கடன் மறுசீரமைப்புக்குத் தயார் என பத்திரப்பதிவுதாரர்கள் நாணய நிதியத்துக்கு அறிவிப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.

அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023 ஜனவரி 16 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் பதவி விலகினர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினைச் சேர்ந்த மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் தங்களது  இராஜினாமா கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

Posted in Uncategorized

வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி விடுவிக்கப்பட்டது

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் /தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாகஇராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும்
75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

இன்றைய நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினா்களானஅங்கஜன் இராமநாதன்மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

அமெரிக்கா துள்ளிக்குதிக்காமல் இலங்கைக்கு ஏதாவது உதவி செய்ய முயல வேண்டும் – சீனா

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு சீனா போதியளவு உதவி செய்யவில்லை என அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்த கூற்றை சீனா மறுத்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இலங்கையில் இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புத் தொகையைத் திறக்க உதவுவதற்காக, மற்ற கடனாளிகளுடன் சேர்ந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

செயலாளர் நுலாண்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீனா இதுவரை வழங்கியது போதாது. கடன் நிவாரணத்தின் IMF தரநிலையை அவை பூர்த்தி செய்யும் என்று நம்பத்தகுந்த மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் பார்க்க வேண்டும்“ என்றார்.

இதற்கிடையில், கடந்த மாதம், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு அதன் கடனை இரண்டு வருட கால அவகாசம் வழங்கியதுடன், IMF திட்டத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியது.

செயலாளர் நுலாண்ட் மேலும் கூறினார், “நாங்கள் கூடிய விரைவில் IMF திட்டத்தைப் பார்க்க விரும்புகிறோம். அதுதான் இலங்கைக்குத் தகுதியானது, அதுதான் இலங்கைக்குத் தேவை”.

இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “அமெரிக்கா கூறியது உண்மையை பிரதிபலிக்கவில்லை” என்று கூறினார்.

வழக்கமான செய்தியாளர் மாநாட்டில் பேசிய மாவோ நிங், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, கடனை நிலைநிறுத்துவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் கடிதத்தை இலங்கைக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், அதற்கு இலங்கை சாதகமாக பதிலளித்து, சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

“இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துள்ளிக் குதிப்பதை விட, அமெரிக்காவும் சில நேர்மையைக் காட்டலாம் மற்றும் தற்போதைய சிரமங்களில் இலங்கைக்கு உதவ ஏதாவது செய்யலாம்” என்று அவர் கூறினார்.

நட்புறவு கொண்ட அண்டை நாடு மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் உன்னிப்பாக அவதானித்து, அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான உதவிகளை எங்களால் முடிந்தளவுக்கு வழங்கி வருவதாக பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்தார்.

சீனத் தரப்பிற்கு இலங்கையின் கடனைப் பொறுத்தவரை, அரசாங்கம் சீன நிதி நிறுவனங்களை இலங்கையுடன் கலந்தாலோசித்து முறையான தீர்வைப் பெறுவதற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும், இலங்கை நிலைமையை வழிநடத்துவதற்கும், அதன் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைய உதவுவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

அக்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது: வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் இராணுவமயப்படுத்தலை ஏற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும் வலி – கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார். அக் கடிதத்தில், இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர். அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளார், உள்ளுராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், எது எப்படியிருந்த போதும் படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளடன் பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்;. இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தல்

டெல்லி சென்றுள்ள தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இன்று (பிப்.,02) சந்திப்பு நடத்தினார்.

அப்போது, அவர் இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என வெளியுறவு த்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கையின் சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ், வருவாய் ஆகிய அதிகாரங்களை தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர் எனவே இலங்கையில் 13ஆம் திருத்தச்சட்டத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேசப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையுடன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளை பேரணியில் சகலரையும் அணி திரளுமாறு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

தமிழ் மக்களின் கரிநாளான நாளைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தனர். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாய கம், தமிழ்த் தேசியம் என்ப வற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதேநேரம் பேரணி ஆரம்பமாகி பயணிக்கும் இடங்களையும் வெளியிட்ட மாணவர்கள் அந்தப் பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் திரண்டு ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் தனர்.

பேரணி ஆரம்பமும் பயணமும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். நாச்சிமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுலகம் தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.

