தமிழ்க் கட்சிகளை நோக்கி ரணில் அடித்த பந்து

புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதன்மூலம், தமிழ்க் கட்சிகளை நோக்கி, பேச்சுவார்த்தை என்கிற பந்தை, ரணில் உதைத்திருக்கின்றார்.

இந்தப் பந்தை தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாக கையாண்டு, ரணிலுக்கு எதிராக க ோலாக மாற்றப் போகின்றன என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை, தென்இலங்கையின் ஆட்சித் தரப்புகள் எப்போதும் விரும்புவதில்லை. ‘ஒரே இலங்கை; ஒரே ஆட்சி; பௌத்தத்துக்கு முதலிடம்’ என்பனதான், தென்இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. இதைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த முன்முயற்சிகளையும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைப்பார்கள்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டாலன்றி, உள்ளக இன முரண்பாடுகள் குறித்தோ, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்தோ, தென் இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தலைப்பட்டதில்லை.

சர்வதேச அழுத்தம் அல்லது போர் முனையில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களில், சமாதானப் பேச்சு என்கிற உத்தியைப் பயன்படுத்தி, நெருக்கடிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்திருக்கிறார்கள். மற்றப்படி, தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் எழுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை.

இதற்கு தென்இலங்கையை ஆண்ட எந்தவோர் அரசியல் தலைவரும் விதிவிலக்கில்லை. டீ.எஸ் சேனநாயக்கா தொடங்கி இன்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரையில் இதுதான் நிலைமை.

இப்படியான நிலைமையில், தமிழ்க் கட்சிகள் எல்லாமும் இணைந்து ஒன்றாக வந்தால், அரசாங்கம் பேச்சுக்கு தயார் என்பது, இலகுவாகத் தப்பிக்கும் ரணிலின் உத்தியாகும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடித்திருக்கின்ற பந்தானது, தமிழ்ககட்சிகள் என்கிற பொதுப் பரப்பை நோக்கி அடிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்டாலும், அது உண்மையில், தமிழ்த் தேசிய கட்சிகளை நோக்கி அடிக்கப்பட்ட பந்தாகும்.

ஆட்சியில் பங்கெடுத்திருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, சிவநேசதுரை சந்திரகாந்தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடியவை. இவை, அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை கொண்ட தரப்புகள் அல்ல. இந்தக் கட்சிகளின் அதிகபட்ச இலக்கு, பிரதேச அபிவிருத்தி என்பதுதான். அதற்கு ஆட்சியில் பங்காளியாக இருக்க வேண்டுமென்பது, இவர்களின் அரசியல் சித்தாந்தம்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியைச் சார்ந்திருப்பது. அதுதான் அடிப்படை. அந்த அடிப்படைக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியோ எதுவாக இருந்தாலும், அரசியல் தீர்வு பற்றி சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று, நேரெதிரான செயற்பாட்டு நிலைகளைப் பேணுபவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, கூட்டமைப்பு மக்களை காட்டிக் கொடுப்பதாக கூறிக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் கண்டது. அதுபோல, கூட்டமைப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் களம் கண்ட போது, ஒரு கட்டத்தில் அவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது. அடுத்த சில மாதங்களில், முன்னணியும் விக்னேஸ்வரனும் முட்டிக்கொண்டு, தனித்தனியாகக் களம் கண்டன.

அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயே, மூன்று பங்காளிக் கட்சிகளும் முரண்பாடுகளின் உச்சத்தின் நின்று மோதிக் கொள்கின்றன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், அதன் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொரு தரப்பும், நவக்கிரகங்கள் போன்று முகங்களை எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்த, கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தாலே, டெலோவும் புளொட்டும் வருவதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவரே, “சம்பந்தனின் அழைப்பை கருத்தில் எடுக்கத் தேவையில்லை; யாரும் பேச்சுக்கு வர வேண்டாம்” என்று பங்காளிக கட்சிகளிடம் அறிவிக்கின்றார்.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புடன் இணைந்து, பேச்சு மேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.

