இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்து ஜனநாயக கட்டமைப்புக்களையும் தாக்கியுள்ளது – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலனித்துவ விடுதலைக்குப் பின்னர் இலங்கையில் எழுச்சியடைந்த ஊழலானது ஜனநாயகத்தின் வீழ்ச்சியுடன் சமாந்தரமாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிலைமையானது அரசியல் கட்டமைப்புகள், ஜனநாயக அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் சமூகத்தின் நெறிமுறை வாழ்க்கை ஆகியவற்றின் சிதைவுக்கு காரணமாகியுள்ளது.

சாதாரணமாக, சமூகம் மற்றும் அரசியல் வாழ்வில் ஊழலின் எதிர்மறையான தாக்கம் மிகவும் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றது. இந்நிலையானது இலங்கையின் அரசியலில் ஊழலானது ஒரு புற்றுநோயாக உள்ளது. அதேநேரம், இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயகமயமாக்கலுக்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

1990களின் முற்பகுதியில் இருந்து ஊழலை ஒழிப்பது தொடர்பில் பொது அக்கறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஊழல் ஒழிப்பு என்பது பொதுவானதொரு அரசியல் கோஷமாக மாறியுள்ளது.
இருப்பினும், இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்காக சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், அரசியல் பிரசாரம் மூலமாகவும் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இடையறாத தோல்விகளை மட்டுமே விளைவாகக் கொண்டிருக்கின்றன.

இதனால் தற்போது ஊழலுக்கு எதிரான போராட்டக் கோஷம் பொதுமக்களின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையே காணப்படுகின்றது. ஆனால், அண்மைக் காலத்தில் இலங்கை பிரஜையின் அரகலய போராட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதிலொன்று, முறைமை மாற்றம்; மற்றையது, இலங்கை குடிமக்களை உள்ளடக்கிய ஊழலற்ற அரசியல் கலாசாரம் ஆகியனவாகும்.

அத்துடன், ஊழலுக்கு இடமில்லாத புதிய அரசியல் கலாசாரத்துக்கான போராட்டத்தை, அரசியல் வர்க்கத்தை விடவும் எமது நாட்டின் குடிமக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை விட்டுவிட முடியாது. மேலும், ஊழலில் அரசியல்வாதிகளே முக்கியஸ்தர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்பதால் நாட்டின் அரசியலில் ஊழல் என்பது ஜனநாயக அரசியலின் அமைப்புக்கொள்கையாக மாறிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, அரச நிறுவனங்கள், கலாசாரங்கள், தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறைகளுக்குள் ஊடுருவியுள்ளது. இதனாலேயே ஒவ்வொரு புதிய அரசாங்கமும் ஊழல்வாதிகளின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்துக்குரிய நற்பெயரை கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

ஊழலற்றவர்களின் கூட்டணி என்ற அரசியல் தரப்பின் இணைவானது புதிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கூட்டமாகும். அதுமட்டுமன்றி, ஊழலின் பங்காளிகளாக அரசியல் வர்க்கம், அதிகாரத்துவ வர்க்கம் மற்றும் பெருவணிக வர்க்கத்துறையினர் உள்ளிட்டவர்களை கொண்ட முத்தரப்புக் கூட்டணியாகும். ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் இதனை புரிந்துகொண்டாலேயே அவற்றை அடையாளம் கண்டு, முதுகெலும்பை உடைத்தெறிய முடியும் என்றார்.

சீனா, இந்தியா கடன் மறுசீரமைப்பு உத்தரவாத கடிதங்களை இது வரையில் வழங்கவில்லை – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிபார்க்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டருக்கு வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசசொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டு;ப்பாடுகளிற்கு வழிவகுத்ததன் காரணமாக பரந்துபட்ட அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

40.6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. இலங்கை தனது கடனில் 22 வீதத்தினை சீனாவிற்கு செலுத்தவேண்டியுள்ளது.
செப்டம்பரில் இலங்கை 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியது. அடுத்த வருடம் இந்த நிதி உதவி கிடைக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இருந்து கிடைக்கும் நிதி உதவிக்கு அப்பால் நாங்கள் ஏனையவர்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றோம்,பன்னாட்டு தரப்புகளிடமிருந்து நான்கு ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டின் சில அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆர்வமாக உள்ளார்,அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பில்லியன் டொலரை திரட்டமுடியும்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இதன் மூலம் திறைசேரியையும்,அந்நிய செலாவணி கையிருப்பையும் வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திற்கான கடனிற்கு அதன் நிறைவேற்று சபை டிசம்பர் மாதத்திற்குள் அங்கீகாரமளிக்கும் என இலங்கை எதிர்பார்த்தது,எனினும் இது ஜனவரியிலேயே சாத்தியமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதிகளவு கடனை வழங்கிய சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து உத்தரவாத கடிதங்களிற்காக இலங்கை காத்திருக்கின்றது என அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளிற்கு ஆதரவளித்துள்ளன இலங்கை அவர்களுடன் தரவுகள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்துகொண்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் 70வீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பரில் 61 வீதமாக காணப்பட்டது ஆனால் பொருளாதாரம் இந்த வருடம் 8.7 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்திரதன்மை ஏற்படுகின்றது இதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டினை சர்வதேச நாணய நிதியத்தினதும் பன்னாட்டு அமைப்புகளினதும் கடன் உதவிகளுடனும் ஆரம்பிக்கவேண்டும் ஆனால் 2024லேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற தேவையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று (15) ஜனாதிபதி தலைமையில்  பதுளையில் மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதன் போது பதுளை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தின் பின் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி  தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

