ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி; ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவர் என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்பு சுதந்திர தின பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு

எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள, சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்குவதோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திர தினத்திற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் (31) மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 75வது சுதந்திரதினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்படவுள்ளது. வருடா வருடம் இதனை அரசு கொண்டாடிக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தச் சுதந்திம் அடைந்த நாளில் இருந்து இன்று வரைக்கும் தமிழ மக்கள் அடக்கியொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே அடக்கியொடுக்கப்பட்டு வருகின்றதுடன், தமிழர்களின் நிலங்ககள், பிரதேசங்கள் கூட ஒடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இலங்கையின் முதலாது பிரதமர் டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தைத் தமிழ் மக்களின் மாகாணம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதற்காக 1949ம் ஆண்டே கல்லோயக் குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு ஆரம்பித்திருந்தார்.

அன்று தொடக்கம் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல இனக்கலவரங்களை உஐவாக்கி தமிழ் மக்களைக் கொன்றொழித்தது மாத்திரமல்லாமல் தமிழர்களின் சொத்துக்கள் கூட சூரையாடப்பட்டிருந்தது. 1983ம் ஆண்டு நடைபெற்ற பாரியதொரு இனக்கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறு கொண்டு எழ வைத்தது. அன்று தொடக்கம் தமிழர்களின் சுயாட்சிக்காக இந்த நாட்டில் சேர்ந்து வாழ முடியாது என்ற ரீதியில் தனிநாடு கோரி போராடியிருந்தார்கள். 2009 மே 18 அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆனாலும் இன்றவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போராடிக் கொண்டு வருகின்றது.

இந்த வேளையிலே எதிர்வரும் 4ம் திகதி 75வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்னர் இலங்கையில் புறையேடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தருவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தெரிவித்து சர்வகட்சி மாநாடுகளை நடத்தி தமிழ்க் கட்சிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு வருகின்றார்.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் கூட கிழக்கில் ஐந்து வருடங்களாகவும் வடக்கில் நான்கு வருடங்களாகவும் நடைபெறாமல் இருக்கின்றது. தற்போதைய அரசியற், பொருளாதாரச் சூழ்நிலையில் இலங்கை அரசிற்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தி அச்சட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் முறையாகப் பகிரப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பாக இந்தியா முழுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றது. அண்மையில் இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சரும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்று சிங்களப் பேரினவாத சில சக்திகள் குறிப்பாக விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற முன்னாள் அமைச்சர்கள் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தினால் நாடு பிழவுபடும் என்கிற ரீதியில் கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.

1994ம் ஆண்டு முதல் 10 வருடங்கள் ஆட்சி செய்த சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என ஜி.எல்.பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தை எதிர்க்காதவர்கள் இன்று 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றார்கள். ஆக மொத்தத்தில் இந்த நாடு பொருளாதாரப் பிரச்சினையிலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கையில் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை இவர்கள் தராவிட்டால் இந்த நாடு உருப்படுவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது.

எனவே எதிர்வரும் சுதந்திர தினம் இந்த நாட்டில் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் சுதந்திரம் இல்லாத நாட்டிலே தமிழர்களாகிய எமக்கு கிடைக்காத சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டிய தேவை இல்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4ம் திகதி வடக்கிலிருந்து கிழக்கிற்கு யாழ்ப்பாணத்தில இருந்து மட்டக்களப்பிற்கு ஒரு கண்டனப் பேரணியை நடாத்துவதற்குள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம், தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் அந்தப் பேரணிக்கு முழு ஆதரவையும் கொடுப்பது மாத்திரமல்லாமல், அவர்களுக்குப் பக்க துணையாக இருந்து இந்தச் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இந்தச் சுதந்தர தினத்திற்கு எதராகக் கிளர்ந்தெழ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

13வது திருத்தத்தை அமுல்படுத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் – ஜி.எல்.பீரிஸ்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு குறித்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாகாண சபைகளும் செயலிழந்துள்ள பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

இவ்வாறு அர்த்தமற்ற அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

அதிகரித்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிதிப் பற்றாக்குறை என கூறி உள்ளூராட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது?

ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரிக் குழுக்கள் அவ்வாறு ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து தமது சொந்த மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பொருள்பட.

