இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு மஹிந்த ராஜபக்ச தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – சபா குகதாஸ்

மகிந்த ராஜபக்ச ஜனாபதியாக இருந்தபோது நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12.06.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள்நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்ததாலேயே தொல்பொருள் திணைக்கள தலைவர் இராஜினாமா – விதுர விக்கிரமநாயக்க

பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வருவதோடு, காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஆதரங்களுடன் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விகாரைகளை அண்மித்த பகுதிகளில் தேவைக்கு அதிகமாக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் , அரச காணிகளையோ அல்லது தனியார் காணிகளையோ ஆக்கிரமிப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் வெளியான காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையிலேயே பேராசிரியர் அநுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொல்பொருளியல் தொடர்பில் வடக்கு , கிழக்கில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் காணப்படுகின்றமையால் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அவரது ஒப்பந்த காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மீண்டும் பேராசிரியராக தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார் என்றார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேர்தல் சட்டங்களில் திருத்தம்

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டின 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வலுவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான இடைநேர் விளைவான கருமங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி 23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் செவ்வாய்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக சுட்டிக்காட்டிய அவர், சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சப்ரகமுவ மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தும் அதேநேரம் அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ கடந்த 8ஆம் திகதி தனது பதவி விலகலை அறிவித்தார்.

கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு ஆளுனராக செந்தில் தொண்டமான் , வடக்கு ஆளுனராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடமேல் மாகாண ஆளுனராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் புதிய ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை பிரான்ஸ் மற்றும் லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.

மேலும், இலங்கைக்கு உதவி வழங்கும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுக்க உள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு ஆதரவைப் பெறுதல் என்பன ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். லண்டனில் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பிரான்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளின் ஆதரவை முழுமையாக பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் பிரான்சில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பொருளாதார மூலோபாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.

இதேவேளை, நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணிலுக்கும் பிரமர் மோடிக்கும் இடையிலான சந்திப்புகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் முன்னரும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி சந்திப்புகள் இடம்பெறவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது டெல்லி விஜயத்திற்கான உத்தியோகப்பூர்வ அழைப்பிதழை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி ரணில் டெல்லிக்கு செல்ல வில்லை.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது.

மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என ஏனைய சமூக பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒத்துவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தில் கலந்துக்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கான திகதிகள் குறித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லைஎன ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் 2021ம் ஆண்டு பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டு;;ம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜனபெரமுன இராஜாங்கஅமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மோர்னிங் கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்திடம் வினவியவேளை பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில்இல்லை என சாகரகாரியவசம்தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்துமாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுஜனபெரமுனவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிருக்கவேண்டும்,இராஜாங்கஅமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக இலங்கையின் தலைவர் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன். இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.

வெருகல் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

வெருகல் – ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது இடம்பெற்ற சேருவில படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 12 ஆம் திகதி ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.06.12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர்.

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

1.தங்கராஜா – கிராம சேவகர் (பூமரத்தடிச்சேனை) – ஈச்சிலம்பற்று முகாம்)

2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்

3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்

4.கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை

5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை

6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை

7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்

8.கனகசபை கனகசுந்தரம் – பூநகர்

9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்

10.மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்

11.கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்

12.வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்

13.முத்தையா காளிராசா – பூநகர்

14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்

15.வேலுப்பிள்ளை சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

16.சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

17.வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்

20.தாமோதரம் தர்மலிங்கம் – ஈச்சிலம்பற்று

21.புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை

அத்துடன் .வீரபத்திரன் சோமசுந்தரன், 2.வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள்

ஜனாதிபதி தேர்தலை விரைந்து நடாத்த நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜீ. எல். பீரீஸ்

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்த பிரேரணை ஒன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை பாரதூரமானது.

தேர்தல் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை,தேர்தல் குறித்து கவனம் செலுத்த கூடாது என்பதே ஜனாதிபதியின் உரையின் உள்நோக்கமாக காணப்பட்டது.

தேர்தலற்ற சமூகம் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படாது.இலங்கை ஜனநாயக நாடு என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் அவசியமில்லை என அரச தலைவர் குறிப்பிடுவதை அலட்சியப்படுத்த முடியாது.மக்களின் விருப்பத்துக்கு அரசாங்கம் செயற்படும் போது அங்கு சர்வாதிகாரமே தோற்றம் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை அலட்சியப்படுத்த முடியாது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு திரைமறையில் ஜனாதிபதி மேற்கொண்ட சகல முயற்சிகளும் அவரது வார்த்தை ஊடாக தற்போது வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசியல் நோக்கத்துக்காக பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்கு ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.அதற்கு சுதந்திர மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கும் என்றார்.

மேலும் ஒரு இலங்கை விளையாட்டு வீரர் சுவிஸில் தலைமறைவு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய, தலைமறைவாகியுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இலங்கை வீரர்கள், வீராங்கனைகள் தலைமறைவாவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.