பொலிஸ் அதிகாரம் இன்றிய மாகாண சபையுடன் அடுத்த வருடம் தீர்வு; மனித உரிமை மீறல்களுக்கு நாட்டினுள்ளேயே தீர்வு – ஜனாதிபதி ரணில்

“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘‘தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல் களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் அனைத்து தலைவர்களுடனும் பேச்சு நடத்தவே எதிர்பார்க்கின்றேன். இன மத பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பொலிஸ் அதிகாரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு விடயங்களைப் பார்ப்போம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது நாட்டில் ஒன்பதாயிரம் பாடசாலைகள் காணப்பட்டன. அவற்றை ஒரு போது என்னால் நிர்வாகம் செய்ய முடியாமல் போனது. ஒன்பதாயிரம் பாடசாலைகளையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாகாண சபைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவது மத்திய ஆட்சியின் செயற்பாடாகும்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாம் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத்திற்கு சென்று அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட னர்.

மயிலத்தமடு மேய்சற்தரையை விவசாயத்திற்கு வழங்க கோரி சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பாரம்பரிய மேய்ச்சற் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்,இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பாளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் எம்.பிக்கள் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் – சபா குகதாஸ்

தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07.10.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றத்திலும் ஒற்றுமை இன்மையை காட்டிக் கொடுக்காமல் சுயலாப நோக்கில் செயற்படாமல் ஒற்றுமையே பலம் என்ற நோக்கில் களத்தில் இறங்குங்கள் செயலில் காட்டுங்கள்.

பாதிப்பின்விரக்தி நிலையில் வாழும் வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மைத் தமிழ் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து அரசியல் இருப்புக்கான குளிர்காய்தலை தவிர்க்க வேண்டும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய விடையம் மிக முக்கியமானது.

தமிழர் தரப்பு அதனை வலுப்படுத்தி சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான கதவினைத் திறக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டு வரலாம்.

இத்தகைய போராட்டம் நாட்கள் கழிய பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைப்பதற்கான வழியை திறக்கும்.

தனித்து ஓடினால் மக்கள் நன்றாக ரசிப்பார்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைக்கும் பிற்போக்கு சிந்தனையை தவிர்த்து சகலரையும் ஒன்றினைத்து போராடினால் நீதிக்கான வழி திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை மீள சிந்திக்க வேண்டும் – சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து இலங்கை மீளசிந்திக்கவேண்டும் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.’

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் காரணமாக அரசாங்கம் இந்த சட்டமூலம் குறித்து மீள சிந்திக்கவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓக்டோபர் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இணையவெளியில் கருத்துசுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தை பாதிக்ககின்றது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன பிழையான அறிக்கைகளை வரைவிலக்கணப்படுத்தி ஒழுங்குபடுத்தி சட்டநடவடிக்கையை எடுப்பதற்கான அதிகாரம் புதிய ஆணைக்குழுவொன்றிற்கு வழங்கப்படவுள்ளது என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் இலங்கை சுதந்திர ஊடகஇயக்கம் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் உடனடியாக இது குறித்து முழுமையான மறுஆய்வினை மேற்கொள்ளவேண்டும் எனவும்வேண்டுகோள் விடுத்துள்ளன.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளுக்காக இனவாத வழியில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க – வினோ எம்.பி

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித் தேவையில்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கியுள்ளார் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

22 மில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் ஒரு அரசாங்கம் சீரான அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என்றால் அது மிகவும் பரிதாபத்துக்கு, அவ்வாறான நாட்டை கேவலத்துக்குரிய நாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது,

அருகிலுள்ள தமிழ்நாட்டை பாருங்கள் சுமார் 76 மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் அது முடியாது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் அவரின் தொனி எமக்கு பல விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்கள் மூலம் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.

இவ்வளவு காலமும் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்த நிலைமை இருந்தது.

ஆனால் ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் ஒட்டு மொத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, ஆட்சியை பிடிப்பதற்காக பொதுஜன பெரமுனவினர் எப்படி முயன்றார்களோ அதேபோன்று சிறுபான்மையினத்தை விடுத்து,சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை ,அவர்கள் தேவையில்லை என்ற நோக்கத்தில் தான் கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நேர்காணலை சிங்கள ஊடகங்கள் வரவேற்றுள்ளன,சிங்கள மக்கள் ஆதரிக்கின்றார்கள். வரவேற்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதிபாதியாக தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவைப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவருக்கு தேர்தல் வெற்றியே ஒரே குறிக்கோளாகவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்று சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர அவர் வழங்கியுள்ள இந்த நேர்காணல் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்பதனை வெளிப்படுத்த்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபை,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜபக்ஷர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான வழியில் தான் ஆட்சிக்கு வந்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட அவர் முயற்சிக்கின்றார்.

இலங்கையின் குரங்குகளை சீனா மட்டுமின்றி வேறு நாடுகளும் கோருவதாக விவசாய அமைச்சர் கூறியிருந்தார். ஆகையால் முதலில் இங்குள்ள மனிதக் குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரை மிரட்டிய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி

இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

ஆகவே இவர்களை உடனடியாக பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு வியாழக்கிழமை (5) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இதன்போது இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அப்பாவி இராணுவ வீரர்களின் தொழில்வாய்ப்புக்களை முடக்கும் வகையில் தீர்மானம் எடுத்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவில் யோசனை முன்வைத்தேன்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகும் அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட கூடாது என பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான விதிவிதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பாதுகாப்பு செயலாளர் உட்பட இராணுவ தளபதி நான் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டி எனக்கு தெரிவுக்குழுவின் தலைவர் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவுக்கு பாராளுமன்ற விதிவிதானங்கள் ஒன்றும் தெரியாது.

நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரச்சினையில் உள்ளதால் அவர் எனக்கு எதிராக தெரிவுக்குழுவுக்குள் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தவில்லை. அத்துடன் தெரிவுக்குழுவுக்குள் பேசப்பட்ட விடயங்களின் குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்காக அதிக நிதி செலவிடப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் காலையில் நடைபவணி செல்லும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு மக்கள் நிதி செலவிடப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் எனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தமை நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைக்குரிய விடயமாகும்.

ஆகவே இவர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு – செல்வம் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப் பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது. இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும்.

சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். பகிஷ்கரிக்கின்ற விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம். ஆனால் நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற , நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது என்னுடைய கருத்து” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்க தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவுஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஐ. எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடன் வெளிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய மையங்களில் குண்டுகளை வீசும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நாட்டுக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.

பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர்.

குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

மயிலத்தமடு மாதவனை மேயச்சல் தரை தொடர்பில் நீதி கோரி தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றில் போராட்டம்

நாடாளுமன்றத்தில் இன்று (6) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், மலையக மக்கள் முன்னணியின் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் நிலங்களை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோசமெழுப்பியபடி நாடாளுமன்றத்தின் மன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (6) முற்பகல் 9.30க்கு  குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன்,  மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், உங்கள் பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.

தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவித்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.