சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான தலையீடுகளை நிறுத்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பவானி பொன்சேகா, ஒஸ்டின் பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, ஜயம்பதி விக்ரமரத்ன, லயனல் போபகே, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, தீபிகா உடகம உள்ளடங்கலாக 83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிவிட்டது என்ற பொய்யான காரணியின் அடிப்படையில் நீதிமன்றக்கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எமது நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியிலும், நாட்டுமக்களின் உரிமையிலும், ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்படும் இடையூறாகவே அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதேவேளை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள், சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் உரிய தினத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் திட்டத்தைக் குழப்பும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது பிரயோகிக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அரசாங்கம் அதன் ‘தாக்குதல்களுக்காக’ நீதிமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கின்றது.

இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது. எந்தவொரு ஜனநாயக சூழலிலும் தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் தெரிவை மிகவும் அமைதியானதும், செயற்திறனானதுமான முறையில் வெளிப்படுத்துவதற்கு மக்கள் கொண்டிருக்கும் வாய்ப்பான தேர்தலின் ஊடாக அவர்களது குரல் ஒலிப்பதை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.

இவையனைத்தும் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின்கீழ் இலங்கையின் ஜனநாயகம் மிகமோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையே காண்பிக்கின்றது. எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மீண்டும் மிகமுக்கியமான விடயமாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடமும், தேர்தலை நடாத்துவதற்குப் பொறுப்பான அனைத்துத்தரப்புக்களிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து மாநகரசபையை வெளியேற ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக்காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது.

அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இந்தியாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை செலுத்திய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உருவாக்கிய நியதி சட்டங்களை ஆளுநர் இரத்து செய்யவேண்டும்; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உருவாக்கிய இரண்டு நியதிச் சட்டங்களையும் மே 24ஆம் திகதிக்கு முன்பாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதேசமயம், மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று வடக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக அவரின் பிரதிநிதி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க நியதி சட்டம், சுற்றுலா அலுவலக நியதிச் சட்டம் என்ற இரு நியதிச்சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தார். வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இல்லாத நிலையில் வடக்கு ஆளுநர் இந்த நியதிச் சட்டங்களை உருவாக்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் செய்தமை சட்ட விரோதமானது என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம். பியுமான எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதி, “நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று சட்ட மா அதிபர் மூலம் வடக்கு ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நியதி சட்டங்களை நடைமுறைப்படுத்தமாட்டார் என்று எழுத்துமூலம் ஆளுநர் சட்டமா அதிபருக்கு உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்காமல் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதியரசரை கோரினார்.

ஆளுநரின் உறுதியளிப்பை ஏற்று வழக்கை கைவிட முடியாது. ஆளுநர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு நேரடியாக வெளிப்படுத்தினால் மட்டுமே அதனை ஏற்று வழக்கை கைவிடலாம் என்று வழக்காளி தரப்பில் வாதாடிய சட்டத்தரணி தெரிவித்தார். இதையடுத்து நீதியரசர், அடுத்த வழக்கு விசாரணையின்போது – மே 24ஆம் திகதிக்கு முன்பாக, வடக்கு ஆளுநர் தான் அறிவித்த இரு நியதி சட்டங்களையும் இரத்து செய்து வர்த்தமானி மூலம் அறிவித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

கூட்டமைப்பின் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக்கொள்ளாமை தவறான சமிக்ஞைகளை அனுப்பும்:சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தர்மலிங்கம் சித்தாத்தனை 10வது உறுப்பினராக உறுதிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான கூடுதல் சுயாட்சியை IMF நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும்

இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை.

எந்தவிதமான அளவீட்டின்படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும்.

அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு என்றும் ஹரி ஆனந்த சங்கரி கூறியுள்ளர்.

எனவே, சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று ஹரி ஆனந்த சங்கரி கோரியுள்ளார்.

கச்சதீவில் அமைக்கப்பட்ட அரச மரத்துடன் கூடிய பாரிய பெளத்த விகாரை

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது . ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.

“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும், இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக நாடாளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.

25,000 இராணுவத்தினர் பணியிலிருந்து விலகினர் – பொன்சேகா

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக, நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.