உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி வேண்டி நிற்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கிறது-ஜூலி சுங்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கெளரவிப்பதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் செய்தியில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக அமைச்சர் – இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துள்ளார்.

புதுடில்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் 20.03.2023 இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கடந்த பெப்ரவரியில் அவர்கள் இருவரும் கலந்துரையாடிய விடயங்களின் மேம்பட்ட சந்திப்பாகவே இது அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பு வர்த்தகத்தின் விரிவாக்கம், இலங்கை இடையே ரூபா வர்த்தகத்தை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சியில் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் இதுவும் ஒரு தேசிய அரசாங்கம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த- இந்திய தூதுவர் கோபால் பாக்லே இடையே சந்திப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சந்திதி ஆலய சூழலில் தேவலயம் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் தவிசாளர் நிரோஷ் மறுப்பு

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டை தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபற்றி முழுமையான விபரம் வருமாறு, அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் பிரதேச சபையில் விண்ணப்பித்து வீட்டிற்கான கட்டிட அனுமதி ஒருவரினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக அனுமதி பெற்றவர் கட்டம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது, சந்நிதி ஆலய நலன்விரும்பிகள் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்கப்படுவதாக என்னிடம் முறையிட்டனர். அம் முறைப்பாடுகளில் ஒன்று தனது நெருங்கிய உறவினர் காணியில் மோசடியாக கட்டிடம் அமைக்கப்படுவதாகவும் அமைந்திருந்தது.

முறைப்பாடுகளின் பிரகாரம் எமது உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க சென்றபோது கட்டிடம் அமைப்பவர் முறைப்படி வீடு அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்தது. ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட அனுமதியை முறைப்பாட்டின் பிரகாரம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியபோது, விண்ணப்பதாரி காணியை முறைப்படி பெற்றுள்ளமைக்கான ஆவணங்கள் எமக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கும் மேலதிகமாக, வீடு என்ற போர்வையில் தேவாலயம் அமைகின்றதா என ஆராயுமுகமாக, விண்ணப்பதாரியை நான் நேரில் அழைத்து சபையில் விளக்கம் கேட்டபோது – தான் ஒரு இந்து மதத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தான் வாழ்வதற்காக பலரிடம் உதவி பெற்று தனக்கான வதிவிடம் ஒன்றை அமைப்பதாகவும் அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அனைத்து மதங்களின் உரிமைகளையும் மதிப்பவனாக கடமையாற்றும் நான் மேற்படி விண்ணப்பதாரியிடம், செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையான பகுதி ஆலய திருவிழா காலங்களில் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படும் முழுமையாக இந்துக்களைக் கொண்ட சமய சம்பிரதாயங்களுடனும் ஆலய நடவடிக்கைகளுடனும் தொடர்பான பகுதி என்பதன் அடிப்படையில் எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரமும் தாங்கள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்தால் அது சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதை தெரிவித்திருந்தேன். எனவே அவ்வாறாக எச் சந்தர்ப்பத்திலும் தாங்கள் செயற்பட முடியாது எனவும் அறிவுறுத்தியிருந்தேன். அதற்கு விண்ணப்பதாரி முழுமையாக தான் இணங்குவதாகவும் சட்டப்படி தான் குடியிருப்பதற்கான இல்லத்தினையே அமைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தேவாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனால் விண்ணப்பதாரி சபையின் அனுமதிக்கு முரணாக எதாவது கட்டிட வேலைகளைச் செய்கின்றாரா என்பது பற்றி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பல தடவைகள் எனது அறிவுறுத்தலின் பிரகாரம் சோதனையிட்டுள்ளனர் என்பதுடன் எனது பதவி முடிவுற்றதன் பின்னர் சபையின் செயலாளரிடம் அப் பொறுப்பினை கையளித்துள்ளேன்.

எல்லோருடைய மத சுதந்திரங்களையும் நான் மதிக்கும் அதேவேளை சமயம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்க்கின்றேன். ஆகவே சில வேளை எவராவது வீடு ஒன்றிற்கு சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளியைப் பயன்படுத்தி அனுமதி பெற்றுவிட்டு அதனை தேவாலயமாகவோ அல்லது வேறு எந்த நோக்கம் கருதியதாகவே பிரதேச சபைச்சட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறான நிலையில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க பொறுப்புடையது.

இந்த மேற்படி விண்ணப்பதாரி தேவாலயம் அமைக்கின்றார் என முறைப்பாடு கிடைக்கப்படுகின்றன என்பதை வைத்துக்கொண்டு, நாம் அவர் எதிர்காலத்தில் அக் கட்டிடத்தை தேவாலயமாகப் பயன்படுத்துவார் என்ற சந்தேகங்களின் அல்லது எதிர்வுகூறலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. தவறு இடம்பெற்றாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந் நிலையில் தவிசாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தவிசாளரினாலேயே அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட உண்மைக்குப் புறம்பான ஊடக தர்மத்திற்கும் அப்பாற்பட்ட முயற்சி என்பதையும் கேடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

உள்ளுராட்சி மன்றம் ஒன்று பிரஜை ஒருவர் வதிவிடத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியிலான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த நிலையில் அனுமதிக்க முடியாது என கட்டிட அனுமதியை மறுக்க முடியாது. அது சட்ட மீறலும் மனித உரிமை மீறலுமாகும். அதேவேளை வதிவிடத்திற்கான அனுமதியைப் பெற்றவர் அதனை துஸ்பிரயோகம் செய்து வேறு ஒரு தேவைக்கு கட்டிடத்தினைப் பயன்படுத்துவாராக இருப்பின் அது சட்டரீதியில் தடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் அமைப்பதாயின் மத அலுவல்கள் அமைச்சின் பரிந்துரை கட்டிட அனுமதிக்கு அவசியமாகும் எனவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்க உள்ளதான செய்தி பொய்யான செய்தி – மனோ கணேசன்

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (19.04.2023) மனோ கணேசன் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது திரித்துக் கூறப்படும் பொய்யான செய்தி. இச்செய்தி, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்ததாகும். அத்துடன், இச்செய்தி ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் வந்தது.

மற்றும், ஐக்கிய மக்கள் கூட்டணி சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு ஏற்றுமதிக்கும் தமக்கும் தொடர்பில்லை – சீன அரசாங்கம்

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்; வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால்மா விலையை மேலும் குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக முகநூலிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.