வவுனியாவில் நடராஜர் சிலையை திருடிய இராணுவ வீரர் கைது

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து திருடப்பட்ட 50,000 ரூபாய் பெறுமதியான சிலையும் சந்தேகநபரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தம்-காஞ்சன விஜயசேகர

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்

இதன்படி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மஹிந்த பிரதமராவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது – மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைத்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிற நிலையில் அவரை பிரதமராக நியமிப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கூறியுள்ளார்.

ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள் என்றும் அதற்கான அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலமே மக்களின் ஆணை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும் கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் வயம்ப ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்த்க்கது.

ஜனாதிபதி – தமிழ் எம். பிக்கள் பேச்சில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற அதிகார பகிர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை எந்த விதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலைமையில் முடிவடைந்தது.

தமிழ் தரப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்ற அடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

இடையிலே நிறுத்தப்பட்டது திரும்பவும் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இன்று அந்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் தரப்பினாலே வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பக்கத்திலிருந்து அதற்கு உறுதியான நிலையான செயல்பாடுகள் தொடர்பில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படாத நிலைமையில் அது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை.

இருப்பினும், அதிகார பகிர்வு தொடர்பில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவின் இருக்கக்கூடிய பிரதிநிதிகளை தமிழ் தரப்பில் இருந்தும் அவர் கூறியிருந்தார். அந்த குழுவை அமைத்துக் கொண்டு இந்த அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக மேலும் கலந்துரையாடி தீர்க்கமான முற்றுமுழுதான அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற முடியும் அன்பு ஜனாதிபதியில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பனும் தமிழ் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைப்பது என்பது காலநீடிப்பாக இருக்கும் தவிர ஆரோக்கியமானதா இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது எனவே எந்த விதமான ஆக்கபூர்வமான முடிவுகள் இன்றி இந்த கூட்டம் என்று முடிவடைந்துள்ளது

ரெலோவின் வவுனியா அமைப்பாளர் கிறிஸ்ரி குகராஜா 24ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் வவுனியா மாவட்ட அமைப்பாளரும்,மத்தியகுழு உறுப்பினருமான அமரர்.கிறிஸ்ரி குகராஜா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச்செயலாளர் அமரர்.சிவதாசன் அவர்களினதும் 24வது ஆண்டு நினைவு அஞ்சலிகள் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னார்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

கடவுச்சீட்டுக்களுடன் பிரான்ஸில் தலைமறைவான இலங்கை முப்படை வீரர்கள்

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தங்களது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.

ஆர்மேனியருக்கு மதாக்; யூதர்களுக்கு மனா; தமிழர்க்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி – நவீனன்

ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுத்து இனப்படுகொலை செய்வது மாத்தரமின்றி – அந்த மக்களை பட்டினி போட்டு கொல்வதும் கொடுமையிலும் கொடுமையான இனப் படுகொலையகும்.

ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும், ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது.

இக்கோர இனப்படுகொலைகளை எதிர் கொண்ட மக்கள், எப்படி வாழ்வின் இறுதிக்கணங்களில் போராடியிருப்பார்கள் என்பதை எழுத்தில் வடிக்க முடியாது. கட்டாய பட்டினியால் மக்கள் எவ்வாறு போர்க்கால உணவை பெற்றார்கள் என்பதை அலசும் சிறிய ஆவணம் இது.

ஆர்மேனிய இனப்படுகொலையும் மதாக் Madagh உணவும்:

இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலையாக துருக்கியில் ஒட்டோமான் ஆட்சியில் ஆர்மேனியர்கள் மீது படுகொலை செய்யப்பட்டமை தான் வரலாற்றில் பதியப்பட்ட கோர நிகழ்வாகும்.

