தவறான அரசியல், பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு வினையாக மாறியுள்ளது – அனுர குமார

அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் சனிக்கிழமை (5) மாலை இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்க வேண்டும்.ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்களே மாற்றியமைக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டு நாட்டு மக்கள் தவறான அரசியல் நிர்வாகத்தை, தவறான தலைவர்களை தெரிவு செய்தார்கள். தெரிவு செய்யப்பட்ட தலைவர் தவறானவர் என மீண்டும் மீண்டும் தவறான தலைமைகளையே தெரிவு செய்கின்றார்கள் .

தற்போதைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னைய அரசாங்கங்களிலும் பதவி வகித்துள்ளார். ஆகவே எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இவ்வாறு சகல அரசாங்கங்களிலும் அமைச்சு பதவி வகித்துள்ளார்.ஆகவே உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெறவில்லை.

உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்க வேண்டும்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளோம்.கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது,பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றமைக்கு குரல்கொடுக்க வேண்டும் – கவிஞர் கால்தீன்

கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஜனாதிபதி இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த காணிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நீதி இல்லாமல் நடு வீதியில் நிற்கிறார்கள்.

இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கில் அதிகாரப் பகிர்வொன்றினைப் பெற்றுக் கொண்டு நமது மக்களின் துன்பங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளொன்றையும் இதன்போது முன்வைத்தார்.

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளன- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒருமித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதனைப் பரிசீலிக்கின்றேன் என தெரிவித்திருந்தார். தற்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களும் அதே கருத்தாக சமஸ்ட்டி தீர்வைத் தருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்றாக வேண்டும் என கூறியிருக்கின்றார்.

என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றது. இதனைப் பார்வையிட வந்திருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படல் வேண்டும், என்பதை நான் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்குக் கூறிக் கொள்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இனப்பிரச்சனைதான் முக்கியமான காரணமாகும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக் கொடுக்க வேண்டும் என சிங்கள மக்கள் மனம்மாறிக் கொள்ள வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டுப்பிரஜைகள், அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் சிங்கள மக்கள் நினைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அதபோன்று நீதி அமைச்சரும் புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வைக் கொடுப்போம் எனக் கூறியிருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்திலே 21வது திருத்த சட்டம் நிறைவேறியிருக்கின்றது. அதற்குக்கூட சில இனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஆளும், எதிர்க்கட்சி, மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட 179 வாக்குகளை அளித்து அதனை நிறைவேற்றியிரக்கின்றார்கள். அதபோன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால்தான் சர்வதேசம் தமக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் உதவிகளைச் செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளது. இதற்காக வேண்டி புலம்பெயர் மக்களும் அந்த அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு அளுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியாவினால் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கும் எமது புலம்பெயர் தேசத்து தமிழர்களின் வேண்டுகோளின் பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒரு இக்கட்டான நிலமையைக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைக் காணவேண்டியுள்ளது. அதனை இந்த அரசு உணர்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சுபீட்சமான நாடாக இலங்கை திகழ வேண்டுமானால் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை அரசு முன் வைக்க வேண்டும். அது நிறைவேறினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

நிதி உள்ளிட்ட 4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானம்

4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 44(3) இன் கீழ், பிரதமருடன் கலந்தாலோசித்து, 4 அமைச்சுக்கள் தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானித்துள்ளதாக, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்கக் கோரி நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1987ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு வலியுறுத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகளும் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ‘எமக்கு வேண்டும் தனி வீடுகள்’, ‘37000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு’, ‘தோட்டத் தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள்; அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்’, ‘எமது நில உரிமையை உடனடியாக பெற்றுத் தாருங்கள்’, ‘பழமையான வீட்டு வாழ்க்கை போதும்’ போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 1987ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்றில் கையொப்பங்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளும், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம், அஞ்சல் அலுவலகத்துக்கும் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ரணிலின் கட்டுப்பாட்டில் 4 அமைச்சுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 44(3) பிரிவின் பிரகாரம், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் கீழ் இயங்கும்.

இந்த 4 அமைச்சுக்கள் தவிர, பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் -நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் ரணில் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என்று அண்மையில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு. சுரேந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம் சிங்கள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே. இதை தமிழ் மக்களுக்கு பாடம் எடுக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்தவர்கள் யார் என்ற வரலாற்றை இந்த நாடே அறியும். பல தசாப்தங்களாக ஆளும் கட்சிகள் ஒரு தீர்வை கொண்டு வருகின்ற பொழுது சிங்கள எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பொழுது ஆளும் கட்சிக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று அதை எதிர்ப்பார்கள். தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் இலங்கை அரசியலில் பிரதானியாக, தலைவராக, அமைச்சராக பதவியில் இருந்த பொழுது நடைபெற்ற விடயங்களே அதற்கு சான்றாக அமையும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசு காலத்தில் தமிழ் மக்களால் ஏகோபித்துத் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி இறுதி வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே தவிர்த்து வந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவராக அமைச்சராகப் பதவியில் இருந்தவரே நிமல் சிரிபால டி சில்வா.

அதேபோன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்கியதாக ஒரு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதாக இருந்தது. அந்த நேரத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை சிதைத்து அரசியல் யாப்பு நிறைவேறாமல் குழப்பம் விளைவித்தது சிங்கள கட்சிகளே, தமிழர்கள் அல்ல என்பதையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். அப்போதும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தரப்பில் மூத்த அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய அதிகாரங்களை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு கூட சிங்களத் கட்சிகள் ஒற்றுமையாக முன் வருவார்களா? அதில் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் சிங்கள கட்சிகளே.

இன்னும் வரலாற்றில் சிறது தூரம் பின் சென்றால் 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அப்பொழுது ஆளும்கட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியோடு சேர்ந்து நின்று எதிர்த்தார்கள். அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல. ஆனால் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் தான் சிங்களக் கட்சிகள் குறியாக இருந்தன.

ஆக குறைந்தது உங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளையாவது நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமக்ஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான அழைப்பு எந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டாலும் சமக்ஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகளை ஓர் அணியில் வருவதே பிரதானம். ஆகவே அவர்களை ஒரணியில் வருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் விவாதம்

இலங்கை குறித்து மனித உரிமைகள் குழுவின் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கமான, மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஆறாவது அமர்வு நேற்று நிறைவடைந்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை அரசாங்கங்கள் செயற்படுத்துவதைக் கண்காணிக்கும், சுதந்திரமான நிபுணர்களின் அமைப்பாக மனித உரிமைகள் குழுவின்  நூற்று முப்பத்தி ஆறாவது  அமர்வு ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

 

அந்த அமர்வில், எதியோப்பியா, ஜப்பான், கிர்கிஸ்தான், நிகரகுவா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியன தொடர்பான அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஏழாவது அமர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம், மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியாவின் காலமுறை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் அதிபர் ரணில்விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை அதிபர் 30 ஆக அதிகரிக்க முடியும்.

முன்னதாக, அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கிடைத்த தகவல்களின்படி, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு கேடு – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து கேள்வி எழுப்பிய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதால் நாட்டிற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அடிபணிந்தால் இலங்கை எங்கே போய்நிற்கும்” என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள், தங்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உணர்திறன் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

“நகர அபிவிருத்தி அதிகாரசபை (யுடிஏ) அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக ஒரு செய்தி வந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கமானது வெளிநாட்டினருக்கு வீடுகளை நிர்மாணிப்பதா?

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இவர்களுக்கு வாக்களித்தால் என்னிடம் வீடுகள் கேட்டு வராதீர்கள்,” என்றார். தற்போது சொந்த வீடு இல்லாத பல குடும்பங்கள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized