ஒன்றுக்கும் உதவாத தீர்மானத்தை நிராகரிக்கிறோம்’: மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை மீள நிராகரித்தது இலங்கை!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான 51/1 தீர்மானத்தை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஆனால் சபையுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளது.

“மனித உரிமைகள் பேரவையால் பல பயனற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்திய 51/1 தீர்மானமும் அதிலொன்று. சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் நமது சம்மதம் இல்லாமல் அது நிறைவேற்றப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். 46/1 தீர்மானத்தின் அதன் சொந்த விளக்கத்திற்கு இணங்க OHCHR ஆல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை விரிவுபடுத்தும் மற்றும் வலுப்படுத்தும் இந்த தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம், ” என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழமையான அமர்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த தீர்மானங்கள் எனது நாட்டு மக்களுக்கு உதவாது. இலங்கை சமூகத்தை பிளவுபடுத்தும். இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது.

“நாட்டின் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு எங்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்த கவுன்சிலுக்கு முன்னர் விளக்கப்பட்டபடி, கவுன்சில், சிறப்பு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த அமைப்புகளுடன் விவாதிக்க நாங்கள் திறந்திருக்கிறோம்“ என தெரிவித்தார்.

இலங்கை கடலில் இந்திய மீனவர்களை அனுமதியோம்; மீனவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானம்: போராட்டத்திற்கும் முஸ்தீபு

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதென வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்களிற்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமது முடிவை இலங்கை, இந்திய, தமிழக அரசுகளிற்கு எழுத்து மூலம் அறிவிப்பதுடன், மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு இலங்கை அரசாங்கமும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இந்த யோசனை தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த யோசனைக்கு தாம் எதிரானவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர் சந்திப்பொன்றில் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடமாகாணத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிற்கும், வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விடயம் தொடர்பில், கடற்தொழிலாளர் சங்கங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட எதிர்ப்பு கடிதத்தை இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள இந்திய தூதரகம், யாழிலுள்ள துணைத்தூதரகங்களில் கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளன.

அத்துடன், தேவைப்படின் இலங்கை அரச தலைவர்களை சந்தித்து பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதுதவிர, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இழுவைமடி தொழில் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அந்த கடிதத்தில் கோரவுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவை வியாழன் கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்படம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அடங்கும்.

இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை – ஜனாதிபதி ரணில்

“இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்தும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் பிரதிநிதிகள் உள்ள அதியுயர் சபையே நாடாளுமன்றம். எனவே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், நாடாளுமன்றத்துக்குச் சவால் விடுத்து எவரும் செயற்பட முடியாது எனவும் மீளவும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். அதில் உள்ளவர்கள் இருவேறு திசைகளில் பயணிக்கின்றனர். அவர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.

இந்த வருடம் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்றம் முடிவெடுக்கும்” – என்றார்.

வறுமையை ஒழிக்க நியூசிலாந்திடம் ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் வறுமையை ஒழிக்க நியூசிலாந்து அரசாங்கத்தின் ஆதரவை கோரிய எதிர்கட்சித் தலைவர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு அரசியலில் தனித்துவ அடையாளத்தை பதித்து எதிர்க்கட்சியின் அரசியல் கட்சி என்ற வகையில் பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் மூலம் நாட்டுக்கு பெறுமதி சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவரால் நினைவு கூரப்பட்டதோடு, நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் பாராட்டும் கிடைக்கப் பெற்றது.

இலங்கை, இந்திய பொருளாதார பரிவர்த்தனைக்கு ரூபாயை பயன்படுத்த ஆலோசனை

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளதாவது.

“இந்தியாவும், இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பேங்க் ஆப் சிலோன், எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள் இதுதொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க உதவும் முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதன் மூலம் குறைவான பரிமாற்ற செலவு, விரைவான சேவை, வர்த்தக கடன்கள் எளிமையாக பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இலங்கை மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் கணிசமான அளவில் ஆதாயம் ஏற்படும் என்பதுடன் நட்புறவு மேலும் நெருக்கமாகும்.” என் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்

புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஏப்ரல் நடுப்பகுதியில் வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவ இதனை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திறைசேரி தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, 2023 ஏப்ரல் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், நாளை காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக புஞ்சிஹேவ தெரிவித்தார்.

“தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமா இல்லையா என, என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான நிதி கிடைப்பதைப் பொறுத்தது. நாளைய கலந்துரையாடலில் போதிய நிதியை வெளியிடுவதற்கு திறைசேரி பொறுப்பேற்றால், உள்ளூராட்சித் தேர்தலை அருகில் உள்ள நாளில் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பந்து திறைசேரியின் கைகளில் உள்ளது” என்று புஞ்சிஹேவ வலியுறுத்தினார்.

“இருப்பினும், தேர்தலுக்கு நிதியை விடுவிப்பதில் தாமும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதற்கு போதுமான பணம் இல்லையென திறைசேரி கூறலாம். அவர்களால் சில மாதங்களில் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என கூறலாம். ஆனால், விவாதத்தில் நாளை இந்த மாதிரியான சூழல் உருவாகும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை உடனடியாக பெறாவிட்டால், தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும்.

தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தக்கவைக்க வேண்டாம் என்று திறைசேரிச் செயலாளருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, திறைசேரி அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இல்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை.

திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பை 25 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் புதன்கிழமை (8) மற்றும் வியாழனில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு முயற்சி செய்யும்.

புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்களே உதவின – அலி சப்றி

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் இலங்கை

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் உள்ளது என சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று (4) தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் முடிவடைவதற்கும் முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான இறுதி இணக்கப்பாடு சாத்தியமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா சர்வதேச நாணய  நிதியத்தின் திட்டத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தி;ன் பணிப்பாளர்களிடம் கடிதம் மூலம் முறைப்படியான விண்ணப்பமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவில் கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறையை ஒத்தவாறாக இலங்கையிலும் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் கரிசனைகளை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், குறித்த சந்திப்பின்போது உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவர் வெளியிட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கியதாக எமது செயற்பாடுகளை அடுத்துவரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாக அமைவதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவம் எமக்கு கைகொடுக்கும் என்றார்.

இதேவேளை, மேலும் சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன் மற்றும் பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.