இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வந்தடைந்தார்

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானுகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (20) கொழும்பை வந்தடைந்தார்.

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கையாற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமைதாங்கியுள்ளார்.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இலங்கை – இந்திய புதிய இணைப்புகள் குறித்து டெல்லி கூடுதல் ஆர்வம் செலுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றல் சக்தியை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் திருகோணமலையில் இந்தியா திட்டமிட்டுள்ள உத்தேச ஆற்றல் சக்தி மையம் தொடர்பான விடயங்களும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி திட்டமும் இரு நாடுகளினதும் அவதானத்திற்கு உட்பட்டவைகளாகும்.

மேலும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார ரீதியிலான இணைப்புகளை இருநாடுகளுக்கும் இடையில் வலுப்படுத்தி கொள்வதில் டெல்லி ஆர்வமாக உள்ளது..

இருப்பினும் திட்டங்களை முன்னெடுப்பதில் மந்தகதியான செயல்பாடுகளே காணப்படுகின்றன. இவற்றை சீர் செய்து இலங்கையில் உத்தேசிக்கட்டுள்ள இந்திய திட்டங்களை துரிதப்படுத்துவது புதிய இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்கும் சந்தோஷ் ஜா முன்பாக உள்ள இலக்குகளாகும்.

எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும் 2017 – 2019 ஆண்டுகளில் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயல்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க – இந்திய அணுவாயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியினால் 500 மில்லியன் டொலர் இரண்டாம் கட்டமாக விடுவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான நிதியுதவியில் இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர்களை உலகவங்கி விடுவித்துள்ளது.

இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய ‘மீளெழுச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான அபிவிருத்தி கொள்கை செயற்திட்டத்துக்கு’ கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது.

நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையிலான தொடர் உதவித்திட்டங்களில் முதலாவது திட்டம் இதுவாகும்.

இத்திட்டமானது வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பதாக நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகள் மற்றும் அடையப்படவேண்டிய இலக்குகளைக் கொண்டிருக்கின்றது.

அதன்படி இத்திட்டத்தின் கீழான முதற்கட்ட நிதியாக 250 மில்லியன் டொலர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட மறுசீரமைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டை அடுத்து இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர் நிதியை உலகவங்கி விடுவித்திருக்கின்றது.

‘பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, தனியார்துறை வளர்ச்சி மற்றும் நிலைமாற்றம் ஆகியவற்றுக்கும் பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியான தொடர் மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.

அதன்படி உலகவங்கியின் இந்த உதவி செயற்திட்டமானது பொருளாதாரத்தின் முழுமையான மீட்சியை உறுதிப்படுத்தல், பொருளாதார வளர்ச்சி இயலுமையை மேம்படுத்தல், தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் அரசாங்கத்துக்கு உதவுகின்றது’ என உலகவங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் எச்.ஹடாட்-ஸேர்வோஸ் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் என்பதால் ஒருவர் இலங்கைக்கு எதிரானவராக இருக்க போவதில்லை

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தவர்களை இந்நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கொண்டு, அவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கான இடமாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டுமெனில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற தேசிய குடிபெயர்ந்தோர் தின நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்திருப்போர் தொடர்பான அலுவலகத்தின் https://oosla.lk/ உத்தியோகபூர்வ இணையத்தளமும் சாகல ரத்நாயக்கவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர் லக்ஸ்மன் சமரநாயக்க சிறப்புரை ஆற்றியதோடு, அவர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகத்துடன் இணைந்து ஆற்றும் பணிகளைப் பாராட்டும் வகையில், சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க.

”இன, மத பேதமின்றி வேறு நாடுகளில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் அடங்குவர். கடந்த காலங்களில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இடையில் வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. நாட்டின் அபிவிருத்திக்கு அவர்கள் பங்களிப்புச் செய்ய விரும்புகின்ற போதும், அதிகாரத்துவ தடைகள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் விரிவான பொருளாதார செயற்பாடுகளுக்கு அமைவாக குடிபெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகமான OOSLA இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விரிவான களமொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறது.

இரட்டை பிரஜாவுரிமை, கடவுச் சீட்டுக்களைப் புதுப்பித்தல் அவர்களின் தொடர்புகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளல், வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களுக்கு உதவுதல் என்பன மேற்படி அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாகும். இலங்கையின் அபிவிருத்திக்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய களமொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துகொண்டுள்ளோம்.

மக்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி 2024 ஆம் ஆண்டு அல்லது 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் குறைவடைந்து விரைவான அபிவிருத்தியை நோக்கி நகர முடியுமென எதிர்பார்க்கிறோம். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் குறித்த புரிதலுடன் ஒத்துழைப்பு வழங்கினால் அந்த பணி கடினமானதாக அமையாது. அதற்கு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சிறந்த தொடர்பாடல் மிக அவசியமானது.” என்று சாகல ரத்னநாயக்க தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கான தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் பங்குபற்றிய இந்நிகழ்வில் குடிபெயர்ந்த இலங்கையர்கள் பலரும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இணைந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

Posted in Uncategorized

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்க யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கை அன்னையின் சீற்றத்தால் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு , மன்னார் வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பெருமளவு மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ உதவிகள் முழுமையாக போதாமையால் தன்னார்வு அமைப்புக்கள் , அறக்கட்டளைகள் , கொடையாளர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் தொற்றா நேயாளர்களுக்கான உதவிகள் மிக முக்கியமானவை.