பின்னர் செம்மணியிலிருந்து வாகனங்கள் மூலம் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து இரணைடுவில் பேரணியின் முதல் நாள் நிறைவடையும். இரண்டாம் நாளான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகும்.

வவுனியா மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு 10.30 மணிக்கு புறப்படும் பேரணி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க் கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவில் நிறைவடையும்.

மூன்றாம் நாளான திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகும் பேரணி தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் சென்றடையும். பின்னர், திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் பேரணியினர் பங்கேற்பர். தொடர்ந்து பயணித்து வெருகலில் மூன்றாம் நாள் நிறைவடையும்.

நான்காம் நாளான செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு. நகரை சென்றடையும். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் எழுச்சிப் பேரணி நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலைஅலையாக இணைத்து தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை முழு உலகத்துக்கும் வெளிப் படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு முழுவதும் பூரண கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாக பிரகடனப்படுத்தியும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி இடம்பெறும் என்று மாணவர்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பேரணிக்கு வலுவூட்டியும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்.

இந்தச் சந்திப்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்தார்.

பெப்ரவரி 4ஆம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களைப் பூட்டியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் பேரணியில் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க தயார் – பாரிஸ் கிளப்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.

பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ஆதரவை பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எனினும், இந்த நிதி திட்டத்தை பெருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

அந்த ஒப்புதலை பெற, முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் அல்லாத சீனாவும் இந்தியாவும், இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்களில் முன்னணியில் உள்ளனர்.

எவ்வாறாயினும், அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு முன்வந்த இந்தியா, அதற்கான நிதியியல் உத்தரவாதங்களை அளித்தது.

மேலும் சீனாவின் எக்ஸிம் வங்கி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டு வருட கடன் ரத்து கால அவகாசத்தை வழங்கியது.

சீனாவின் இந்த உறுதிமொழிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், பெய்ஜிங் போதுமானதைச் செய்யவில்லை என்று கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

“சீனா இதுவரை வழங்கியது உத்தரவாதம் போதாது. அவர்கள் IMF கடன் நிவாரணத்தை பெற நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய அங்கத்தவர்களின் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை போராளிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்- ஸ்ரீ காந்தா

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.

இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,”பாரிய பொருளாதார நெருக்கடி நிலையின் மத்தியிலும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்து நிற்கின்ற சூழ்நிலையிலே சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளை மாலையில் இருந்து போராட்டம் நடாத்தப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மத்தியில் இவ்வாறான ஒரு கொண்டாட்டம் தேவைதானா அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபை இதனை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கின்றது.

பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை துக்க நாளாக கரி நாளாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பிலே முடிவடையும் விதத்திலே ஒரு பாரிய பேரணிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். இந்த அழைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வெளியிட்டு இருக்கின்ற சூழ்நிலையில் சில கருத்துக்களை பொது வெளியில் முன் வைப்பது பொருத்தமானது அவசியமானது என்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது இது முதல்தடவையல்ல,தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் நீதி தொடர்பில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டிற்கு தென் இலங்கையிலே ஐனநாயகத்தின் பெயரில் குரல் எழுப்புகின்ற போராடுகின்ற அனைத்து முற்போக்கு சக்திகளும் வர வேண்டும் எனமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும் ஆனால் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையிலே அது தொடர்பிலே அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.

பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரையில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவர்கள் அரசாங்க தரப்பிலே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறை முற்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள்.

தென்னிலங்கையில் ஜனநாயக எழுச்சியை மீள கொண்டுவர தயாராக இருக்கின்ற இளைஞர் சந்ததியினருக்கு இளைஞர் யுவதிகளுக்கும் அரசியல் நடவடிக்கையாளர்களுக்கும் தொழிற்சங்க வாதிகளுக்கும் ஒரு செய்தியினை தாழ்மையாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகின்றோம்
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையிலே இந்த நாட்டிலே ஆட்சி அமைப்பு முறையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

ஐனநாயக போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை எமது கோரிக்கையாகும்
எனவே தமிழ் மக்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்காதவரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது.

எனவே தென்பகுதியில் ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகள் முற்போக்கு சக்திகள் எமது தமிழ் மக்களின் அரசியல் நீதியினை ஏற்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.