முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) இன்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை வேண்டினார்.

வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் – ஹரின்

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்; ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் – ஹர்ஷ

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாடியதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் கோ ஹோம் சைனா என்பது பொருத்தமற்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆகவே இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

 

அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்தார் அலி சப்ரி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்;ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75வருடத்தினை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம் காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது,பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அமைச்சர்களுடன் சீனத் தூதரகம் சென்றார் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவனும் சீனத் தூதரகத்துக்கு சென்றுள்ளார்கள்

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்த H.E. ஜியாங் ஜெமின் (H.E Jiang Zemin) மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றார்.

அதேவேளை அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவர் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஜனநாயகம் மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவராவார். அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறு பூசல்களை  ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆற்றிய உரையைத்  தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அவர் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வனஜீவராசிகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் சேறு பூசல்கள் மாத்திரமே உள்ளன என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க உரையாற்ற அனுமதி கோரினார்கள்.

எனினும் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் உறுப்பினர்களை நோக்கிக் குறிப்பிட்டார். ”அவ்வாறாயின் சேறு பூசலையும் நிறுத்த சொல்லுங்கள். வனஜீவராசிகள் அமைச்சின் விவாதத்தின் போது சேறு பூசல்களை இடம்பெறுகிறது.

காலி முகத்திடலுக்கு மிருகங்கள் வந்தால் அடித்து விரட்டட்டும்” என ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் குறிப்பிட்டார். இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, ”எனது பெயரைக் குறிப்பிட்டால் நான் பதிலளிக்க வேண்டும்.

நான் கடந்த 9 மாதங்களாக பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை.” என்றார். இதன்போது குறிக்கிட்ட சபாநாயகர் , ”உங்களின் பெயரை குறிப்பிடவில்லை” என்றார்.

இதன்போது சரத் பொன்சேக்கா விமலவீர திஸாநாயக்கவை நோக்கி , ”யானை தடுப்பு கால்வாய் அமைத்தது முட்டாள் தனமானது” என்று குறிப்பிட்டார். இவர் அமைச்சராக பதவி வகிக்கும் போது ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விமலவீர திஸாநாயக்க , ”அரசாங்கத்தின் செலவு இல்லாமல் யானை கால்வாய் அமைத்தேன். அதனால் இன்று அந்த பிரதேச மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

60 000 , 70 000 பேரை கொன்றவர் இன்று எமக்கு ஜனநாயகம் பற்றி குறிப்பிட வருகிறார். சண்டியர்களை பாதுகாத்த பீல்ட் மார்ஷல் எமக்கு ஆலோசனை வழங்க வருகிறார் என்றார்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – அநுரகுமார

