உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெற வலியுறுத்துமாறு சர்வதேச இராஜதந்திரிகளிடம் கோரிக்கை

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.

எனவே அச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்துமாறும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்படி 450 க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மதகுருமார்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சார்ந்த 450 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச்மாத இறுதியில் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இச்சட்டமூலம் இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமானது இலங்கையின் ஜனநாயகத்துக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றோம்.

அதன்படி இப்பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறும் நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் நிலையில், இம்முயற்சிக்கு உதவுமாறு உங்களிடம் கோருகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.

இப்புதிய சட்டமூலமானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளைத் தக்கவைத்திருப்பதுடன், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

இது ஜனநாயகத்தில் பொதுமக்களின் முனைப்பான பங்கேற்புக்கான இடைவெளியைச் சுருக்குவதுடன், சமுதாயங்களை அரசின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, அரசை இராணுவமயப்படுத்தும்.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான கடப்பாடுகளை, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற பிறிதொரு மிகமோசமான சட்டத்தைத் திருட்டுத்தனமாக அறிமுகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தமுடியாது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு அச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கிலான ‘ஏமாற்று’ நடவடிக்கைகளே தவிர, அவை மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாணும் உண்மையான நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையல்ல.

பயங்கரவாதத்தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும் என்பதும், அது அதிவிசேட நிறைவேற்றதிகாரங்களைக்கொண்ட எந்தவொரு சட்டவாக்கத்தினைக்கொண்டும் பதிலீடு செய்யப்படக்கூடாது என்பதும் எமது தெளிவானதும், தொடர்ச்சியானதுமான நிலைப்பாடாகும்.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு உங்களது செல்வாக்கின் ஊடாகவும், இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் பேணிவரும் இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார நல்லுறவைப் பயன்படுத்தியும் அனைத்து இலங்கையர்களுக்குமான மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் மேம்படுத்திப் பாதுகாக்கின்ற முதன்மை நிலைப்பாட்டை நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் முழுமையான உள்ளடக்கம், அதன் தொனி மற்றும் உண்மையான நோக்கம் என்பன இச்சட்ட மறுசீரமைப்பை அர்த்தமற்றதாக்குவதுடன், இது பயங்கரவாதத்தடைச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு முழுமையாக வலுவிழக்கச்செய்கின்றது.

அதேபோன்று கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தல் மற்றும் சர்வதேச சட்டநியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டவாக்கத்தை விரிவாகப் பரிசீலித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு நீங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் சுமையை கடன் வழங்கிய அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு சீனாவின் நிதியமைப்புகளிற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன்சுமைகளை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சர்வதேச நிதிஅமைப்புகளுடன் இணைந்து சீனா செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நியாயமான சுமை என்ற அடிப்படையில் வர்த்தக மற்றும் பன்னாட்டு கடன்கொடுப்பனவாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணக்கறிக்கை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதை தொடர்ச்சியாக தாமதமப்படுத்தி வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த காலக்கெடு, கடந்த வாரம் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கறிக்கைகளை உரிய முறையில் இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை முடிவுறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம்

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் சட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதிய சட்டம் மூலம் அரசு தட்டிப் பறிக்க முடியாது.

ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இந்த அரசு ஏன் அஞ்சுகின்றது? எமது நல்லாட்சி அரசையும் சில ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. அதை நாம் எதிர்கொண்டோம்.

விமர்சனங்களை எதிர்கொள்ள – அவற்றுக்குத் தகுந்த பதில் வழங்க அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். – என்றார்.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலயம் என்ற போர்வையில் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடும் மத போதகர்: தவிசாளர் நிரோஸ் குற்றச்சாட்டு

ஆலயம் என்ற போர்வையில் மதபோதகர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அரசிற்கு சொந்தமான நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு எமது சமூகம் செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று தாம் முன்னெடுத்துள்ள போராட்டமானது மதங்களுக்கு எதிரானது அல்ல எனவும் மாறாக மதங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான நடத்தைகள் மற்றும் சட்டவிரோதமான மதமாற்றங்களுக்கு எதிரான போராட்டம் என்றும் தியாகராஜா நிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த கட்டிடத்தினை உரிய திணைக்களம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.