சர்வ கட்சி மாநாட்டினூடாக 13 க்கு அப்பால் செல்வது சவாலானது – பாக்கியசோதி சரவணமுத்து

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பு தொடர்பில் இருவேறு பிரதிபலிப்புக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நோக்கத்தினையும் உள்ளடக்கி சர்வகட்சிகளின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு கிடைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவறாக கொள்ள முடியாது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுபதற்கு அதியுச்சமாக முனைய வேண்டும்.

இதனைவிடவும் குறித்த மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கரிசனை கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தியதாகவே இருக்கும்.

அதாவது, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோரமுடியும்.

அதற்கு, அப்பால் சென்று அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் மக்கள் அiணையை முழுமையாக பெறாதவொன்றாகும். அத்துடன், ஸ்திரமான நிலைமையிலும் இல்லை.

ஆகவே, அவ்விதமான அரசாங்கமொன்றால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வல்ல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானவிடயமாகும். அந்தஅடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதே உசிதமானதாக இருக்கும் என்றார்.

இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு ஏனைய திறன்களுக்காக பயிற்சியளிக்கவும் விருப்ப ஓய்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சும் முப்படைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலமொன்றை 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், முப்படைகளின் செயற்பாட்டுடன் தொடர்பில்லாதிருக்கும் நபர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை செய்யாது விட்டால் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றப்படத் தகுதியுடையவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசைப் படையினர் உட்பட இதுவரை 16, 141 பேர் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகளை உடையவர்கள் 96 பேர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் விண்ணப்பங்களைச் அனுப்பியவர்கள் பற்றிய பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க குறிப்பிடுகையில், 983 விமானப்படை வீரர்கள் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதுடன், 732 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்படையால் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்குக் கடலில் தத்தளித்த படகு 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு

மியன்மார் நாட்டை சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண் டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 30 நோட்டிக் கல் தொலைவில் அதிகளவானோரை ஏற்றிய படகு ஒன்று நிற்பதனை அவதானித்த மீனவர் ஒருவர் படகை அண்மித்து அவதானித்த சமயம் படகில் இருந்தவர்கள் சிறுவர்களை தூக்கி காண்பித்தமையினால் படகு ஆபத்தில் நிற்பதனால் உதவி கோருகின்றனர் என்பதனை மீனவர் ஊகித்துக்கொண்டார்.

இதனையடுத்து கரை திரும்பிய மீனவர் வழங்கிய தகவலின் பெயரிலேயே சம்பவ இடத்திற்கு கடற்படையினர் சென்றுள்ளனர்.

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட படகை அவதானித்து படகை மீட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மீட்கப்பட்ட படகு சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதனால் இதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் நேற்றிரவு படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவியதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான நிரோஷ் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளேன் என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

இலங்கைக்கு காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வாரம் அரசியல் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எனக்கு தெளிவுப்படுத்தினார். இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய செயற்பாடாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள்,மேல்நாட்டு தமிழர்கள் மற்றும் சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் அமைதியான முறையில் வாழும் அபிலாசையை அவர் தெளிவுப்படுத்தினார். அத்துடன் இலங்கையில் ஏழ்மை நிலையில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய சேவை விநியோகம் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மிகமோசமான நிலையில் வாழும் இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு என்னால் இயலுமான ஒத்துழைப்பை வழங்குவேன். நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும்,ஒரு சிலர் உணவை உட்கொள்ளும் வேளையை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பாரிய முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளார். பொருளாதாரத்தை மீட்சிப்படுத்தும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்றார்.

மனோ கணேசனுடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை நேற்று (16) சந்தித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் நுகேகொடையிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. (a)

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த பொறி முறையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை முன்னதாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் பொறிமுறையை அமைத்தது.

அதன்படி இந்திய மத்திய வங்கி, ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய நாடுகளை தவிர மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கையுடனான வர்த்தகத்திற்கான ஐந்தும் மொரிஷியஸ் உடனான வர்த்தகத்திற்காக ஒன்று உட்பட ஆறு கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணை வளம்கொண்ட சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பெரிய வர்த்தக பங்காளிகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மதிப்பாய்வு செய்வது குறித்து இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கெதிரான மனுக்கள் பெப்ரவரியில் பரிசீலனை

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் துமிந்த சில்வாவை விடுவித்து கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில்நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பினரதும் பரிசீலனைகளை கருதிக்கொண்டு நீதிமன்றம் பெப்ரவரி 7ஆம் திகதி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு கடந்த 2021 ஜூன் 24 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரோடு பலர் குற்றவாளிகள் என அறிவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வியட்நாமில் உயிர்மாய்த்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் உறவினர்கள் கூடியுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தமிழ் தலைமைகள் தெளிவுபடுத்த வேண்டும் – நஸீர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகள், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளயிட்டுள்ள அவர் அதில், இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் கரிசனை கொண்டுள்ள போதிலும், அதுவே முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்னையாகிவிடக்கூடாது. வடக்கும் கிழக்கும் இணையவேண்டுமென்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் இருப்பாரேயானால், வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்கவேண்டுமென ஹக்கீம் கூறுவாரேயானால், அந்தந்த மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், காணிகளின் எல்லை பிரச்னைகளும் நிவர்த்திக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.