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓடி வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக வந்து பதிலளித்து விட்டு,மீண்டும் விரைவாக சபையை விட்டுச் செல்கிறார்.2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின்  வேட்பு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும். தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் இந்த அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியுள்ளதை அறிய முடிகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகாரம் உள்ளது,ஆகவே  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது பயனற்றது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை   எந்நேரமும் வெளியிட முடியும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆனால் ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை ஏதோவொரு சூழ்ச்சி இடம்பெறுவதை நன்கு அறிய முடிகிறது.ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைவாக வருகை தந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஓடி வந்து குறிப்பிட வேண்டும்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் சமிஞ்சையை எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா எவ்வாறு செயற்பட்டார்,யாருக்காக செயற்பட்டார்,எவரது அரசாங்கத்தில் எந்த பதவி வகித்தார் என்பதை நன்கு அறிவோம்.அவர் சுயாதீன நபர் அல்ல,அரசியல் ரீதியில் இவர் தொடர்புப்பட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது அவசியமற்றது.அத்தடன் சட்டமாதிபரின் ஆலோசனையை நாட்டு மக்களுக்கு குறிப்பிடப் போவதில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க புதிய வனப்பாதுகாப்பு அலுவலகங்கள் மட்டக்களப்பில் அமைக்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் யானைகள் உயிர் இழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன இவற்றை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்கள் மிக மிக குறைவான அளவிலேயே உள்ளன. எனவே புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டுமெனவும், சட்டவிரோத மண் அகழ்வினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுற்றாடல் வன ஜீவராசிகள் வன வளங்கள் சுற்றுலாத்துறை காணி போன்ற முக்கியமான மூன்று அமைச்சுகளின் கீழ் உள்ள ஐந்து அமைச்சுக்கள் விடயதானம் சம்பந்தமான விவாதம் இன்று நடைபெறுகின்றது. இந்த நாட்டிற்கு வளத்தை ஏற்படுத்துவதும் இந்த நாட்டிலே கூடுதலான பிரச்சனைகளை கொண்டதுமான இந்த அமைச்சுகள் இன்று விவாதத்தில் இருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையில் 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட மோதல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் ஆறு மாவட்டங்கள் கூடுதலான பிரச்சினை உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களும் பொலநறுவை அனுராதபுரம் குருநாகல் போன்ற மாவட்டங்களுடன் சேர்த்து மேலதிகமாக புத்தளம் மஹியங்கணை பிரதேசங்களும் இன்று யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலே மோதல்கள் உருவாகும் ஒரு பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு யானையினால் தாக்கப்பட்டு 20 மனிதர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்,24 பேர் காயப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோன்று முதலையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்திருக்கின்றார், இன்னொருவர் காயமடைந்திருக்கின்றார். அதே நேரத்திலே 14 யானைகள் இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்திருப்பதுடன் 205 வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு 18 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள் யானையினால் தாக்கப்பட்டு, முதலையினால் தாக்கப்பட்டு மூன்று பேர் இறந்திருக்கின்றார்கள். 2017 இல் இருந்து 2022 காலப்பகுதியில் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யானையினால் தாக்கப்பட்டு 78 பேர் மரணம் அடைந்திருக்கின்றார்கள். அதேவேளையில் 95 மனிதர்கள் காயப்பட்டு இருக்கின்றார்கள். முதலையினால் 15 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள். வீடுகள் கூட 550 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் யானையினால் சேதம் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதே வேளையிலே இந்த ஐந்தாண்டு காலத்திலும் 90 யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இறந்திருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்களும் அலுவலர்களும் மிகக் குறைவாக இருக்கின்றமையே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு ரேஞ்ச் ஆபீஸ் (Range office) மாத்திரமே இருக்கின்றது அத்துடன் பீட் ஆபீஸ் (Beat office) என்று சொல்லப்படும் உப அலுவலகங்கள் இரண்டு மாத்திரமே இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான அலுவலகங்களாகவும் குறைவான அலுவலர்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகவும் இருக்கின்றது. உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் ஆறுக்கு மேற்பட்ட ரேஞ்ச் ஆபீஸ்கள் இருக்கின்றது. கிட்டத்தட்ட பீட் அலுவலகங்களுடன் சேர்த்து 10 அலுவலகங்கள் இருக்கின்றது. ஒரு அலுவலகத்திற்கு நிரந்தரமாக நான்கு பேர் தான் அங்கு கடமையில் ஈடுபட்டாலும் இந்தப் பெரிய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று அலுவலகத்திலும் பன்னிரண்டு பேர் தான் யானையிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்கோ மனிதர்களிடமிருந்து யானைகளை காப்பாற்றுவதற்கோ 12 அலுவலர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டு 180 பேர் யானை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தாலும் 25 பேர் அந்த வேலைகளில் இருந்து விட்டு விலகி இருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் அவர்களது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு போதாத காரணத்தினால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்கு சென்றிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே 210 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி போடப்பட்டிருக்கின்றது. கிரான், வாகரை பிரதேசத்திலே 104 கிலோ மீட்டர்களுக்குரிய யானை வேலிக்குரிய பொருட்கள் அங்கு வந்திருக்கின்றது. ஆனால் அங்கு யானை வேலிகள் அமைக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே தற்போது மட்டக்களப்பு நகரத்திலே ஒரு ரேஞ்ச் ஆபிஸும் வெல்லாவெளியிலும் கிரானிலும் அந்த பீட் ஒப்பீஸ்கள் இருக்கின்றது. எதிர்காலத்திலே மட்டக்களப்பிலே இரண்டு ரேஞ்ச் ஆபிஸ்களை நீங்கள் உருவாக்க வேண்டும். வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் கிரான் பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் மூன்று பீட் ஒப்பீஸ்களும் அத்தியாவசியமாக அவசரமாக தேவைப்படுகின்றது. புல்லுமலை, கரடியியனாறை மையப்படுத்தி ஒரு அலுவலகமும், வவுணதீவு, பஞ்சேனை, பட்டிப்பளை போன்றவற்றை மையப்படுத்தி அலுவலகமும் வாகரை பிரதேசத்தை உள்ளடக்கி ஒரு அலுவலகமும் அமைக்க வேண்டிய ஒரு தேவை அங்கு இருக்கின்றது.

இன்னமும் குறைந்தபட்சம் வாகரை பிரதேசத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்கும் மேலாக வெல்லாவெளிப் பிரதேசம் வரை யானை வேலி இருக்க வேண்டிய இடங்களிலே பகலில் மாத்திரமே அந்த ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்கு வேலையில் ஈடுபடுகின்றார்கள். இரவு வேலைகளில் தான் யானைகள் யானை வேலியை உடைத்துக்கொண்டு விவசாயிகளின் வயல்வெளிகளிலும், கிராமப்புறங்களில் இருக்கும் பயன் தரும் மரங்களையும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் நெல்களை சேதப்படுத்துகின்றது இந்த யானைகள். எனவே மாவட்டத்திற்கு நீங்கள் மேலதிகமாக மூன்று அலுவலகங்களை கொடுக்க வேண்டும்.