கனவான்களை வடக்கு, கிழக்கு ஆளுநர்களாக நியமனம் செய்ய வேண்டும் – அரசாங்க பொது ஊழியர் சங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுனர்களை உடனடியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கி விட்டு மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களை நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இன்று வியாழக்கிழமை கோரியது.

நான்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியால் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு கல்முனையில் வைத்து தெரிவித்தவை வருமாறு,

மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.

தற்போது பதவி வகித்து கொண்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்களால் மக்கள் மனங்களை வெல்லவே முடியவில்லை. அவர்களுடைய மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் உண்மையிலேயே போதாது.

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வியாழக்கிழமை (டிச. 15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் , எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை தனது சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு , சீர்திருத்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நல்லாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும் நிபுணத்துவத்தை வழங்குவது அவசியமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படைகளிலிருந்தும் 18,202 பேர் பதவி விலக விருப்பம்

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின்போது 18,202 பேர் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

இராணுவத்தில் 16,174 பேரும், கடற்படையில் 1,061 பேரும், விமானப்படை 967 பேரும் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் இராணுவத்தின் 32 அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக நேற்று(14) சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய தனிநபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா தேவை

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

(ஒக்டோபர் மாத தரப்படுத்தல்) மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 14,894 ரூபாவாக காணப்படுவதுடன்,மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 13,204 ரூபா என திணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்ட தரப்படுத்தல் அறிக்கையில் தேசிய மட்டத்திலான மாத செலவு 13,772 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஒக்டோபர் மாதம் வாழ்க்கை செலவு 13,810 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தின் தனிநபர் வாழ்க்கை செலவு 14,854 ரூபாவாக காணப்பட்டது,ஒக்டோபர் மாதம் இந்த தொகை 14,894 ரூபாவாக காணப்படுகிறது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் கொழும்பு மாவட்டத்திற்கு 14,894 ரூபா,கம்பஹா மாவட்டத்திற்கு 14,818 ரூபா,களுத்துறை மாவட்டத்திற்கு 14,496 ரூபா,கண்டி மாவட்டத்திற்கு 14,018 ரூபா,மாத்தளை மாவட்டத்திற்கு 13,999 ரூபா,நுவரெலியா மாவட்டத்திற்கு 14,552 ரூபா,காலி மாவட்டத்திற்கு 14,031 ரூபா,மாத்தளை மாவட்டத்திற்கு 13,487 ரூபா அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 13,417 ரூபா,யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 13,477 ரூபா,மன்னார் மாவட்டத்திற்கு 14,145 ரூபா,

மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 13,796 ரூபா,முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13,713 ரூபா,கிளிநொச்சி மாவட்டத்திற்கு 13,342 ரூபா,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 13,885 ரூபா,அம்பாறை மாவட்டத்திற்கு 13,920 ரூபா,திருகோணமலை மாவட்டத்திற்கு 13,455 ரூபா,புத்தளம் மாவட்டத்திற்கு 14,097 ரூபா,அனுராதபுரம் மாவட்டத்திற்கு 13,477 ரூபா,பொலன்னறுவை மாவட்டத்திற்கு 13,513 ரூபா,பதுளை மாவட்டத்திற்கு 13,912 ரூபா,மொனராகலை மாவட்டத்திற்கு 13,204 ரூபா,இரத்தினபுரி மாவட்டத்திற்கு 13,871 ரூபா,கேகாலை மாவட்டத்திற்கு 14,440 ரூபா என தரப்படுத்தப்பட்டுள்ளது,(இந்த மாவட்டங்களில் வாழும் தனி நபர் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக் கொள்ள செலவழிக்கும் குறைந்தப்பட்ட தொகை –ஒக்டோபர் மாத தப்படுத்தல்)

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து வெளியேறியது சீன உளவுக் கப்பல்

சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும் நீண்ட தூர ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் யாங் வாங்-5 கப்பலை, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா நிறுத்தியிருந்தது.