வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உடவல நீர்த்தேக்கத்தின் நீரைத் திறந்துவிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தென்பகுதி விவசாயிகளும் தமது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் வடபகுதி விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, உணவுப்பொருள் உற்பத்தித் தொழிற்சாலையான விவசாயத்தை வாழவிடுங்கள் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கான சிறுபோக விவசாயத்திற்கு உரிய நீரை காலக்கிரமத்தில் வழங்குவதாக உத்தரவாதமளித்த மகாவலி அதிகாரசபை சிறுபோகத்தின் இறுதிகட்டம் நெறுங்கியுள்ள நிலையில் நீரை வழங்க முடியாதநிலையில் உள்ளது. மகாவலி அதிகாரசபையின் இத்தகைய கையாலாகாத் தனத்தை எச்சரித்தும் வடக்கில் காணி அபகரிப்பின் கருவியாக மகாவலி அதிகாரசபை செயற்படுவதை அம்பலப்படுத்தியும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மாகாணத்தில் சமநல வாவியின்கீழ் ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் நெல் வயல்கள் சிறுபோகத்தில் செய்கை செய்யப்படுகிறது. இந்த நெற்பயிருக்கான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டெயரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அழிந்து நாசமாகிவிடும் என்பதுடன் இந்தியாவிடமிருந்தோ, சீனாவிடமிருந்தோ, வியட்நாமிடமிருந்தோ இலங்கை, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தமது விவசாயம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் தமக்குத் தேவையான நீரை உடன் விடுவிக்கும்படியும்கோரி அப்பிரதேச மக்கள் கடந்த பத்துநாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், உடவலவ அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுமாயின், ஹம்பாந்தோட்டை, காலி உட்பட ஐந்து மாவட்டங்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என எரிசக்தி வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார். ஆகவே நீரைத் திறந்துவிட முடியாது என மின்சார அமைச்சர் கூறுகின்ற அதேசமயம், விவசாயத்திற்கு நீர் கிடைக்காவிட்டால் 1700கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார்.

தென்மாவட்டங்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டால் நூறுகோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று மின்சார அமைச்சர் கூறுகின்றார். ஏற்கனவே பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நீரை கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் அமைச்சரும் நீருக்காகப் போராடும் மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதியும் இந்த நாட்டை பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்கப்போகிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது.

தமது மாவட்டங்களைச் சார்ந்த சிங்கள விவசாயிகளுக்கே நீரைத்திறந்துவிடாத அமைச்சர்கள், வடக்கு மாகாணத்திற்கு மகாவலியைக் கொண்டுவரப்போகிறோம் என்றுகூறி, ‘எல்’ வலயம், ‘ஜெ’ வலயம், ‘ஐ’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முறையான நீர்ச்சேகரிப்பு வசதிகளின்றி, மழைநீரை சேமித்து வைத்துள்ள குளங்களை நம்பி, மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்குமாகாண விவசாயச் செய்கையில் விதை நெல்லு, உரம், கிருமி நாசினிகள், டீசல், உழவுகூலி என அனைத்துமே விலையேறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், வடக்கு மாகாண விவசாயிகள் தமது நெல்லுக்கு ஒரு நீதியான விலைகேட்டுத் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல், தனியார் வியாபாரிகள் கொள்ளை இலாபம் அடையும் நோக்குடன் நெற்சந்தைப் படுத்தும் சபையினரும் அராவிலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றார்கள். பல ஆயிரம், இலட்சங்களைச் செலவு செய்த விவசாயிகள் இரத்தக்கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். ஆகவே அரசாங்கம் முதலில் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வடக்கிலோ, கிழக்கிலோ, தெற்கிலோ மேற்கிலோ விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இனவாத கண்ணோட்டங்களை விடுத்து, விவசாயிகளை விவசாயிகளாகவே நடத்துங்கள். இந்நாட்டிற்கு உணவளிப்பவர்களை வாழவிடுங்கள்.

ஏற்கனவே, ஹம்பாந்தோட்டையிலிருந்தும் ஏனைய சிங்கள பிரதேசங்களிலிருந்தும் கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற ஒரே நோக்கில், அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து வடக்கில் குடியேற்றுவதற்கு இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒருபுறமும் தொல்பொருள் திணைக்களம் இன்னொருபுறமும் இந்த காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
அரசாங்கம், முதலாவதாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தென்பகுதி சிங்கள மக்களுக்கு தாமதமின்றி தண்ணீரைத் திறந்துவிடுவது மாத்திரமல்லாமல், குடியேற்றம் என்ற பெயரில் அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவருவதையும் நிறுத்த வேண்டும்.

