பிரித்தானிய புதிய வெளிவிவகார அமைச்சராக டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வௌிவிவகார செயலாளராக பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். 2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டேவிட் கமரூனின் அரசியல் மீள்வருகையை அவரது அமைச்சரவையில் உள் விவகார செயலாளராக இருந்தவரும், பின்னர் பிரித்தானிய பிரதமரானவருமான தெரேசா மே வரவேற்றுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார்.
இதனையடுத்து முழு அளவிலான அமைச்சரவை மாற்றமொன்றை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மேற்கொள்வாரென பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக கடும் விமர்சனங்களை எதிர் கொள்ளும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள் இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற  கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகநகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அந்த திட்டம் குறித்து உரையாற்றுவதற்காக செப்டம்பர் மாதம் டேவிட் கமரூன் மத்தியகிழக்கிற்கு சென்றார் என பொலிட்டிக்கோ தெரிவித்துள்ளது.

சீனாவின் சர்வதேச உட்கட்டமைப்பு திட்டமாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி இந்த கொழும்பு துறைமுக நகரம்.சிங்கப்பூருக்கு போட்டியாக இது உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.

கொழும்புதுறைமுக நகரத்தின் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டேவிட்கமரூன் இணைத்துக்கொள்ளப்பட்டார் என இலங்கையின் முதலீட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் டிலும் அமுனுகம பொலிட்டிக்கோவிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிட்டிக்கோ மேலும் தெரிவித்துள்ளதாவது

டேவிட் கமரூன் இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றியிருந்தார் அபுதாபியில் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் 100 பேர் கலந்துகொண்டிருந்தனர் துபாயில் அவரின் நிகழ்வில் 300 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் திட்டமில்லை – இது இலங்கையின் திட்டம் என்பதை டேவிட்கமரூன் வலியுறுத்த முனைந்தார் என தெரிவித்துள்ள திலிம் அமுனுகம  சீனாவும் அவர் அதனையே வலியுறுத்தவேண்டும் என விரும்பியிருக்கலாம் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் கமரூனை உள்வாங்குவது குறித்து சீன நிறுவனமே தீர்மானித்தது இலங்கை அரசாங்கம் இல்லை எனவும் இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமருக்கு சீனாவுடன் நேரடிதொடர்பில்லை கொழும்புதுறைமுகநகரத்திற்கு நிதி வழங்கும் நிறுவனத்துடனும் தொடர்பில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டேவிட் கமரூனை அமெரிக்காவை தளமாக கொண்ட வோசிங்டன் பேச்சாளர்கள் பணியகம் என்ற அமைப்பே ஏற்பாடு செய்தது அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்கேபிஎம்ஜி நிறுவனமும் இந்த நிகழ்வுடன் தொடர்புபட்டிருந்தது,இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னரே டேவிட்கமரூனும் இந்த விடயத்தில் ஈடுபாட்டை காட்டினார் என டேவிட் கமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பில் கமரூன் சீன அரசாங்கத்துடனேயோ அல்லது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துடனேயோ தொடர்புபட்டிருக்கவில்லை இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது என தெரிவித்துள்ள அவரது பேச்சாளர் உரைக்காக டேவிட் கமரூனிற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

புதியபட்டுபாதை திட்டம் நாடுகளை சீனாவின் கைதிகளாக்குகின்றது எங்கள் அனைவருக்கும் சீனா ஆபத்தான நாடு என்பதால் டேவிட் கமரூன் இதனை தெரிவு செய்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் கடந்த இரு தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ஷ, காஞ்சன விஜேசேகர, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, கொழும்பை தளமாகக்கொண்டியங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் நீட்சியாக வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் இணைந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள், நல்லிணக்கம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

அதுமாத்திரமன்றி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், அங்கு நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் கண்ணிவெடி அகழ்வுப்பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை 7.00 மணிக்கு யாழ் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டிருந்தனர். தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், பிற காரணங்களால் அவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை.

அதன்படி, இச்சந்திப்பில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்தும், அண்மையகாலங்களில் வட-கிழக்குவாழ் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் பிரித்தானிய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும், அதற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் பிரதான காரணமாக இருப்பதாகவும் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். அதேபோன்று, வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள் மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்தும், புதிதாகவும் நிர்மாணிக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகள் என்பன பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விடயத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தனியார் காணி அபகரிப்புக்கள் பற்றிய பட்டியல் மற்றும் அவ்விரு மாகாணங்களிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 71 பௌத்த விகாரைகள் பற்றிய பட்டியல் ஆகிய இரு ஆவணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானிடம் கையளித்தார்.

