பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச்செயல்கள், விபத்துக்களுக்குக் காரணம் – சபா.குகதாஸ்

நாட்டில் பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களுக்கு காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற சமநேரம் வீதிகளின் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும்.

நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் இதுவரை கண்டறியவில்லை அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை காரணம் ஆட்சித் தரப்பில் உள்ள ஊழல் மோசடிகள் மறைக்கப்படுவதற்காக இரண்டாம் மட்ட லஞ்ச ஊழல்கள் தடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே பிரதான காரணம் ஆகும்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதில் முறையற்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதல், போதையில் வாகனம் செலுத்துதல், தண்டனைக் குரிய குற்றச் செயல்களுடன் போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி வீதிகளில் வாகனங்கள் செலுத்தும் நபர்களினால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

ஆகவே நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் – கனடா கவலை

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள், மத குருமார், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஒன்றிணைந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’, ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கொடு’, ‘எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே’, ‘நிகழ்நிலை காப்பு சட்டத்தை வாபஸ் பெறு’ போன்ற சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் நெற்றியில் கறுப்புப்பட்டி அணிந்தும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களை அடக்குவதற்காகவா நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் – சபையில் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி சீற்றம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்றைய விவாதம் இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. உண்மையிலே ஜனநாயகத்தின் தூண்களில் நாலாவது தூணான ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? அல்லது தொடர்ச்சியாக இந்த ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என கோவிந்தன் கருணாகரம் எம்.பி தெரிவித்துள்ளார்

இன்றைய தினம்(24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்த சட்ட மூலம் இந்த கால கட்டத்திலே எதற்காக கொண்டு வரப்படுகிறது? உண்மையில் இந்த சட்ட மூலத்தில் கூறிய நோக்கங்களை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் உண்டு. நமது அரசியல் அமைப்பு போதுமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணி பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயல்பாடாகவே நான் இந்த சட்ட மூலத்தை நான் நோக்குகின்றேன். மீண்டும் ஒரு அரகலய நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது, என்ற அச்சமே இந்த சட்டமூலத்தை பின்னணி என்பது எனது கருத்து.

ஆட்சித்தலைவர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை விமர்சனங்களை எதிகொள்ள தயாரில்லை. தமது ஊழல் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த சட்ட மூலம். நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி. மக்களின் சிந்தனை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கல்லறையில் வைப்பதே இச்சட்ட மூலமாகும். உண்மையிலே இந்த நாட்டில் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் ஊடக அடக்குமுறையை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.

மேலும் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரவது கருத்திட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இந்த நாட்டிலே உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் அரசினால் நடத்தப்படும் படுகொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டுள்ளார். அதிலும் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசதரப்பு படைகளினால் அல்லது வெள்ளை வான்களாலும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இந்த நாட்டிலே நடந்தேறி இருக்கிறது.

கருத்து வெளிப்பாடு தொடர்பாக இன்னுமொரு ஜனநாயகவாதி கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் இவ்வேளையில் எனக்கு ஞாபகம் வருகின்றது. உன்னுடைய கைத்தடியை சுழற்ற உனக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உன்னுடைய கைத்தடி எனது மூக்கு நுனியை தொடாதவரை என்று நான் படித்தது எனக்கு ஞாபகம் வருகின்றது.

இன்று கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துதலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டி பார்ப்பதுவுமே கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோளாக உள்ளது. அதுவும் தற்போது சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகியமை. உண்மைகளை திரிவுபடுத்துவதை ஊக்கமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துதப்பட்டுள்ளது. போலிப் பெயர்களில், போலி முகங்களில் உண்மைக்கு சவாலாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.

ஊடகவியலாளர்கள் என்று முகம் காட்டி ஊடக தர்மத்தை சிதைக்க முகம் காட்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தேவையும் அரசுக்கு உண்டு. உண்மையிலே இந்த முகநூல் வழியாகவோ அல்லது வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவோ, தனிப்பட்ட காழ்புணர்ச்சியினால் பல சமூக சீர்கேடுகள் எமது சமூகத்திலே இடம் பெறுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் குடும்பங்கள் பிரிவதும் சிலர் தற்கொலைக்கு தூண்டபடுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளது. ஆனால் அரசு தன்னை பாதுகாக்க, ஊழலை பாதுகாக்க, தனது அமைச்சரவையை பாதுகாக்க, தனது ஆட்சியை பாதுகாக்க, பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாக இது இருக்க கூடாது. இதற்கேற்ப வகையிலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளாலேயே 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு

“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.

இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.அ

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதியே நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்திற்கு நேரிடும் – கிரியெல்ல

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல்நிலை பாதிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதி;ப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கள் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்படும் – ஹர்ஷ டி சில்வா

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் பாராளுமன்றத்துக்குள் உள்ளதா,வெளியில் உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் பாராளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம் கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.

இந்த சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த சட்டமூலத்தினால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.