இந்த கொடூர சம்பவத்தை உலகமே இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆர்மேனிய இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கோரமான கொடூரங்களில் ஒன்றாகும். ஒரு நூற்றாண்டு கடந்தும் அட்டூழியங்களால் ஏற்பட்ட வடுக்கள் அழுத்தமாக பதியப்படுத்தப்பட்டுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையாகக் கருதப்படும் ஆர்மேனிய படுகொலையில் “மதாக்” (Madagh)என்ற ஒருவகை உணவு தான் அவர்களை உயிரோட்டமாக வைத்திருந்தது.

ஆர்மேனிய மக்கள் தங்களின் பண்பாட்டு உணவாகவும் இனப்படுகொலையின் அவலம் நிறைந்த உணவாகவும் ‘Madagh’யை தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் அதன் வலிகளை உணர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தி வருகின்றனர்.

ஆர்மேனிய இனஅழிப்பைப் பின்னோக்கிப் பார்க்கின்றபோது, 1915ஆம் ஆண்டில் மொத்தமாக 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாக நடந்தேறிய ஓர் வரலாற்று கொடூரமாகும்.

தற்போது ஆர்மேனிய இனப்படுகொலையை ஏப்ரல் 24 அன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்மேனியர்கள் இறந்த தங்கள் மூதாதையர்களின் இழப்பை நினைவு கூர்ந்து மதிக்கிறார்கள்.
ஒட்டோமான் படைகளால், திட்டமிட்ட வகையில், 15 லட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதாக ஆர்மீனிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யூதப் படுகொலை – ஹாலோகோஸ்ட் :

இரண்டாம் உலகப் போரில் 1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். நாஸி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், ஜேர்மனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் ஜேர்மனி ஆக்கிரமித்த ஐரோப்பா முழுவதும் பெரும் படுகொலைகளை நடத்துவதில் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது.

இப் பெரும் இன அழிப்பு இரண்டாம் உலகப் போரில் , 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் ஹாலோகோஸ்ட் (Holocaust) என்று குறிப்பிடுவர்.

ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின்
நாஸி இன அழிப்புக் கொள்கையின் படி பல அறிஞர்கள் பெருமளவில் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டனர்.

ஜேர்மன் அரசு இதனை “யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு” என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

யூதர்களின் பட்டினி தீர்த்த ‘மனா’ :

வரலாற்று ரீதியாக இஸ்ரேலியர்களின் எகிப்திய அடக்குமுறையின் கசப்பைக் குறிக்கும் அடையாள உணவான “மனா” (Manna) எனும் உணவை நாஸி வதைமுகாம்களில் உண்டதாகவும் சான்றுகள் உள்ளன.

மனா என்பது பைபிளின் படி, இஸ்ரேலிய யூதர்கள் நீண்ட இடப்பெயர்வில், பாலைவனத்தில் பயணம் செய்தபோது கடவுள் அவர்களுக்கு வழங்கிய ஒரு உண்ணக் கூடிய பொருள் என்றும் பொருள்படும்.

யூதர்களின் நீண்ட இடப்பெயர்வு (எக்ஸோடஸ் ) வரலாற்று புத்தகத்தில், மனா தரையில் வீழ்ந்த உறைபனி போன்ற நல்ல, செதில் போன்ற பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பனியுடன் வந்து சேருவதாகவும், இது சூரியனின் வெப்பத்தால் உருகுவதற்கு முன் சேகரிக்கப்பட வேண்டும் என்றும்,ஒரு கொத்தமல்லி விதை போன்று, வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் எக்ஸோடஸ் நூல் மேலும் கூறுகிறது.

முள்ளிவாய்க்காலும் இனவழிப்பும் :

2009 மே இறுதிப் போரின், இறுதிநாட்களில் மக்களுக்கு உணவு, மருத்துவ தேவைகளை முற்றுமுதலாக தடுத்து நிறுத்தப்பட்டப் போது களமுனைப் போராளிகளுக்காக சேமித்து வைத்திருந்த அரிசிகளைக் கொண்டு பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு
தண்ணிரும் அரிசியும் கொண்ட கஞ்சியை சமைத்துக் கொடுக்கப்பட்டது.