டெங்கு , வாந்திபேதி., வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவி செய்ய உதவும் கரங்கள் கைகொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரி செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணக்கார வர்க்கம் – சம்பிக்க

மக்கள் மீதான வரியை அதிகரிக்காமல் நாட்டின் வருமானத்தை 50 வீதத்தால் உயர்த்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் நேற்று(17) கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணக்கார வர்க்கம் இந்த நாட்டில் இருப்பதாகவும், அந்த வகுப்பினரின் வருமானத்தை கண்டுகொள்ள அரசு பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செல்வந்தர்களின் வருமானம் பதிவாகும் வகையில் ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டால், புதிய வரிகள் தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் சுமார் 2,500 பேர் வரை இந்த நாட்டில் இருப்பதாகவும்,

அதில் சிக்காதவர்களும் சுமார் 2,500 பேர் இருப்பதாகவும்,

அவர்களின் உண்மையான வருமானத்தை இன்னும் ஒரு மாதத்தில் தெரிவிக்கும் முறையை தயார் செய்ய முடியும் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து மக்களிடமும் பெறுமதிசேர் வரியை மாத்திரம் 30,000 ரூபா அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்,

மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில் இவ்வாறான வரியை செலுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய மட்ட போட்டியில் யாழைச் சேர்ந்த இளைஞன் சாதனை

மலேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் கடந்த 10ம் திகதி மலேசியாவின் ஜோகூர் பாருவில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த புசாந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை

பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  தம்மிக்க பெரேராவை   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள்  வெளிவந்துள்ளன.

பசில் ராஜபக்ஷவுக்குப் பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் எனவும்  அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து   நிர்வாக  உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர். இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய  அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவே பொருளாதார நெருக்கடியின் போது முதலில் உதவிக்கரம் நீட்டியது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியா ஒரு பிராந்திய தலைவர்மாத்திரமில்லை அதன் அண்டைநாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதிக்கொண்டிருந்தவேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவமுன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் இயல்பானநன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்ள நாடுகளே

உங்களிற்கு தெரியும் கடந்த சில வருடங்களாக – நாங்களே கொவிட்டினால் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்றால் எங்களின் அயல்நாடுகள் மிகச்சிறியவை,அவர்களிடம் எங்களை போல கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை.

நாங்கள் முன்வந்து உதவியிருக்காவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை பெறும் விடயத்தில் அவர்கள் கைவிடப்பட்டிருப்பார்கள் .

இலங்கை போன்றதொரு நாடு மிகமோசமான ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது,

உதவிசெய்யவேண்டிய உலகமும் உலக நாடுகளும் நிறுவனங்களும் என்ன செய்வது என்ற தங்களிற்குள் விவாதித்துக்கொண்டிருந்தவேளை இந்தியாவே உதவி வழங்கியது.

எங்களின் நீட்டப்பட்ட கரங்களே இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான அவசியமான உதவியை வழங்கியது. நாங்கள் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

எங்கள் அயல்நாடுகளிற்கு சென்றவர்கள் ஏனைய மாற்றங்களை கட்டமைப்புமாற்றங்களை அவதானித்திருப்பீர்கள் -இடம்பெறுகின்ற ஆழமான மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள்,

உங்களால் இலகுவாக பயணம் செய்ய முடியும்,புகையிரதபாதைகள் ஏறு;படுத்தப்பட்டுள்ளன, அதிகளவு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன -அவர்களும் எங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏனைய பிராந்தியம் முழுவதையும் உயர்த்திவிடும் வளர்ச்சிப்பாதையில் செலுத்துவதில் உதவுகின்றது.

நெருக்கடியான தருணங்களில் உங்களிற்குஇந்தியா உள்ளது என்பதை அயல்நாடுகளிற்கு நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் தடுப்பூசியாகட்டும் உணவாகட்டும் நிதி உதவியாகட்டும அத்தியாவசிய பொருட்கள் ஆகட்டும்.

இது அயல்நாடுகளிற்கு பெரும் செய்தியை சிறந்த செய்தியை சொல்கின்றது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என பதில் பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதோடு நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து ஒழிக்க அவ்வாறு செய்ய முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்கிறோம். பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்ய எவரும் செல்ல முடியாது.

பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் அதனை தடுப்பதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம புறங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் பலரே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை கைது செய்ய முடியாது என பொலிஸார் கூறுகின்றனர்.

அவர்கள் சமூகத்தில் பெரிய பொறுப்புகளிலும், சமூக செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை என கூறுகின்றனர்.

பொலிஸாருக்கு முடியவில்லை எனில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கூறுங்கள். அது முடியாமல் போனால் என்னுடைய வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறையிடுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1091 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என்றார்.

தென்னிந்தியாவில் ஈழத்துச் சிறுமி சாதனை

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் ஈழத்து சிறுமி உதயசீலன் கில்மிசா வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியானது நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து கில்மிசா மற்றும் கண்டி, புஸ்ஸல்லாவை நயப்பனவிலிருந்து அசானி ஆகிய இருவரும் இந்நிகழ்சசியில் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு கில்மிசா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரமாண்டமான இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் வெற்றிப் பெற்ற கில்மிஷாவிற்கு இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் வந்து வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்துள்ளார். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாகியுள்ளார்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றார்.

இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றார். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்கள். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். கில்மிசாவுக்கு வைத்தியராக வேண்டும் என்பது தான் கனவு. அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு வைத்தியராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.