மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்பட்டமை இன,மதவாத்தின் உச்சக்கட்டம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார்.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சருக்கெதிராக நீதிமன்ற செல்லத் தயாராகும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் ஊடாவே அமையும்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக வடக்கில் காணிப்பிரச்சனை, இராணுவ மாயக்கல் பிரச்சனை, மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகள் தீர்ப்பதற்காக முதற்படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு இன்று யாழில் இடம்பெற்றபோது வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு.தற்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.

அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் இந்திய முதலீடுகள் குறித்து அவதானம்

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா – இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையிலான சிரேஸ்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதிநிதிகள் குழுவிற்கும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மேற்கூறப்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது உயிர்ம எரிபொருள், புதுப்பிக்கத்தக்க சக்தி, பசுமை ஹைட்ரோஜன் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பினை விஸ்தரிப்பதற்கான சாத்தியங்களுக்கு அப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் இயற்கை எரிவாயு மற்றும் சக்தி மையத்தினை அபிவிருத்தி செய்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , இந்திய பெற்றோலிய கூட்டுத்தானம் , இந்திய பொறியியலாளர்கள் நிறுவனம் , ஹிந்துஸ்தான் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , பெற்றோனெட் எல்.என்.ஜி. லிமிடட் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சாலியபீரிசிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாலியபீரிஸ் தனது கட்சிக்காரர் ஒருவர் தொடர்பில் தனது தொழில்சார் கடமையை செய்த விதம் குறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆர்ப்பாட்;டம் சாலியபீரிசிற்கு அவரது கட்சிக்காரருக்காக ஆஜராவதற்கான உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என நாங்கள் கருதுகின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி என்ற அடிப்படையில் அவரின் கடமைகளிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான தலையீடுகளை நிறுத்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பவானி பொன்சேகா, ஒஸ்டின் பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, ஜயம்பதி விக்ரமரத்ன, லயனல் போபகே, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, தீபிகா உடகம உள்ளடங்கலாக 83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிவிட்டது என்ற பொய்யான காரணியின் அடிப்படையில் நீதிமன்றக்கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எமது நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியிலும், நாட்டுமக்களின் உரிமையிலும், ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்படும் இடையூறாகவே அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதேவேளை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள், சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் உரிய தினத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் திட்டத்தைக் குழப்பும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது பிரயோகிக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அரசாங்கம் அதன் ‘தாக்குதல்களுக்காக’ நீதிமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கின்றது.

இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது. எந்தவொரு ஜனநாயக சூழலிலும் தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் தெரிவை மிகவும் அமைதியானதும், செயற்திறனானதுமான முறையில் வெளிப்படுத்துவதற்கு மக்கள் கொண்டிருக்கும் வாய்ப்பான தேர்தலின் ஊடாக அவர்களது குரல் ஒலிப்பதை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.

இவையனைத்தும் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின்கீழ் இலங்கையின் ஜனநாயகம் மிகமோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையே காண்பிக்கின்றது. எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மீண்டும் மிகமுக்கியமான விடயமாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடமும், தேர்தலை நடாத்துவதற்குப் பொறுப்பான அனைத்துத்தரப்புக்களிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து மாநகரசபையை வெளியேற ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக்காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது.

அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இந்தியாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை செலுத்திய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உருவாக்கிய நியதி சட்டங்களை ஆளுநர் இரத்து செய்யவேண்டும்; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உருவாக்கிய இரண்டு நியதிச் சட்டங்களையும் மே 24ஆம் திகதிக்கு முன்பாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதேசமயம், மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று வடக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக அவரின் பிரதிநிதி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க நியதி சட்டம், சுற்றுலா அலுவலக நியதிச் சட்டம் என்ற இரு நியதிச்சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தார். வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இல்லாத நிலையில் வடக்கு ஆளுநர் இந்த நியதிச் சட்டங்களை உருவாக்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் செய்தமை சட்ட விரோதமானது என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம். பியுமான எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதி, “நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று சட்ட மா அதிபர் மூலம் வடக்கு ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நியதி சட்டங்களை நடைமுறைப்படுத்தமாட்டார் என்று எழுத்துமூலம் ஆளுநர் சட்டமா அதிபருக்கு உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்காமல் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதியரசரை கோரினார்.

ஆளுநரின் உறுதியளிப்பை ஏற்று வழக்கை கைவிட முடியாது. ஆளுநர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு நேரடியாக வெளிப்படுத்தினால் மட்டுமே அதனை ஏற்று வழக்கை கைவிடலாம் என்று வழக்காளி தரப்பில் வாதாடிய சட்டத்தரணி தெரிவித்தார். இதையடுத்து நீதியரசர், அடுத்த வழக்கு விசாரணையின்போது – மே 24ஆம் திகதிக்கு முன்பாக, வடக்கு ஆளுநர் தான் அறிவித்த இரு நியதி சட்டங்களையும் இரத்து செய்து வர்த்தமானி மூலம் அறிவித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.