நந்திக்கடலின் இருபுறமும் பெருந்திரளாக நோக்கிவந்த மக்களை கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட துயரம் ஒருபுறமும் மிச்சமிருக்கும் உயிரைக் காக்க மறுபுறமும் இடையில் பட்டினியால் தகித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தேவாமிர்தமாக இறுதிநாட்களில் இருந்தது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு தமிழர்களின் குறியீட்டு உணவு. அதன் அடையாள வழி, எங்கள் மீது நிகழ்ந்தப்பட்ட கொடூர இனவழிப்பு நிகழ்வை, இனிவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டும்.

ஈழத்தில் “மே 18” என்கிற உணர்வு விசேட உணவாக இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை செய்யப்படுகிற அருமருந்தாக அது இருத்தல் வேண்டும். எல்லோரும் கூடுகிற இடங்கள் என்றில்லாமல், எங்கும்,எவரும், அந் நாளில் அதைச் செய்து உண்ண வேண்டும். அந்த நாளின் அடையாளமாக அது அன்றைய நாளின் வீட்டுணவாகவும் இருக்க வேண்டும்.

மே 18 – முள்ளிவாய்க்கால் கஞ்சி :

மிகக்குறைந்தளவிலான அரிசி, நெல், தண்ணீர் என்கிற இந்த மூன்று பொருட்களாலானதே முள்ளிவாய்க்கால் கஞ்சியாக போர்க்களத்தில் தயாரிக்கப்பட்டது.
முக்கியமாக உப்பு, பால் என்பவை அறவே அற்றவையானதாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி இருக்க வேண்டும். அப்படித் தான் அது அன்றைய நாளில் இருந்தது. சுவையற்ற நீருணவு அது. ஒரு லீற்றர் தண்ணீரில் அதிகமாக நூறு கிராம் அரிசியைக் கொண்டதாக அது இருந்திருக்கலாம். அப்படித் தான் அது தயாரிக்கப்பட்டது.

உணவு என்பதற்கு மேலாக, அந்த நாளின் பெறுமதியும், அதன் நோக்கமும் புரியும் வகையில் அதை நாம் தயாரித்துப் பரிமாற வேண்டும்.
இதன் மூலமே ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” என்கிற வரலாற்று அடையாளத்தை நாம் பேணலாம்.

சோழர்களின் கூழ்வார்க்கும் விழா:

இந்தியாவில் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட பட்டினிச் சாவுகள் எண்ணிலடங்காதவை. ஆங்கிலேயர்களும் உணவை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியதற்கும் சான்றுகள் பல உண்டு.

ஆங்கிலேய ஆட்சியின்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்டப் பெரும்பஞ்சத்திற்கு சோழமண்டல பகுதிகளில் பட்டினிச்சாவு தலைவிரித்தாடியது. அப்போது கம்பு-கேப்பை போன்ற தானியங்களை பயன்படுத்தி கூழாக மக்களுக்கு வழங்கப்பட்ட துயரத்தின் நீட்சியை பண்பாட்டு வழிநின்று ஆடிமாதங்களில் “கூழ்வார்க்கும் விழா” பல பகுதிகளில் நடந்துவருகிறது.

வரலாற்றில் மனித இனம் தோன்றியதிலிருந்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து, தனது தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்களை கவர்ந்து, அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதானது இன்று வரையில் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது.

காலனித்துவ வரலாற்றின் கொடுமைகள் இன்னமும் ஏதோ ஓர் வகையில் தொடர்கிறது. இவையெல்லாம் மானுட தர்மம் நீதியற்று போயுள்ளதையே வரலாற்றின் துயரமாக பார்க்கலாம்.

கஞ்சியும் எதிர்கால தலைமுறையும்:

வரலாற்றின் வழி நின்று, இனப்படுகொலை நினைவேந்தல் நாட்களில் தமிழ்ச்சமூகம் நிச்சயமாக “முள்ளிவாய்க்கால் கஞ்சியை” தங்கள் வீடுகளில் செய்து நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு துயரம்தோய்ந்த நாட்களை நினைவுப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அந்த வலியையும் உணர்ந்துக் கொள்வதற்கும் உணவு பண்பாடு மூலம் இனவழிப்பின் குறியீடாகவும் இதனை செய்யவேண்டும்.