அடிப்படையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள், தங்களை முன்னிறுத்துவதைத் தாண்டி, எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இவர்களைத் தாண்டி, கட்சிகளைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு, அவசியமும் அவசரமுமானது என்பதுதான் நிலைமை.

ஆனால், தன்னால் முடியாது என்றால், மற்றவர்களாலும் எந்த அதிசயமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற மனநிலை, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.

ஒன்றாகக் கூடி, ஒன்றாக முடிவெடுத்து, மக்களிடம் அறிவித்துவிட்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல்வாதிகளை, எந்தவொரு தரப்பினாலும் திருத்திவிட முடியாது. அவர்களைத் தேர்தல் என்கிற புள்ளியில் வைத்து, மக்கள் தோற்கடித்து வெளியேற்றினால் அன்றி, இவர்களை நேர்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

அரசியல் ஆர்வலர்கள், கட்சி அபிமானிகள், புத்திஜீவிகள் தொடங்கி யார் யாரோவெல்லாம், “தமிழர் நலனை முன்னிறுத்திய நிலைப்பாடுகளுக்கு ஒன்றிணைந்து வாருங்கள்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி விட்டார்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்வதோடு, விடயத்தை கடந்துவிடுகிறார்கள்.

எம்.ஏ சுமந்திரனோ, சி.வி விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பாராளுமன்றத்துக்குள் இனி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அதற்கான பதிலை ஏற்கெனவே ரணில் வழங்கிவிட்டார்.

பாராளுமன்றத்துக்குள், ஹன்சாட்டில் பதியப்படும் உரைகளை மாத்திரம் நிகழ்த்துவதோடு பணி முடிந்துவிட்டதாக, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ விலக முடியாது. ரணில் இப்போது அடித்திருக்கின்ற பந்து கூட்டமைப்பையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியையோ நோக்கித் தனித்து அடிக்கப்பட்டதில்லை. மாறாக, அனைவரையும் நோக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை, யாரும் தனித்துக் கையாளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. அப்படி நடந்து கொண்டுவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நின்று, அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உணர்ச்சிபூர்வ உரைகளை நிகழ்த்த முடியாது. அதனால், பலனும் இல்லை.

அப்படியான நிலையில், ரணிலின் பந்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் தலைவர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு, காழ்ப்பு மனப்பான்மைகளைக் கடந்து நின்று கையாள வேண்டும். அதன்மூலமே ரணிலின் தந்திரத்தை கடக்க முடியும்.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றும் இப்போது தனி நாட்டுக்கோரிக்கையோடு இல்லை. தேர்தல் மேடைகளில் கூட, சமஷ்டி தீர்வு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் பேசுவதில்லை.

வேறு விடயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்ட உரைகளை நிகழ்த்தினாலும், தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற புள்ளியை தாண்டுவதில்லை. அப்படியான நிலையில், தங்களுக்கு இடையில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எழுத்து வடிவிலான இணக்கத்தை தமிழ்க் கட்சிகள் காணுவதற்கு முயல வேண்டும்.

அதன்போது, சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தி, இராஜதந்திர நோக்கு பற்றியெல்லாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதன்மூலம், தேர்தல்களில் மோதிக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளைக் பெற்ற கட்சிகளாக அவை நடத்து கொள்ள வேண்டும்.

அதுதான், ரணிலுக்கு எதிராக கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதற்படி. அது நிகழவில்லை என்றால், தீர்வு குறித்த அதிசயம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை, முளையிலேயே கிள்ளுவது போன்றதாகும்.

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (24)  ஆஜராகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக எழுத்துமூலம்   டிசம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

கலாநிதி ஜெகான் பெரேராவில் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் முழுமனதுடன் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ஜனாதிபதியின் முன்னைய ஆட்சிக்காலங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவையாக அமையவில்லை.