மகாவலி ஆறு ஓடும் தென்பகுதி சிங்கள மக்களுக்கே தண்ணீர்ப்பற்றாக்குறையும் அவர்களுக்கான செய்கைக்கான நீரும் வழங்க முடியாத நிலை இருந்தால், மகாவலி ஆறு எட்டியும் பார்க்காத வடக்கு மாகாணத்திற்கு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிப்பதென்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசம் வெலிஓயா என்ற பெயரில் சிங்கள மயமாக்கப்பட்டு மகாவலி ‘எல்’ வலயம் என்று உருவாக்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்த வலயத்திற்கு மகாவலி ஆற்றின் நீர் இன்னமும் எட்டியும் பார்க்கவில்லை. இப்பொழுது மகாவலி ‘ஐ’ வலயம், ‘ஜெ’ வலயம் என்ற பெயர்களில் புதிய வலயங்களை உருவாக்குவதில் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் சிறிய குளங்களை நம்பி, குறைந்தளவான விவசாயிகள் தமது விவசாயத்தைச் செய்து வருகின்றனர்.

நீங்கள் மகாவலி நீரைக் கொண்டுசெல்கிறோம் என்ற பிழையான பெயரில் இப்பொழுது விவசாயம் செய்யும் மக்களையும் விரட்டி, சிங்கள மக்களையும் குடியேற்றி மொத்தத்தில் தற்பொழுதுள்ள விவசாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள். தயவு செய்து இத்தகைய தொலைநோக்கற்ற சகல நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்.

மின்சாரம் இல்லாவிட்டால் மனிதனால் உயிர்வாழ முடியும். ஆனால் வயிற்றுக்கு உணவில்லையேல் மக்கள் செத்து மடிவதைத்தவிர வேறுவழியில்லை. உணவில்லாமல் மருந்தில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் எம்கண்முன்னே செத்து மடிந்ததைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அந்தத் துன்பம் சிங்கள மக்களுக்கு ஏற்படவேண்டாம்.
அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்று கூக்குரல் இடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே இந்த விடயங்களை தயவு செய்து தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்;வெளியான வர்த்தமானி கலாசார அழிப்பு! – சபா குகதாஸ் விசனம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என குற்றஞ்சாட்டிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

குறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்

லையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் வடக்கு, கிழக்கு மக்களிடத்தில் கரிசனை மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு உணர்த்துவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சிப் பயணத்தின் யாழ்ப்பாண பேரணி இன்று வியாழக்கிழமை (03) யாழ் நகரில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக நின்று உழைத்துள்ளனர். ஆனால், இந்நாட்டில் அதிகம் அரசியல், சமூக, பொருளாதார கலாசார உரிமைகள் விடயத்தில் மறுக்கப்படும் ஒரு தரப்பாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலத்துக்காக போராடுகின்றனர். ஒரு துண்டு நிலத்தினை பகிர்ந்தளிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த தரப்புக்கள் ஏமாற்றியே வருகின்றன. அதுபோல் அவர்களுடைய ஊதியம் தொடர்பான பிரச்சினை தொடர் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாக உள்ளது.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் குறைந்தபட்ச பொதுநலப் பண்டங்களை பெற்றுக்கொள்வதற்குக் கூட ஏங்கவேண்டியுள்ளது; போராட வேண்டியுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது உரிமைகள் நிலைநிறுத்தப்படாமல் உழைக்கும் மக்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், தொழில் பாதுகாப்பு என அத்தனையும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே மலையக மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதையிட்டு நாடே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பத்து அடி லயன் அறைகளில் குடும்பமாக வாழ முடியாமல் இன்றும் திண்டாடுகின்றனர். சாதாரணமாக, தோட்டங்களில் தாய்மார் பிரசவத்துக்குச் செல்வதற்கே கிராமத்தில் வீதிகள் இல்லை. உண்மையில் மலையக மக்கள் மீது பிரயோகிக்கப்படும் சுரண்டல்கள் போன்று பொருளாதாரச் சுரண்டல் நிலைமையினை இலங்கையில் வேறு எந்தச் சமூகங்களும் எதிர்கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை வெளிப்படையாக சொல்ல வேண்டும். நாங்கள் அவர்களது துன்ப துயரங்களை நேரில் பார்க்கின்றோம்.

இந்நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விட்டுக்கொடுப்பின்றி செயற்படவேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கில் எமக்குள்ளது.

