மூன்று மாதங்களில் நாட்டின் கடன் 685. 6 கோடி டொலர்களால் உயர்வு

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685. 3 கோடி டொலர்களால் அதிகரித்துள்ளது என்று திறைசேரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த பொதுக்கடன் 8 ஆயிரத்து 470. 3 கோடி டொலர்களில் இருந்து 9 ஆயிரத்து 156. 1 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

கருவூல உண்டியல்கள், கருவூல பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் கடன் கணக்கு, ஓய்வூதிய பணிக்கொடை போன்ற பல வடிவங்களில் அரசாங்கம் மேலும் கடன் வாங்கியதால் உள்நாட்டுக் கடன் கடந்த ஆண்டு டிசெம்பரில் 4 ஆயிரத்து 12 கோடி டொலர்களில் இருந்து மார்ச் மாதத்துக்குள் 4ஆயிரத்து 689 கோடி டொலர்களாக உயர்ந்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 3 ஆயிரத்து 609 கோடி டொலர்களாக இருந்தது. முக்கிய கடனாளிகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் ஆயிரம் கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் நாடுகளிடம் 454 கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளிடம் 678 கோடி டொலர்கள் மற்றும் வணிகக் கடன்கள் ஆயிரத்து 470 கோடி டொலர் கடன் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களில் 70 வீதம் நிலையான வட்டி வீதத்தையும் 29 வீதம் தளம்பல் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனா செல்லும் முன் அழைத்தது இந்தியா; ஜூலை 21ஆம் திகதி ரணில் – மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார்.

இலங்கையின் தலைவராக யார் தெரிவானாலும் அவர் இந்தியாவுக்கு முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வது சம்பிரதாயமாகும். இது வழக்கமானதாக இருந்தாலும் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா அழைக்கவில்லை. இதனால், அவர் தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. பல தடவைகள் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது சாத்தியமாகவில்லை.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார் என்று தெரிய வருகிறது. இதேபோன்று அமைச்சர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். சீனாவின் பெல்ட் அன்ட் றோட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ளார். இந்த மாநாடு ஒக்ரோபரில் நடக்கிறது. இதில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திகதிகளை இந்தியா வழங்கியுள்ளதாக அறிய வருகின்றது.

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை தலைவர் சுபாஸ்கரனால் நிதியுதவி

இலங்கை அரசாங்கத்தால் 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன்) லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாககளை கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலம் சிறைகளில் தம் வாழ்வைத் தொலைத்த இவர்கள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதை உணர்ந்த லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய தேர்தலை நடாத்த முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

தேசிய எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே, அதன் அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இடமளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய அரசாங்கம் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வினவியபோது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பில் பல தரப்பினராலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின், அது சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே, அரசாங்கத்துக்கோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யவோ, வேட்பாளர்களிடம் கட்டுப்பணத்தை மீள செலுத்தவோ முடியாது.

சட்ட ரீதியில் அது இலகுவான விடயமல்ல. காரணம், புதிய எல்லை நிர்ணயத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. அவ்வாறிருக்கையில், இது குறித்த சட்ட மூலத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

மாறாக, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் கூட இதனை செய்ய முடியாது. எனவே, வார்த்தைகளால் கூறுவதைப் போன்று அது இலகுவான விடயமல்ல. தேர்தல் ஆணைக்குழுவும் உண்மைகளை பகிரங்கமாக கூற முடியாத நிலையில் உள்ளது என்றார்.

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.

டியாகோகார்சீயாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை குடியேற்றவாசிகள் தற்கொலை முயற்சி

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார் மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.

