தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்- டலஸ் அழகப்பெரும

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தோற்றம் பெறும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழர்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் இல்லாமல் உள்ள நிலையில் உள்ளூராட்சிமன்றத்  தேர்தல் பிற்போடப்பட்டால் தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது.

1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது.

2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழ்தேசிய கட்சிகள் தீர்வுக்காக ஒன்றிணைய வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழ்த்தேசியக் கட்சிகள்  பேச்சுவார்தை என்ற மாயைக்குள்   ஏமாந்து விடாது  தமிழ்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான  பேச்சுவார்தையாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினம்  இன்று சனிக்கிழமை வல்வேட்டிதுறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் வீட்டின்முன்பாக வெடிகொழுத்தி,எள்ளுப்பாகு வழங்கி கொண்டாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த நோக்கத்திற்காக விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக தமது உயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொண்டு அதனை அடையக்கூடிய வகையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் அதனை  அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் நடாத்தப்படவேண்டும்   தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தில் திட சங்கர்ப்பமாக ஒரு இனம் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்வகிக்கின்ற உரிமையை நிலைநாட்டவேண்டும்.

இதற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்பு புலம்பெயர் தமிழர்களும் பங்குபற்றகூடிய வகையில் நடாத்தடப்படவேண்டும் இதனைத்தான் பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினத்தில் எடுத்துக்கூறவிரும்புகின்றோம். இதைவிடுத்து அரசாங்கம்  தீர்வு  தருவார்கள் ,போசுவார்கள் என்று ஏமாந்தது போதும் 75 சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்வு காண்போம் எனக் கூறுவது ஏன் என்பது புரியவில்லை. இதில் தமிழ் தேசியக் கட்சிகள் ஏமாந்து விடக்கூடாது .தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான தீர்வுகளை பேறுவதற்கான    முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. நாங்கள் ஒன்றிணைவதே காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் விருப்பம்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

WION ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை என்றும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்ப வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அண்மையில் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உதவுமாறு இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.

ஊழியர்களுக்கு அருகில் உள்ள அலுவலகம் : அரசாங்கம் திட்டம்

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசதுறை ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களை பணிக்கு ஒதுக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பஸ்களில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாதவர்கள் பல்கலைக்கழங்களில் இருந்து நீக்கம் – புதிய சட்ட மூலம்

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சில மாணவர்கள் 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குத் தோற்றாமல் நீண்டகாலமாக பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை குறித்த காலத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் ஒத்தாசையை பெறவுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் – காஞ்சன

நாட்டின் மின் உற்பத்திக்கான கேள்வி,மின்கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு காலத்தின் தேவைக்கமைய செயற்படவில்லை. இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிக்காமல் இருந்திருக்கலாம்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்சார கட்டணம் தற்போது திருத்தம் செய்யப்படவில்லை. மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள்,மின்சார கட்டணத்தை நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் திருத்தம் செய்யாவிட்டால் இந்த சேவை துறைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மத தலங்களை மாத்திரம் இலக்காக கொண்டு மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.மாற்றுத்திட்டங்களை செயற்படுத்தும் வரை மத தலங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எரிபொருள் மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடிக்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.மத தலங்களுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியுள்ளார்.

அனைத்து சேவைத்துறைகள் மற்றும் வீட்டுபாவனையை உள்ளடக்கிய வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மத தலங்களை மாத்திரம் இலக்காக கொண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் தற்போது மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது,இருப்பினும் 2014 ஆம் ஆண்டு 25 சதவீதத்தால் மின்கட்டணம் குறைபக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டதால் மின்னுற்பத்திக்கான கேள்வி குறைக்கப்பட்டு மின்கட்டணம் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த காலங்களில் மின்சாரம் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை,மின்னுற்பத்திக்கான கேள்வி அதிரிக்கப்பட்ட போதும்,அரசியல் காரணிகளுக்கான மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை,இதன் பொறுப்பை ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்க வேண்டும்.

தேவையான நேரத்தில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கும்,குறைப்பதற்கும் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் இல்லை.

அரசாங்கத்திற்கும் அந்த அதிகாரம் இல்லை.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் காணப்பட்ட போதும் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணம் திருத்தம் மாத்திரமல்ல மின்பாவனை கேள்வி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கபடாமலிருந்திருந்திருக்கலாம்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிகள் முறையாக இடம்பெறவில்லை.விடயதானம் தொடர்பில் திறனற்றவரை ஆணைக்குழுவின் தலைவராக பதவி வகிக்கும் போதும் போது சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது,

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு 2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாத காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு மின்கட்டண திருத்தம் ஊடாக மக்கள் மீது பாரிய சுமையை சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 24 ரூபாவாக காணப்பட்டது,ஆனால் தற்போது 114 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மறுபுறம் டீசலின் விலை 431 ரூபாவாகவும்,உராய்வு எண்ணெயின் விலை 320 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது ஆகவே நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணத்தை திருத்தம் செய்யவில்லை.

