உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்- ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை நிலைநாட்டவேண்டும் நீதியை நிலைநாட்டவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையான இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரத்தினை எவ்வளவு பெரிய இழப்பீட்டினாலும் ஈடுசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி இழப்பீட்டிற்கான உரிமைகளை அங்கீகரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் முன்னோக்கிய ஒரு படியை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடின்மை மற்றும் கண்காணிப்பின்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள லோரன்ஸ் தாக்குதல் எவ்வேளையும் தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கியபோதிலும் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டினை பெறுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் நிதிகளை வழங்கும்போது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்யவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அதிகாரிகளிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள லோரன்ஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலாய் லாமா இலங்கை விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெ பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் தலாய் லாமாவை கொழும்புக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

திபெத்தின் புனிதரை இலங்கை தூதுக்குழுவினர் அழைத்தனர், எனினும் அவர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

தலாய் லாமா 1959இல் தனது தாயகத்தை விட்டு வெளியேறியதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் திபெத்திய நாடுகடத்தப்பட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

அவர் இந்தியாவில் உள்ள தர்மசாலாவை தளமாகக் கொண்ட நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தாலும், அவரை ‘பிரிவினைவாதி’ என்று சீனா அழைக்கிறது. அத்துடன் அவரை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்கிறது.

புலிகளை பிரிக்கவே பிரேமதாஸ புலிகளுக்கு உதவி செய்தார் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறு உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இது போன்ற மசோதாவில் யார் வேண்டுமானாலும் திருத்தங்கள் கொண்டு வரலாம். நீங்கள் அதை கொண்டு வர விரும்பினால், நீங்கள் கொண்டு வாருங்கள். அதற்கு உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். உங்கள் தந்தையின் காலத்தில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு காசோலைகள் எழுதப்பட்டன. திருமதி சந்திரிகாவின் காலத்தில் அதுபற்றி ஒரு ஆணைக்குழுவை நியமித்து தகவல்களைக் கண்டறிந்தார்கள். அந்த உண்மைகளை அது உறுதிப்படுத்தியது. இன்று உங்களுக்கு புலிகளால் பணம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடம் உள்ளது. நான் அதை உண்மை என்று சொல்லவில்லை. மக்கள் சொல்வதை நான் சொல்கிறேன். இப்படி ஒரு மசோதா கொண்டு வருவது நல்லது. நீங்கள் திருத்தம் கொண்டு வாருங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முசோலினிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. வேறு எதனாலும் அல்ல. எதிரி அணியில் பிளவுகளை உருவாக்க. எனது தந்தையின் காலத்தில் பிரபாகரனிடம் இருந்து விலகியிருந்த மாத்தயாவையும் யோகியையும் வலுப்படுத்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பல்வேறு உத்திகளை செயற்படுத்தினார்கள்.

ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – நீங்கள் வாலை மிதிக்காதீர்கள். அதாவது உங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்பது பற்றி மக்கள் சொல்லும் கதைகள். அப்படி ஒரு மசோதா கொண்டு வருவது உங்களுக்கு நல்லது.

இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

தராசு சின்னத்தில் களமிறங்குகின்றது மலையக அரசியல் அரங்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

எண்பதாண்டு காலமாக உள்ளுராட்சியில் நீதி மறுக்கப்பட்டிருந்த மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பிரதேச சபைச் சட்டத்திருத்தின் ஊடாக வென்று எடுத்த நீதியை நிலைநாட்டவும் நுவரெலியா மாவட்டத்தில் வென்றெடுத்த புதிய பிரதேச சபைகளிலாவது திருத்தப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவும் மக்களுக்கு நீதி வேண்டி தராசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – ஜனாதிபதி

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.

நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார்.

வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள்.

அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும்.

ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் இருவர் பதவிப்பிரமாணம்

 புதிய அமைச்சர்களாக ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா தேவி வன்னியாரச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா தேவி வன்னியாரச்சி பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த அமைச்சுப் பதவியை வகித்த மஹிந்த அமரவீர, புதிய அமைச்சரை நியமிக்க ஜனாதிபதிக்கு அனுமதியளித்து இன்று(19) காலை இராஜினாமா செய்திருந்தார்.

யாழ். மாநகர மேயர் தெரிவு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கோரம் (Quorum)இல்லாமையினால் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள இடைக்கால  முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை  நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில், இன்றைய கூட்டத்திற்கு 24 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது,  உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதனால்  முதல்வருக்கான முன்மொழிவுகள் கோரப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டதையடுத்து, அதற்கு  ஆட்சேபனை  தெரிவித்த EPDP-இன் M.ரெமீடியஸ் சபையிலிருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில், இடைக்கால முதல்வர் பதவிக்கான தெரிவை தொடர்ந்து நடத்துவதற்கு கோரம்  இல்லாமையினால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள்  மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற மாநகர உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது´ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.