உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – கர்தினால் மல்கம் ரஞ்சித் கலந்துரையாடல்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (22)  இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரும் இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பு குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் விசாரணைக்காக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத்திரட்டி வழங்குமாறு மக்களிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்கின்றது என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பானது தற்போதுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த இனப்படுகொலைகளின் உச்சகட்டமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது உலகநாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச கட்டமைப்புக்களும் மௌனமாக வேடிக்கை பார்த்ததை தமிழ்மக்கள் எப்போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்கு தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி என்ற அடிப்படையில் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதையும், இனப்படுகொலை உள்ளிட்ட கடந்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணைப்பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்திய பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம்.

அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் பிரகாரம் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத்திரட்டி, அவற்றை வழக்குத்தொடர்வதற்கு ஏதுவான கோப்புகளாகத் தயார்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறு கிடைத்த வாய்ப்பைக் கைவிடாமல், தேவையான அனைத்து சாட்சியங்களையும் சேகரித்து இப்பணிக்குழுவிடம் வழங்குவதை மிகமுக்கிய கடமையாகக் கருதுகின்றோம். அதற்குரிய நடவடிக்கைகளை நாமனைவரும் இணைந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை- செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மின்சார கட்டண விடயத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன், அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.

விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது.

அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.

எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.

அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன் இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை.

எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல் கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.

நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு?: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

3KG தங்கத்துடன் அலி சப்றி விமான நிலையத்தில் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கனேடிய பூர்வகுடிகளின் இனப்படுகொலையை இலங்கையில் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

கனடாவில் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, இலங்கையிலும் அனுட்டிக்க வேண்டுமென இலங்கை மேலவை சபை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.

இதனை இந்த சபை கண்டிக்க வேண்டும். கனடாவில் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அண்மையில் பெரிய புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ஜூன் 21 ஆம் திகதி அனுட்டிக்கிறார்கள். இலங்கையில் நடக்காத இனப்படுகொலையை அவர்கள் அனுட்டிக்க முடியுமென்றால், கனடாவில் நடந்த இனப்படுகெ்கொலையை நாம் ஏன் அனுட்டிக்க முடியாது?

அதனால் ஜூன் 21ஆம் திகதி கனடா இனப்படுகொலையை நாம் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்ற வேண்டுமென்றார்.

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவு தினம்- சபா. குகதாஸ் ஆதங்கம்

ரணில் விக்கிரமசிங்கவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும் என தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும் தினத்தை பிரகடனப்படுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

ரணிலின் இந்த செயற்பாடு இது வரை தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களினாலும் அரச படைகளினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநியாயங்கள், படுகொலைகள், இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான நீதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாக இந்த பொது நினைவு தினம் என்ற நாடகத்தை அரங்கேற்றவுள்ளார்.

14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனடா பிரதமரின் நினைவு கூறல் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலை கொடுத்த சம நேரம் சிங்கள ஆட்சியாளரின் போலி முகத்திரையை வெளிப்படுத்தியுள்ளது இதனால் தனித் தனியான நினைவேந்தல்களை நிறுத்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் ஐனாதிபதி ரணில்.

தமிழர்களுக்கு பொது நினைவு தினம் ஏற்புடையது இல்லை காரணம் ஒவ்வொரு நினைவேந்தல் தினங்களும் தனித் தனியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவை அத்துடன் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனவே ரணிலில் விக்கிரமசிங்காவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும்.

தமிழின அழிப்புக்கு நீதி கோரியும், தமிழீழ கோரிக்கையை ஆதரித்தும் பிரித்தானிய பிரதமருக்கு முஸ்லீம்கள் மனு!

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL) அறிக்கை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, நீதி தேடும் முயற்சியில் பலவழிகளில் போராடிவருகின்றர்.

இதே போல பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையமும் (ICPPG) பன்முகப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது. இவ்வாறான முயற்சிகளில் ஒன்றாக, தமிழரல்லாத வேற்று இன மக்களுக்கு, இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக இடம்பெறுவது இனப்படுகொலையே என்பதையும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டையும் உணர்த்தி, அவர்களின் ஆதரவை திரட்டும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அடிப்படையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பிரித்தானியா வாழ் முஸ்லீம் மக்களை ஒன்றுதிரட்டி, “இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள்” [Muslims Against Genocide in Sri Lanka (MAG-SL)] என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களமிறக்கியுள்ளனர்.

18ம் திகதி தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து, 19ம் திகதி, இந்த அமைப்பை சேர்ந்த முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பிரித்தானியா மற்றும்
வெளிநாடுகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் சார்பாக, பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அந்த மனுவின் சாராம்சம் வருமாறு;

“இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL)” என்ற இந்த அமைப்பானது இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள-பெளத்த பேரினவாத இலங்கை அரசால் நடாத்தப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும், தடுப்பதற்கும், அதற்கான நீதி தேடுவதற்குமாக, தமிழ் பேசும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பு ஆகும். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் சிங்கள-பெளத்த பேரினவாத அரசாங்கங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இல்லாதொழித்து, இலங்கையை தனித்த பௌத்த-சிங்கள நாடாக உருவாக்கும் தமது தீவிரவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக, தொடர்ந்து கேவலமான சதிகளையும் தந்திரங்களையும் மேற்கொண்டு, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் பள்ளியத்திடல் போன்ற இடங்களில் சிங்கள காடையர்களை வைத்து இலங்கை அரசே அப்பாவி முஸ்லீம் மக்களை படுகொலை செய்ததுக்கு எங்களில் பலர் கண்கண்ட சாட்சியாவோம். ஆயினும் திட்டமிட்டே விடுதலைப்புலிகள் மீது இந்த வீண்பழி சுமத்தப்பட்டு, தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஆறாத வடு உருவாக்கப்பட்டது. இது போலவே, யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம் மக்களிடையே தீவிரவாத குழு ஒன்றை ஊடுருவச்செய்து, ஆயுதங்கள் வெடிபொருட்களை வழங்கி, பெரும் மதக்கலவரத்தை திட்டமிட்டது இலங்கை அரசு. தகவல் அறிந்த விடுதலைப்புலிகள் சில மசூதிகளில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்களை கையும் களவுமாக கைப்பற்றினர். எனினும் வெடிபொருட்களை முழுமையாக மீட்க முடியாமையாலும், யாழ் முஸ்லீம் மக்களிடையே குற்றவாளிகளை மட்டும் இனங்காண முடியாமல்போன காரணத்தாலும், நடக்கவிருந்த பெரும் இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக, வேறுவழியி்ன்றி குறுகிய கால அவகாசத்தில் முஸ்லிம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விடுதலைப்புலிகள் அந்த இக்கட்டான நிலையில் எடுத்த இந்த மிகவும் சாதுரியமான தந்திரோபாய முடிவு உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால் இதனை ‘இனச்சுத்திகரிப்பு’ என இலங்கை அரசு பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. விடுதலைப்புலிகள் எடுத்த இந்த முடிவால் பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டு, பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போதும், விடுதலைப்புலிகளால் யாரும் கொல்லப்படவில்லை, அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படவில்லை, அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் படி, சமாதான பேச்சு காலப்பகுதியில் அவர்கள் மீள அழைக்கப்பட்டு, அவர்கள் காணிகள் திரும்ப வழங்கப்பட்டு, மீள குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அத்துடன்,
விடுதலைப்புலிகளின் தலைவர் முஸ்லீம் தலைமை உரிய மரியாதையுடன் அழைத்து, பேசியதுடன், இதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டது.

இது அவர்களின் நேர்மைக்கும் பெருத்தன்மைக்கும் எடுத்துக்காட்டு. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்கள் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் போரிட்டார்கள். அவர்கள் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டது இல்லை. அமையவிருந்த தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு சம உரிமை உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, அப்பாவி முஸ்லீம் சிங்கள மக்கள் மற்றும் உலகநாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என தவறாக நம்பவைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளை அப்பலப்படுத்தி, ஆதாரங்களுடன் நிரூபிக்கவும்
MAG-SL அமைப்பு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை விலக்கி, புரிந்துணர்வை ஏற்படுத்தி, ஒற்றுமையை வலுப்படுத்த MAG-SL அமைப்பு கடுமையாக பாடுபடும். தமிழர்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளே. இலங்கையில் முஸ்லீம் மக்கள் பேசுவது தமிழ் மொழியே. இதனால் எமது உறவு பிரிக்கமுடியாதது. கோவிட் காலத்தில் ஐனசா நல்லடக்கம் தடுக்கப்பட்டு எமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டபோது தமிழ் மக்களே எமக்கு ஆதரவாக போராடினார்கள். அதுபோல, ஈஸ்டர் குண்டுவெடிப்பில் முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்ட போதும் தமிழர்களே எமக்காக குரல்கொடுத்தார்கள். இனிமேலும், சிங்கள-பெளத்த பேரினவாத அரசின் சதிக்கு பலிக்கடாவாக இடம்கொடுக்க மாட்டோம்.

அல்லாஹ்வின் வழியில் செல்லும் விசுவாசி பற்றி குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உண்மையான முஃமின்கள் யார் (23ம் அத்தியாயம்) நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள் (அல்குர்ஆன் 13:22). பொய் சாட்சி சொல்லமாட்டார்கள் (அல்குர்ஆன் 25:72). எந்த உண்மையான முஸ்லீமும் இலங்கை அரசின் இரத்தவெறிக்கு உடந்தையாக மாட்டார்கள். அல்லாஹ் காட்டிய வழியில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நன்மை செய்தன் மூலம் இலங்கை அரசின் தீமையை தடுப்போம். பொய்சாட்சி சொல்வதன் மூலம் காப்பாற்றமாட்டோம்.
அந்த வழியில், உண்மையாக தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் உறுதுணையாக இருப்போம். அவர்களின் சுதந்திர தமிழீழ நாடு என்ற இலட்சியத்தை முழுமையாக ஆதரிப்போம்” என்றும் இந்த மனுவின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பின்வரும் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

(1) இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது/இடம்பெற்றுக்கொண்டிருப்பது “இனப்படுகொலை” (Genocide) என்பதை பிரித்தானிய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(2) இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்பை பிரித்தானியாவே முன்னெடுக்க வேண்டும்.
(3) அதன் முதல்படியாக, யுத்த குற்றவாளிகளான ஜெனரல் சவேந்திரசில்வா உட்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடைவிதிக்க வேண்டும்.
(4) இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் தாயகபகுதி “தமிழீழம்” என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(5) இலங்கையில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் படி தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்க பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

இந்த மனுவை, ICPPG மற்றும் MAG-SL அமைப்புக்களின் இணைப்பாளரான விதுரா விவேகானந்தன், MAG-SL அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான முகமத் லாபிர் முகமத் ரோஷன், நிரபாஸ் முகமத் நாவ்பெர், ஷாவ்உள் ஹமீது ரோஷன் கான் , சம்சுதீபன் முகமத் சபைக்கு அபிரீன் முகமத், தூஉங் பாரூக் முகமத் ரிஸ்மி ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பித்தனர்.

கனேடியப் பிரதமர் தனது கருத்தை மீளப்பெறக் கோரி காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கனடிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , கடிதமொன்றையும் கையளித்திருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,

இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.

கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் இந்தக் கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்கள் வெவ்வேறு பேரூந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது. இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?

சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர். ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.