வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கில் முப்படையினருக்கு காணி சுவீகரிப்பது தொடர்பில் பிரதேச செயலர்களுடன் ஆளுநர் தனது அலுவலகத்தில் கூட்டம் நடாத்தவிருந்த போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டது.

இராணுவத்துக்கு 11.2% ஒதுக்கீடு, இனவாத சிந்தனைகளை மையமாக கொண்ட பாதீடு. – சுரேஷ் பிரேமச்சந்திரன்

நாடாளுமன்றில் அதிபரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் – தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமானது, எந்தவிதமான ஆரவாரமுமின்றி, நாடாளுமன்றத்தின் ஆதரவுக் குரல்களுமின்றி அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் நேற்று 14.11.2022 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்த வருமானமாக 3415பில்லியன் ரூபா என்றும் மொத்த செலவாக 5819 பில்லியன் ரூபா என்றும் எதிபார்க்கப்படுகிறது. அதன்படி துண்டுவிழும் தொகையாக 2404பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்கவே இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மையும் உள்ளது. இலங்கை ஏற்கனவே வங்குரோத்து அடைந்த நாடாகவும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மிகப்பாரிய அளவிலான பணவீக்கமும் அதன் விளைவாக கடந்த வருடத்திலும்விட, நான்கு, ஐந்துமடங்கு விலை அதிகரிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கோ தனியார்துறை ஊழியர்களுக்கோ எவ்வித ஊதிய உயர்வுகளுமில்லாமல் இருக்கின்ற அதேசமயம், பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து மிக உச்சத்தில் இருக்கின்றது. இதனால் ஏற்கனவே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த அரச உத்தியோகத்தர்களும் தனியார்துறை ஊழியர்களும் தொழிலாளர்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டுகோடி இருபது இலட்சம் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் ஏறத்தாழ தொண்ணூறு இலட்சம் மக்கள் மூன்றுவேளை உணவிற்கே அல்லாடுவதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை என்றும் பல இலட்சம் மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றிற்கு நிவாரணம் வழங்கக்கூடிய எந்த விடயங்களும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுமாத்திரமல்லாமல், மக்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை தரக்கூடிய எத்தகைய எந்த விடயங்களும் இதில் உள்ளடக்கப்படவுமில்லை.

மேலும், நாட்டை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்றோ, மக்களுக்குமேல் ஏற்றப்பட்ட சுமைகளை எவ்வளவு கால அவகாசத்தில் தம்மால் குறைக்க முடியுமென்றோ எத்தகைய அறிவுறுத்தல்களும் இல்லை. உண்மையில் அதிபருக்கே இது தொடர்பில் எத்தகைய தெளிவும் இல்லை என்பதை உணரமுடிகிறது.

அதிபர் தனது உரையின்பொழுது நாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த அடுத்த வருடம் தான் பிறந்ததாகவும், இன்று எழுபத்தைந்து வருடம் பூர்த்தியடைந்த நிலையில் மிகப் பின்தங்கிய வங்குரோத்து அடைந்த ஒரு நாடாக இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அதிபர் எங்கே பிழை விட்டிருக்கின்றோம் என்றும் கேட்கின்றார்.

உண்மையில் அவருக்கு இதற்கான விடை தெரிந்திருக்கும். ஆனால் அந்த விடயத்தைத் தயக்கமின்றி தெளிவாகச் சொல்வதற்கு அவர் அஞ்சுகின்ற நிலைமையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல கலாசாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டு சகலருக்கும் சம உரிமைகள், சம சந்தர்ப்பங்கள் வழங்கும் ஒரு நாடாக இதனை மாற்றியிருந்தால், ஆசியாவின் வளமிக்க ஒரு நாடாக இது மாறியிருக்கும்.

எங்களுக்குப் பின்னர் சுதந்திரமடைந்த சிங்கப்பூர் அவ்வாறுதான் செயற்பட்டது. நான்கு மொழிகள், நான்கு இனங்கள், பல மதங்கள் பல்வகையான கலாசாரங்கள் இவை எதுவும் பாதிக்கப்படாத ஒரு நாடாக சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட்டது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக வளர்ச்சியடைந்த ஒரு நாடாக சிங்கப்பூர் மாறியிருக்கின்றது. இனவாதத்தில் ஊறிப்போயிருக்கக்கூடிய சிங்கள அரசியல் தரப்பு இதனை இன்னமும் உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் சிங்கள பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது என்றும் இதற்கு முப்படையினரும் உதவவேண்டும் என்ற அடிப்படையிலும் இனவாத சிந்தனைகளை மையமாக வைத்து கட்டியமைக்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு செலவீனமாக இலங்கையின் மொத்த செலவீனத்தில் 11.2 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 130கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் அதுவும் அண்டை நாடுகளுடன் நீண்ட எல்லைகளையும் எல்லைத் தகராறுகளையும் கொண்ட நாடே பாதுகாப்பிற்கு 9வீதத் தொகையையே ஒதுக்கியுள்ளது. இரண்டுகோடியே இரண்டரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு பாதுகாப்பிற்காக 41000 கோடி ரூபா செலவு அவசியம்தானா? இவ்வளவு பெருந்தொகை படையினர் தேவைதானா? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வளவு முகாம்கள் தேவைதானா? இலங்கை, எந்த நாட்டிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்புப்டையை வைத்துக்கொண்டு அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்கின்றது? இலங்கை, உலகத்தின் பதிநான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய இராணுவ அமைப்புமுறை அவசியம்தானா?

