இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

தராசு சின்னத்தில் களமிறங்குகின்றது மலையக அரசியல் அரங்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

எண்பதாண்டு காலமாக உள்ளுராட்சியில் நீதி மறுக்கப்பட்டிருந்த மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பிரதேச சபைச் சட்டத்திருத்தின் ஊடாக வென்று எடுத்த நீதியை நிலைநாட்டவும் நுவரெலியா மாவட்டத்தில் வென்றெடுத்த புதிய பிரதேச சபைகளிலாவது திருத்தப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவும் மக்களுக்கு நீதி வேண்டி தராசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – ஜனாதிபதி

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.

நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார்.

வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள்.

அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும்.

ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் இருவர் பதவிப்பிரமாணம்

 புதிய அமைச்சர்களாக ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா தேவி வன்னியாரச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா தேவி வன்னியாரச்சி பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த அமைச்சுப் பதவியை வகித்த மஹிந்த அமரவீர, புதிய அமைச்சரை நியமிக்க ஜனாதிபதிக்கு அனுமதியளித்து இன்று(19) காலை இராஜினாமா செய்திருந்தார்.

யாழ். மாநகர மேயர் தெரிவு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கோரம் (Quorum)இல்லாமையினால் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள இடைக்கால  முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை  நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில், இன்றைய கூட்டத்திற்கு 24 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது,  உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதனால்  முதல்வருக்கான முன்மொழிவுகள் கோரப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டதையடுத்து, அதற்கு  ஆட்சேபனை  தெரிவித்த EPDP-இன் M.ரெமீடியஸ் சபையிலிருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில், இடைக்கால முதல்வர் பதவிக்கான தெரிவை தொடர்ந்து நடத்துவதற்கு கோரம்  இல்லாமையினால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள்  மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற மாநகர உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது´ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடா தன் நாட்டில் இடம் பெறும் நிறவெறிச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் அவதானம் செலுத்த வேண்டும் – சரத் வீரசேகர

இலங்கையின் உள்விவகா ரத்தில் தலையிட கனடாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புனர்வாழ்வு பணி யகச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

உலகில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததை எவ்வாறு குற்றச் செயலாகக் கருத முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், பிரிவினைவாதிகள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வரு கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குக் கனடா தடை விதித்துள்ளது. கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடைக்காகக் கூறப்பட்ட காரணங்களில் உண்மையில்லை. போரை நிறைவுக் கொண்டு வந்த அரச தலைவர்கள், இராணுவத்தினர் அரசியல் நோக்கத்துக்காகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்றும் இடம்பெறவில்லை மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்புச் செயற்பாடு என்று சித்திரிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவைக்கூட அழித்தார்கள். இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாகக் கருதவில்லை?

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய இராணுவத்தினரைச் சர்வதேச நீதிமன்றக் குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சதி செய்கின்றன . இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் கனடா நாட்டில் நிற வெறிச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. ஆகவே, இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் கனடா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.

இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம்தான் தமது அரசியல் தேவைகளுக்காக நல்லிணக்கம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். இலங்கையின் உள்விவகாரத் தில் தலையிட கனடாவுக்கு உரிமை கிடையாது – என்றார்.

அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் – சரத் பொன்சேகா

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ஐ.எம்.எப். தொடர்பாக பேசுகிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேசுகிறோம்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.

இன்னும் 25 வருடங்களில் நாடு முன்னேறி விடும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இன்னும் 25 வருடங்களில் தற்போதைய ஜனாதிபதிக்கு 99 வயதாகிவிடும். எனக்கோ 97 வயதாகிவிடும்.

அதுவரை நாம் கடுமையான வாழ்க்கைச் சுமையைதான் சுமக்க வேண்டியிருக்கும். எமது எதிர்க்கால சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், ஜனாதிபதியோ குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இன்று பேசுகிறார்கள்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன்று உணவுக்கே சிரமப்படும் நிலையில், அரசியல் லாபத்தைத் தேடிக்கொள்ளத்தான் ஜனாதிபதி 13 குறித்து இன்று பேசி வருகிறார்.

முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி – பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை வரவேற்பதாக ஜனாதிபதி அன்மையில் தெரிவித்திருந்தார்.

இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். தெற்கிலுள்ள எந்தவொரு முதல்வரும் இவற்றை எதிர்ப்பார்த்தது கிடையாது.

வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடு இன்று இருக்கும் நிலைமையில் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

13ஐ முழுமையாக கொடுப்பதாயின், அதிகாரத்தை பரவலாக்கல் செய்வதாயின், முதலில் இந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடைய வேண்டும்.

இனவாதம் இந்நாட்டில் இருக்கும்போது, அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும்.

இரத்த ஆறு ஓடும். தெற்கு மக்கள் வடக்கு மக்களை குரோதத்துடன் பார்ப்பார்கள். தெற்கிலும் வடக்கிலும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்று நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்