ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(25) வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் விசாரணை என்ற பெயரில் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் மூன்றரை மணிநேரம் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்று மாலை 04.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைப்பதற்கான உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதவான் பிறப்பித்ததையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் அதிகாரப் போட்டியினால் இலங்கை எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான First Post ற்கு செவ்வி வழங்கியுள்ளார்.
இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் அதிகார பதவி வெறியும் ஊழலும் நாட்டை வங்குறோத்து நிலைமைக்கு மாற்றியது மாத்திரமல்ல பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்கமாகவும் மாறியுள்ளது நாடு பற்றியதும் அதன் நிலையான அபிவிருத்தி பற்றியதும் நிலையான கொள்கைகளை வகுக்காமல் ஆட்சிக்கு வந்ததும் தமக்கான அதிகாரங்களை அளவுக்கு அதிகமாக பெற்று அதிகார துஸ்பிரையோகங்களை செய்து அவற்றில் இருந்து தப்பிக் கொள்ள தமக்கு விரும்பிய வெளிநாடுகளுக்கு நாட்டின் முதன்மையான பகுதிகளை விற்று மறைமுக காலணித்துவத்தை வலுப் பெறச் செய்து விட்டு பொறுப்பற்ற வகையில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்து வேதாந்தம் ஓதுகின்றனர் இதற்கு தற்போதைய ஐனாதிபதியும் விதிவிலக்கல்ல.
2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஐபக்சக்களும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து நிறுத்தியிருந்தால் பூகோள நலன் சார்பு நாடுகளின் அரசியல் அதிகாரப் போட்டி இன்று இலங்கைத் தீவில் தீவிரம் பெற்றிருக்காது ஆனால் தற்போதைய தீவிரப் போக்கு கூர்மை அடையுமாக இருந்தால் ஐனாதிபதி கூறும் அபாயம் தென்னிலங்கையில் தான் மையங் கொள்ள இருக்கிறது.
2009 இற்கு முன்னர் இந்தியாவின் தென்கடல் பிராந்தியம் மிக பாதுகாப்பாக இருந்தது காரணம் இலங்கையின் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் பலமான கடற்படைக் கட்டுமானத்தை விடுதலைப் புலிகள் வைத்திருந்தமை அத்துடன் பூகோள நாடுகளின் அதிகாரப் போட்டியும் கூர்மையடையாது வரையறுக்கப்பட்டதாக இருந்திருக்கும் இவையாவும் தலைகீழாக மாறுவதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பும் காரணமானாது.
தற்போது பிராந்திய அரசியல் அதிகாரப் போட்டியும் பூகோள நாடுகளின் ஆதிக்கமும் அதிகரித்தமைக்கு மிகப் பிரதான காரணம் ஈழத் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பிரச்சனை தான் எனவே சிறிலங்கா ஆட்சியாளர் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் தென்னிலங்கைக்கான அபாயத்தை நிறுத்த இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதே உசிதம் ஆனால் அவ்வாறான மாற்றம் சிங்கள ஆட்சியாளர் இடையே ஏற்பட்டால் அதிசயமாகவே இருக்கும்.
இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள பிராந்திய மற்றும் பூகோள நாடுகள் தங்களின் நலன்களை முன்னுரிமைப் படுத்தி சிங்கள ஆட்சியாளரை முழுமையாக கையாளவே முயற்சிக்கின்றனர் அதுவே ஆட்சி மாற்றங்களுக்கும் ஸ்திரம் அற்ற ஆட்சிக்கும் வழி வகுக்கின்றது.
தமிழர் தரப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பேரப்பலம் விடுதலைப் புலிகளிடம் மாத்திர இருந்தது துரதிஸ்ட வசமாக தனி நாட்டுக் கோரிக்கையில் ஒரு படி இறங்கி சமஸ்டி தீர்வை பெற்றுவதற்கு பச்சைக் கொடியை காட்ட தாமதித்தமையால் மௌனிப்புக்கு வழி வகுத்தது அன்று சமஸ்டி தீர்வை பெற்றிருந்தால் இன்று தனி நாட்டிற்கான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம்.
