‘சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வையுங்கள்’: தாயார் இந்திய பிரதமர் மோடியிடம் கண்ணீர் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லொகான் ரத்வத்தையின் மீது கொலைக்குற்றச்சாட்டுகளையும் சுமத்தும்படி நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழு பரிந்துரை

ராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக்காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் நுழைபவர்கள் வெளியேறுபவர்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

2021 செப்டம்பர் 21ம் திகதி முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டது.

இந்த குழு தனது அறிக்கைகளை 60 நாட்களிற்குள் பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்தகுழுவின் பரிந்துரைகளைபார்வையிட்டுள்ள தெரிவித்துள்ள த மோர்னிங் லொகான் ரத்வத்தை இழைத்த குற்றங்கள் குறித்து நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது.

சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை ( சிறைச்சாலை சட்டம்)ஆயுதங்களை பயன்படுத்தி குற்றமொன்றை இழைத்தமை நாட்டிற்கு அவதூறு ஏற்படுத்த முயன்றமை மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை கொலை முயற்சி மரணத்தை ஏற்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டமை ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை லொகான் ரத்வத்தை புரிந்துள்ளார் என தனிநபர் குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க விஜயமொன்றிற்கு ஏற்றதல்லாத லொகான் ரத்வத்தையின் பல நடவடிக்கைகள் குறித்தும் தனிநபர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, தனது பதவி விலகல் கடிதத்தை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடக்கில் தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பௌத்த மதகுருமார்கள் சிலராலும் , தொல்பொருள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பேராசிரயர் அனுர மனதுங்கவை கடுந்தொனியில் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களில் வெளியாகிருந்த நிலையில் , அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் பேராசிரியர் மனதுக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் மனதுங்க முன்னர் களனிப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய கற்கைகளுக்கான நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். அத்தோடு தொல்பொருளியலுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியை கடிந்த ஜனாதிபதி

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.

அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது சுட்டிக்காட்டினார்கள்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?

திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

திடீர் ஜனாதிபதி ரணிலால் பேச்சு எனும் போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேற்றம்

திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேறிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் படுகொலை நிகழ்வு (10.06.2023) நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான நினைவு நாட்களை அடுத்த சந்ததி மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. மாறிமாறி வந்த கடந்தகால அரசுகள் ஆரம்ப காலங்களில் யே.ஆர்.ஜெயவர்த்தான முதற்கொண்டு இறுதியாக ரணில் விக்கிரமசிங்க வரைக்கும் ஆட்சிசெய்தவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் திட்டமிட்டு இனப்படுகொலையினை அரங்கேற்றி இருந்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.

இந்த இனப்படுகொலைகள் எல்லாம் எங்களின் தமிழ்தேசியத்தினை சிதைவடையசெய்து உணர்வுகளை அடக்கி உரிமைபோராட்டத்திற்கு எங்கள் தாயார் படுத்தல்களை அடியோடு கிள்ளிவிடுவதற்காக காலத்திற்கு காலம் திட்டமிட்ட இனப்படுகொலைகள் அரங்கேறி வந்துள்ளன.

அரசியல் ரீதியாக எங்கள் உரிமை போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட போது மூத்த தமிழ்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்டு சிங்கள பேரினவாத வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட வரலாற்றினை நாங்கள் கண்டுள்ளோம் அது இன்றுவரை தொடர்கின்றது.

அண்மையில் கடைசியாக சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளால் படுகொலை முயற்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்றுதான் தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உரிமை போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது அரசின் ஏவல்படைகள் ஊடக அச்சுறுத்தும் செயற்பாடு இன்றுவரை தொடர்கின்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

எங்கள் போராட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவும் எங்கள் உரிமை போராட்டத்தினை நாங்கள் மீண்டும் ஒருதடவை சிந்திக்ககூடாது என்பதற்காகவே மாறி மாறி வரும் அரசு செயற்படுகின்றது.

தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி முனைகின்றார். அவரால் கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா தன்னை தயார்படுத்துவதற்காக ஒருபோலி நாடகம் இந்த பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆரம்ப பேச்சு வர்த்தை தமிழ்தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில் கடைசியாக நடந்த பேச்சுவார்தை தமிழரசு கட்சி என்று ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்தகலங்களில் விடுதலை போராட்ட போரளிகளை பிரித்ததைபோல் இப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தினை மீண்டும் ஆயுதமாக காணக்கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியா – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே நடத்தப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் சேவை யாழ்ப்பாணத்திற்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காகத் துறைமுகத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காரைக்கால் இந்தியாவின் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

பயணிகள் கப்பல் சேவை முதலில் காரைக்காலில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோதும், அந்தத் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுவதால், அது பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது. கரித்தூசு அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்தோடு காரைக்காலில் இருந்து சென்னையை அல்லது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை அணுகுவதற்கான போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவானவை என்ற காரணத்தாலும் அந்தத் துறைமுகத்தைத் தடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாகப்பட்டினம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் பயணிகளைக் கையாள்வதற்கு ஏற்றது என்பதுடன் அங்கிருந்து சென்னைக்கு நாளாந்தம் இரு நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன என்றும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைஅடைவதற்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவையை நடத்துவது என்று தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான டெர்மினல் அமைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்துமாறும் இந்திய மத்திய அரசு தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கோரியது. ஆனால், இந்த ஆண்டுக்கான தமது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனி அடுத்த ஆண்டே இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு கைவிரித்துவிட்டது. இதையடுத்து இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கென 9 கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. பயணிகள் டெர்னிமல் பகுதி தயாரானதும் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து பேச்சுக்களை குழப்பாதீர்கள் – மகிந்த ராஜபக்‌ஷ

ஜனாதிபதியுடனான பேச்சுகளில் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எம். பி. கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வை காணும் செயல்பாட்டில் இறங்கியுள்ளார்.

இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.

இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்.” என்றார்.

மூன்று மாதங்களில் நாட்டின் கடன் 685. 6 கோடி டொலர்களால் உயர்வு

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685. 3 கோடி டொலர்களால் அதிகரித்துள்ளது என்று திறைசேரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த பொதுக்கடன் 8 ஆயிரத்து 470. 3 கோடி டொலர்களில் இருந்து 9 ஆயிரத்து 156. 1 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

கருவூல உண்டியல்கள், கருவூல பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் கடன் கணக்கு, ஓய்வூதிய பணிக்கொடை போன்ற பல வடிவங்களில் அரசாங்கம் மேலும் கடன் வாங்கியதால் உள்நாட்டுக் கடன் கடந்த ஆண்டு டிசெம்பரில் 4 ஆயிரத்து 12 கோடி டொலர்களில் இருந்து மார்ச் மாதத்துக்குள் 4ஆயிரத்து 689 கோடி டொலர்களாக உயர்ந்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 3 ஆயிரத்து 609 கோடி டொலர்களாக இருந்தது. முக்கிய கடனாளிகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் ஆயிரம் கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் நாடுகளிடம் 454 கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளிடம் 678 கோடி டொலர்கள் மற்றும் வணிகக் கடன்கள் ஆயிரத்து 470 கோடி டொலர் கடன் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களில் 70 வீதம் நிலையான வட்டி வீதத்தையும் 29 வீதம் தளம்பல் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனா செல்லும் முன் அழைத்தது இந்தியா; ஜூலை 21ஆம் திகதி ரணில் – மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார்.

இலங்கையின் தலைவராக யார் தெரிவானாலும் அவர் இந்தியாவுக்கு முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வது சம்பிரதாயமாகும். இது வழக்கமானதாக இருந்தாலும் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா அழைக்கவில்லை. இதனால், அவர் தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. பல தடவைகள் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது சாத்தியமாகவில்லை.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார் என்று தெரிய வருகிறது. இதேபோன்று அமைச்சர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். சீனாவின் பெல்ட் அன்ட் றோட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ளார். இந்த மாநாடு ஒக்ரோபரில் நடக்கிறது. இதில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திகதிகளை இந்தியா வழங்கியுள்ளதாக அறிய வருகின்றது.

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை தலைவர் சுபாஸ்கரனால் நிதியுதவி

இலங்கை அரசாங்கத்தால் 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன்) லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாககளை கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலம் சிறைகளில் தம் வாழ்வைத் தொலைத்த இவர்கள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதை உணர்ந்த லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.