ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்ப நிலையான சமாதானம் உறுதி செய்யப்படல் வேண்டும் – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகார அமைச்சர் மேரி ட்ரெவெல்யான்

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு, எதிர்கால ஒத்துழைப்புசார் திட்டங்கள், இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி – இலங்கைக்கான உங்களது விஜயத்தின் மூலம் எதனை அடைவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையில் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக இலங்கைக்கு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது காலநிலை மாற்றம் தொடக்கம் கடற்பிராந்தியப் பாதுகாப்பு வரை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.

குறிப்பாக கடற்பாதுகாப்பை முன்னிறுத்திய கூட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு உள்ளடங்கலாக இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பில் பிரித்தானியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் இவ்வேளையில், நாம் ஒன்றிணைந்து இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய புதிய வாய்ப்புக்களை அடையாளங்காணவும், இருதரப்பு வர்த்தகத்தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். இதில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய பிரித்தானியாவின் உதவிகளும் அடங்கும்.

கேள்வி – இலங்கையுடனான ஒத்துழைப்பில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்ன?

பதில் – இருநாடுகளினதும் கூட்டிணைந்த ஒத்துழைப்பில் காலநிலைசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய செயற்பாடுகள் என்பன மிகப்பிரதானமானவையாகும். அதேவேளை மோதலின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகிய விவகாரங்களிலும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு போன்ற பிராந்தியக் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கையுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் எமது தொடர்புகளை விரிவுபடுத்திவருகின்றோம்.

கேள்வி – இலங்கையில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவினால் எவ்வழிகளில் உதவமுடியும்?

பதில் – கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கே நாம் உதவ விரும்புகின்றோம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஊடாக 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் பிரித்தானியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அவ்வுதவிகள் மூலம் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 மக்கள் பயனடைந்தனர். அதேபோன்று மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும். அதன்மூலம் இலங்கையால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும், பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளவும் முடியும்.

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கும் (Andrew Patrick) இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்

வட மாகாண அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பிரித்தானியா பூரண ஆதரவு

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார்.

இந்தச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (12) யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கு ஆளுநர் விளக்கமளித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; வடக்கிற்கு இரு நாள் விஜயம்

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்புக்கான முனைப்புக்கள், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், சக்திப் பரிமாற்றத்துக்கான திறந்த மற்றும் சுயாதீனத் தன்மையை பேணுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள், உலக வங்கியின் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கலந்துரையாடியதாக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியனின் இந்த விஜயமானது, பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தவுள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றம், சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வகிபாகத்தினை வலியுறுத்தவுள்ளதோடு, இலங்கையின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் பிரித்தானியாவின் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்டு காலநிலை இலக்குகள் அடைவதற்கான பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பங்களிப்பினையும் வலியுறுத்தவுள்ளார்.

அமைச்சர் ட்ரெவெலியன் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் காலநிலைமாற்றத்துக்கான நிதி, பசுமை வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், நீதி சீர்திருத்தம் மற்றும் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்துடன் வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அதனைத்தொடர்ந்து நாளை 11ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை ஒன்றாக அழைத்துள்ள அவர் தனியார் விடுதியில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் மோதல், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தின் ஆதரவுடன் முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதோடு அந்த விஜயமானது, இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கும் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு செயல்முறையுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கு பிரித்தானியா வரவேற்பு

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது.

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் இலங்கையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என பிரித்தானிய எம்.பி. க்கள் வலியுறுத்தல்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள சியோபைன் மெக்டொனாக் மற்றும் விரேந்திர ஷர்மா ஆகியோர், இலங்கையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற இலங்கைப் பொலிஸார் ஐவர் தலைமறைவு

கஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Posted in Uncategorized