தற்போது தமிழர் தரப்பில் மிதவாத தலைமைகளும் ஏனைய தரப்புக்களும் சிங்கள ஆட்சியாளர்களையும் பூகோள அரசியல் அதிகாரத் தரப்புக்களையும் கையாள முடியாத இராஐதந்திரம் அற்ற வெற்று வேட்டுகளாகவே உள்ளனர்.
உண்மையில் இலங்கை மீது மையம் கொண்டுள்ள பூகோள அதிகாரப் போட்டிக்கு சிங்கள ஆட்சியாளர் தான் காரணம் என்றால் இந்தப் போட்டிக்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கான சாதக நிலமைகள் இருக்கின்ற போதும் அந்த பூகோள அரசியலை தமிழர் தரப்பு கையாளவில்லை.
நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் தமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 வீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்கப்படுகின்றன.
இந்நாடுகளை போன்றே அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் சமமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.
நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், அத்தகைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.
நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக இன்றையதினம் (24.11.2023) இடம்பெற்று இன்றையஅகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.
இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.
சித்தங்கேணி இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு,
சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை முன்னிட்டு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 142 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.
விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.
ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.
வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.
இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.
எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.
“தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” என்பதை போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவு திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை என்றார் தோழர் மாவோ. மௌனமாக இருக்கத்தான் நான் முயன்றாலும் காற்று மரத்தை அலைக்கழிப்பதைப்போல இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன். இந்தக் காற்றசைவில் நான் இசையாவிட்டால் எம் மக்கள் பிரதிநிதியாக இப் பாராளுமன்றத்தில் இருப்பதில் பயன் என்ன?
இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுவது வழமையான சம்பிரதாய பூர்வமான நிகழ்வேயொழிய, ஆக்க பூர்வமான நிகழ்வொன்றல்ல என்பதையே இந்த வரவுசெலவுத்திட்ட விவாத உரைகள் சுட்டி நிற்கிறது.
ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான, அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான ஏற்கத் தக்கதான, ஏற்புடைத்தான, முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ, நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்குட்பட்ட வரவுசெலவுத்திட்டமே இந்த வரவுசெலவுத்திட்டம் என்பது என்கருத்தாகும்.
ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் அந்த நாட்டின் அடுத்த வருடத்துக்கான வருமான மூலங்கள் பெறும் வழிகள், பெறத்தக்க மூலகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து, பெறத்தக்க தொகைகள் எவ்வளவு வரி வருமானங்களிலிருந்து பெறத்தக்க வருமானங்கள் எவ்வளவு, வெளிநாட்டு உதவிகள் ஊடாக பெறுபவைகள் எவ்வளவு, உள்நாட்டு வருமான மூலங்களிலிருந்து பெறப்படுபவைகள் எவ்வளவு என்று பிற வருமான மூலங்களிலிருந்து பெறுபவற்றை தெளிவாக எடுத்துரைப்பதோடு, நாட்டின் அடுத்த வருட செலவீனங்கள் தொடர்பாக மூலதனச் செலவு மீண்டெழும் செலவு இவையாவும் துறை ரீதியாக அலசி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதை வெளிக் கொணர வேண்டும். வருமானத்துக்கும் செலவீனத்துக்குமான துண்டுவிழும் தொகை எவ்வளவு. துண்டு விழும் தொகை எவ்வாறு சீர் செய்யப்படும் என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் எடுத்தியம்பப்பட வேண்டும்.
