மத்திய வங்கியில் ஏனையோரின் தலையீடுகளை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.

அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.

ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களை பார்வையிட 800 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வர தீர்மானம் – ஹரின்

பழங்கால புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக 78 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த பயணிகள் ஏனைய பிரசித்தி பெற்ற இந்து மதத் தலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

அத்தகைய 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு குழுக்களாக வருகை தரவுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கத்தால் சம்பூரில் குளம் புனரமைப்பு

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ” சமூக அடிப்படையிலான சிறு குள புனரமைப்பு” திட்டத்தின்கீழ் சம்பூர் பகுதியில் உள்ள பெரியகுளம் எனும் குளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இக்குளத்தை “பீஸ் விண்ட்ஸ்” நிறுவனம் முன்னின்று சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.

இக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதன் மூலம் சம்பூர் பகுதியைச் விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பூர் கமநலசேவை நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் பிரதேச செயலக உயரதிகாரிகள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய றோ அமைப்பின் தலைவர் ரணில் இடையே சந்திப்பு!

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்தார்.

அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாதவறாக இருக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 மாதங்களில் ஆயிரத்து 703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்றைய தினம் (நவ 23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர சபையின் தலைவர் என்.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 6 கட்சிகளை உள்ளடக்கிய 16 உறுப்பினர்கள் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதர வை ஏகமனதாக முன் மொழிந்து நிறைவேற்றினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆகிய கட்சிகளை சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமர்வுக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்தனர்.

எதிர்வரும் ஆண்டிற்கான 223 மில்லியன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 890 ரூபா மன்னார் நகர சபையின் வருடாந்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு நகர சபைக்கு உட்பட்ட வட்டார ரீதியாகவும் வட்டார உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு வட்டார சங்கங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான அமைப்புக்களுடன் கலந்து ஆலோசனையின் பேரில் குறித்த வரவு செலவு திட்டம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் இன்று(23) காலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

உலக உணவுத்திட்டத்தின் சகோதர நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) சுகாதாரம் மற்றும் நலன் பேணல் சேவைகளுக்கான மேலதிக பண உதவியாக ஐயாயிரம் ரூபாவினை வழங்கும் திட்டத்தினை முல்லைத்தீவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சுகாதார வைத்திய சேவைகள் அதற்கான போக்குவரத்து மற்றும் போசாக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும்.

இதேவேளை உலக உணவுத் திட்டம்(WFP) உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வருகிறது.

தாய்வழி சுகாதாரம் மற்றும் விரிவான பாலியல் கல்வி மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நிலைமையின் விளைவாகWFP, UNFPA உடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு உதவுவதுடன், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய தேவைகளை பண மானியம் மூலம் பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு சமீபத்திய ஆய்வுகளின்படி, பொருளாதார நெருக்கடியால் பெண்கள் விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படைப் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்துள்ளதால், WFP மற்றும் UNFPA பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகளான நிசாடி மற்றும் சிகார் ஆகியோருடன் உலக உணவுத் திட்டத்தின் மாவ‌ட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி, மாவட்ட உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அனைவரும் அணிதிரண்டு இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தீர்வுப்பொது ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவரின் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

அந்த தீர்வுப்பில் பிராந்தியங்களின் ஒன்றிணைப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தற்போது வேறுமாதிரி குறிப்பிடப்படுகின்றது. அது பிரச்சினை அல்ல. ஆனால் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதுதான் முக்கியமானது. அதனால் ஜனாதிபதி அதிகார பரவலாக்கம் தொடர்பாக சபையில் கருத்துக்களை கேட்டார். அதற்கு இணக்கமா என கேட்டார். ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதனால் இந்த விடயத்தில் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் அதிகார பரவலாக்கல்தான் இங்கே முக்கிய விடயமாக அமையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலுமொரு ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைக்க இருப்பதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் தாக்குதல் காலப்பகுதியில் உதிர்த்த நாமல் குமார போன்ற இளைஞர்கள் தற்போது எங்கே என தெரியாது. அதேபோன்று திகன ககலவரத்துக்கு காரணமாக இருந்த அமித் வீரசிங்க, இவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

எனவே ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவில் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.