ஆகவே மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்யாமல் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதே உண்மை.24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் அமுல்படுத்த வேண்டிய திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.தற்போதைய செலவுகளுக்கமைய ஒரு மின் அலகு உற்பத்திக்கு 56.90 ரூபா செலவாகுகிறது,ஆனால் ஒரு அலகு மின்சாரத்திற்கு 29 ரூபா அறவிடப்படுகிறது.

ஒருமாத மின் உற்பத்திக்கு மாத்திரம் 889 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் ,மின் கட்டணம் அறவிடல் ஊடாக 400 பில்லியன் ரூபா கிடைக்கப் பெறுகிறது,செலவுக்கும்,வருமானத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றன.

ஆகவே மின்கட்டணம் மீண்டும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியது,அதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பினர் எவ்வித மாற்றுத்திட்டங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை,இதனை ஒருபோதும் மறுக்கவில்லை.

நாடு இயல்பான நிலையில் உள்ளது என ஒரு தரப்பினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னர கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க எவரும் முன்வருவதில்லை.இதுவே உண்மை.

மிகவும் நெருக்கடியான நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.அமைச்சு மட்டத்திலான முறையான முகாமைத்துவத்தினால் தற்போது எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் தவறான விடயங்களை சமுகமயப்படுத்தகின்றன.கி.யு ஆர் முறைமை எதிர்வரும் மாதம் முதல் இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவ அடிப்படையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்.புதிய திட்டத்திற்கமைய 65 ஆயிரம் முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் பெற்றோலையும்,பதிவு செய்யப்பட்டுள்ள 17 ஆயிரம் பேருந்துகளுக்கு 80 அல்லது 90 சதவீதமளவில் டீசலையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கோட்டா அடிப்படையில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மின்கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என எதிர்தரப்பினர் முன்வைத்துள்ள விடயம் முற்றிலும் அடிப்படையற்றதாகும். மின்விநியோக துண்டிப்பது தொடர்பில் எனக்கு தீர்மானம் எடுக்க முடியாது.

ஆனால் சுகாதார சேவையில் மின்விநியோகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது உணர்வு பூர்வமாக அவதானம் செலுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். சுகாதாரத்துறை சேவை பாதிக்கப்பட்டால்,அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.

மத தலங்களுக்கான மின்கட்டணம் குறித்து தனித்த தீர்மானங்களை எடுக்க முடியாது,எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 134 விகாரைகளின் மாத மின்கட்டணததை இலங்கை மின்சார சபை செலுத்தியது,ஆனால் புதிய கட்டண திருத்தத்தின் போது 134 விகாரைகளின் மின்கட்டணத்தை இலங்கை மின்சார சபை செலுத்த கூடாது,அவர்களே செலுத்த வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தது,அதற்கமையவே ஒருசில விகாரைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒருசில விகாரைகளின் மின்கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என மகாநாயக்க தேரர்களும் தெரிவித்துள்ளார்கள்.

மின்சார துறையில் மாற்று திட்டங்களை செயற்படுத்தும் வரை மின்கட்டண திருத்தம் குறித்து அவதானம் செலுத்த முடியாது.காலத்தின் தேவைக்கு அமைய எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை விருப்பமில்லாத வகையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவர் எரிக்வோல்ஸ்

இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவராக எரிக்வோல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995 முதல் கனடா இராஜதந்திரியாக பணியாற்றி வரும் எரிக்வோல்ஸ் தென்கொரியா துருக்கி ருமேனியா ஆகியவற்றிற்கான   தூதுவராக  பணிபுரிந்துள்ளார்.

தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுத்ததாக சொல்லுவது நகைப்புக்குரியது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அண்மையிலே இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

ரெலோ, புளோட் மீது தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களின் ”இவர்களுக்கு நாங்கள் தான் மன்னிப்பு வழங்கினோம்” என்ற விமர்சனங்கள் தொடர்பில்