அப்படிப் பார்த்தால் இப்பொழுது தமது அரசியல் எதிரிகளை ஒட்டுக் குழுக்கள் என்று அழைப்பதனை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்கள் அரசாங்கத்தோடு நிற்கிறார்கள் என்ற பொருளிலா? கஜேந்திரகுமார் ஒரு படி மேலே சென்று அவர்களை இந்தியாவின் ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கும் தகுதிகளை இவர்கள் எப்பொழுது பெற்றார்கள்? எங்கிருந்து பெற்றார்கள்?குறிப்பாக சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முன்பு எங்கே நின்றார் ?யாரோடு நின்றார் ?எப்படி அவர் தமிழரசு கட்சிக்குள் வந்தார்? இப்பொழுது மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று கூறும் இவர்கள் எப்பொழுது தங்களை தியாகிகள் என்று நிரூபித்தார்கள்?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தலில் துணிச்சலான சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தவிர, நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசியதைத் தவிர எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு தியாகமும் செய்திருக்கவில்லையே? குறைந்தது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளைக்கூடத் துறக்கவில்லை. மற்றவர்களைத் துரோகிகள் என்று அழைப்பதால் யாரும் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவரவர் தாங்கள் தங்களுடைய சொந்த தியாகங்களின் மூலந்தான் தங்களை தியாகிகளாகக் கட்டியெழுப்பலாம். ஆனால் கடந்த 13 ஆண்டு கால அரசியலானது ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகி – துரோகி என்ற வகைப் பிரிப்புக்குள் சிக்கப் போகின்றதா?

ஆயுதப் போராட்டத்தில் ஒருவர் தன்னைத் தியாகி என்று நிரூபிப்பதற்கு ஆகக்கூடியபட்ஷ வாய்ப்புக்கள் இருக்கும்.ஆனால் ஒரு மிதவாத அரசியலில் அப்படியல்ல. இரண்டுமே இருவேறு ஒழுக்கங்கள். மிதவாத அரசியலில் ஒருவர் தன்னை தியாகி என்று நிரூபிப்பதற்கு காலம் எடுக்கும். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் யாருமே தங்களை தியாகிகள் என்று நிரூபித்திருக்கவில்லை. எனவே மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறுவதற்கு யாருக்குமே தகுதி கிடையாது.

தனது முன்னாள் பங்காளிகளை நோக்கி தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒருபுறம் அவர்கள் தமது எதிரிகளைக் குறித்து பதட்டமடைவதையும் அது காட்டுகிறது. இன்னொரு புறம் இனி வரக்கூடிய தேர்தல் அரங்குகளில் பிரச்சார உத்திகள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கப் போகின்றன என்பதனையும் அவை கட்டியம் கூறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். எனவே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் கடந்த காலத்தை கிண்ட வெளிக்கிட்டால், பெருமளவுக்குப் புதைமேடுகளைத்தான் கிண்ட வேண்டியிருக்கும். இறந்த காலத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்ட முற்பட்டால் புதை மேடுகளைத்தான் கிண்டவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் இறந்த காலத்தின் புதை மேடுகளைக் கிண்டினால் பிணமும் நிணமும் எலும்புக் கூடுகளும்தான் வெளியே வரும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை. அது முன்னைய மிதவாத அரசியலின் தோல்வியில் இருந்தே பிறந்தது.இன்னும் கூராகச் சொன்னால் மிதவாத அரசியலின் மீது தமிழ் இளையோருக்கு ஏற்பட்ட விரக்தி சலிப்பு ஏமாற்றம் என்பவற்றின் விளைவே ஆயுதப்போராட்டம் எனலாம். அவ்வாறு இளையோரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதில் தமிழ் மிதவாதிகளுக்கு பெரிய பங்கு உண்டு.நமது தேர்தல் தோல்விகளின் போதெல்லாம் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதன்மூலம் தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க முற்றுபட்பட்டிருக்கிறது. இம்முறையும் அதைத்தான் தமிழரசு கட்சி பேச்சுவார்த்தை அரங்கில் செய்து கொண்டிருக்கிறது. தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தான் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப் பெறலாம் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.

இவ்வாறு தமது தேர்தல் தோல்விகளின் பின் தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் மிதவாத கட்சிகளும் தீவிர நிலைப்பாடுகளை எடுத்ததன.அதன் விளைவாக அவர்கள் இளையோரை வன்முறைகளை நோக்கித் தூண்டி விட்டார்கள். இளம் தலைமுறையின் கோபத்தையும் ஆவேசத்தையும் விரக்தியையும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக முதலில் தூண்டி விட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆயுதப் போராட்ட அரசியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஒரு தமிழ் மிதவாதக் கட்சியும் கூற முடியாது.

தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும், இளையோரின் கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்பும் நோக்கத்தோடும் தமிழ் மிதவாதிகள் முழங்கிய கோஷங்கள் பல “வேர்பல் வயலன்ஸ்” என்று கலாநிதி சிதம்பரநாதன் கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் தொண்டர்கள் தமது விரலை வெட்டி அந்த ரத்தத்தால் தலைவர்களின் நெற்றிகளில் திலகம் இடுவார்கள். இவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில் சேர்ந்த பொழுது பொட்டு என்று அழைக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு.