வெல்லாவெளிப் பிரதேசத்தை பொருத்தமட்டில் தளவாய் காடு ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட அந்த காட்டிலே பெரிய மரங்கள் எதுவுமே இல்லை. அந்த தளவாய் காட்டிற்குள் வெறும் சின்ன சின்ன பற்றைக் காடுகள் தான் இருக்கின்றது. யானைகள் கிட்டத்தட்ட 70,75 யானைகள் அந்த பிரதேசத்திலே பகலிலே ஒளித்து நின்று இரவிலே கிராமப்புறங்களில் உள்நுழைந்து கிராம வீடுகளை சேதப்படுத்துவது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது உயிரை கையில் பிடித்தபடியே இரவிலே தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்தப் பிரதேசம் தற்போது வனவளத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. வன வளத்திற்குரிய பெரிய காடுகள் எதுவுமே அந்த பிரதேசத்தில் இல்லாத காரணத்தினால் அந்த பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு எதிர்காலத்திலே மேய்சல் தரைக்கு பயன்படுத்தப்படுமாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் மாடுகள் ஆடுகள் கூட அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் போது யானைகள் தங்க வேண்டிய ஒரு நிலை அங்கு ஏற்படாதது மாத்திரமில்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கூட கூட்டி கொள்வார்கள் என்பதற்காக வனவளத் திணைக்களம் எதிர்காலத்தில் நீங்கள் அந்த பிரதேசத்தை விடுவிக்க வேண்டும் என்று இத்தால் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வனவளத் திணைக்களம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் ஊடாக காட்டை கணிப்பிட்டு கல்போடுகின்றீர்கள் நீண்ட காலமாக வயல் செய்த காணிகள்,நீண்ட காலமாக மேட்டு பயிர் செய்த காணிகள், அது மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு வாவியின் ஓரமாக உள்ள காணிகளுக்கு கூட வனவளத் திணைக்களம் கல் போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் ஆற்றங்கரை ஒட்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களிலே இறால் வளர்ப்பு அங்கு நடைபெற்றது. தற்போது அந்த பிரதேச செயலகத்தினால் அந்த வாவியை ஒட்டிய கிட்டத்தட்ட 400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசம் இறால் வளர்ப்புக்காக அடையாளப்படுத்தப்பட்டு அந்தப் பிரதேச மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு தயாராக இருக்கும் போது அந்த பிரதேசத்தைக் கூட நீங்கல் கல் போட்டு தடுக்கின்றீர்கள்.

எனவே மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த பொருளாதாரச் சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த மக்கள் பொருளாதார ரீதியாக பலப்படுத்த கொஞ்சமாவது நெகிழ்வு தன்மையுடன் வனவளத் திணைக்களத்தினர் தங்களது நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் இங்கு இருக்கின்றார். எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார் அங்கு மண் மாபியாக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக சட்டத்துக்கு முரணாக மண்ணேற்றுபவர்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார்.

ஆனால் அங்கு இராணுவம், போலீஸார் அவர்களது அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் ஏற்றுவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாண்டியடி விசேட அதிரடிப் படையினர் மிகவும் நிதானமாக அவர்கள் செயல்படுகின்றார்கள். சட்ட விரோதமாக மண் ஏற்றுவதை தடுக்கின்றார்கள் இருந்தாலும் சில இடங்களிலே குறிப்பாக சொல்ல போனால் வாழைச்சேனை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டியடி வழி வாகனேரி சந்தியாறு போன்ற இடங்களிலே 8500 ஏக்கர் நெற் பயிர்க்காணிகளுக்கு அதனுடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அந்த ஆற்றிலே மண்ணெடுப்பதனால் வயல்வெளியில் இருந்து ஆறு மிகவும் பள்லத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டு பாலத்துக்கு பக்கத்திலே ஒரு விசேட அதிரடிப்படையின் கண்காணிப்பு சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்படின் அந்த பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அகற்றுவதை தடுக்கலாம். ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலே வயல் வெளியில் ஒரு அகழ் எந்திரம் (Excavator)அது வயல் திருத்துவதற்கும் இல்லை. பகலிலே சும்மாக தரித்து நிற்கின்றது. இரவிலே சட்டவிரோதமாக அந்த பிரதேசத்திலே அவ்வியந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகழவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதை அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுத்து அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளால் பொது நிதி வீணடிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது தனிப்பட்ட பணியாளர்களுக்காக ஜனாதிபதியின் மொத்த செலவினத்தில் 43 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விபரங்கள், ஊடகம் ஒன்றினால் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தார்.

எனினும் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேன 1347 பணியாளர்களுக்காக 850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருந்தார்.

அந்த வகையில், இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட பணியாளர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களிற்கு 44,000 மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்புக்கள் தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

மேலும் இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தளா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருhளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியில் பீடமும் , வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கனணி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.