சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி இரண்டாவது காலாண்டிலேயே கிடைக்கலாம் – அறிக்கை

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதல் 2023 இன் இரண்டாம் காலாண்டு பகுதியிலேயே சாத்தியமாகும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான எதிர்வுகூறலிற்கு வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் இதனால் வர்த்தக கடன் வழங்குநர்களுடான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே கிடைக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடன்மறுசீரமைப்பு குறித்த உடன்படிக்கைகள் 2023 இறுதியிலேயே என எதிர்பார்க்கின்றோம் எனவும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்திக்கலாம் எனவும் ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் எதிர்வுகூறியுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை – மின்சார சபை தலைவர்

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும்.

நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டமைப்பு சேவையை வினைத்திநனாக பேணுவதற்கும், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்கும் வகையில் 20 கொள்கை திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சிடம் முன்வைத்தோம்.

அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் காலத்திலும்,வறட்சியான காலத்திலும் மின்னுற்பத்தியை தடையின்றி முன்னெடுத்தல், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் என 20 திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

இந்த 20 திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நிலக்கரி கொள்வனவிற்கான நிதியை திரட்டிக் கொள்வது பாரிய நெருக்கடியாக உள்ளது.பணம் செலுத்தி 21 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும், கடன் பற்று பத்திரரம் ஊடாக 12 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அந்த கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் நிலக்கரியை தரையிறக்க முடியாத நிலை காணப்படுகிறது.

மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய ஒரு சதம் கூட இனி வழங்க முடியாது என அரசாங்கம் கடந்த முதலாம் திகதி தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை இறக்குமதி செய்ய நிதியை திரட்டிக் கொள்வது சிரமமாக உள்ளது.

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் உரிய தரப்பினர் அதற்கான வளத்தை வழங்க வேண்டும்.இல்லாவிடின் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

மலையக தியாகிகளை நினைவு கூர்ந்தனர் யாழ் பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவுகூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளபடுத்துகின்ற நிலையில் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையின் பேரில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது உயிரை தியாகம் செய்த முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம் ஜனவரி 10 ஆம் திகதி நடந்தது.

மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த இத்திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை டெவனில் நடைபெற்ற நினைவேந்தலின் போது தீர்மானிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு மஸ்கெலியாவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு பத்தனை சந்ததியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு கொட்டக்கலை கொமர்சியல் பகுதியில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையப்படுத்தியே குறித்த நினைவேந்தல் யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்க்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதன்பொழுது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தின்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் அவதானம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களை பாதுகாக்க கடன்களை ஒத்திவைக்கும் சாத்தியகூறுகள் ஆராயப்படும் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தொழில் முயற்சியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) பிற்பகல் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும்  அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலிறுத்தி புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி மாதவமேஜரின் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

ஓரணியில் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, முன்னாள் போராளி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னாள் போராளியான மாதவமேஜர் கடந்த 9ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு மறுநாள், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்தது. இந்த நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான
ரெலோவின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் க.சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்திற்கு வந்தனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்வை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், 6 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும், தொடர்ந்தும் கட்சிகளை இணைத்துக்கொள்வோம், அதனால் மாதவமேஜர் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ் கட்சிகள் ஓரணியாக செயற்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் உறுதியுடன் செயற்பட வேண்டுமென மாதவமேஜர் விடுத்த கோரிக்கையை ஏற்று, எழுத்துமூலம்
உத்தரவாதமளித்தனர்.

புதிதாக வலுப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டுமென்றும், நம்பிக்கையூட்டும் விதமாக உருவெடுத்துள்ள இந்த கட்டமைப்பில் இணையாமல் விலகிச் செல்பவர்கள் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டுமென்றும் மாதமமேஜர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாயாரும், புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இணைந்து நீராகாரம் வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.

கட்சிகளை ஒன்றிணைய வலியுறுத்தி நடக்கும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்கள் தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு போராட்டக்களத்தில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரணிலின் ஏஜெண்ட்டுகள் என குரல் எழுப்பினர்.

தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது – ஆணைக்குழு தலைவர்

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது.

கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அவர் எதனடிப்படையில் சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்; மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 4(1)ஆவது உறுப்புரையின் பிரகாரம் 2022.12.21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சகல நிர்வாக மாவட்டங்களுக்குமான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கட்டுப்பணத்தை பொறுப்பேற்றும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் 10 ஆம் திகதி காலை சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளது. கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றை பொறுப்பேற்றல் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு, ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட வகையில் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு, தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தல் அல்லது ஆலோசனை வழங்கும் அதிகாரம் அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது. இவர் எதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது,ஆகையால் சட்டமாதிபரின் ஆலோசனையை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பணம் பொறுப்பேற்றலை இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.முதலில் ஆணைக்குழுவில் பிளவு இருந்தால் தான் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும்.ஆணைக்குழுவிற்குள் எவ்வித பிளவும் கிடையாது என்பதை உறுதியாக அறிவிக்க வேண்டிய தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்தும் கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என பொதுநிர்வாகம், உள்ளக விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கடந்த 9 ஆம் திகதிமாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததுடன் பின்னர் அவர் அதனை நீக்கியிருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வேட்புமனுத்தாக்கல் செய்வதிலும், அதனைத்தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதிலும் இடையூறுகளைத் தோற்றுவிக்கும்.

தேர்தலுக்கு முன்னரான செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் இடையூறு ஏற்படுத்துவதற்கோ அல்லது தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான பொதுமக்களின் ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கோ மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின்மீது நிகழ்த்தப்படும் மிகமோசமான தாக்குதலாகவே அமையும்.

இதற்கு முன்னர் பல்வேறு ஆட்சியாளர்களால் தேர்தலுக்கு முன்னரான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் மிகமோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தின.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனவே ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் தாக்கத்தையோ அல்லது தலையீட்டையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் விலகியிருக்கவேண்டியது அவசியமாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.