இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் வந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்து, கடல்வளங்களை நாசப்படுத்திய 16 பேரே கைதாகினர்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினங்களை சேர்ந்த மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

ஜி 20 நாடுகள் இலங்கைக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்புச் சபை

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இருப்பினும் இதன்போது கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அக்கூட்டத்தின் இறுதி அறிக்கையில் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வறிக்கையானது உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதுடன்,  இலங்கையின் கடன் நிலைவரம் தொடர்பில் உடனடித்தீர்வொன்றைக் கண்டறிவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டிருப்பினும், அதனை முன்னிறுத்தி செயற்திறன்மிக்க திட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை.

ஜி-20 அமைப்பானது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம்வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

எனவே இவ்வமைப்பானது செயற்திறன்மிக்கவகையில் ஒருங்கிணையுமேயானால், அதனூடாக இலங்கைக்கு அவசியமான கடன்சலுகையை வழங்கவும், நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும்.

ஏனெனில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நாட்டுமக்கள்மீது இன்னமும் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. உயர்வான பணவீக்கம், மட்டுப்படுத்தப்பட்டளவிலான சமூகப்பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் என்பன மக்களின் வாழ்க்கைத்தரத்திலும், அவர்களின் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் கடன்நெருக்கடியானது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இயலுமையைப் பாதித்துள்ளது.

எனவே 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்படும் தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகவும், பொறுப்புக் கூறத்தக்கவையாகவும் அமைவதென்பது இவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் உருவாவதைத் தவிர்ப்பதற்கு இன்றியமையாததாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை இருபதாம் திகதிக்கு முன்னர் வழங்க முடியாது – அரச அச்சகம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இதுவரை தம்மால் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 40 மில்லியன் மட்டுமே திறைசேரியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிக்காமைக்கு மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

இருப்பினும் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதேநேரம் இராணுவத்தின் பிடியில் இருந்த 92 வீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடு குறித்தும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு பணம் கொடுக்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கு தம்முடைய அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு தனது அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு முன்னதாக அறிவித்திருந்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் பாகிஸ்தான் வழங்குவதன் நோக்கம் என்ன? செல்வம் எம்.பி சபையில் கேள்வி

 

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில்களை வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும் அரசாங்கமும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது. தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறியால் நாட்டு மக்களும் வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்குமா, அல்லது பிற்போடப்படுமா என்பதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகிறது. 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் நிறுவப்படும் என அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகிறது. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது முழுமையான தீர்வாக அமையாது. அதிகார பகிர்வு என்பது அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓர் ஆரம்பப் புள்ளியாக கருதப்படும். மத்திய அரசாங்கத்திடம் உள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நிறுவன மட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்கின்றன. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் ஒன்றிணையாமல் முன்னெடுத்துள்ளதன் நோக்கம் என்ன? நாட்டில் மூவின மக்கள் வாழ் கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்குவது தவறான நிலையை தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – என்றும் கூறினார்.

யுத்தகாலத்தில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுததாக்குதல்களையும் ஜேவிபி கண்டிக்க வேண்டும்

தற்போது போராட்டங்களின் மீது இரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஜேவிபி குற்றம் சாட்டுகிறது. இதேபோல, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையிலே தற்பொழுது பாரிய அளிவிலான ஜனநாயக புாராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. முக்கியமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடார்த்தும்படியும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு மற்றும் சம்பள நெருக்கடி உள்ளிட்டவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக ஜனநாய போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக கண்ணீர் புகை பாவிப்பது நீர்த்தாகை பாவிப்பது உட்பட பல அடக்குமுறை தற்சமயம் நடந்துகொண்டிருக்கின்றன.

குறித்த கண்ணீர்புகையானது காலாவதியான கண்ணீர்ப்புகை எனவும், இரசாயனம் கலக்கப்பட்ட கண்ணீர் புகை எனவும் குறிப்பிட்டதுடன், அதனால்தான் தங்களுடைய கட்சியினுடைய ஒரு உறுப்பினர் இறந்திருக்கின்றார் எனவும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியரும் இறந்திருக்கிறார் எனவும் அண்மையில் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்த காலாவதியான கண்ணீர் புகை அல்லது ரசாயனம் கந்த கண்ணீர்ப்புகையானது பொதுமக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இதை விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டிருக்கின்றார்.