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் என மூன்று துறைகளை உள்ளடக்கிய ஒரு அமைச்சுக்கு வரவு-செலவுத்திட்டத்தில் 23.4.வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான கருத்து என்னவென்றால், இலங்கை முழுவதிலுமுள்ள அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், மாகாணசபை ஊழியர்கள், மாகாணசபை நடவடிக்கைகள், உள்நாட்டலுவல்கள் என ஒட்டுமொத்தமான இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 23.4 வீதத்தை ஒதுக்கும் இந்த அரசாங்கம் பாதுகாப்பு என்ற பெயரில் முப்படையினருக்கும் 11.2வீதத்தை ஒதுக்கியதானது அரசாங்கத்தின் தேவையற்ற செலவீனத்தையே காட்டுகின்றது.

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளும் சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் இத்தகைய அநாவசிய செலவுகளைக் குறைக்கும்படிக் கோரியபோதிலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் நாட்டின் இன்றைய சூழலில், இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்றைய அதிபர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபொழுது, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பில் 1500கோடி ரூபா முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? இதனைப் போன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் வெளிநாட்டுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இலங்கை வங்குரோத்து அடைந்தமைக்கு இதுவே முக்கியமான காரணமென்றும் சிங்கள புத்திஜீவிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறைந்தபட்சம் இவற்றை மீளக் கொண்டுவருவதற்கான ஏதேனும் ஒரு வழிமுறையைக்கூட இவரால் அறிவிக்கமுடியவில்லை. அதுமட்டுமன்றி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல்களையும் இலஞ்ச லாவன்யங்களையும் நிறுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய உருப்படியான எத்தகைய திட்டங்களையும் இவரால் அறிவிக்க முடியவில்லை.

இவ்வாறான ஒரு வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்புடையதல்ல, தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என்பதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றுள்ளது.

காணிக்காகப் போராடத் தமிழர்கள் போல் முஸ்லிம்களும் உடன் இணையவேண்டும்

முஸ்லிம்களாகிய நாங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாகப் போராடி நிறைய விடங்களைச் சாதித்திருக்கின்றார்கள்.

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றும்கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்குக் காரணமானவர்களை ஒன்றுகூடி அவர்கள் விரட்டியடிக்கின்றார்கள். ஆனால் அம் மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில் இல்லை. எமது ஊர்கள் யாவும் தற்போது தனியான தீவுகளாக மாற்றப்பட்டு உள்ளன. இவ்வாறான பிரதேச வாதங்களால் தான் வெளியூர் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலைச் செய்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் பிரதேச வாதமாகும். எனவே தான் ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

வரவு செலவுத்திட்டம் பொருளாதார மீட்சி ஸ்திரதன்மையை அடிப்படையாக கொண்டது

2023 வரவு செலவுதிட்டம் பொருளாதார மீட்சி அதனை ஸ்திரப்படுத்தியவாறு எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவக்கூடிய நடுத்தர நீண்டகால பொறுளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுவந்ததாகஅவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பின்பற்ற சில தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் மேலும் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் தாமதங்கள் மீட்பு நடவடிக்கையை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் குறைக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் நீண்டவரிசைகள்  பலமணிநேர மின்வெட்டு போன்றன காணப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி ஆளுநர் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்பட்டது வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாணயக்கொள்கையை இறுக்கமாக்கியிருக்காவிட்டால் வட்டி வரிகள் போன்றவற்றை அதிகரித்திருக்காவிட்டால் பணவீக்கம் 100 வீதத்திற்கும் அதிகமானதாக காணப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் – ஹர்ஷ

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.

மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.

அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.

மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை – பிரேமலால் ஜயசேகர

பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார் கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக உள்ளது என தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால்  காங்கேசன் துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்

தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினைமேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்

அதேபோல் பலாலி சர் வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம்  பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார் ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

தவறை ஏற்றுக்கொண்டாலேயே மன்னிக்க முடியும் – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் தங்களின் பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும் என்றும் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள் அதனை நாம் மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை குறித்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பேராயர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வந்த மறுநாளே அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து அவற்றையெல்லாம் எவ்வாறு வெளிப்படையாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்கைகளை சிபாரிசு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை இதனை பொலிஸாரிடம், நீதிமன்றத்திடம் ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அவருடைய பொறுப்புகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். அதன் பின்னணியில் அரசியல் சதி ஒன்று இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல தெளிவற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கு எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டா அதிபர் திணைக்களத்திற்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லை,அதனால் ஒன்றையும் செய்வதற்கு முடியாது உள்ளது.

தற்போது நாட்டில் செவிடான யானைகள் மற்றும் ஒரு பெரிய யானையும் அதன் கூட்டத்துடன் வந்துவிட்டது. அவர்களிடம் வீணை வாசிப்பது பயணற்றது.

சட்டத்தை நினைத்தப்படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு நினைத்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தோன்றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்கட்டும். வேதத்தில் உள்ளது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களை பின் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்

பாதீட்டால் நடுத்தர மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் – சம்பிக்க

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

வரி அதிகரிப்பை மாத்திரம் இலக்காக கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் ரூபாவாக காணப்படும் நிலையில் அரச செலவினம் 8000 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்திற்கும்,செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் யோசனைகள் வரவு உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

கடந்த 08 மாத காலத்தில் அரசாங்கம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முறையான திட்டங்களை வகுக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அக்கறை கொள்ளவில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடை ஏற்க முடியாது – ஹக்கீம்

மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.

ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம்

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,

இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும்.

அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்களாகும்

தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும்.

மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.