அதிகளவிலான மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையொன்று பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

இலங்கை பல்கலைக்கழகங்கள் அன்று ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் காணப்பட்டன. அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-/ 30,000 பேரை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக கட்டமைப்பொன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபம் ஈட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழக கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழக கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகுக்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்கள் தொழில் சந்தையை இலக்கு வைத்து செயற்படுவதால் பெருமளவிலான மாணவர்கள் அதன் பக்கம் திரும்பியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பில் ஏனையவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம், நமக்கு ஏற்ற தீர்வுகளை காண வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டின் முதல் வதிவிடப் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நவீன பல்கலைக்கழகங்களில் அத்தகைய அமைப்பு காணப்படவில்லை. நாம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றையும் அமைத்துள்ளோம் என்றார்

வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யாவிடில் தொழிற்சங்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். நாளை திங்கட்கிழமை கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில்,

நாட்டில் பாரியளவு வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மனித வலுவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்களுக்கான நியமனத்தை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான தகுதிகளை நிறைவு செய்துள்ள 400 பேர் தமக்கான நியமனத்துக்கான காலம் கடந்தும் அவற்றை பெறாமல் உள்ளனர். சிரேஷ்ட வைத்தியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரேனும் புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கமும், இலங்கை மருத்துவ சபையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைமை மே மாத இறுதியில் ஏற்படும் என்பதை நாம் இதற்கு முன்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

2014 மற்றும் 2015இல் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்து, வைத்திய பட்டப்படிப்பையும் நிறைவு செய்து காத்திருக்கின்ற மாணவர்களுக்கான நியமனங்களே தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சுமார் 8 ஆண்டுகளாக மனத வளங்கள் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள, ஆனால், மேற்கூறப்பட்டவர்களை விட தகுதி குறைவானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே அடுத்த வாரத்துக்குள் சுகாதார அமைச்சு இதற்கான தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை அவசர மத்திய குழு கூட்டம் கூடவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை நாளை அறிவிப்போம். தீர்க்கமான முடிவொன்றையே நாம் எடுப்போம் என்பதை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது – பந்துல

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது. புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த வேண்டாம் என்றால் சேவையை நிச்சயம் அதிகார சபையாக மாற்றிமைக்க வேண்டும். திணைக்களம் என்ற நிர்வாக கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு  முன்னேற்றமடைய முடியாது என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து சேவைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்த மானியம் போதாது. புகையிரத திணைக்களத்தின் வருமானம், செலவு முகாமைத்துவத்தில் நிலவும் பலவீனத்தன்மை திணைக்களம் நட்டமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது. சிறந்த நிர்வாக கட்டமைப்பு இல்லாமல் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது.

பொது போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை ஊடாக தீர்வு காண தயாராகவுள்ளேன். குறுகிய அரசியல் நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களின் பங்குதாரர்களாக புகையிரத தொழிற்சங்கங்கள் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

புகையிரத சேவையை திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் வைத்துக்கொண்டு ஒருபோதும் மேம்படுத்த முடியாது. திணைக்களம் எனும்போது வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. துறைமுக அதிகார சபை, டெலிகொம் நிறுவனம் ஆகியன அபிவிருத்தி அடைவதை போல் புகையிரத திணைக்களம் அபிவிருத்தியடைய வேண்டும்.

புகையிரத சேவையாளர்களின் தொழில் மற்றும் ஓய்வூதிய உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்றால் நிச்சயம் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு முன்னேற முடியாது என்றார்.

வட,கிழக்கு மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவ அதிகாரி தலைமையில் விசேட அலுவலகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை  ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான  பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பாதுபாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தில் பிரிபேடியர் நிலை அதிகாரி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த காணி விடுவிப்பு அலுவலகமானது 6 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரியமான நில உரிமையை கொண்டுள்ள மக்களுக்கு அநீதிகள் ஏற்படாத வகையிலும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் குறித்த அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டில் 23,850.72 ஏக்கர் மக்களின் காணிகள் பாதுகாப்புப் படைகள் வசம் காணப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு ஆகுகையில் இந்த எண்ணிக்கையில் 20,755.52 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 ஏக்கர் மக்கள் காணி கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. அத்துடன், 2989.80 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

சிறுபான்மையினரை மெளனமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை

இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள்  துன்புறுத்தல்கள் குறித்தும்  இனமத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான  நடவடிக்கைகள் குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்