சாதாரணமாக ஜனநாயக ரீதியில் நடக்கின்ற இந்த போராட்டத்திற்கு இப்படியான கண்ணீர்ப்புகையானது பொது மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இரசாயனம் கலந்த புகைக்குண்டுகளை பாவிக்கின்றார்கள். என்று சொன்னால், இதுவரை காலமும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்திலே அப்பாவி பொதுமக்களிற்கு மேலே இந்த அரசாங்கத்தால் பாவிக்கப்பட்ட இரசாயன குண்டுகளை அதிலும் குறிப்பாக ஒரு யுத்தத்திலே பாவிக்க முடியாத சகல இரசாயன ஆயுதங்களையும் குண்டுகளையும் பாவித்து பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறப்பதற்கு மிக முக்கியமான காணமாக இருந்திருக்கின்றது.

ஆகவே, தற்சமயம் இந்த ஜனநாயக போராட்டங்களிற்கு பாவிக்கின்ற இந்த கண்ணீர்ப்புகை உயிர் ஆபத்தினை ஏற்படுத்திகின்றது என்று கண்டிக்கின்ற ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூறும் விடயம் தொடர்பில் நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேமாதிரி இந்த யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இரசாயன குண்டுகள், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளிற்கும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பிலும் சரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இந்த அறகள போராட்டத்தின் மூலமாகதான் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அந்த போராட்டக்காரர்களிற்கு சகலவிதமான பாதுகாப்புக்களை பெற்றுத்தருவதாக சொன்ன ரணில் விக்ரமசிங்க இன்று ஜனநாயக ரீதியான போராட்டத்தை வன்முறைகொ்டு தடுக்க முற்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவற்றுக்கப்பால், பாராளுமன்ற உறுப்பினர்களிற்குள்ள சிறப்புரிமையை பாவித்து இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள், உள்ளுராட்சி மன்ற தேர்தலை வைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களிற்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும்கூட அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க அடக்குகின்றார்.

அவர்களை வாயை பொத்தவேண்டும் எனவும், அமரவேண்டும் என்றும் சொல்லி இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவரும் ராஜதந்திரியும் என்று சொல்லக்கூடிய ரணில்விக்ரமசிங்கவின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களுமடைய தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படாத வரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட முடியாது. அப்படி காணுவதாக இருந்தால் அது தற்காலிகமான தீர்வாகதான் இருக்கும்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களிற்கு, நிரந்தரமான பொருளாதார திட்டம் இல்லை. பொருளாதார கொள்கை இல்லை. வெளிவிவகார கொள்கைகூட இவர்களிற்கு இல்லை. இன்று சீனாவிற்கு ஒரு முகத்தையு்ம, இந்தியாவிற்கு ஒரு முகத்தையும், அமெரிக்காவிற்கு ஒரு முகத்தையும்தான் இவர்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஒருவருட காலத்தில் இந்திய அரசாங்கம் செய்த உதவித்திட்டங்கள் இல்லையென்றால், இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் பட்டினி சாவை சந்திக்கக்கூடிய ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இந்திய அரசாங்கத்திடம் பெருந்தொகையான உதவிகளை பெற்றுக்கொண்டு, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக சீனாசார்பு நிலைப்பாட்டைதான் கொண்டுள்ளார்கள். ராஜபக்சாக்களானாலும், ரணில் விக்ரமசிங்கவானாலும் குறைந்த பட்சம் இந்திய உதவியை பெற்றிருக்கின்றவர்கள் அவர்களிற்கு விசுவாசம் இல்லாதவர்களாகதான் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்தியாவானாலும், ஏனைய நாடுகளானாலும் இலங்கைக்கு நிதி உதவி செய்கின்றவர்கள், நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கின்ற தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த அரசாங்கத்திற்கு உதவித்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான கொரவமான தீர்வு காணப்படாதவரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

முதுகு தெரிவதால் ஆட்களை உறுதிப்படுத்துவது சிரமமாம்: இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

மார்ச் 7 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களை வைத்திருந்தார்களா என்பதை அறிய இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகள் மற்றும் மரக் கொட்டன்களுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, இராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க பொலிஸ் கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை முன் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் கணியில் ஈடுபடவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் முதுகைக் காட்டும் புகைப்படமே இருப்பதால், அன்றைய தினம் கடமையில் இருந்த அராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களுடன் இருந்தார்களா என்பதை சரிபார்க்க முடியாது என்றார்.

புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய சம்பவத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபா மண்டபத்தினுள் வராமல், பார்வையாளர் பகுதியில் அமரந்திருந்தனர். ஈ. பி. டி. பி உறுப்பினர்கள் சபா மண்டபத்துக்கு வெளியே உறுப்பினர் அறையில் அமர்ந்திருந்தனர்.

உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தபடி மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.

புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ. சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும், ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 19 பேர் கலந்து கொண்டனர்.