்கள் மற்றும் நினைவிடங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் நாள் என்பது மிகப் பெரியளவிலான ஏற்பாடுகளுடன், இடம்பெறும் ஒன்று.

தீபம் ஏற்றும் நேரத்தில் ஒவ்வொரு துயிலுமில்லத்தை நோக்கியும் ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுப்பது வழமை.

விடுதலைப் புலிகள் 1989ஆம் ஆண்டில் இருந்து, இதற்கான ஒழுங்கமைப்பு நடைமுறைகளை படிப்படியாக வகுத்துக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்த போது, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த அனுமதியும் இருக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில், இத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. அதனையும் தாண்டி நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

நல்லாட்சி அரசின் காலத்தில் ஓரளவுக்கு நீக்குப் போக்கான அணுகுமுறை காணப்பட்டது. அதனால் துயிலுமில்லங்களில் தீபம் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆனால் இந்தமுறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், விடுதலைப் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தாத வகையில், நினைவேந்தல்களை முன்னெடுக்கத் தடையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது.

சில இடங்களில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், தலையிருக்க வால் ஆடியது போல, அங்காங்கே, தங்களின் அடாவடித்தனங்கள், கைவரிசையைக் காட்டியிருந்தனர்.

ஆனாலும் ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் உரையாற்றிய போது இந்த அணுகுமுறையை வரவேற்றிருந்தார். இதனை ஒரு நல்லெண்ண சமிக்ஞை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவேந்தல் உரிமை தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், வேறு பல அரங்குகள், அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

தமிழர்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூரும் உரிமையை அனுவிக்கும் நிலை இருக்க வேண்டும் என்றும் அதனை அரசாங்கம் பறிக்க கூடாது என்றும், சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுவரை காலமும் அதற்கு மசிந்து கொடுக்காத அரசாங்கம் இந்த முறை ஒரு வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழர் தாயகம் எங்கும் மாவீரர்களுக்காக சுடர் ஏற்றவும் அஞ்சலி செலுத்தவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் துயிலுமில்லங்களுக்கு சென்றிருந்தனர்.

அத்தருணம் உணர்வுபூர்வமான ஒன்று. அதனை வார்த்தைகளால்- எழுத்துக்களால் வர்ணிக்க முடியாது. அத்தகைய இடங்களில் நேரடியாக தரிசனம் செய்தவர்களுக்கு அந்த உண்மை இலகுவாகப் புரிந்து விடும்.

வாருங்கள் என்று யாரும் அழைக்கவில்லை. வீடுகளுக்கு வாகனங்களை அனுப்பி ஆட்களையும் திரட்டவில்லை.

ஆனாலும் மாலைப் பொழுதில், குழந்தைகள் தொடக்கம், முதியவர்கள் வரை, துயிலுமில்லங்களை நோக்கித் திரண்டு சென்றனர்.

மாவீரர்களுக்கு உணர்வு ரீதியாக ஒன்றித்திருந்து அஞ்சலித்து விட்டு வெளியேறிச் சென்றனர். எல்லாமே அமைதியாக நடந்தேறின.

இதனை ஒழுங்கமைக்க விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. அவர்களால் வழிநடத்தப்படவும் இல்லை.

எல்லாவற்றையும் அந்தந்தப் பகுதி மக்களே பார்த்துக் கொண்டனர். அவர்களே துயிலுமில்லங்களை துப்புரவாக்கி, அலங்கரித்து. அந்த நாளுக்காக தயார்படுத்தினர். ஒழுங்கமைப்புகளையும் செய்து நிறைவேற்றினர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன.

இந்தமுறை மாவீரர் நாளும் அதற்காக திரண்ட தமிழ் மக்களும், இலங்கை அரசாங்கம் தனது கடந்த கால உத்திகளை மறு ஆய்வு செய்து கொள்வதற்கும், எதிர்கால அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தடயங்களே இருக்க கூடாது என்று, எல்லா துயிலுமில்லங்களும் அழிக்கப்பட்டு, பல இடங்கள் படைத்தளங்கள் ஆக்கப்பட்டன.

நினைவேந்தியவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடித்து நீண்டகாலம் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றையெல்லாம், தாண்டி விடுதலைப் புலிகள் இல்லாத – அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக, அவர்களின் இலட்சியம் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டதாக, அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் மாவீரர் நாள் என்பது தமிழர்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கின்ற ஒரு நாளாக போற்றப்படுகிறது.

இந்த நாளை தமிழர்களின் மனங்களில் இருந்து மறைக்கின்ற ஒட்டுமொத்த முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது உணர்த்தியிருக்கிறது.

இதற்கு மேலும், மாவீரர் நாள் போன்ற நினைவேந்தல்களைத் தடுப்பது பயனற்ற உத்தி என்பதை அரசாங்கமும், அதன் கருவிகளும் உணர்ந்து கொள்ளாவிட்டால், இனி எப்போதும் அவர்களால் அந்த புரிந்துணர்வுக்கு வர முடியாது.

மாவீரர் நாளுக்குத் தடைகளை ஏற்படுத்தி, குழப்பி வந்ததன் மூலம், அரச படைகள் தான், தமிழ் மக்களில் இருந்து விலகிச் சென்றனரே தவிர, விடுதலைப் புலிகளோ, மாவீரர்களோ அல்ல.

மாவீரர்களின் நினைவுகளை இல்லாமல் செய்வது சாத்தியமற்றதென உணருகின்ற போது, அதனை சரியாக கையாளுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை தோற்றுவிக்க உபயோகமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்பதும் இதன் மூலம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்குள் இன்னமும் விடுதலை நெருப்பு அணையவில்லை. அந்த நெருப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

இதனை தீபமாகவும் பயன்படுத்தலாம், தீப்பந்தமாகவும் மாற்றலாம்.

அரசாங்கம் தமிழர்களுக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுப்பது தான், எல்லா தரப்பினருக்கும் சாதகமான யதார்த்தபூர்வான அணுகுமுறையாக இருக்கும்.

மாறாக, கடந்த 13 ஆண்டுகளாக நினைவேந்தல்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்ட உத்திகளைப் போல, இனியும் தொடரும் நிலை ஏற்பட்டால், அது பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தமிழர் மக்களை அரவணைத்துச் செல்லும் போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்பினால், மாவீரர் நாள் போன்று எல்லா விடயங்களிலும் புதிய அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

அது சிங்களத் தலைவர்கள் மீது தமிழ் மக்கள் நல்ல பிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் உதவும்.

-சத்ரியன்