பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.

இதில், பொலிஸ் அதிகாரத்தை சிறிது காலம் கழித்தும், ஏனைய அனைத்து அதிகாரங்களை உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை இதுதொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர, சர்வக்கட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களையே அவர் செய்துள்ளார் என்பது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவரும்.

எனவே, மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்துச் செய்யும் வகையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபை நாம் தயாரித்துள்ளோம்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடக்கிய சட்டத்தரணிகள் குழுவே இந்த வரைபை தயார் செய்துள்ளனர். இதனை நாம் அடுத்தவாரமளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்” தெரிவித்துள்ளார்.

தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1983 கறுப்பு ஜூலை சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். கொழும்பில் எமது பெரிய வீடு எரிக்கப்பட்டது. மோசடி செய்து கட்டிய வீடு அல்ல,எனது தந்தையின் கடின உழைப்பால் கட்டிய வீடு, இனகலவரத்தில் வீடும்,உடமைகளும் எதிர்க்கட்டது. நாட்டுக்குள் அகதிகளாக இருந்தோம். இவை மறக்க முடியாத சம்பவம்.நாட்டில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தமது வீடுகள் எரிக்கப்பட்டதை பொதுஜன பெரமுனவினர் புலம்பிக் கொண்டு குறிப்பிட்டார்கள். வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தீயிடும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.எமது இருப்புக்கள் வரலாற்றில் தீக்கிரையாக்கப்பட்டன. ஆசியாவில் சிறந்த தொன்மை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவற்றையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமக்காக எவரும் அன்று குரல் கொடுக்கவில்லை என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டோம்.

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன் மேஜர் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். சுனில் ரத்நாயக்க 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த களத்துக்கு அப்பாற்பட்ட வகையில் மிருசுவில் பகுதியில் முகாமுக்கு அருகில் விறகு தேடி வந்த எட்டு வயது சிறுமி உட்பட எட்டு பேரை வெட்டிக் கொன்றார்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது, கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். இதனால் தான் அவர்கள் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறார்கள்.

மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார். இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில ஊடகங்கள் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பள காணொளியை காண்பித்து நீண்ட விளக்கம் அளித்தன. இந்த ஊடகங்கள் கறுப்பு ஜூலை சம்பவத்தை காண்பிக்கவில்லை. இந்த ஒருதலைபட்ச செயற்பாடு தவறு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும்.அதற்கு முன்னர் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக விமர்சிக்கிறார். வரலாற்றில் இதுவே இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. தீர்வு திட்ட விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகளும் விளையாடிக் கொண்டன. இந்த விளையாட்டு இம்முறை செல்லுபடியாகாது.

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றார்.

தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது – ஆளும் தரப்பு பிரதம கொறடா பிரசன்ன

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒரு போதும் சாத்தியமாகாது. அரசாங்கம் அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்திய பயணம், இந்திய பிர தமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் அனுப்புவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிகழும். இலங்கை தொடர்பாக இந்திய தரப்புக்கு பல விடயங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்திய தரப்புக்கு தெளிவுபடுத்துவார். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. பாராளுமன்றத்தின் மூலமே இது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டி தீர்வை கோருகின்றன. இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது. இருக்கின்ற அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார் என்றார்.

Posted in Uncategorized

இந்தியப் பிரதமருக்கான கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம்(12) குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை(13) இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன – ரணில்

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என ஜனாபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் பிரதமராக பதவிவகித்தவேளை நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை நான் ஆரம்பித்தேன் அன்று முடித்த இடத்திலிருந்து நான் தற்போது தொடர்கின்றேன்.

தமிழர் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் பலவிடயங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்,இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திற்கும்  எதிர்கட்சிகளிற்கும் இடையி;ல் மூன்று விடயங்கள்தொடர்பில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன இவற்றில் இரண்டிற்கு தீர்வை கண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் காணப்படும் காணி தொடர்பான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பல நடவடிக்கைகைள எடுத்துள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்

ஜூலை மாதத்திற்குள் முழுமையான செயல்முறையை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு மஹிந்த ராஜபக்ச தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – சபா குகதாஸ்

மகிந்த ராஜபக்ச ஜனாபதியாக இருந்தபோது நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12.06.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள்நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி – தமிழ் எம். பிக்கள் பேச்சில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற அதிகார பகிர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை எந்த விதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலைமையில் முடிவடைந்தது.

தமிழ் தரப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்ற அடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

இடையிலே நிறுத்தப்பட்டது திரும்பவும் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இன்று அந்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் தரப்பினாலே வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பக்கத்திலிருந்து அதற்கு உறுதியான நிலையான செயல்பாடுகள் தொடர்பில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படாத நிலைமையில் அது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை.

இருப்பினும், அதிகார பகிர்வு தொடர்பில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவின் இருக்கக்கூடிய பிரதிநிதிகளை தமிழ் தரப்பில் இருந்தும் அவர் கூறியிருந்தார். அந்த குழுவை அமைத்துக் கொண்டு இந்த அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக மேலும் கலந்துரையாடி தீர்க்கமான முற்றுமுழுதான அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற முடியும் அன்பு ஜனாதிபதியில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பனும் தமிழ் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைப்பது என்பது காலநீடிப்பாக இருக்கும் தவிர ஆரோக்கியமானதா இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது எனவே எந்த விதமான ஆக்கபூர்வமான முடிவுகள் இன்றி இந்த கூட்டம் என்று முடிவடைந்துள்ளது

இதய சுத்தியுடன் ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்தல் அதில் பங்கேற்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்தது தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பொருத்தமானதொரு தருணம் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தரப்பினரும், ஏனைய தமிழ்த் தரப்புக்களும் பிரிந்து நிற்பது துரதிஷ்டமானது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இரா.சம்பந்தனின் காலத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களினது விவகாரங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என்றும் அனைத்து விடயங்களும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு எம்.பிக்களையும் அழைக்காவிட்டால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு.சுநே்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதி கலந்துரையாடல்களில் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும், அவ்வாறு அழைக்கப்படாவிட்டால் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்தனர்

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன.

இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

அதனை செய்யாது, எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து, எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை, எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு இன பிரச்சனை தொடர்பில் பேச அழையுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.