தாயக மண்ணில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செயற்படுகின்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது.

போர்க்கால வாழ்வை மீள் நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும், உப்பும் கலந்தாக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை 18 மே அன்று வீடுகளில் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த நாட்களின் நினைவுகளை அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க வேண்டும்.

அரசின் திட்டமிட்ட உணவுத்தடை:

இறுதிப் போரில் சிங்கள அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர். பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள். குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள்.

அக் காலகட்டத்தில் போராளிகளிற்காக ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மக்களுக்கு வழங்கியது. அக்காலகட்டத்திலேயே கஞ்சி வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் சிறிய தொகை அரசியே இருந்தபடியால் அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு முள்ளிவாய்க்கால்க் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது.

அக்கஞ்சியைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல இடங்களில் செய்து மக்களின் பசியை ஆற்றினார்கள். யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இவ் யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப் பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும் உலகத்தமிழினம் நினைவு கூருவது சாலத் தகுந்தது.

முள்ளிவாய்கால் கஞ்சியின் உணவு அடையாளம் என்பது, தாயக மண்ணின் வலிகளையும் வரலாறு சந்ததி மறவா சரித்திரமாக வேண்டும்.
இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை நாம் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியும், முழு உலகமும் அறிய வேண்டும்.

– நவீனன்

பதினாலாவது மே பதினெட்டு – நிலாந்தன்

எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ,எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ,காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்களோ, அந்தப் போராட்டத்தின் பலன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எனவே நினைவுகூர்தல் எனப்படுவது தமிழ்மக்கள் போராடியதன் பலனை பெறுவதற்கான ஓர் அரசியல் செயற்பாடுதான். நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு பகுதிதான்.

நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், அதிக தொகை மக்கள் கொல்லப்பட்ட ஒரு காலகட்டத்தை நினைவு கூர்வதே முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் ஆகும். எனவே முழுத் தமிழ் வரலாற்றிலும் நவீன காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை என்ற அடிப்படையில் அந்த உணர்ச்சிப் புள்ளியில் முதலாவதாக, ஈழத்தமிழர்களை ஒரு தேசமாக திரட்டலாம்.இரண்டாவதாக,உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்களை இன அடிப்படையில் திரட்டலாம். அவ்வாறு திரட்டி அந்த கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் கோபத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான உந்துவிசையாக அது அமையும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி.

அதை அவ்வாறு வடிவமைக்க வேண்டும்.இப்பொழுது நடைமுறையில் உள்ள பொதுக் ஏற்பாட்டுக் குழுவானது ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பே தவிர அது மேற்சொன்ன அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு அல்ல.

கடந்த 14 ஆண்டுகளாக பொருத்தமான ஒரு பொறிமுறையை,பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை.காலம் ஆற்றாத துக்கம் என்று எதுவுமில்லை.கூட்டுத் துக்கத்தை உரிய பொறிமுறைக்கூடாக கூட்டு ஆக்கசக்தியாக மாற்றவில்லை என்றால் அது வெறும் துக்கமாகச் சுருங்கிவிடும்.எனவே ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்கசக்தியாக மாற்றி,அதை நீதிக்கான போராட்டத்தின் ஊக்க சக்தியாக மாற்ற வேண்டும்.அதற்கு வேண்டிய பொறி முறையும் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு யுத்த களத்தின் இறுதிக் கட்டத்தை நினைவு கூர்வதுதான். அந்த யுத்தகளத்தில் தமிழ் மக்களுக்கு தாமாக முன்வந்து தம் உயிர்களைக் கொடுத்தவர்கள்,உறுப்புகளை இழந்தவர்கள்,கல்வியை இன்னபிறவற்றை இழந்தவர்கள்,என்று ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு.போரில் நேரடியாக சம்பந்தப்படாமலேயே கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. அவர்களனைவர்க்கும் உதவி தேவை.நிவாரணம் தேவை.ஆறுதல் தேவை.ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அவ்வாறான உதவிகள் கிடைத்திருக்கின்றன?

புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உதவிகளை செய்கின்றது.ஆனால் அது ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்ட,ஒரு மையத்தில் இருந்து வழங்கப்படுகின்ற உதவி அல்ல.கடந்த 14 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.போரில் ஈடுபட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்,அல்லது அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இறுதிக்கட்டப் போரில் தமது குடும்பத்தின் உழைக்கும் நபரை அல்லது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவரை அல்லது வருமான வழியை இழந்த பல குடும்பங்கள் உண்டு.அக்குடும்பங்கள் யாவும் கடந்த 14 ஆண்டுகளில் தேறி எழுந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வேண்டும்.போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வீட்டில் அல்லது ஒரு தியாகியின் வீட்டில் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவரின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால்,முள்ளிவாய்க்காலில் ஏற்றப்படும் சுடர்களின் மகிமை குறைந்து விடும். எனவே போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஒரு பொருத்தமான பொறிமுறையும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும் தேவை.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் போதியளவு பணம் உண்டு.உதவுவதற்கு விருப்பமும் உண்டு.ஆனால் பொருத்தமான ஒரு பொறிமுறையை, பொருத்தமான ஒரு கட்டமைப்பை யார் உருவாக்குவது?கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான கட்டமைப்புகளை ஏன் உருவாக்க முடியவில்லை?

குறிப்பாக,முன்னாள் இயக்கத்தவர்களின் கதி என்னவென்று பார்க்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அல்லது நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் “செற்றில்ட்” ஆகிவிட்டார்கள்.ஆனால் இப்பொழுதும் செற்றில்ட் ஆகாத பல குடும்பங்கள் உண்டு.2009க்குப் பின் முன்னாள் இயக்கத்தவர்கள் மத்தியில் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.பிள்ளைகள் கைவிடப்பட்டுள்ளன.பெற்றோர் அனாதைகள் ஆகியிருக்கிறார்கள்.போரில் பட்ட காயத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்க்கு மருத்துவம் செய்யக் காசு இல்லாமல் தத்தளிக்கும் பலர் உண்டு.என்ன நோய் என்று தெரியாமலேயே இறந்து போன பலர் உண்டு. இவர்களுக்கெல்லாம் உதவ ஏதாவது கட்டமைப்பு இருக்கிறதா?இல்லையென்றால் யார் பொறுப்பு?

இலங்கைத் தீவிலேயே போரால் பாதிக்கப்பட்ட தரப்புக்களில் இப்பொழுதும் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு வகுப்பினராக(most vulnerable) காணப்படுவது முன்னாள் இயக்கத்தவர்கள்தான்.நாட்டின் சட்ட அமைப்பின்படி புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்பதனை கடந்த 14 ஆண்டு காலம் நிரூபித்திருக்கிறது.இந்நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள்.அது தொடர்பாக நமது சட்டத்தரணிகள் என்ன செய்திருக்கிறார்கள்?தனிப்பட்ட வழக்குகளில் தோன்றி குறிப்பிட்ட முன்னாள் இயக்கத்தவரை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் அதை ஒர் அரசியல் விவகாரமாக மாற்றி அதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை?

அது மட்டுமல்ல,முன்னாள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வின் பின் ஜனநாயக அரசியல் இறங்கினார்கள்.அவ்வாறு இறங்கியவர்கள் கூட்டமைப்ப,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதமிழ் மக்கள் தேசியக்கூட்டணி போன்றவற்றில் இணைந்து தேர்தல் கேட்டார்கள். துயரம் என்னவென்றால் ஒருவருமே தேர்தலில் பெறுமதியான வெற்றிகளைப் பெறவில்லை.துயிலுமில்லங்களில் தமிழ்மக்கள் விட்ட கண்ணீர் யாவும் எங்கே போய் சேருகின்றது? அதை யார் வாக்குகளாக மாற்றுகிறார்கள்?