மலையக பெண்பிள்ளைகள் கொழும்பு மற்றும் நாட்டின் பிற பாகங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும், இளைஞர்கள் பலர் கடைகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர்.

மலையகத்தில் இவ்வாறாக ஒடுக்குமுறை நிலவுகிறபோதும், அதையும் மீறி பல்துறைகளிலும் இளைய தலைமுறையொன்று முன்னேற்றம் கண்டு வருகிறது. இப்பெருமையினையும் நாம் கொண்டாடுகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

மீண்டெழ முடியா நிலைக்குள் இலங்கையின் பொருளாதாரம்; பிச்சை எடுத்து படம் காட்டும் ரணில் – சபா குகதாஸ்

மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் – பிச்சை எடுத்தும் இருக்கும் நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஜனாதிபதி ரணில். சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என வழமையான பாணியில் இனவாதத்தை ஊடகங்களில் கக்கியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

தென்னிலங்கையில் குறிக்கப்பட்ட சிங்கள மக்களை தங்கள் பக்கம் திருப்பி தங்கள் பாராளுமன்ற கதிரைகளை தொடர்ந்தும் சூடாக்க இனவாத கருத்துக்களை கம்மன்பில உள்ளிட்ட சிலர் பயன்படுத்த முனைவதன் வெளிப்பாடே தமிழர்களின் அபிலாசைகளை, ஜனநாயக வெளிப்பாடுகளை இனவாதமாக சித்தரித்தல்.

இது 1956 ஆண்டில் இருந்து இன்றுவரை இலங்கைத் தீவில் தொடர்கிறது. இதன் அறுவடையை 2019 ஆண்டின் பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பாரிய பொருளாதார பின்னடைவாக சந்தித்த கள யதார்த்தம் நாட்டை தொடர்ந்து மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியுள்ளது.

நாடு மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் முடங்கி விட்டது. பிச்சை எடுத்தும் இருக்கும் நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஜனாதிபதி ரணில். இந்த நிலையில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டுவது கம்மன்பிலவின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் இனப்பிரச்சனைக்கு சிங்கள ஆட்சியாளர் நிரந்தர தீர்வாக சமஸ்டியை கொடுக்க தவறினால் இன்னும் சிறிது காலத்தில் அன்று தமிழர்கள் சாரை சாரையாக வெளிநாடுகளுக்கு ஓடியது போல தென்னிலங்கையில் சிங்களவர் வெளியேறுவதை கம்மன்பில பார்ப்பார்.

தமிழ் மக்கள் 1952 ஆண்டில் இருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களது அபிலாசையாக ஜனநாயக ரீதியாக சமஸ்டி தீர்வு வேண்டும் என்றே கூறுகின்றனர். வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாண்மை தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டதை நிராகரிக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியார்களின் எதேச்சதிகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதை வெளிக்காட்டும் குறியீடாக தென்னிலங்கை சிங்களவர்கள் விரைவில் நாட்டை விட்டு ஓடுவார்கள் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை; அரசாங்கம் பொய்ப் பிரசாரம் – உதய கம்மன்பில

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளதுடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் உதவும் என அரசாங்கம் பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இது இன்னொரு மாயை. பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரவில்லை. இப்போதுதான் விமான நிலையத்திற்கு வந்தேன். விமான நிலையத்திற்கு மட்டும் வருபவர்கள் இடைநிலை பயணிகள் அல்லது போக்குவரத்து பயணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அப்படி வருபவர்கள் இலங்கைக்கு வந்ததை பொருட்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மாலா தீவில் இருந்து பயணிகள் இலங்கை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து வெளியே வராமல் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் செல்கின்றனர்.

இருப்பினும் அரசாங்கத்தின் தர்க்கத்தின்படி, இந்த இந்தியர்கள் மாலா தீவில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளாகவே கணக்கிடப்பட வேண்டும். இலங்கை சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அரசாங்கம் கூறுவதற்குக் காரணம், இலங்கை வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் இடைநிலைப் பயணிகள் சுற்றுலாப் பயணிகளாகக் கணக்கிடப்படுகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

அத்துடன் பிரான்ஸ் அதிபர் தனது விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் வரை காத்திருந்து விமானத்தில் இருந்து இறங்கிய போது அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்து இலங்கையில் பெரும் விளம்பரம் செய்தார்.

அரச தலைவரின் விஜயமாக இருந்தால், என்ன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, என்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன, வெளியிடப்பட்ட கூட்டறிக்கை என்ன என்பதை நாட்டுக்கு தெரிவிக்குமாறு நான் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.