கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை – சுரேந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அது தான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும். சர்வதேச நாடுகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரானா குருசாமி சுரேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு  (19.02.2023)வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி-1.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரோலோ மற்றும் புளோட் திடீரென மற்றும் கட்சிகளையும் கூட்டமைத்து தேர்தலில் எவ்வாறு விரைவாக போட்டியிட முடிந்ததன் பின்னணியென்ன?

பதில்
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம். அப்படியான அனைவரையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தபொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி-2
தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென?

பதில்
நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட. குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர். இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

கேள்வி- 3
உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது?

பதில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

கேள்வி-4
அண்மையில் யாழ் வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன?

பதில்
கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப் பட்டு இருக்கவில்லை. இந்திய அரசு தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது. நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதில் இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

கேள்வி-5
அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை. அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இது மாத்திரம் போதாது. மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி-6
தற்போது வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை பேசுகின்றீர்கள்?

பதில்
நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை, அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சுப் பொருளாக அமைகிறது.

பாரிஸ் கிளப் முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை பெங்களூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துரையாடலில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடுகளுக்கு உதவுவது குறித்து ஆராயப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதியமைச்சருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்காவிடின் எரிபொருள், மின்வெட்டு என பொது மக்கள் பாரிய சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 21 பேரையும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்

2023 வரவு செலவுத் திட்டம் – பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (21) நடைபெற்ற 2023 வரி மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அதனை நிராகரிப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், இந்தியா தமக்கு தனித்துவமான முறையை பின்பற்றுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முதலீடுகளுக்கு துரிதமாக அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை நேற்று(திங்கட்கிழமை) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பதிலாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து ஒரே நிறுவனத்தினால் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இன்று இந்த இடத்திற்கு வந்தபோது எனக்கு இன்னுமொரு பறவைகள் பூங்கா நினைவுக்கு வந்தது.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இவ்வாறான பறவைகள் பூங்காவொன்று   அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பறவைகள் தீவில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடாளுமன்றத்தை நிறுவியுள்ளார்.

இப்போது அன்றிருந்த பறவைகள் அங்கு  இல்லாத போதும்  வெவ்வேறு வகையான பறவைகள் உள்ளன. காகங்களும் உள்ளன.

இந்த பறவைகள்  பூங்காவை நிர்மாணிப்பதில் சுமார் 20 வருடகாலங்கள் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்ததாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ  கோட்டேகொட இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை இன்று நாட்டுக்கு  சமர்ப்பித்துள்ளார்.

சிங்கப்பூரின் ஜூரோன் பறவைகள் பூங்காவை மாதிரியாகக் கொண்டு  இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை உருவாக்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் கண்டி நகரின் சுற்றுலா மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோன் நகரம் முதலீட்டு வலயமாகத்தான் முன்னேற்றப்பட்டது. புதிய பொருளாதாரப் பயணத்துடன் இலங்கை முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர், அவர்களது வர்த்தகங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 10 வருடங்கள்  செல்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும்.

புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்  துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய 10 வருடங்கள் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைக்காது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் பெரிய கொழும்பு பொருளாதார திட்டத்தை நிறைவேற்றி  அதனை ஆரம்பித்து வைத்ததால், அதன் பொருளாதார நன்மை இலங்கைக்கு கிடைத்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைக் கைத்தொழில் வேலைத்திட்டம் மூன்று வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது.

முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றுக்குப்  பதிலாக, பொருளாதார ஆணைக்குழுவை  நியமித்து, ஒரே  நிறுவனத்தால் முதலீடுகளுக்கு  அனுமதி  அளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மதிப்பை வழங்கி, இந்த பறவைகள்  பூங்காவை நாட்டிற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும்; பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் திவால் நிலை மற்றும் உதவியால் நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான நற்பெயரைப் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் மீண்டும் சொன்னேன், 13க்கும் மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம்.

அப்படியானால் பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் இப்போது எங்கே? அரசியலமைப்பில் உள்ளன, ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏன் 13 வேலை செய்யவில்லை தெரியுமா? மக்களுக்கு பிடிக்கவில்லை. ஜே.வி.பி. சார்பில் நான் கூறிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி!

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” – என்றார்.

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக 132 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.

இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.

மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்