“உன்னுடைய சமூகத்திற்காக நீ கல்வியைத் துறந்தாய், உறுப்புகளை இழந்தாய், உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்தாய், ஆனால் உனக்காக இந்தச் சனம் குறைந்தது உள்ளூராட்சி சபையில் ஒரு வட்டாரத்துக்கு தேவையான ஆயிரம் வாக்குகளைக் கூடத் தரவில்லையே? அப்படியென்றால் உன்னுடைய இறந்த காலத்துக்குப் பொருள் என்ன? ” என்று ஒரு முன்னாள் இயக்கத்தவரின் பிள்ளை கேட்டால், அதற்கு அந்த தகப்பன் அல்லது தாய் என்ன பதில் சொல்ல முடியும்? அதே கேள்விக்கு தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

முன்னாள் இயக்கத்தவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர்களை தடுப்பில் வைத்திருந்த தரப்பு அவர்களோடு உறவுகளைப் பேணும்.அது ஒரு யதார்த்தம்.அவ்வாறு பேணுவதன்மூலம் அரசாங்கம் இரண்டு விடயங்களைச் சாதிக்கலாம்,ஒன்று,அவர்களைக் கண்காணிக்கலாம்,இரண்டு,அவர்களோடு தொடர்ந்து தொடர்புகளைப் பேணினால்,அவர்களுடைய சொந்த மக்களே முன்னாள் இயக்கத்தவர்களை சந்தேகிப்பார்கள்.எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்துவார்கள்.எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடினார்களோ,அந்தச் சமூகமே அவர்களைப் புறமொதுக்கி,அவமதித்து விலகிச் செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம்.

கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகளே அவ்வாறு முன்னாள் இயக்கத்தவர்களைக் குற்றம்சாட்டி வருகின்றன.முன்னாள் இயக்கத்தவர்களில் ஒரு பகுதியினர் அவ்வாறு அரசு புலனாய்வுத் துறையோடு சேர்ந்து செயல்படக்கூடும்.ஆனால் அதற்காக எல்லாரும் அப்படியல்ல.கடந்த 14 ஆண்டுகளில் தேர்தலில் இறங்கிய முன்னாள் இயக்கத்தவர்களில் யாருமே பொருத்தமான வெற்றிகளை பெறாததற்கு என்ன காரணம் ?இந்த விடயத்தில் முன்னாள் இயக்கத்தவர்களின் கட்சியை அரச புலனாய்வுத் துறையின் ஆட்கள் என்று விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நின்று தேர்தல் கேட்டவர்களும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது அவர்கள் கொல்லப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதுதான்.அந்த யுத்த களத்தில் தமது சமூகத்துக்காகப் போராடியவர்களை அவர்களுடைய நோக்கு நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதும்தான். இது இரண்டாவது.

மூன்றாவது,இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது,அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்துவது.நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டம் மேலும் நீண்ட காலத்துக்கு இழுபடலாம் அதுமட்டுமல்ல கடந்த 14 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாகவும்,தலைமைத்துவ வெற்றிடம் காரணமாகவும்,புதிதாக எழுந்து வரும் ஒரு தலைமுறை பெருமளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவோ,அல்லது இலட்சிய நீக்கம் செய்யப்பட்டதாகவோ மாறிவருகின்றது.அந்தத் தலைமுறைக்கும், உலகெங்கிலும் புலம்பெயர்ந்து சிதறி வாழும் ஈழத்தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நினைவுகளைக் கடத்த வேண்டியிருக்கிறது. நினைவுகளின் தொடர்ச்சிக்குள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு நினைவு கூர்தல் அவசியம். இது மூன்றாவது.