வரவு செலவுத்திட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு அடையப்பட வேண்டும். சிற்றினப் பொருளாதாரம் பேரினப் பொருளாதார கொள்கைகள் இக்காலத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும். அவற்றை அடைவதிலுள்ள சவால்கள் சிக்கல்கள், அதை எதிர்நோக்கி மீண்டெழும் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல அவை நடைமுறைக்கு சாத்தியமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
எமது நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4ஆயிரத்து 127 பில்லியன் ரூபா, உத்தேச செலவீனம் 6ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 பில்லியன் ரூபா, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2ஆயிரத்து எண்ணுற்றி 51 பில்லியன் ரூபா. ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் இத்தகையதொரு பாரிய பற்றாக்குறை பொருளாதார அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தொகையாகவே நான் கருதுகின்றேன். இத்தகைய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் முன்மொழிந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் இலக்குகளை அடைய முடியுமா என்பது தொடர்பாக, எனது கருத்து நமது நாட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கொன்றே தேவையாகும். அலாவுதீனின் அற்புத விளக்கொன்று இல்லாவிட்டால் இந்த வரவு செலவுத்திட்ட இலக்குகளை எம்மால் அடையும் இயலுமை உள்ளதா என்பதை எனது பொருளியல் அறிவு என்னைக் கேள்விக்குட்படுத்துகிறது.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் அதைக் காழ்ப்புணர்வு எனக் கூறி கடந்து விடலாம். ஜே.வி.பி. யினர் விமர்சித்தால் ‘ஏக்கத்தமாய் மூ’ எனக் கூறித் தப்பிக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சித்தால் ‘அற கொட்டியாலா மேக்கத் தமாய் கியனவா’ எனக் கூறிக் கடந்துவிடலாம். ஆனால், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முடிந்த கையோடு இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்க் கட்சியினர் விமர்சிக்க முன்னர் அதிகம் விமர்சித்த பிரமுகர்கள் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியினரே. பொது ஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த வரவு செலவுத்திட்டமானது பொது ஜன பெரமுன கொள்கைக்கு ஏற்புடையதல்ல என்றார். இது தொடர்பாக நாம் ஆலோசிப்போம் என்றார். அப்படியானால் இந்த வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சியினுடைய வரவு செலவுத்திட்டமா இல்லை, ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டமா?
ஆட்சியாளர்களுக்குள்ளேயே இத்தனை குழறுபடியெனில் எதிர்க்கட்சிகள் எப்படி ஆதரிக்கும் என நிதி அமைச்சரும் ஆளும் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்?
எமது நிதி அமைச்சரே ஜனாதிபதியாகவும் உள்ளார். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் குறுகிய காலத்தில் கூடிய தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரது அறிவு, ஞானம், புத்தி கூர்மை, தர்க்க வாதத்திறன், சர்வதேச அறிவு, சட்ட அறிவு பற்றி நான் நன்கு அறிந்தவன். அதை ஏற்றுக் கொள்பவன். ஆனால் அவர் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை மட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
எமது ஜனாதிபதி அவர்கள் இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்க முன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். அன்று வரிசை யுகம் இருந்தது. மின்சாரமில்லை. இருண்ட யுகத்துக்குள் நாடு இருந்தது. போதிய மருந்தில்லை. சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்திருந்தது என்று இது போல பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும்.
இன்று நம் நாட்டின் யதார்த்த நிலை ஆளும் கட்சியினரே ஆட்சி மீது அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, தமிழத் தேசியக் கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, அரச உத்தியோகத்தர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆட்சி மீது அதிருப்தி, புத்திஜீவிகள் ஆட்சி மீத அதிருப்தி, பொது மக்கள் ஆட்சி மீது அதிருப்தி, எங்கெங்கு நோக்கினும் அரச கட்டமைப்பில் ஊழல் இதனால் அனைவரும் அதிருப்தி. இப்படி நாட்டில் எட்டுத் திசையும் ஆட்சி மீது அதிருப்தி எனில் எம் நாடு எப்படி வளம் பெறும்.