2015 – 2019 காலப்பகுதியில் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டை உள்ள டக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க பிரத மர் என்ற வகையில் உறுதியளித்தார். ஆனால், 2018 பிற்பகுதியில் 52 நாள் சதி முயற்சியின்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவரை நியாயமில்லாத வகையில் பதவி நீக்கம் செய்தார். அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான போராட்டத்தில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரா. சம்பந் தன், எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் முன் னின்றார்கள். விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றபோது அரசியல மைப்பு சீர்திருத்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என்ற ஒரு எதிர் பார்ப் பும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதும் நடக்கவில்லை. மாகாணசபை தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்கு புறம்பாக புதிய உண்மை மற்றும் நல் லிணக்க செயன்முறையொன்றுக்கும் தலைமை தாங்கி வழிநடத்த விக்கிரம சிங்க முன்வந்திருக்கிறார். இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை அமைப்பதற்கு தென்னா பிரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோ சாவை சந்தித்து அவர் கலந்துரையாடினார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தனது கோட்பாடு குறித்து சிவில் சமூக தலைவர்களுடன் அண்மையில் கருத்துக்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி யோசனைகளை முன்வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆணைக்குழுவை வெற்றிகரமான தாக்குவதற்கான உறுதியான அரசியல் துணிவாற்றல் இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆயுதப்படைகளும் அவற்றின் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதனால் உண்மை ஆணைக்குழு கோட்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்சமயம் இலங்கை ஆயுதப்படைகளின் சகல பிரிவுகளுமே சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் சில வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஆணைக்குழு வொன்று நம்பகத்தன்மையுடையதாக வும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாகவும் அமைவதற்கு கருத் தொருமிப்பைக் காண்பதில் வெளியுறவு அமைச்சர் அக்கறை கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தாங்கள் செய்வதை உண்மையில் அக்கறையுடனும் நேர்மையாகவுமே செய்வதாக பொதுமக்களை நம்பவைப் பதில் பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. தென்னாபிரிக் காவின் நல்லிணக்கச் செய்முறைகளைப் பற்றி ஆராய தூதுக்குழுவொன்றை அந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. அத்தகைய ஆய்வுகள் கடந்த காலத்தி லும் மேற்கொள்ளப்பட்டன.

சனத்தொகையில் ஒரு பிரிவினருக்கு ஒரு நேரத்தில் உண்மையையும் நல்லி ணக்கத்தையும் கொடுக்கமுடியாது. உண்மையையும் நல்லிணக்கத்தையும் பிரிவு பிரிவாக செய்யமுடியாது. அவற்றை தமிழர்களுக்கு கொடுத்து சிங்களவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லாமல் செய்யமுடியாது. இரு மாணவ தலைவர் களை நீண்ட நாட்களாக தடுத்துவைத் திருப்பது உண்மையும் இல்லை, நல்லிணக் கமும் இல்லை. அரசாங்கத்தின் நீதியுணர்வு சமத்துவமானதாக இருக்க வேண்டும். சகல சமூகங்கள் மீதுமான கடப்பாட்டை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.

தேர்தல்களை ஒத்திவைத்தல்

ஊழல், வளங்களின் முறைகேடான ஒதுக்கீடை ஒழிக்கக்கூடியதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடியதுமான முறைமை மாற்றம் ஒன்றுக்கான போராட்ட இயக்கத்தின் கோரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவில் வெளிப்படையாக காண்பிக்கப்படாவிட்டாலும் அந்த கோரிக்கை மிகவும் பரந்த ஒரு தளத்தைக் கொண்டதாகும். இரு மாணவ தலைவர்களையும் மற்றையவர்களையும் போன்று கைது செய்யப்பட்டு நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படக்கூடும் என்ற பயத்தில் தான் தாங்கள் அண்மைய போராட்ட இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று மட்டக்களப்பில் சிவில் சமூக சந்திப்பொன்றில் கடந்தவாரம் மௌலவி ஒருவர் தெரிவித்தார்.

