போர் நடந்த இடங்களில் மனித புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் – விஜயதாஸ ராஜபக்ச

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின்
கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என்று நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் – பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.” – என்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ

“போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும்.

முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன். நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்க முடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது.” – என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு அளப்பரியது – விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.

வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து எதுவித தீர்மானமும் இல்லை – நீதியமைச்சர்

வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அப்பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயேஇவ்வாறானதொரு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிய மாற்றங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.

மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்ச சட்டம் திருத்தியமைக்கப்படும் – நீதியமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தில், அரசியல் நோக்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒருவரை தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இல்லாது ஒழிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சட்டத்தின் கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தை தவறாக பயன்படுத்த அல்லது சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயற்படவோ இடமளிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் ஒருவரை நீண்டகாலம் தடுத்துவைக்கும் வாய்ப்பும், வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறையும் மாற்றி அமைக்கப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேநபர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் விளைவாகவே அவர்கள் வாக்குமூலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வளித்தல் செயலணி ஒன்றை ஸ்தாபிக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இந்த சட்டமூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டதே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் அரசியலமைப்பு 21 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருமாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  விரைவாக இயற்றப்பட்டதல்ல  முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியின் வழிகாட்டலுக்கு அமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமித்த குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டமூலத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விடுதலைபுலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல் பணிகள் சட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தவறான ஆலோசனைக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு அக்காலக்கட்டத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டது,இந்த நடவடிக்கையை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த வருடம் போராட்டம் தோற்றம் பெற்றது. போராட்டத்தில்  ஈடுப்பட்டவர்களை அடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  உருவாக்கப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் முன்னெடுத்த தவறான பிரசாரத்தினால் ஒரு தரப்பினர் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் காரியாலம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தனியார் புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் ஊடான புனர்வாழ்வளிக்கப்படுகிறது.

கந்தகாடு, சேனபுர மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் 493 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெறுகிறார்கள். சிறைச்சாலை திணைக்கத்தின் ஊடாக 10 புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் புனர்வாழ்வளித்தல் சிக்கல் சிறைந்ததாக உள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு சடுதியாக அடிமையாகியுள்ளார்கள். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தமது பிள்ளை புனர்வாழ்வு சிகிச்சைக்கு உள்வாங்கப்படுவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை – விஜயதாஸ

இனங்களுக்கிடையில் சிதைவடைந்திருக்கும் நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப எடுக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்  என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்காத மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படும் நாடு என எமது நாட்டுக்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை இருக்கும்போது முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அது தடையாக இருக்கின்றது. அதனால் இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட பல நிலைமைகள் காரணமாக நீதிமன்றங்களில் 11இலட்சம் வழக்குகள் குவிந்துள்ளதுடன் 26ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பது பாரிய நிலைமையாகும்.

மேலும் கடந்த காலங்களில் தலைதூக்கி இருந்த பொருளாதார பிரச்சினை காரணமாக அராஜக நிலையில் இருந்த நாட்டை பொறுபெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலைமையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஓரளவு ஆறுதலான சூழல் ஏற்பட்டு, நாடு ஸ்திர நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருக்கின்றது.

அத்துடன் நீதி கட்டமைப்பை புதுப்பிப்பதற்காக 22 புதிய சட்ட மறுசீரமைப்புகளுக்கு கடந்த 6மாதங்களுக்குள் அனுமதித்துக்கொண்டுள்ளோம். சட்டங்களை இயற்றுவதுபோல் அதனை செயற்படுத்துவதற்கும் குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். நாட்டின் தற்போதைய நிலைமை தாெடர்பில் ஆராய்ந்து பார்த்து சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் இனங்களுக்கிடையில் சிதைவடைந்துள்ள நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பாரிய பொறுப்பு நீதி அமைச்சுக்கு சாட்டப்பட்டிருக்கின்றது. இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மக்களை ஏமாற்றுவதற்கு அல்ல.  மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே – விஜயதாச ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை காரணமாக இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையில் இருந்து பிரிந்து சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டு இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கும் என்றார். இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும், நமது நாட்டிற்கான கடன் தொகையைப் பெறுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.