இப்படியொரு நாட்டில் ஆட்சி மீது சகல பிரிவினரும் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று உரையாற்றும் போது அன்று நான் பாடசாலையில் ஐரோப்பிய வரலாறு கற்ற அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அதுவும் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட முக்கிய ஆண்டான 1789ஆம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் மாபெரும் பிரஞ்சியப் புரட்சி. அன்றைய பிரஞ்சியப் புரட்சியை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் பிரான்சில் அத்தகைய புரட்சி ஏற்படுவதற்குக் காரணம் அந்த நாட்டின் அனைத்துப் பிரிவினரும் அதிருப்தியில் இருந்தார்கள். அதுதான் புரட்சிக்கான கருவினை விதைத்தது. குறிப்பாக பிரபுக்கள், மேன் மக்கள், மத்திய தர வர்க்கத்தினர், உழைப்பாளர்கள், புத்திஜீவிகள் என்று இவர்கள் மத்தியில் தோன்றிய அதிருப்தியே பிரஞ்சியப் புரட்சிக்கு வழி கோலியது. பிரான்சில் ஏற்றத்தாழ்வு மறைந்து சமத்துவம், சகோதரத்துவம் மிளிர வழி சமைத்தது.
அந்தப் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தையே மாவீரன் நெப்போலியன். பிரான்ஸ்சின் “அரகலய“விலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பது என் அவா. உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை, வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள். நாட்டில் எங்கும் எதிலும் புரையோடிப் போயுள்ள ஊழல்களைக் களைய உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
நமது நிதியமைச்சர் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பிக்கும் போது கௌதம புத்தரின் ‘சம்ஜீவி கதா,” அதாவது கௌதம புத்தர் அவர்களின் சமநிலை வாழ்க்கைச் சூத்திரத்தை எடுத்துரைத்தார். இடையிடையே மக்களின் வாழ்வு இன்பம், துன்பம், இயலுமை, இயலாமை, வறுமை, செல்வம், தொடர்பான பல கௌதம புத்தரின் சூத்திரங்களையும் எடுத்துரைத்தார்.
பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையின் பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்கள், எடுகோளாக மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது. அச் சூத்திரங்களின் கருவும் உருவும் கௌதம புத்தரின் ஜீவ அணுவும் இந்து மதத்திலிருந்தே உருவானது. இந்து மதத்தின் கருத்தியலிலிருந்து பெறப்பட்டது வரவு செலவுத்திட்டத்துக்காக கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்களை நாடும் நம் ஜனாதிபதி அவர் மூப்பு, பிணி, சாக்காடு கண்டு மக்களின் துன்ப நிவர்த்திக்காக குரல் கொடுத்து, மானிடத்தைப் பேணி, உலக வாழ் உயிர்கள் மீது அவர் கொண்ட கருணையினை தன் பாராளுமன்ற உரையில் என்றாவது வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீது இன்னும் என் மதிப்பு அதிகரித்திருக்கும்.
இந்த வரவு செலவுத்திட்டம் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் தொடர்ச்சி. கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பு என்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக எமது நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் உரையாற்றும் போது ஆங்கில இலக்கிய வித்தகர் சேக்ஷ்பியர் நூலின் மறுபதிப்பு சிங்கள இலக்கிய வித்தகர் மாட்டின் விக்கிரம சிங்கவின் நூலின் மறுபதிப்பு, எவ்வளவு முக்கியம், எவ்வளவு சிறப்பு அது போலத்தான் இந்த வரவு செலவுத்திட்டமும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பென்றால் அத்தகைய நூலாசிரியர்களின் நூல்களின் மறுபதிப்புக்குள்ள பெருமை போல இந்த வரவு செலவுத்திட்ட மறுபதிப்புக்கும் பெருமைதானே என்றுரைத்தார்.
நீதியமைச்சர் அவர்களே வில்லியம் சேக்ஷ்பியர் உலகளாவிய மதிப்புறு படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்க நம் நாட்டின் மதிப்புறு படைப்பாளி அவர்களது படைப்பொன்றும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்பானதல்ல.
அவற்றின் மறுபதிப்பு மாண்புறுவது, சிறப்புறுவது. ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பென்பது அந்நாட்டின் நிதி முகாமைத்துவத்தின் நிருவாக கட்டமைப்பின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் ஆட்சியாளர்களின் சீரழிவைக் குறித்து நிற்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைவை தேக்கத்துக்குட்படுத்துவது. நீங்கள் கடந்த கால வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பாக இந்த வருட வரவு செலவுத்திட்டத்தினை நோக்குவதன் மூலம் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு எங்கள் தமிழ் மொழியில் கூறுவார்கள் “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர்.