மாணவ தலைவர்கள் நீதியற்ற முறை யில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மிகவும் பெரியவையாக இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றும் அவர் சொன்னார். இத்தகைய சூழ்நிலையில் மாற்றத்தை விரும்புகின்ற போதிலும் கைது செய்யப்படுவதை விரும்பாத மக்கள் தங்களது விருப்பங்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த தேர்தல்களை மாத்திரமே எதிர்பார்த் திருக்கமுடியும்.

நாணய நெருக்கடி ஆபத்தில் இலங்கை ஜப்பானிய வங்கி எச்சரிக்கை

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது.நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை,எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியனவே நாணயப் பிரச்னையில் ஆபத்தில் இருப்பதாக குறித்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, நாணய மாற்றுவிகிதம், நிதி உறுதிப்பாடு மற்றும் வரி விகிதங்கள் என்பன இதன்போது கருத்தில் எடுக்கப்படுகின்றன.

நொமுரா வங்கியின் மதிப்பெண்களின் அடிப்படையில், எகிப்துக்கு மோசமான மதிப்பெண்ணாக 165 வழங்கப்பட்டுள்ளது. ருமேனியாவுக்கு 145 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை, துருக்கி ஆகியவற்றுக்கு 138 மதிப்பெண்கள்வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான், மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் அரசமைப்பு பிரதிநிதியாக சித்தார்த்தன் எம்.பி

அரசமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம சித்தார்த்தன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் எடுத்திருந்தது.

21ஆவது திருத் தத்தின் மூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள அரசமைப்பு பேரவையில், 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். சபாநாயகர் இதன் தலைவராக செயல்படுவார். பதவி வழியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலா ஒரு பிரதிநிதியை பெயரிடுவர். பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும், சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் அரசமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பர்.

இந்த வகையில், பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினராக த. சித்தார்த்தனை நியமிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றகுழு ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை கொண்டு வரலாம் – பிரதமர்

அரசியலமைப்பின் பிரகாரம் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மக்களாணை இல்லை என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை அவர்கள் தாராளமாக கொண்டு வரலாம்.

எந்நிலையிலும் பாராளுமன்ற ஐனநாயகத்திற்கு மதிப்பளித்து செயல்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்கு அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு,அரச செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் சமூக கட்டமைப்பில் காணப்பட்ட எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசை யுகத்தை மறக்க முடியாது.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் அரச கட்டமைப்பிற்கு சவால் விடுத்தது. இவ்வாறான கடினமான சூழ்நிலைகளை ஒருபோதும் மறக்க முடியாது.

ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதுவா ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது இவர்கள் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.

நாட்டு மக்களின் சர்வஜன வாககுரிமையை பாதுகாக்க அரசாங்கம் பெர்றுப்புடன் செயற்படுகிறது. நாட்டு மக்களின் வாக்குரிமையினால் தோற்றம் பெற்ற ஸ்தாபனங்களை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் ஒருமித்து செயற்படாமல் இருந்தமை கவலைக்குரியது. ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

பாதுகாப்பு தரப்பினரினால் பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல்களை பிற்போட்டவர்கள் தற்போது தேர்தல் உரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்ட முடியாது,ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது,இருப்பினும் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு உண்டு என்றார்.

மத்திய வங்கியில் ஏனையோரின் தலையீடுகளை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.

அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.

ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களை பார்வையிட 800 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வர தீர்மானம் – ஹரின்

பழங்கால புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக 78 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த பயணிகள் ஏனைய பிரசித்தி பெற்ற இந்து மதத் தலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

அத்தகைய 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு குழுக்களாக வருகை தரவுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கத்தால் சம்பூரில் குளம் புனரமைப்பு

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ” சமூக அடிப்படையிலான சிறு குள புனரமைப்பு” திட்டத்தின்கீழ் சம்பூர் பகுதியில் உள்ள பெரியகுளம் எனும் குளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இக்குளத்தை “பீஸ் விண்ட்ஸ்” நிறுவனம் முன்னின்று சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.

இக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதன் மூலம் சம்பூர் பகுதியைச் விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பூர் கமநலசேவை நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் பிரதேச செயலக உயரதிகாரிகள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.