எங்களுக்கு அரசியலில் 40 வருட அனுபவம் உள்ளது. எங்களை விட அனுபவம் வாய்ந்த செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். இளைய உறுப்பினர்கள் அவர்களது அறிவுக்கேற்றவாறு அப்படி வளர்க்கப்பட்டுள்ளார்கள். யார் யாருக்கு மன்னிப்பு கொடுப்பது. தமிழரசுக் கட்சி எங்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களா? தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? படித்தவர் என்று கூறிக்கொள்கின்ற முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் போன்ற இளையவர்களுக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும்? புலிகளும் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் போது புலிகளின் தலைவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் ஒன்றாக கூடி தமிழ் மக்களின் நலனுக்காக ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள். மன்னிப்பு கொடுத்ததாகப் பேசுகின்ற தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இழந்த தலைவர்களை விட தமிழரசுக் கட்சி இழந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன், தங்கதுரை, சம்பந்தமூர்த்தி, சிவ சிதம்பரம், நீலன் திருச்செல்வம் இப்படி பல தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் துரோகிப் பட்டத்துடன் புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. அவர்களிடமும் ஆயுதம் இருந்திருந்தால் சுட வந்தவர்களைத் திருப்பிச் சுட்டிருப்பார்கள். எங்களிடம் ஆயுதம் இருந்தமையால் எங்களைச் சுட வந்த போது எங்களின் பாதுகாப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட்டோம். இது வரலாறு. உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குத் தான் மன்னிப்புக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் நாங்கள் ஒற்றுமையாகப் பேசி அரசியல் செய்கின்றோம். போராட்டக் காற்றுக் கூடப்படாத தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுப்பதாக சொல்லுவது நகைப்புக்குரியது.

உண்மையிலேயே இலங்கை இராணுவத்துடன் முதலில் இணைந்து பணியாற்றியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே. பிரேமதாசவின் காலத்தில் 88 -91 வரை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் புலிகள். அப்போதே அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். தம்பிமுத்து அவரது மனைவி கொழும்பிலே கனடிய உயர்ஸ்தானிகராலயம் முன் வைத்து புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. இந்த வரலாறு தெரிந்த மூத்த உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியினுள் இருந்தாலும் ஜனநாயக வழிக்கு வந்த ஆயுத போராட்ட இயக்கங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசாமல் இருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில்

உண்மையிலே ஓ.எம்.பி தலைவரின் கருத்து முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். சரணடையும் போது அவர்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினர் பஸ் வண்டியிலே ஏற்றிச் செல்வதை நேரில் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஒருவரும் சரணடையவில்லை என கூறுவது அப்பட்டமான பொய் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிங்களத் தலைவர்கள் மத்தியில் மாற்றம் தென்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே கோத்தபாயவினால் நியமிக்கப்பட்ட இப்படியான அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.

காணி சுவீகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிக் கொண்டே உள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வாயே திறப்பதில்லை. காணி சுவீகரிப்பு வடக்கைப் போல் கிழக்கில் பெருமளவில் நடைபெறவில்லை. கிழக்கு மாகாணத்துக்கென விசேடமாக கோத்தபாயவினால் முழுதாக பெளத்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி பல இடங்களைத் தொல் பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக திருக்கோணேச்சரம் கோவிலை அண்டிய பகுதிகள், அம்பாறையிலே இறக்காமம் போன்ற பல இடங்களை அடையாளப்படுத்தி அதைச் சுற்றி வேலியமைப்பது, கல் நடுவது போன்ற விடயங்கள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்தாசையுடன் எல்லைப்புறங்களிலே மேட்டு நிலப் பயிர்ச்செய்கை என்ற பெயரில் காணிகள் களீபரம் செய்யப்படுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம். வியாழேந்திரன், பிள்ளையான் தமது பிரதேசங்களைக் காப்பாற்றுவார்கள் என்றே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளுக்கு வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல்

தனிமனித ஆதிக்கத்தையே நாம் எதிர்க்கின்றோம். சம்பந்தன் ஐயாவுக்கு உடல் நலமின்மையால் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியாமலிருக்கின்றது. அதனால் சுமந்திரன் சம்பந்தனின் பெயரை நன்றாகவே பயன்படுத்துகின்றார். இது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது. ஏனைய கட்சிகள் கூட அவரது நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டுள்ளார்கள். சில நேரங்களில் சுமந்திரன் நடந்து கொள்கின்ற முறை அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அளவில் இருக்கின்றது. அங்கத்துவக் கட்சிகளுடனோ, தன்னுடைய கட்சியினருடனோ கலந்துரையாடி முடிவுகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்கின்றார். அவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். அண்மையிலே கூட பாராளுமன்றத்தில் நாங்கள் இருக்கும் போது எங்களுடன் கலந்துரையாடாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கையொப்பமிட்டு வந்திருக்கின்றார். அவர்கள் தங்களுடைய நலனுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோருகின்றார்கள். எங்களுடன் கலந்து பேசிருந்தால் மாகாணசபைத் தேர்தலையும் விரைந்து நடாத்துமாறு வலியுறுத்தும் சந்தர்பமாக அது அமைந்திருக்கும். இப்படியான விமர்சனங்களே அவர் மீது வைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

இன்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தின் முடிவுகள்

இன்றைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதியின் பேச்சுக்கான அழைப்பிற்கு தமிழ்த் தரப்பு பின்வரும் வகையில் பதில் வழங்குவதாகவும் இதன் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

1. நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

2. அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும்

3. உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம்.

கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அவர்கள் இல்லத்தில் இன்று 25- 11- 2022 மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இம்முடிவுகளை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டவும் தீர்மானிக்கப்பட்டது.