எனக்கு பழைய சிங்கள யாதகக் கதையொன்று இந்த வரவு செலவுத் திட்ட உரையை முடித்து வைக்கும் போது ஞாபகம் வருகிறது.
“ஒரு கொடுங்கோல் மன்னன் ஒரு நாட்டை ஆட்சி புரிந்தானாம். இன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல அவன் சொல்வதே வேதவாக்காகும். ஒரு நாள் அவனுக்கோர் விசித்திரமான ஆசை வந்ததாம் உலகில் எவரும் அணியாத ஆடையொன்றை தான் அணிந்து அரச அவையையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வேண்டுமென்று, இதை மன்னன் அரசவையில் அறிவிக்க அரசவையும் உடனே முரசறைந்து இதுவரை எந்த அரசர்களும் அணியாத ஆடையை நம் மன்னர் அணிய வேண்டும். இதனை ஆடை தயாரிப்பவர்கள் தயாரிக்க வேண்டுமென்று அறிவித்தார்களாம்.
எவருக்குமே இதைத் தயாரிக்க முடியவில்லை. ஆனால், அந் நாட்டிலிருந்த என் போன்ற எதிர்க்கட்சி புத்தி ஜீவி ஆடை தயாரிப்பாளன் அன்று, இல்லாத ஆடையொன்றை எடுத்துச் செல்வது போல் பாவனை செய்து அரண்மனை சென்று அந்த ஆடையை அணிவிப்பது போல் அபிநயம் செய்து, மன்னரே இந்த ஆடை உங்களுக்கு எவ்வளவு அலங்காரமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு மன்னனும் இவ்வாறான ஆடை அணிந்ததில்லை என்று கூற அரசனும் அக மகிழ்வு கொண்டு, தன் அமைச்சர் குழாமிடம் எப்படி இந்த ஆடையென்று கேட்டானாம். அதற்கோ அமைச்சர்கள் ஐயோ அபாரம், அற்புதம் இத்தகைய ஆடையொன்றை நாம் கண்டதில்லை என்று புகழ்ந்தார்களாம். அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்த மன்னன் மக்களுக்கு தன் ஆடையின் மதிப்பைக் காட்ட நகர் வலம் வந்தானாம். மன்னனைப் பற்றியறிந்த மக்களோ அணியாத நிர்வாண ஆடையினை புகழ்ந்து மகிழ்ந்தார்களாம். அப்போது ஓடிவந்த சிறுவன் ஒருவன் ஐயோ! அரசே அம்மணமாக வருகின்றீர்களே! உங்களுக்கு ஆடையில்லையா? என்று தன்னுடையைக் கொடுத்தானாம். அப்போதுதான் மன்னன் தன் அம்மணம் உணர்ந்தானாம். இதுதான் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான என்பார்வை.
சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்பவர்கள் பதவி அனுபவிப்போர், பதவிக்காய் காத்திருப்போர், உங்கள் அம்மணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இளைஞர் கழக அங்கத்தவராக இருந்து உங்களுடன் பழகியவன், அறிந்தவன் என்ற வகையில் அந்த அரசனின் அம்மணத்தைச் சுட்டிக்காட்டிய சிறுவனாக உங்கள் வரவு செலவுத்திட்டத்தின் அம்மணத்தை விமர்சிக்கின்றேன். இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. நம் நாடு தொடர்பானது.
இப்போது எனக்கு பிரபலமான சினிமாப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. காதலியை நோக்கி காதலன் பாடுகின்றான். உன்னைவிட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கையணைக்க என்று.
எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் நான் பாடுகின்றேன் உங்களை நோக்கி, உம்மைவிட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதற்கென்று. மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னுரையை முடிக்கின்றேன் என்றார்.