நாலாவதாக,நினைவு கூர்தல் எனப்படுவது,ஒரு கூட்டுச் சிகிச்சை போன்றது. துக்கத்தை கொட்டித் தீர்க்கும் நாளும், இடமும் அது.வெளிவழிய விடப்படாத துக்கம் உள்ளுக்குள் கிடந்து குமைந்து அடங்காத கோபமாக மாறிவிடும். அல்லது நோயாக மாறிவிடும்.எனவே உளவியல் அர்த்தத்திலும் பண்பாட்டு அர்த்தத்திலும் துக்கத்தை வெளிவழிய விடவேண்டும்.அந்த அடிப்படையில் நினைவு கூர்தல் என்பது ஒரு குணமாக்கல் செய்முறை.ஒரு பண்பாட்டுச் செய்முறை.

மேற்கண்ட நான்கு முக்கிய காரணங்களையும் முன்வைத்து நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்த வேண்டும்.ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக நினைவு கூர்தல் அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றதா?அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தக் கேள்வியை மறுவளமாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்றுதான் கேட்க வேண்டும்.ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் எனப்படுவது கட்சி அரசியலாகத்தான் காணப்படுகின்றது. கொழும்பு அல்லது வெளித்தரப்புகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில்வினை ஆற்றும் அரசியலாக தறுக்கணித்துப் போய்விட்டது.அது தேசத்தை கட்டியெழுப்பும் ஓர் அரசியல் அல்ல.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், காணிப் பறிப்புக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும் தமிழ்மக்கள் போராடுகிறார்கள்தான்.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை,எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியது போல,பதில் வினையாற்றும்(reactive)நிகழ்வு மைய அரசியல்தான்(event oriented). அவை ஒரு தேசநிர்மாணத்துக்குரிய கட்டியெழுப்பும் (proactive) அரசியல் அல்ல.

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலில்தான் நினைவு கூர்தல், அதற்குரிய மகிமையோடும் அரசியல் அடர்த்தியோடும் அனுஷ்டிக்கப்படும்.அதற்குரிய பல்வகைமையோடு அனுஷ்டிக்கப்படும்.இல்லையென்றால் கட்சிகளாக பிரிந்திருக்கும் மக்கள் நினைவுகூர்தலை அதற்குரிய பெறுமதியுணர்ந்து அனுஷ்டிக்கப் போவதில்லை.மாறாக,அது ஒரு துக்க நிகழ்வாக,அல்லது செயலுக்குப் போகாத பிரகடனங்களை வாசிக்கும் ஒரு நிகழ்வாக,ஒரு சடங்காகச் சுருங்கிப் போய்விடும்.

இம்முறை,பல்கலைக்கழக மாணவர்கள் சமூகப்பங்களிப்போடு கஞ்சி காய்ச்சுவது ஒரு நல்ல முன்னுதாரணம்.அதேசமயம் கட்சிகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறாமல் விட்டால் அதுவும் ஒரு நல்ல முன்னுதாரணம்.முள்ளிவாய்க்காலில் தாமாகத் திரளக்கூடிய மக்களை,கட்சிகளும் பொதுக்கட்டமைப்புகளும் மாணவர்களும் பிரிக்காமல் விட்டாலே போதும். இறந்தவர்களின் ஆத்மா இந்த ஒரு விடயத்திலாவது சாந்தி அடையும். ஏனெனில் மனநல மருத்துவ நிபுணர் சிவதாஸ் கூறுவதுபோல “நினைவுகூர்தல் எனப்படுவது காயங்களைக் குணப்படுத்துவது,காயங்களைக் கிளறுவது அல்ல”.

நிலாந்தன்

ஜி.எஸ்.பி. பிளஸ்ஸுக்கு மீள விண்ணப்பிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் உத்தரவாதம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை (13) சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்றது.

ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அதன்படி, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.

அதேவேளை வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெலை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை முன்னிறுத்தி இதுவரையான காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதிலும், பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை அமைச்சர் அலி சப்ரி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இலங்கையின் வலுவான வர்த்தகப் பங்காளியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையினால் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.