தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என தென் இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது- முன்னாள் யாழ்.பல்கலை துணைவேந்தர்

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள் எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ், நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் துணைப் பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் மேய்ச்சல் தரவைகள் வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்கப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி காணி அற்றவர்களாக்குவதே திட்டம்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வெலி ஓயா பகுதி மற்றும் முழுதாக சிங்கள மக்களுக்கே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.

இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம்; குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சம்பிக்க ரணவக்க

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை வெலிகம ஹோட்டலில் நடைபெற்ற 43வது பிரிவின் பணிகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் புதிய கட்சி குறித்து தெரிவித்தார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை.

மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி ஏப்ரல் 29 இல் காரைக்கால் படகுச்சேவை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.

திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.

காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இந்தியா

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும் இந்திய திட்டமொன்றை கோரியுள்ளதுடன், அதற்கு வெளியில் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையில், எரிபொருள் விநியோகம், விநியோகம் மற்றும் விற்பனையை 3 சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே சிலை வைக்கப்படுமாம்!

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று (02) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார்.

மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்துடன், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (03) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலில் வழிபாகளில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கோரினார்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

 

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா உட்பட பலர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

தமிழ் பண்பாட்டு அழிப்பிற்கு எதிராக வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் போராட்டம்!

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்திற்கு வந்த போதும், பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் புறப்பட்டு சென்று விட்டார்.

அத்துடன், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள், சைவமகாசபை செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட 22 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், மற்றும் விதுசன்,  நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

இந்தியப் பெருங்கடலில் நுழைந்துள்ள சீனக் கப்பலை உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தியா

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியோன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் டிசம்பர் 29ஆம் திக இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன் தொடர்புடைய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் சீனக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றபோது புதுடெல்லியால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இலங்கை, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சீனக் கப்பல்கள் இந்த பகுதியில் சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தளம் கூறுகின்றது.

இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனப் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கடற்படை அதன் கடல் பிரசன்னத்தையும் கண்காணிப்பையும் தீர்விரப்படுத்தியுள்ளது.

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் தேர்தல் – ஆணைக்குழு

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்திப்பதற்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து

தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

உலக ஜனநாயக தினத்திற்கு முன்னரேனும் தேர்தல நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாமை பாரிய குற்றம் என குறிப்பிட்ட அவர், இது கவலைக்குரிய விடயம் என்றும் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான இயலுமை காணப்படுகிறது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

நிதியை சேகரித்து தேர்தலை நடத்த முடியாதெனில் , கட்டம் கட்டமாவேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அற்றுப்போகும் அபாயம் உள்ளது என்பதனால் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.