அதேபோன்று, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்ட ஆன்-மேரி ட்ரெவெல்யான், அவர் அதனைச் செய்வாரா என்று தமிழ்ப்பிரதிநிதிகளிடம் அபிப்பிராயம் கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், இவ்விடயத்தில் தமக்குப் பல்வேறு சந்தேகங்களும் மாறுபட்ட நிலைப்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அபிப்பிராயம் கோரப்போவதாக ஜனாதிபதி கூறியிருப்பதன் மூலம், இவ்விடயத்தில் அவரிடம் உண்மையான அரசியல் தன்முனைப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும், அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திடம் அனுமதிகோரத் தேவையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கையைக் காலனித்துவத்தின்கீழ் வைத்திருந்து, தமது ஆட்சிமுறையை இலங்கைக்கு வழங்கிச்சென்ற பிரித்தானியாவுக்கு இவ்விடயத்தில் தலையீட்டு, தீர்வுகாண உதவவேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு என்றும் அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கு தமிழ்ப்பிரதிநிதிகள் நினைவுறுத்தினர்.

அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என தமிழ்ப்பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரம் சர்வதேச மட்டத்தில் ஒரு பேசுபொருளாக இருப்பதற்கும், அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கும் இவ்வாறான தீர்மானங்கள் முக்கிய காரணமாக இருப்பதனால், இதனைக் கைவிடாது தொடர்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய அமைச்சர், இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஏனைய இணையனுசரணை நாடுகள் மற்றும் இலங்கையைச்சேர்ந்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும் எனத் தெரிவித்தார். இருப்பினும் இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்ப நிலையான சமாதானம் உறுதி செய்யப்படல் வேண்டும் – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகார அமைச்சர் மேரி ட்ரெவெல்யான்

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு, எதிர்கால ஒத்துழைப்புசார் திட்டங்கள், இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி – இலங்கைக்கான உங்களது விஜயத்தின் மூலம் எதனை அடைவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையில் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக இலங்கைக்கு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது காலநிலை மாற்றம் தொடக்கம் கடற்பிராந்தியப் பாதுகாப்பு வரை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.

குறிப்பாக கடற்பாதுகாப்பை முன்னிறுத்திய கூட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு உள்ளடங்கலாக இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பில் பிரித்தானியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் இவ்வேளையில், நாம் ஒன்றிணைந்து இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய புதிய வாய்ப்புக்களை அடையாளங்காணவும், இருதரப்பு வர்த்தகத்தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். இதில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய பிரித்தானியாவின் உதவிகளும் அடங்கும்.

கேள்வி – இலங்கையுடனான ஒத்துழைப்பில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்ன?

பதில் – இருநாடுகளினதும் கூட்டிணைந்த ஒத்துழைப்பில் காலநிலைசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய செயற்பாடுகள் என்பன மிகப்பிரதானமானவையாகும். அதேவேளை மோதலின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகிய விவகாரங்களிலும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு போன்ற பிராந்தியக் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கையுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் எமது தொடர்புகளை விரிவுபடுத்திவருகின்றோம்.

கேள்வி – இலங்கையில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவினால் எவ்வழிகளில் உதவமுடியும்?

பதில் – கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கே நாம் உதவ விரும்புகின்றோம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஊடாக 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் பிரித்தானியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அவ்வுதவிகள் மூலம் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 மக்கள் பயனடைந்தனர். அதேபோன்று மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும். அதன்மூலம் இலங்கையால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும், பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளவும் முடியும்.

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கும் (Andrew Patrick) இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்

வட மாகாண அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பிரித்தானியா பூரண ஆதரவு

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார்.

இந்தச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (12) யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கு ஆளுநர் விளக்கமளித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; வடக்கிற்கு இரு நாள் விஜயம்

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்புக்கான முனைப்புக்கள், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், சக்திப் பரிமாற்றத்துக்கான திறந்த மற்றும் சுயாதீனத் தன்மையை பேணுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள், உலக வங்கியின் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கலந்துரையாடியதாக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியனின் இந்த விஜயமானது, பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தவுள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றம், சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வகிபாகத்தினை வலியுறுத்தவுள்ளதோடு, இலங்கையின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் பிரித்தானியாவின் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்டு காலநிலை இலக்குகள் அடைவதற்கான பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பங்களிப்பினையும் வலியுறுத்தவுள்ளார்.

அமைச்சர் ட்ரெவெலியன் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் காலநிலைமாற்றத்துக்கான நிதி, பசுமை வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், நீதி சீர்திருத்தம் மற்றும் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்துடன் வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அதனைத்தொடர்ந்து நாளை 11ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை ஒன்றாக அழைத்துள்ள அவர் தனியார் விடுதியில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் மோதல், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தின் ஆதரவுடன் முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதோடு அந்த விஜயமானது, இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கும் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு செயல்முறையுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கு பிரித்தானியா வரவேற்பு

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது.

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் இலங்கையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.