இவ்வாறு தமது இயலாமை, பொய்மை, அயோக்கியத்தனம் என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசை திருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆனால் ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேற தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ் அரசியலில் தோன்றிய அதிகம் சாம்பல் தன்மை மிக்க ஒரு கட்டமைப்பு அது. அதை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறினார். அதன் விளைவாக கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசு கட்சி தனியே வந்துவிட்டது. ஏனைய கட்சிகள் ஒரு கூட்டாக நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தர் கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல,சுமார் இரு தசாப்த காலங்களுக்கு தான் தலைமை தாங்கிய ஒரு கூட்டு ஏன் சிதைந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைக் குறித்து இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

அவர் தலைமை தாங்கிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாளன்று,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமைகள் இருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்குள்ளேயே சிறு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டார்கள். இவை தமிழரசு கட்சியும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பலமான, இறுக்கமான கட்சியாக இல்லை என்பதனை காட்டுகின்றன.கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்காலத்தில் மேலும் விகார வடிவத்தை அடையக்கூடும். முன்னாள் பங்காளிகளை இப்பொழுது ஒட்டுக் குழு என்று கூறுபவர்கள் தலைமைத்துவப் போட்டி என்று வரும் பொழுது உட்கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எப்படி முத்திரை குத்தப் போகிறார்கள்?

எனவே கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தர் ஒரு தலைவராக தோல்வி அடைந்ததை மட்டும் காட்டவில்லை, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி சிதைவடையக்கூடிய ஆபத்துகள் அதிகரிப்பதையும் கட்டியம் கூறுகின்றதா?

13 நாட்டைப் பிரிக்கும் என பதறுவது வெட்கக்கேடு – ஜனாதிபதி ரணில்

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.” இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக தெற்கில் உள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.

இந்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்கவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.

அதைவிடுத்து இந்தச் திருத்தச் சட்டம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இருவர் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுவதால் ஒட்டுமொத்த மொட்டுக் கட்சியுமே 13 இற்கு எதிர் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. 13 ஐ விமர்சிப்போர் தாராளமாக விமர்சிக்கட்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் என்னிடம் பதில்கள் உண்டு” – என்றார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கும் ரணில்! – டலஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்பு செய்பவையாக உள்ளன என்று – இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான சபைகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தெய்யத்தகண்டியில் நேற்று டலஸ் அழகப்பெரும சந்தித்துப் பேசினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச உடன் வந்திருந்தார். அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிஸாம் அடங்கலாக அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“எனது மிக நீண்டகால அரசியல் பயணத்தில் நான் எப்போதும் நேர்மையானவனாகவே நடந்து வருகின்றேன். நான் மக்களின் பணத்தை எந்த வகையிலும் சுரண்டியதில்லை. இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டவன் அல்லன். நாட்டுக்கும், மக்களுக்கும் மொட்டு நன்மை செய்யும் என்று நம்பி ஆதரித்தோம். அந்த நம்பிக்கை பொய் என்று கண்டபோதே அரசில் இருந்து விலகினோம்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்ற காலம் தொட்டு இந்த நாட்டில் தொடர்ச்சியாகக் குடும்ப ஆட்சியே நடந்து வருகின்றது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்பினோம். ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு வர எத்தனித்தோம்.

இதற்காகவே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சம்பந்தன் கடைசி நேரத்தில் மாறி விட்டார்.

நாம் விரும்புகின்ற நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இளையோர்கள் அடங்கலாக இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் வந்திருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களை ஆதரியுங்கள்” – என்றார்.

சர்வதேச உடன்படிக்கையான 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமென்பது சர்வதேச உடன்படிக் கையாகும்.

இந்த திருத்தச்சட்டம் நாட்டின் அரசியலமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால், வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் பயன் கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும் – என்றார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துக – திகாம்பரம்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அதற்கு தாம் ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தை அமைச்சரவையில் இருந்தபோதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன் என்றும் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடிப் பேச்சு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக் காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது.

எனினும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர்வதற்கு சீனாவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் இருக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீடிக்கும் அறிக்கையை பாரிஸ் கிளப் இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் கிளப், இலங்கைக்கு 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்துள்ளது.

இது நாட்டின் நிதி சிக்கல்களை ஒழுங்கமைக்க போதுமான நேரத்தை வழங்கும்.

ஆதாரத்தின்படி, சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற பரிஸ் கிளப்பிற்கு வெளியே உள்ள பல நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்யும் என நம்புவதாக வெளிநாட்டு ஊடக மொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வேலன் சுவாமி முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது அரச படைகளின் தாக்குதல் மற்றும் அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடாக நேற்று திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது சிலருக்கு காயங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தனர் என போராட்டகார்களில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வேலன் சுவாமிகளை முதற்கட்டமாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி பிணையில் விடுவித்திருந்தனர். இதன் வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலைமையில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு நடவ டிக்கை எடுக்கக் கோரியும் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நேற்று முறைப்பாட் டைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.